Monday, April 04, 2022

குறள் 681

பால்: பொருட்பால்

அதிகாரம்/Chapter: தூது / The Envoy

குறள் 681:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

விளக்கம்:

அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.


**

நம் தமிழ் பாடங்களில் மயில் விடு தூது,  புறா விடு தூது,  தமிழ் விடு தூது படித்திருப்போம்.  லவ் பண்ணிட்டு இருக்கும் தலைவன் போருக்கு போனாலோ அல்லது பார்க்க முடியாமல் போனாலோ,  தலைவி அஃறிணை பொருள் வழியாக தூது விடுற மாதிரி நிறைய செய்யுள்கள் உண்டு.  

தமிழ் திரைப்படங்களின் பாடல்களிலும்  தூது விடும் பாடல்கள் உண்டு.   நான் ரசித்த ஒன்று "சின்னக்கிளி வண்ணக்கிளி சேதி சொல்லும் செல்லக்கிளி"  என்ற சின்னக் கவுண்டர் பட பாடல்.  இது  ஒரு அழகிய கிளி விடு தூது.  சுகன்யாவும்- விஜயகாந்தும் கிளிகளின் வழியே உரையாடிக்கொண்டு இருப்பார்கள்.   ( இதுபோல வேறு பாடல் இருந்தால் பகிருங்கள் )  

ஆனால் வள்ளுவர், இங்கு அரசருக்கு தூது கொடுப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.   இன்றைக்கு இது பொருந்துமா?   அல்லது அன்றும் அப்படி இருந்ததால் வள்ளுவர் தனது ரூல் புத்தகத்தில் இப்படி எழுதி உள்ளாரா என தெரியவில்லை.   

அரசருக்கு என பார்க்கும் பொழுது நம் மாநிலத்திற்கு, நாட்டிற்கு, உலகத்திற்கு என பெரிய அளவில் யோசிப்போம்.  அரசருக்கும் தொழில் அதிபர்களுக்கும்  இடையே இருக்கக்கூடிய  தூது படலங்கள் வேற லெவல்.    இதனை  "லாபி விடு தூது"  எனலாம்.  அதன் சிறிய அளவை "புரோக்கர் விடு தூது" என வகைப்படுத்தலாம்.   

இரண்டுக்கும் என்ன வித்யாசம்.  அரசன் எனில் அரசாங்கமும் தான்.  இதனை நம் அளவிற்கான தூது படலம் என கொள்ளலாம்.    எந்த ஒரு அரசு துறையும் இதில் பொறுத்த முடியும்.   இந்த  ப்ரோக்கர் விடு தூது படலம்  இல்லாமல் எதுவும் இங்கு அசையாது.  

ஒரு சாதாரண பதிவு அலுவலகத்தில் நேரில் சென்ற, இந்த தூது படலம் இல்லாமல் பத்திரப்பதிவு பண்ணிவிட  முடியுமா?  அப்படி தூது செல்பவர்கள் நம்மிடம் பேரன்புடன் தான் உள்ளார்கள்,  தூது படலத்தில் அழகாக பேச தகுதியானவர்களாக  உள்ளார்கள்,  பதிவு செய்யும் அந்த இடத்தின் வேந்தனிடம் ப(ண)ண்பாகவும்  தான் உள்ளார்கள்.   ஆகவே வள்ளுவர் வாக்கினை  எந்த வகையிலாவது பின்பற்றிவிடுகிறார்கள்



Wednesday, March 23, 2022

அறிவோம் காலிங்கராயன்

1240 - காலிங்கராயர் பிறந்த வருடம்

1260 - கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் படையில் சேர்ந்தார்

1271 - காலிங்கராயன் தடுப்பணை பணிகள்  ஆரம்பம்

1283 - தை மாதம் 5-ந் தேதி காலிங்கராயன் தடுப்பணை திறப்பு

12 வருட கட்டுமானம்

739  வருடங்களாக இன்னும் பயன்பாட்டில் 

15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி

56.2 மைல் (90.5 கிமீ)  - காலிங்கராயன் வாய்க்கால்

36 மைல்கள்- நேர் வழியாக காலிங்கராயன் தொ
டங்கி முடியும் இடம் 

1840 மதகுகள்

544 - வாய்க்கால் தொடங்கும் இடத்தில் கடல் மட்டம்

412 - வாய்க்கால் முடியும் இடத்தில் கடல் மட்டம்






Wednesday, February 23, 2022

தாய் மொழி தினம்.

 தகவல் தொழில் நுட்ப துறையை பொறுத்த அளவில் பல் மொழி, பல் நாட்டு மக்களுடன் பேச வேண்டும். அதில் தமிழில் பேச ஒருவர் கிடைத்தால் சற்று சுலபமாக புரியவைத்து விடலாம். தமிழில் பேசும் ஒருவர் கிடைக்க மாட்டாரா என ஏங்கும் பிரஜாக்ட்டும் உண்டு. ஈமெயில்/பெயர் வைத்து நம்மூர் மக்களை கண்டுபிடிப்பது சற்று சிக்கலான ஒன்றாக மாறி வருகிறது. தற்பொழுது புதிதாக வந்து சேர்பவர்களின், பெயரின் மூலம் தமிழ்தானா? என்பதில் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. என் அப்பாவின் பெயர் மூலம் தான், நானே தமிழ் என்பதை அறிந்து கொள்வர். சிலர் சேட்டில்(chat) "வணக்கம்" என்று ஆரம்பிப்பார்கள். சிலர் "நீங்க தமிழா?" என நேரிடையாக கேட்டுவிடுவார்கள்.



நானும் இப்படி கண்டுபிடித்து, "வணக்கம்" என்று ஆரம்பித்து, பதில் தமிழில் கிடைத்தால் அதிலேயே தொடர்வேன். நம்மைவிட ஜூனியர்கள் தமிழ் என தெரிந்தால் உடனே ஆரம்பித்து விடுவேன். ஆனால் மேலாளர்கள், க்ளையண்ட் என வரும்போது அவர்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் கொள்கை, பஞ்சாயத்து ஏதும் வராமல் இருக்க. சில தென்னிந்தியப் பெயர்கள் தமிழ் போலவே தோன்றும். அவர்களிடம் பல்பு வாங்கிய சம்பவங்களும் உண்டு.


மலேசியன் ப்ராஜக்ட். அவரின் பெயரின் மூலமும், அக்கம் பக்கம் விசாரித்ததிலும், அவர் சுத்த தமிழ் என்பது நன்றாக தெரிந்தது. ஆனாலும் அவர் கிளையன்ட் மற்றும் மேலாளர் ஆக இருந்தால் , தமிழில் ஆரம்பிக்கவில்லை. ஆங்கிலத்திலேயே 'சேட்' மற்றும் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெரும். ஆறு ஏழு மாதமாக அவ்வாறே தொடர்ந்தது. ஒருநாள் டெஸ்க் தொலைபேசி அழைத்தது. அதில் பரபரப்பாக பேசினார். "எப்ப இந்த ரிப்போர்ட் அனுப்புவே. கொஞ்சம் அத மட்டும் மாத்திட்டு சீக்கிரம் அனுப்பு" என்று தமிழில் சில நிமிடங்கள் கடுமை காட்டிவிட்டு போனை வைத்துவிட்டார். அது தான் முதலும் கடைசியும் அவரிடம் இருந்து வந்த தமிழ். அதன் பிறகு ஒரு வருட காலம் அவரோடு வேலை பார்த்திருப்பேன்.

மற்றொரு கிளையன்ட், லண்டன் அலுவலகம் வருகிறார். நம்ம ஊர் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்திருப்பவர். அவர் சேர்ந்த புதிதில், ஊர்ப்பேர் வரையில் விசாரித்தும் தமிழுக்கு மாறாமல், ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார் அந்த கிளையன்ட் மற்றும் மேலாளர். கொள்கைப்படி நான் தமிழில் தொடரவில்லை. ஒரு வருடமாக தமிழிலேயே பேசாதவர், அன்று காலை ஒரு பத்து மணி இருக்கும் அவசரமாக அலுவலகம் வந்தார். தமிழில் "ஏம்பா, காலைல பிரேக் பாஸ்ட் இன்னும் சாப்பிடல, இந்த கேன்டீன் எங்க இருக்கு?" என கேட்டார். "பிப்த் ப்ளோர்ல இருக்குங்க" "கொஞ்சமா லைட்டா இருந்தா போதும்" என்றார். "சான்டவிச் எப்பவும் கிடைக்கும்... அது வேணாம்னா..காஃபி & மஃபின் இருக்கும் பாருங்க". சாப்பிட கிளம்பினார். சாப்பிட்டு விட்டு தெம்பாய் வந்தவர் போற வரைக்கும் தமிழை ஊறுகாய் அளவு கூட தொடவே இல்லை. ஆனால் அவர்தான் வடநாட்டு மக்களோடு இந்தியில் குலாவிக்கொண்டு இருந்தார்.

அவர்களே அறியாமல், அனிச்சை செயல் போல சில கணங்களை உயிர்ப்பித்து விடுகிறது தாய்மொழி .

#தாய்மொழிதினம்.

Friday, February 11, 2022

குறள் 1040

 *குறள் 1040:*

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

*பொருள்:* எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

என் விளக்கம் :

முதலில் இந்த குறளில் வரும் *அசைஇ எனும் சொல்லிசை அளபெடை* தான், இந்த குறளின் அடிநாதம். அசையாமல் =சோம்பல் எனும் பொருளில் வருகிறது. அதனை வைத்து பார்க்கும் பொழுது, மூன்று வகையான பொருள் எனக்குத் தோன்றுகிறது.
1.
"தாரு காடு? அவங்க காடா? ஒன்னும் போட மாட்டாங்க.. நறுவுசாவே வெச்சிருக்க மாட்டாங்க.. செடி செத்தை மொளச்சு பொதர் மாதிரி கெடக்கும்.. புழு பூச்சி இருந்தா கூட தெரியாது"
சோம்பலால் எந்த வேளாண்மையும் செய்யாமல் இருக்கும் நிலம் சிரிக்கும் என்பதை புல், பூண்டு முளைத்து பயன்படாமல் இருப்பதை //நிலமென்னும் நல்லாள் நகும்.// என்று கூறுகிறார் எனலாம்.
2.
நிலம் பன்மடங்கு வைத்திருந்தவர்கள், கடன் காரணமாக அதனை விற்றுவிட்டு ஒரே ஒரு வீட்டில் இருப்பதையும் காணலாம். படிக்காதவர்கள், ஒரே ஒரு வாடகை வீடு மட்டும் வைத்து இருந்தவர்கள், நிலத்தினை குத்தகைக்கு எடுத்து, உழைப்பின் மூலம் இன்று சொந்த வீட்டிலும் உள்ளார்கள் (அவர்கள் அளவில் அது சாதனை ).
முதலாமவர்க்கு கடன் சோம்பலால் மட்டுமே வந்ததா? இருக்காது, புறக்காரணிகள், பருவம் தப்பிய மழை, வெயில் அல்லது அவர்களின் தவறான முடிவு.
இரண்டாமவர்க்கு, உழைப்பு மட்டுமே காரணமாகுமா? உழவை பொறுத்த வரையில் முயற்சியோடு நேரம் கை கூடவேண்டும். முதலாமவர்க்கு இருந்த அதே புறக்காரணிகள் இவருக்கும் இருந்திருக்கும். ஆனால் hard work உடன் Smart work சேர்த்து செய்து முன்னேறி இருப்பார்.
//நிலமென்னும் நல்லாள் நகும்.// இங்கு நிலமகள் என்பதை ஊர் மக்கள் என்றும் கூறலாம். சோம்பலால் மட்டும் அல்ல, வெற்றிபெறாத மனிதர்களை புறம் பேசி நகைக்கவே செய்வார்கள்.
3.
இந்த குறளை உழவுக்கான குறளாக மட்டும் கருதாமல் முயற்சிக்கான குறளாகவும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுத்துக்கொண்டால்
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்". - இந்த குறளின் சாரம் மேற்சொன்ன 1040 வது குறளில் இருக்கும்.
இந்த குறள் இருக்க, அதேபோல ஏன் மற்றோர் குறள்? இப்ப ட்விட்டர்ல காப்பி பேஸ்ட் ட்ரெண்ட் மாதிரி, வள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்திலும் தனித்தனியாக அதே நல்ல விஷயங்களை வேறு வேறு வகையான மக்களுக்கு கூறியள்ளார் என எடுத்துக்கொள்ளலாம்🙂
இனிய நாளாகட்டும்.

Sunday, January 16, 2022

குறள் 108


குறள் 108


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.




கமல் 60 நிகழ்வில் வடிவேலு பேசிய வீடியோ சமீபத்தில் மீண்டும் கண்டேன்.   அதில் நிறைய புகழ் மாலையை  கமலுக்கு அளித்திருப்பார்.  பெரும்பாலும் அது நன்றி பாராட்டுவதாகவே இருக்கும்.  கமல் அவர்கள் ஆரம்ப காலத்தில் செய்த உதவியை மறக்காமல், வடிவேலு அவருக்கே உரிய  நகைச்சுவை உணர்வோடு கூறியிருப்பார்.  சிங்கார வேலன் திரைப்படத்தில் மூன்றே மூன்று டயலாக் பேசி நடித்த வடிவேலுவை பார்த்த கமல்,  தேவர்மகன் திரைப்படத்தில் அவரை நடிக்க முன் பணம் பெற்றுக்கொள்ள நாளை கமல் அலுவலகத்திற்கு செல்ல சொல்வார்.    அடுத்த நாள் போகாமல், அன்று மாலையே சென்று இருப்பார்.  இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு பண்பு. 



அதில் ஒரு இடத்தில் 'கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிற திரையுலகத்தில்'  என்பார், அந்த வரியை திரும்ப திரும்ப யோசித்தால் வள்ளுவரின் 'நன்றல்லது அன்றே மறப்பது நன்று'  பற்றி வடிவேலு இடித்துரைப்பது போல தான் இருக்கும்.   எத்தனை விதமான துரோகங்களை,  நல்லது அல்லாதவற்றை இவர்கள் சந்தித்து இருப்பார்கள், நிறைய மனிதர்கள் புழங்கும் இந்த மாபெரும் கனவு தொழிற்சாலையில்.      அவற்றை அந்த ஒற்றை வரியில் நகைச்சுவையாக பேசி மறந்து கடந்திருப்பார்.  


நன்றல்லது அன்றே மறப்போம்.   இனிய நாளாகட்டும்.


https://www.youtube.com/watch?v=uxanERLYqLE



Sunday, April 25, 2021

ஈரோடும் தேர்தலும் - 2017 to 2021

2017 ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றிய கட்டுரையில் எழுதியவை முதல் இடம்  பெற்றது. இன்று 2021ல் எப்படி உள்ளது? 


கல்யாணங்களில் ஆடம்பரங்களை கொரானா மட்டுமே தற்போது தற்காலிகமாக  நிறுத்திவைத்து உள்ளது.  கொரானா மட்டுப்பட்டிருந்த கடந்த மூன்று, நான்கு மாதங்களாக, அந்த ஆடம்பரமும் கொஞ்சமேனும் வெளிப்பட்டுத்தான் இருந்தது.  அதே போல எளிமையை உணர்ந்தவர்கள், மிகவும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்து விட்டார்கள்.   நேரில் சென்றே பத்திரிகை வைத்து அழைக்க வேண்டும் என்று இருந்ததையும், கல்யாணத்திற்கு செல்லவில்லை என்றால் கோபித்துக்கொள்வார்கள் என்பதையும் கொரோன காலம் உடைத்துள்ளது.   சில நாட்கள் தங்கி சிறப்பிக்கும் நெருங்கிய வட்டத்தின் கூட்டமும் குறைந்துள்ளது.  மாஸ்க்(போடவில்லை என்றாலும்),  சானிடைசரோடு இது இன்னும் சில காலம் தொடர வாய்ப்பு உள்ளது.


மருத்துவதுறை பற்றி இருந்த பார்வை, எனக்கு மாறியுள்ளது. இப்பொழுது சிசேரியன் டெலிவரி என்பது பெரிய விஷயமாக பேசுபொருள் ஆவது இல்லை. நார்மலா? சிசேரியனா? எனும் ஒற்றைக் கேள்வியில் மக்கள் கடந்து விடுகிறார்கள்.  அதற்கு உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள்  போன்ற பலவகை காரணங்களை உணர்ந்து இருக்கலாம்.  தமிழ்நாட்டில் குழந்தைப் பிறப்பில், குறைந்துள்ள இறப்பு விகிதம் இதன் பயனை பறைசாற்றும். அதேபோல செயற்கைக் கருத்தரிப்பு பற்றிய பார்வையும் மாறியுள்ளது.  அறிவியல், குழந்தை இல்லாதவர்களுக்கு போலிச் சாமியார்களிடம் சென்று ஏமாறாமல் இருக்க ஒரு அற்புதமான மேஜிக்கை கண்டுபிடித்துள்ளது.  வாடகைத்தாய் வழி பிறக்கும் குழந்தைகள் என  உலகம் அறிவியல்  பாதையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு நகர்ந்து கொண்டுதான் உள்ளது.  அதனைப்  பற்றி தனியாகவே எழுதலாம்.    


அதேபோல தெருவுக்கு தெரு மெடிக்கல்ஸ் இருப்பது, மருந்து, மாத்திரைகள் சட்டென சராசரி மக்களுக்கும் கிடைக்க இது உதவுகிறது.  நமது மக்களின் சராசரி ஆயுளை நீட்டித்துக் கொண்டு தான் உள்ளது. குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகள் பற்றிய தவறான புரிதல் மக்களிடம் மாறியுள்ளது.  தடுப்பூசிகளும் அதிவிரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு மக்களை இறப்பிலிருந்தும், கொரானாவின் வீரியத்திலிருந்தும்  தடுத்துக்  கொண்டுள்ளது.  தடுப்பூசி என்பது வியாபார நோக்கம் அல்ல என என் பார்வை மாறியுள்ளது.   


பேஸ்ட் இல்லாமல், இந்த மக்கள்தொகைக்கு வேப்பங்குச்சி மட்டுமே ஈடு கொடுக்க முடியுமா என்பதும் சந்தேகமே.  அது போலத்தான்  சோப்பு, சாம்பு பற்றி பேசுவதும்.   தோல் மற்றும் சாயக்கழிவுகள் நிலை பெரிதாக மாறியுள்ளதாக தெரியவில்லை.  இந்த கழிவுகளை எல்லாம்  ஆறுகளில் கலக்க விடாமல், சுத்திகரிப்பு நிலையத்தை வைப்பதும், முறையாக மறுசுழற்சி செய்வதுமே தீர்வாகும்.  அதனை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர பழங்காலத்திற்கு செல்வதாக இருக்க முடியாது. 


கொரோனா காரணமாக 8 மணிக்கு அடித்துப்பிடித்து குழந்தைகளை பேருந்தில் பள்ளிக்கு ஏற்றிவிடும் வேலை இப்பொழுது இல்லை.  ஆனால் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், வேறு விதமான பிரச்சனைகளை கையாண்டு வருகிறோம்.  குறிப்பாக ஆன்லைன் க்ளாஸ் அழுத்தங்கள் பெற்றோருக்கு எனில், யாரையும் பார்க்காமல், விளையாடாமல் ஆன்லைனில் இருக்கும் குழந்தைக்கு வேறு மாதிரியான மன அழுத்தம். குழந்தைகளை எவ்வாறு முழுநேரமும் பிஸியா வைத்துக்கொள்வது என்பது ஒரு சவாலான விஷயமும்.  கொரோனாவிற்குப் பின் கல்வி முறை மாறுமா? ஓரிடத்தில் அமர்ந்து ஆசிரியர்கள் கூறுவதை கேட்பார்களா? என்பதெல்லாம் காலம் தான் பதில் கூறும்.   

   

புரோட்டா சாப்பிடும் பழக்கம் குறைந்தது போல தெரியவில்லை.  இன்றும் நெகிழிகளில் குழம்பு ஊற்றி எடுத்துச் செல்கிறார்கள்.  டீக்கடைகளில் டீ நெகிழியில் கட்டித் தருவது ட்ரெண்ட்ட்டாகவே மாறியுள்ளது. 

ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.   அங்கங்கு நாம் பார்க்கும் செக்கு எண்ணெய்,  திணை, ஆர்கானிக் கடைகள் இதனை மெய்ப்பிக்கும்.  ஆனாலும் இதில் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளது.  


மாறாக நீர்நிலைகள் பற்றி கொஞ்சமேனும் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. இந்த சில வருடங்களில் நீர்நிலைகள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்றவை அதிகமாகவே நடைபெற்றது. அரசாங்கமே பல நீர் நிலைகளை சீரமைத்தும் உள்ளது.  சில இடங்களில் 100 நாள் திட்டத்தினை இந்த பக்கமும் மடைமாற்றி உள்ளது ஆரோக்கியமான விஷயம். 


ஆனால் கீழ்பவானி, காலிங்கராயன் கரையில்  அல்லது ஏதேனும் நீர்நிலைகளை ஒட்டி, சென்ற இடங்களில், என்னை வருத்தப்பட வைத்த விஷயம் ஒன்று உண்டு. அது அங்கங்கு கிடந்த பாட்டில்கள்,  கூடவே இரண்டு மூன்று பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் கோக் பாட்டில்கள் அல்லது வாட்டர் பாக்கெட்டுகள்.  வாய்க்காலின் கரையில் ஒரு கிலோமீட்டருக்கு சென்று வந்தால் தெரியும்.  பத்து இருபது அடிக்கு ஒரு குவியலாகவும் அல்லது எங்கெல்லாம் நிழல் இருக்கின்றதோ அங்கும், சமூகப் பொறுப்பு  துளியும் இல்லாத குடிமகன்களின்  இந்த தடயங்களை காண முடிந்தது.  'ஐயா, நீங்கள் குடியுங்கள் ஆனால் இந்த பாட்டிலை எங்காவது ஒரு இடத்தில் போட்டுச் செல்லலாமே'.   அரசேகூட அந்த பாட்டில்களை போடுவதற்கு தனியாக  குப்பைத் தொட்டியை அங்கங்கு வைக்கலாம் அல்லது பாட்டிலைத்  திருப்பிக் கொடுத்தால் டாஸ்மாக்கில் தள்ளுபடி அளிக்கலாம்.   பாட்டில்கள் மறுசுழற்சிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.  கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்காலின் இந்த பிரச்சினை தமிழ் நாட்டுப் பானையின் ஒரு சோறு தான். கடந்த அரசு படிப்படியாக டாஸ்மாக்கை குறைக்கவில்லை.  வரும் அரசும்  இதில் கைவைக்காது, ஆனால் இந்த பாட்டில் கழிவுகளை ஒழுங்குமுறைப் படுத்துமா?  


80க்கும்  2010க்குமான பல ஒப்பீடுகள் நகரம் Vs கிராமம் போலவே இருக்கும். 90க்கு பிறகான நகரமயமாக்கல் இவற்றிற்கு முக்கிய காரணம்.  ஆனால் இன்று  நகரத்தின் ருசியை அறிந்தர்வர்கள், நகரங்களை விட்டு வர முடியுமா என்பது கேள்விக்குறி.  அதற்கு மருத்துவ காரணங்கள் தவிர, ஊர்ப்பக்கம் இன்றும் நிலவும் ஏற்ற தாழ்வும், பெண்களுக்கு நகரத்தில் கிடைக்கும் ஒருவித ∴பிரீனஸ்,  இன்னும் வேறு பல காரணங்களும் அடக்கம்.  ஆனால் கிராமங்கள் இப்பொழுதும் இயற்கை, உறவு, நட்பு என வேறு மாதிரி அழகாக உள்ளது. 


ஈரோடு மாவட்டம் பற்றிய கருத்து இப்படி மாறி இருக்க 2019ல் எழுதிய தேர்தல் பற்றிய கட்டுரை, மற்றொரு விதமாக மாறி உள்ளது.  பாராளுமன்றத் தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலம் வாக்காளர்களும் ஏற்றமே.  சென்ற தேர்தலில் அந்தக் கட்சியின் வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே பணம் கொடுத்தார்கள்.   ஆனால் இந்த முறை இரண்டு கட்சிகளுமே வாக்கு வங்கி தவிர, அனைவருக்கும் பணம் கொடுத்துள்ளார்கள்.  மக்களும்  இரண்டு பக்கமும் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதற்கு குத்துவதற்கு தயாராக இருந்தார்கள்.  குத்தினார்கள்.  ஒரு சிலர் பணம் வாங்க மறுத்த சம்பவங்களும் நடந்தது.   


சில தொகுதிகள் எல்லாம் ஒரு மாத காலமாக பரிசுமழை பொழிந்துகொண்டே இருந்தது. புடவை, வேட்டி அவர்கள் குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து உள்ளார்கள்.  'யார்க்கு ஓட்டு போட போறீங்க'  என்ற இருந்த  பேச்சு 'உங்களுக்கு ரெண்டு பக்கம் இருந்தும் வந்துடுச்சா' என்று மக்கள் மட்டத்தில் மாறி விட்டது.   


 90களில் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவது மட்டுமே இருந்தது.  இன்று அரசு மற்றும்  அரசியல்வாதிகள்,  அவர்களின் குற்றத்தை சரிசமமாக மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றார்கள்.  மக்களும் குற்ற உணர்வு இல்லாமல் அதனை வாங்கிக் கொள்கின்றார்கள்.  ஒரு வகையில் இதனைப் பார்க்கும் பொழுது, ஒரு சாமானியன் அரசியல்வாதிகளிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியுமா?  அவர்கள் செய்த எதிர்மறைச் செயலுக்குத் தானே கொடுக்கின்றார்கள்? தேர்தல் கமிஷனே இதனை கண்டு கொள்ளாமல்  யார்மீதும் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நம்  மக்கள் செய்வது சரிதானோ? 


மாற்றம்  ஒன்றே மாறாதது. காலத்தின் பாதையில் கவனித்து பயணிப்போம்.


பி.கு : 

2017 -ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றி எழுதி முதல் இடம் பிடித்த கட்டுரை.


https://tinyurl.com/yxju8tk5



2019-ல் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எழுதியது.  

https://tinyurl.com/n6kwcjma








Monday, March 08, 2021

பவானி செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா

 பவானி, செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா என்பது அந்த கோயிலின் திருவிழா மட்டும் அல்ல.  அதனை சுற்றி இருக்கும் சின்னச் சின்ன தெருக்களில் உள்ள அம்மன்களுக்கும் சேர்ந்ததே.   பலமுறை கலந்து கொண்டு இருந்தாலும், சேத்து வேசம் போடும் நிகழ்வைப்  பார்த்தது இல்லை. அதற்கான நேரமும் வாய்க்கவில்லை என்று தான் கூறவேண்டும்.  புதன்கிழமையில் பண்டிகை வருவதாலோ என்னவோ, தொடர்ந்து  மூன்று நாள் விடுமுறை கிடைக்காது என்பதால்,  புதன் மதியம் நடைபெறும் இந்த நிகழ்வை மட்டும் தவற விட்டுக்கொண்டு இருந்தேன். இம்முறை வீட்டில் இருந்து வேலை செய்ய வைத்த கொரோனாவிற்கு நன்றி.  

மற்ற ஊர்களின் அம்மன் திருவிழாவில் இருந்து, இந்த சேத்து வேசம் நிகழ்வு முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றது.  இதுவரை நான் பார்த்த மாரியம்மன் திருவிழாக்களில் இந்த மாதிரியான நடைமுறை இருந்ததில்லை. தேர் வடம் பிடித்து இழுப்பார்கள், அக்கினிச்சட்டி எடுப்பார்கள், அழகு குத்திக்கொள்வார்கள், குண்டம் இறங்குவார்கள்,  கம்பம் ஆடுவார்கள்,  தெப்பத்தேர், மகந்தேர், மிரமனை வருதல் என்பகை தான்,  அனைத்து பக்கமும் நடைபெறும்.  ஒரு சில  நிகழ்வு மாறுபடும் அல்லது இருக்காது.   இங்கு மட்டும்தான் இவற்றோடு சேர்த்து,  இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி உள்ளது. அது மட்டுமில்லாமல் சனி இரவு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் லைட்டிங்கும் வேறு எங்கும் இல்லாத நிகழ்வு.  

இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி வழி வழியாக நடந்து கொண்டு உள்ளதாக கூறுகிறார்கள்.  இப்பொழுது இதனை  சேற்ற்றில்  மட்டும் இடும் வேசம் என்று முற்றிலும்கூற முடியாது.   பல வகையான வண்ண வண்ண கலவைகளைத்தான்  உடல், முகம் என பூசி இருந்தார்கள்.  கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காணப்படுபவர்கள் போலவும்,  மாறுவேட போட்டிக்கு போவதுபோலவும், வேசமிட்டு அலப்பறை விட்டுக் கொண்டிருந்தார்கள்.  சுற்றுலா தளத்தில் சில்வர் பூசப்பட்டு தடி ஊன்றி நிற்கும் காந்தி தாத்தா போல நிறைய சில்வர் மனிதர்களையும் காண முடிந்தது.  ஜோக்கர் திரைப்படத்தில் வருவது போல டெரர்ராக முகத்தினை மாற்றியிருந்தார்கள்.  ஜோக்கர் வேடம் தான் அளவுக்கு அதிகமாக இருந்தது.  புலி, பெண், அம்மன் வேடமும் கூடவே.  இவை எல்லாவற்றையும் விட என்னை சட்டெனெ கவர்ந்தது தல ரசிகரின் முதுகில் எழுதப்பட்டு இருந்த வலிமை அப்டேட்.  ட்ரெண்டில் உள்ளார்கள். 





 


 


இந்த  ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அல்லது தப்பாட்ட அடியை கேட்க முடியவில்லை.  அது இல்லாமலே கோலாகலாமாக இருந்தது.  நிகழ்வு முக்கிய சாலையில் கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ தூரம், 3-4 மணி நேரம் நடைபெறுகிறது.  பவானியின் அந்த முக்கிய சாலை அன்று முடக்கப்பட்டு போக்குவரத்து வேறு பக்கம் திருப்பப்படுகிறது. நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்புகளில் நீண்ட நேரம் விளையாடுகிறார்கள்   வேடமிட்டர்வர்கள் முன்னால் நகர்ந்து நகர்ந்து செல்ல சாலையின் இருபுறமும் கூடியிருக்கும் மக்கள் உப்பு மற்றும் மிளகுடன்  சாக்லெட் அல்லது சில்லரையும் கூடவே சேர்த்து அவர்களின் மீது வீசுகின்றார்கள்.   சாக்லேட்டும் , சில்லரையும் எப்பொழுது சேர்ந்திருக்கும் என தெரியவில்லை.  



"அக்கா இந்த பக்கம் போடுங்க " 

"அக்கா வெறும் உப்பு மட்டும் போடாதீங்க சாக்லேட்டோட போடுங்க"...

 "காசு போட்டு போடுங்க"... 

"ஒருபக்கமாக போடாதீங்க"  என்று பலவிதமாக குரல்களில், விசிறும் பெண்களிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இந்த வேடம் இட்டவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருந்தார்கள். வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு இல்லாமல் நடைபெறுகிறது.  ஆண்கள்தான் இந்த சேத்து வேசத்தை  ஏற்று இருந்தார்கள். கூடவே சிறுமிகள் சிலரும். வேடிக்கை பார்ப்பவர்களும் இந்த கலவையை வீசுபவர்களும்  பெரும்பாலும் பெண்களாக இருந்தார்கள்.  


அந்த காசையும், சாக்லேட்டையும் குதித்து 'கேட்ச்' பிடிப்பதில் தான் இதில் இருக்கும் த்ரில்.  போட்டி, விளையாட்டு, கொண்டாட்டம் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.  அந்த காசை இருவரும் பிடித்து விட்டால் அது எனக்கு, உனக்கு என்று அடிதடி. பலரும் அந்த நாணயத்தைக்  கைப்பற்ற மொட்டை வெயிலில், தார் ரோட்டில் அப்படியே  உட்கார்ந்து கொள்கின்றார்கள்.  நாணயத்தை அழுத்தி, நெட்டித் தள்ளி உரிமை கொண்டாடுகிறார்கள்.  இந்த பஞ்சாயத்து சில நிமிடங்கள் நடந்து ஒருவர் விட்டுக்கொடுக்கிறார் அல்லது வெற்றி பெறுகிறார்.  இவையாவும் அங்கங்கு, அக்கூட்டத்தின் ஊடே பலவாறாக நடந்து கொண்டு இருக்கிரது.  அதுதான் நிகழ்வின் எழுதப்படாத விதி.  


முன்பு குழந்தை இல்லாத பலரும் இந்த சேத்து வேச நிகழ்வில் சூறை விடுவதாக வேண்டிக்கொள்வார்களாம்.  வேண்டுதல் நிறைவேறினால் அவர்கள் சொந்தம் சூழ அந்தக் குழந்தையையும் சூறை விடுவார்களாம். குழந்தை அவர்கள் தெரிந்தவர்கள் கையில் கிடைக்காமல் வேறு ஒருவரின் கையில் கிடைத்து விட்டால் அவர்கள் கேட்கும் காசு பணத்தை இவர்கள் கொடுக்க வேண்டுமாம்.   இப்பொழுது அது தடை செய்யப்பட்டு உள்ளது.   சூறை விடுவது என்பது கூட்டத்தில் உப்பு மிளகை வீசுவது போல தூக்கி வீசுவது தான். 


என்னைப்போல வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு அண்ணன், பக்கத்தில் இருந்த பெட்டிக்  கடையில் லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட் ஒரு சரம்  வாங்கினார்.  அதனை ஒவ்வொன்றாக கிழித்து  அவர்களின் மீது சரசரவென ரம்மி விளையாடுகையில் சீட்டுக்கட்டிலிருந்து சீட்டு போடுவதுபோல விசிறினார்.  கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.  கூடவே மற்றொருவர் வேறு பிஸ்கட் பாக்கெட்களை  வாங்கி வீசினார்.  அடுத்ததாக  லேஸ் சிப்ஸ்.  சிலர் 'அண்ணா அண்ணா இங்கயே கொடுங்க' என அருகே வந்து அவரிடம் பிடுங்காத குறை.   ஒருவர் முழு லெஸ் சாரத்தையும் வாங்கிக் கொண்டு ஓட, அவரின் சக போட்டியாளர் அவரைத் துரத்தி அவரிடம் இருந்து பாதியை பங்கிட்டுக் கொண்டார். 


ஒரு பக்கம் தண்ணீர் பாட்டிலையும் வாங்கி விசிறி அடித்தார்கள்.  திடீரென ஒரு கடையில் இருந்து  துணிகளைத் தூக்கி போட்டார்கள்.  இன்னொரு பக்கம் இருந்து வாழைப்பழங்கள்.  என்ன ஒரு ஆனந்தம் அதனை குதித்துப் பிடிப்பவர்களுக்கு.  கலந்துகொண்டு இருந்த சிறுவனின் கையில் மஞ்சள் பை இருந்தது.  அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி நாணயங்கள், சாக்லெட்டுகள் என நிரம்பி இருந்தது.  அவனும் கிடைத்தவற்றை பிடித்து மீண்டும் அந்தப் பையில் திணித்துக்கொண்டு இருந்தான்.  கிட்டத்தட்ட ஆரம்பித்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் வந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.  இன்னும் சற்று தொலைவில் முடிந்துவிடும்.   


தார்ரோடு மதியம் ஒரு மணி வெயில் எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.  வழிநெடுக இதுதான் அவர்களுக்கு விளையாட்டு. அவர்களுக்கு இது கொண்டாட்டமாகத் தான் இருந்தது.  இரு தண்ணிர் வண்டிகள்  பின்னால் வந்து கொண்டிருந்தது.  தண்ணீர் திறந்துவிட்டு சாலைக்கு அடித்துக் கொண்டு வந்தார்கள்.  அந்த வண்டியில்  வேசம் போட்டவர்களும் அவர்களின் வேசம் கலைந்து விடும் என குளித்துக் கொள்ளவில்லை. மற்றவர்கள் அந்த வண்டியின் அடியில் ஷவரில் குளிப்பது போல ஏகாந்தமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். முடித்துவிட்டு மீண்டும் கேட்ச் பிடிக்கும் ஆட்டத்திற்கு வந்தார்கள்.



இந்த ஊர்வலத்தின் எஞ்சின் போல ஒரு குழு.   அந்த  குழுவின் புகைப்படங்களைத்தான் முன்பு பதிவிட்டு இருந்தேன்.  அதில் ஒருவர் கிரிக்கெட் வர்ணனையாளர் போல ஒரு கையில் மைக் வைத்துக்கொண்டு சாலை ஓரத்தில் இருந்தவர்களிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தார்.  அந்த ஊர்வலத்தின் இறுதியில் குதிரை அதன் பின்னே பூக்களால் சோடிக்கப்பட்ட கரகமும், சாமியும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.  அதற்கு மட்டும் கயிற்றில் பாதுகாப்பு வளையம் வைத்து நகர்ந்துகொண்டு இருந்தார்கள்.  ஆனால் கூட்டம் என்னவோ இந்த வேஷம் போட்டு வந்தவர்களையும், சூறை பிடிக்க வருபவர்களிடமும்  தான் தேங்கியிருந்தது.   அவர்கள்தான் கொண்டாட்டத்தை உச்சகட்டமாக மக்களுக்கு அளித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.   


வண்டி வெயிலில் நின்று இருந்ததால் கொதித்தது.  இந்த வெய்யிலிலும் மக்கள் உற்சாகமா இருந்தார்கள் .  .  இந்த ஊர்வலம் நடந்த பாதையின் பின்னே ஏதோ ஒரு கலவரம் நடந்து முடிந்தது போன்ற தோற்றம். கொரோனா ஆரம்பிக்கும் முன் சென்ற வருட நோம்பி  நடந்து முடிந்திருந்தது.  எனக்கு என்னவோ இந்த வருடம் கொரோனாவை சூரசம்ஹாரம் செய்துவிட்டு, இந்த பண்டிகை கொண்டாட்டித் தீர்த்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது    



செல்லாண்டி அம்மன் சேத்து வேசம் பார்த்துவிட்டு வீடு அருகே வந்தேன். 

"நோம்பிக்கு எப்ப வந்தீங்க" என்றார் பக்கத்து வீட்டு பாட்டி.  

"நேத்து நைட்டு வந்தேங்க" என்று தொடர்ந்தேன்  "எங்க யாரையும் காணோம்.  உங்க வீட்ல யாரும் வர்லீங்களா?. நோம்பிக்கு என்ன பண்ணிங்க?" என தொடர் கேள்வியை எழுப்பினேன்.  

 "யாரும் வரலைன்னு சொல்லிட்டாங்க.. வந்தாங்கன்னா எதையாவது சமைக்கலாம்.. எதோ என்னால முடிஞ்சத போடுவேன்..ஒருவேளையாவது வந்துட்டு போனாங்கன்னா நமக்கு நல்லா இருக்கும்" என்றார் வெளியில் சிரித்தபடி.  அவர்கள் மகன்/மகள் வீடு அரை மணிதூரத்தில் தான் இருந்தது.  


கயிற்றுக் கட்டிலை மல்லாக்க போட்டு கட்டிலின் இரண்டு கால்களுக்கும் சேர்த்து புதிய ஜமுக்காளத்தைக் கட்டி இருந்தார்.   கையில் ஊசி வைத்து கோர்த்துக் கொண்டு இருந்தார்.  சட்டென மடைமாற்ற  "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டேன்.  

"தெரிஞ்சவங்க ஜமுக்காளத்துல பேர் எழுதி தர சொன்னாங்க.. இப்பெல்லாம் பண்ணறது இல்லை... சரி தெரிஞ்சவங்கன்னு தான்" என்றார்.   பவானியில் இது  ஒரு முக்கியமான தொழில்.  

 "இதுல ஒரு எழுத்துக்கு ரெண்டு அம்பது  குடுப்பாங்க. தமிழ், இங்லீஸ், இந்தி எதுவா இருந்தாலும் பேப்பர்ல போட்டு கொடுத்தா, நான் ஜமுக்காளத்துல எழுதிருவேன்" என்றார். ஒருவேளை 250ஐ ரெண்டு அம்பது என்று கூறுகிறாரே என நினைத்து "எவ்வளவுங்க?" என மீண்டும் கேட்டேன்   "ரெண்டு ரூவா அம்பது காசுங்க.  நான் ஆரம்பிச்சப்ப அப்பல்லாம் 40 பைசா இருந்தது.  படிப்படியா இப்ப ரெண்டு அம்பது ஆகிடுச்சு" என்றார்.  அதில் ஒரு 20 எழுத்து இருந்திருக்கும்.  50 ரூபாய் கிடைக்கும் 


வெளியே ஊரே கொண்டாட்டமாக இருந்த அந்த நேரத்தில், இது போல தனித்து இருப்பவர்கள் அன்றும் தனித்து தானே இருக்கின்றார்கள். 



குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...