Sunday, July 02, 2017

தொலைந்துபோன பட்டிமன்றமும், அறச்சலூர் திருவிழாவும்

பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த 90களின் காலம்.     தொலைபேசி இல்லாத காலகட்டங்களில் சில நிகழ்வுகள் ஆச்சர்யமாக, முறைப்படி திட்டமிட்டது போல நடக்கும்.   கோடை விடுமுறையில் தாய்மாமாவின்  ஊரான அறச்சலூருக்கு செல்வது  வழக்கம்.   சித்திரை மாதம் அறச்சாலை அம்மன் தேர்த்திருவிழா.   பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட முதல் ஞாயிறு, மாமாவின் பையன்(மாமா என்றுதான் அழைப்போம் - சற்றே எங்களை விட வயது கூடியவர்)  எங்களை அழைத்து செல்ல எப்பொழுது வருவார் என்று காத்துகொண்டு இருப்போம்.  அப்படியே திருவிழாவிற்கு எங்களது வீட்டிற்கு அழைப்பு சொல்லவதற்கும் வருவார்.  ஒரு 15 கிமீ தூரத்தை மிதிவண்டியில் கடந்து வந்து எங்களையும் அதில் அழைத்து செல்வார்.  கீழ்பவானியின்  சிறு மற்றும் சின்னஞ்சிறு கடைமடை வாய்க்கால்கள்  ஓரமாக  எங்கள் பயணம் இருக்கும்.  பங்குனிசித்திரையிலும் பச்சை போர்த்திய வயல்வெளிகளின் ஊடாக,   வயல்களின் ஓரங்களில் இருந்து வரும் தண்ணீர் தெறிக்க, வரப்புகளின் இடையில் பயணப்படுவோம்.  


பள்ளியூத்து அருகே நிறைய நகப்பழ(நாவல்பழ)   மரங்கள்  சாலையின் இரு  ஓரங்களிலும்  ஆசையை தூண்டும்.  அங்கு வண்டியை நிறுத்தி கல் அல்லது  தடி எடுத்து எறிந்து, பொல பொல  என கீழே விழும்,   மண் ஒட்டியசற்று பிஞ்சாகவும், பழமாகவும்  உள்ள பழங்களை ஊதி சாப்பிட்டுக்கொண்டு வண்டியை விடுவோம்.   நாகமலையின்   மொட்டைப்பாறைகளில் செங்குத்தாக ஏறுவதுநாகமலையை  ஒட்டி செல்லும் கீழ்பவானியின் பெரிய கால்வாயில் ஆனந்தக் குளியல்,   இசைக்கல்வெட்டை தட்டி பார்த்தால் சத்தம் வரும் என  தட்டிப்பார்ப்பது  ஆகியவை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செய்யும் கோடைவிடுமுறையின் நேர்த்திக்கடன்கள்.   
அறச்சலூர்   இசைக்கல்வெட்டுகிமு 2ம் நூற்றாண்டில் சமணர்களால் செதுக்கப்பட்ட   இசையைப்பற்றிய குறிப்புக் கல்வெட்டுகள் என்ற கற்பூரவாசனையை அப்போது அறியாதவன்


  தேர்த்திருவிழா இருவாரங்களுக்கு மிக சிறப்பாக நடைபெறும்  குறைந்தது 10 நாட்களுக்கு இரவு கலை நிகழ்ச்சிகள்  நடைபெறும்.  எங்கள் ஊரிலிருந்து பயணம் செய்யும்போது என்ன என்ன நிகழ்ச்சிகள் என்று தொண தொண என கேட்டுக்கொண்டு செல்வது வழக்கம்.     ஊரில் இறங்கியவுடன் கலை நிகழ்ச்சிக்கான நிகழ்ச்சிநிரல் அட்டவணையை பார்ப்பதே ஒரு மகிழ்வாக இருக்கும்.    சுற்று பட்டி 18 கிராமங்களுக்கும் அதில் முறை கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு ஊர் மக்கள் முன்னின்று ஒரு கலைநிகழ்ச்சியை நடத்துவார்கள்.   பெரும்பாலான இரவுகளில்  அந்தந்த  ஊர் நடிகர்களும், இயக்குனர்களும் பங்குபெறும்  நாடகம் நடைபெறும், கடைசி நாளன்று சிறந்த நாடகங்களுக்கான, நடிகர்களுக்கான, இன்னும் பிற  பரிசுகளும் வழங்கப்படும் .    

விழாவின் முக்கிய நாளான புதன் இரவில் இரண்டுமூன்று கலை நிகழ்ச்சிகள்இடையில் 1 மணி நேரம் விண் அதிரும் பிரமாண்டமான  வாணவேடிக்கையும் இடம்பெறும்.     அதில் ஒன்றாக பட்டிமன்றம் கண்டிப்பாக இடம்பெறும்.   அணிக்கு மூவர், புரியாத வயதிலும் சுவையான சம்பவங்களால், குட்டி கதைகளால் கோர்க்கப்பட்ட தெள்ளு தமிழ் பேச்சுக்களை கேட்க மிக அருமையாக இருக்கும்.     நடுவரும் நாம் எதிர்பார்க்காத தீர்ப்பை வழங்கி விடுவார்.  பட்டிமன்றத்தைப் பார்ப்பதற்குஉட்கார இடம் கிடைக்குமளவுக்கு கணிசமான  கூட்டம் இருக்கும்.     அந்த நேரங்களில்  தான்திரைப்பாடலுக்கு நடனம் ஆடும்ஆடல் பாடல் நிகழ்ச்சி பிரபலமான காலகட்டம்.   அபிநயா, நீக்ரோ பாய்ஸ் என இரு பெரும் நடனக்குழுவை கூட்டிக்கொண்டு வர சண்டை நடக்கும் என கேள்விப்பட்டதுண்டு.  

இவ்வாறுதான் பட்டிமன்றம் எனக்கு அறிமுகமானது.    அதன் பின்எங்கள் ஊர்  மொடக்குறிச்சி   கோவில் கும்பாபிஷேகத்தின்போது சாலமன் பாப்பையா அவர்கள்  நடுவராக வந்திருந்த பட்டிமன்றம் நினைவில் உள்ளது.     பிறகுதனியார்  தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட புதிதில்,   தீபாவளி, பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் பட்டிமன்றதில் ஆரம்பித்து அனைத்து நிகழ்ச்சியையும் வாய் மூடாமல் கண்டுகளித்ததுண்டு.  நிறைய தனியார்  தொலைக்காட்சிகள்  வர ஆரம்பித்ததும்விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளின் மீதான கவர்ச்சி வெகுவாக குறைந்த இன்றைய கால கட்டத்திலும்கொஞ்சமேனும் பார்க்கலாம்  என நினைப்பது சாலமன் பாப்பையா அவர்களின் பட்டி மண்டபமேவணிக மற்றும் அரசியல் கட்டமைப்புக்குள் இருந்தாலும்      

ஒருமுறை, இங்கு தமிழ் தெரிந்த கன்னட நண்பர்களிடம் நமது கலாச்சாரங்களைப்பற்றி காரசாரமாக பேசிக்கொண்டு இருக்கும்பொழுது 'பட்டிமன்றம் போன்ற  நிகழ்ச்சிகள் அவர்களது தொலைக்காட்சிகளில் இல்லை' என்று அவர்களும்  நமது பட்டிமன்றங்களைப் பார்ப்பதாக கூறி  நம் பெருமையை  உணர்த்தினார்.  மற்ற மொழிகளில் இந்த நிகழ்வு தற்காலத்தில் இருக்கின்றதா என ஆராயவேண்டியுள்ளது.

பெரும்பாலும் தொலைக்காட்சியில் மட்டுமே  இன்றைய காலத்தில் உள்ள பட்டிமன்றத்தை, சில மாதங்களுக்கு முன் எங்களின்  'ஈரோடு வாசல் குழுமம்',  'வாட்ஸ் அப்' மூலம் நேரடி பட்டிமன்றம் நடத்தி பழைய நினைவுகளை மீட்டிதொழில்நுட்ப வளர்ச்சியை இவ்வாறான நல்லவற்றிற்கும்பயன்படுத்தி கொள்ளலாம் என்று பறைசாற்றியது.  அதேபோலசென்ற வாரம் ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் 'ஈரோடு வாசல்' நட்புக்களை கொண்டு நடந்து முடிந்திருக்கும் பட்டிமன்றம் அதனை, அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சி எனலாம்.    பட்டிமன்றத்தை பற்றி எங்கள் குழுவின் தொடர் பேச்சுக்கள், இந்த நினைவலைகளை மலர செய்தது.

சில வருடங்களுக்குப்பின், நாங்கள் வந்த மிதிவண்டி, TVS50 மற்றும் பைக்காக மாறியது.  கீழ்பவானியின் தண்ணீர் வரத்து கடைமடைகளுக்கு  கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.   ஆடல், பாடல் எனும் குத்தாட்டங்கள்  நாடகங்களையும்பட்டிமன்றத்தையும்கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத்தள்ளிக் கொண்டு இருந்தது.


இன்று, வேரை விட்டு விலகி இருக்கும் நானும் திருவிழாவிற்கு  செல்ல முடிவதில்லை.  பட்டிமன்றமும்  அங்கு நடப்பதில்லை, ஒரு சில நாடகங்களே  நடக்கிறது.   நாடகங்களுக்காக அப்பொழுது இருந்த நிரந்தர மேடை, இப்பொழுது காவலர்களின் குடியிருப்பாக உள்ளது.   சென்ற வழிகள்,  'தார் ரோடு'களா மாறி , கீழ்பவானியின் கடைமடை வாய்க்கால்கள் 'கான்க்ரீட்' போடப்பட்டு தண்ணீர் இன்றி, காய்ந்துபோன எலும்புக்கு கூடுகளாக காட்சி அளிக்கின்றது. 

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...