Sunday, April 25, 2021

ஈரோடும் தேர்தலும் - 2017 to 2021

2017 ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றிய கட்டுரையில் எழுதியவை முதல் இடம்  பெற்றது. இன்று 2021ல் எப்படி உள்ளது? 


கல்யாணங்களில் ஆடம்பரங்களை கொரானா மட்டுமே தற்போது தற்காலிகமாக  நிறுத்திவைத்து உள்ளது.  கொரானா மட்டுப்பட்டிருந்த கடந்த மூன்று, நான்கு மாதங்களாக, அந்த ஆடம்பரமும் கொஞ்சமேனும் வெளிப்பட்டுத்தான் இருந்தது.  அதே போல எளிமையை உணர்ந்தவர்கள், மிகவும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்து விட்டார்கள்.   நேரில் சென்றே பத்திரிகை வைத்து அழைக்க வேண்டும் என்று இருந்ததையும், கல்யாணத்திற்கு செல்லவில்லை என்றால் கோபித்துக்கொள்வார்கள் என்பதையும் கொரோன காலம் உடைத்துள்ளது.   சில நாட்கள் தங்கி சிறப்பிக்கும் நெருங்கிய வட்டத்தின் கூட்டமும் குறைந்துள்ளது.  மாஸ்க்(போடவில்லை என்றாலும்),  சானிடைசரோடு இது இன்னும் சில காலம் தொடர வாய்ப்பு உள்ளது.


மருத்துவதுறை பற்றி இருந்த பார்வை, எனக்கு மாறியுள்ளது. இப்பொழுது சிசேரியன் டெலிவரி என்பது பெரிய விஷயமாக பேசுபொருள் ஆவது இல்லை. நார்மலா? சிசேரியனா? எனும் ஒற்றைக் கேள்வியில் மக்கள் கடந்து விடுகிறார்கள்.  அதற்கு உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள்  போன்ற பலவகை காரணங்களை உணர்ந்து இருக்கலாம்.  தமிழ்நாட்டில் குழந்தைப் பிறப்பில், குறைந்துள்ள இறப்பு விகிதம் இதன் பயனை பறைசாற்றும். அதேபோல செயற்கைக் கருத்தரிப்பு பற்றிய பார்வையும் மாறியுள்ளது.  அறிவியல், குழந்தை இல்லாதவர்களுக்கு போலிச் சாமியார்களிடம் சென்று ஏமாறாமல் இருக்க ஒரு அற்புதமான மேஜிக்கை கண்டுபிடித்துள்ளது.  வாடகைத்தாய் வழி பிறக்கும் குழந்தைகள் என  உலகம் அறிவியல்  பாதையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு நகர்ந்து கொண்டுதான் உள்ளது.  அதனைப்  பற்றி தனியாகவே எழுதலாம்.    


அதேபோல தெருவுக்கு தெரு மெடிக்கல்ஸ் இருப்பது, மருந்து, மாத்திரைகள் சட்டென சராசரி மக்களுக்கும் கிடைக்க இது உதவுகிறது.  நமது மக்களின் சராசரி ஆயுளை நீட்டித்துக் கொண்டு தான் உள்ளது. குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகள் பற்றிய தவறான புரிதல் மக்களிடம் மாறியுள்ளது.  தடுப்பூசிகளும் அதிவிரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு மக்களை இறப்பிலிருந்தும், கொரானாவின் வீரியத்திலிருந்தும்  தடுத்துக்  கொண்டுள்ளது.  தடுப்பூசி என்பது வியாபார நோக்கம் அல்ல என என் பார்வை மாறியுள்ளது.   


பேஸ்ட் இல்லாமல், இந்த மக்கள்தொகைக்கு வேப்பங்குச்சி மட்டுமே ஈடு கொடுக்க முடியுமா என்பதும் சந்தேகமே.  அது போலத்தான்  சோப்பு, சாம்பு பற்றி பேசுவதும்.   தோல் மற்றும் சாயக்கழிவுகள் நிலை பெரிதாக மாறியுள்ளதாக தெரியவில்லை.  இந்த கழிவுகளை எல்லாம்  ஆறுகளில் கலக்க விடாமல், சுத்திகரிப்பு நிலையத்தை வைப்பதும், முறையாக மறுசுழற்சி செய்வதுமே தீர்வாகும்.  அதனை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர பழங்காலத்திற்கு செல்வதாக இருக்க முடியாது. 


கொரோனா காரணமாக 8 மணிக்கு அடித்துப்பிடித்து குழந்தைகளை பேருந்தில் பள்ளிக்கு ஏற்றிவிடும் வேலை இப்பொழுது இல்லை.  ஆனால் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், வேறு விதமான பிரச்சனைகளை கையாண்டு வருகிறோம்.  குறிப்பாக ஆன்லைன் க்ளாஸ் அழுத்தங்கள் பெற்றோருக்கு எனில், யாரையும் பார்க்காமல், விளையாடாமல் ஆன்லைனில் இருக்கும் குழந்தைக்கு வேறு மாதிரியான மன அழுத்தம். குழந்தைகளை எவ்வாறு முழுநேரமும் பிஸியா வைத்துக்கொள்வது என்பது ஒரு சவாலான விஷயமும்.  கொரோனாவிற்குப் பின் கல்வி முறை மாறுமா? ஓரிடத்தில் அமர்ந்து ஆசிரியர்கள் கூறுவதை கேட்பார்களா? என்பதெல்லாம் காலம் தான் பதில் கூறும்.   

   

புரோட்டா சாப்பிடும் பழக்கம் குறைந்தது போல தெரியவில்லை.  இன்றும் நெகிழிகளில் குழம்பு ஊற்றி எடுத்துச் செல்கிறார்கள்.  டீக்கடைகளில் டீ நெகிழியில் கட்டித் தருவது ட்ரெண்ட்ட்டாகவே மாறியுள்ளது. 

ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.   அங்கங்கு நாம் பார்க்கும் செக்கு எண்ணெய்,  திணை, ஆர்கானிக் கடைகள் இதனை மெய்ப்பிக்கும்.  ஆனாலும் இதில் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளது.  


மாறாக நீர்நிலைகள் பற்றி கொஞ்சமேனும் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. இந்த சில வருடங்களில் நீர்நிலைகள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்றவை அதிகமாகவே நடைபெற்றது. அரசாங்கமே பல நீர் நிலைகளை சீரமைத்தும் உள்ளது.  சில இடங்களில் 100 நாள் திட்டத்தினை இந்த பக்கமும் மடைமாற்றி உள்ளது ஆரோக்கியமான விஷயம். 


ஆனால் கீழ்பவானி, காலிங்கராயன் கரையில்  அல்லது ஏதேனும் நீர்நிலைகளை ஒட்டி, சென்ற இடங்களில், என்னை வருத்தப்பட வைத்த விஷயம் ஒன்று உண்டு. அது அங்கங்கு கிடந்த பாட்டில்கள்,  கூடவே இரண்டு மூன்று பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் கோக் பாட்டில்கள் அல்லது வாட்டர் பாக்கெட்டுகள்.  வாய்க்காலின் கரையில் ஒரு கிலோமீட்டருக்கு சென்று வந்தால் தெரியும்.  பத்து இருபது அடிக்கு ஒரு குவியலாகவும் அல்லது எங்கெல்லாம் நிழல் இருக்கின்றதோ அங்கும், சமூகப் பொறுப்பு  துளியும் இல்லாத குடிமகன்களின்  இந்த தடயங்களை காண முடிந்தது.  'ஐயா, நீங்கள் குடியுங்கள் ஆனால் இந்த பாட்டிலை எங்காவது ஒரு இடத்தில் போட்டுச் செல்லலாமே'.   அரசேகூட அந்த பாட்டில்களை போடுவதற்கு தனியாக  குப்பைத் தொட்டியை அங்கங்கு வைக்கலாம் அல்லது பாட்டிலைத்  திருப்பிக் கொடுத்தால் டாஸ்மாக்கில் தள்ளுபடி அளிக்கலாம்.   பாட்டில்கள் மறுசுழற்சிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.  கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்காலின் இந்த பிரச்சினை தமிழ் நாட்டுப் பானையின் ஒரு சோறு தான். கடந்த அரசு படிப்படியாக டாஸ்மாக்கை குறைக்கவில்லை.  வரும் அரசும்  இதில் கைவைக்காது, ஆனால் இந்த பாட்டில் கழிவுகளை ஒழுங்குமுறைப் படுத்துமா?  


80க்கும்  2010க்குமான பல ஒப்பீடுகள் நகரம் Vs கிராமம் போலவே இருக்கும். 90க்கு பிறகான நகரமயமாக்கல் இவற்றிற்கு முக்கிய காரணம்.  ஆனால் இன்று  நகரத்தின் ருசியை அறிந்தர்வர்கள், நகரங்களை விட்டு வர முடியுமா என்பது கேள்விக்குறி.  அதற்கு மருத்துவ காரணங்கள் தவிர, ஊர்ப்பக்கம் இன்றும் நிலவும் ஏற்ற தாழ்வும், பெண்களுக்கு நகரத்தில் கிடைக்கும் ஒருவித ∴பிரீனஸ்,  இன்னும் வேறு பல காரணங்களும் அடக்கம்.  ஆனால் கிராமங்கள் இப்பொழுதும் இயற்கை, உறவு, நட்பு என வேறு மாதிரி அழகாக உள்ளது. 


ஈரோடு மாவட்டம் பற்றிய கருத்து இப்படி மாறி இருக்க 2019ல் எழுதிய தேர்தல் பற்றிய கட்டுரை, மற்றொரு விதமாக மாறி உள்ளது.  பாராளுமன்றத் தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலம் வாக்காளர்களும் ஏற்றமே.  சென்ற தேர்தலில் அந்தக் கட்சியின் வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே பணம் கொடுத்தார்கள்.   ஆனால் இந்த முறை இரண்டு கட்சிகளுமே வாக்கு வங்கி தவிர, அனைவருக்கும் பணம் கொடுத்துள்ளார்கள்.  மக்களும்  இரண்டு பக்கமும் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதற்கு குத்துவதற்கு தயாராக இருந்தார்கள்.  குத்தினார்கள்.  ஒரு சிலர் பணம் வாங்க மறுத்த சம்பவங்களும் நடந்தது.   


சில தொகுதிகள் எல்லாம் ஒரு மாத காலமாக பரிசுமழை பொழிந்துகொண்டே இருந்தது. புடவை, வேட்டி அவர்கள் குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து உள்ளார்கள்.  'யார்க்கு ஓட்டு போட போறீங்க'  என்ற இருந்த  பேச்சு 'உங்களுக்கு ரெண்டு பக்கம் இருந்தும் வந்துடுச்சா' என்று மக்கள் மட்டத்தில் மாறி விட்டது.   


 90களில் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவது மட்டுமே இருந்தது.  இன்று அரசு மற்றும்  அரசியல்வாதிகள்,  அவர்களின் குற்றத்தை சரிசமமாக மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றார்கள்.  மக்களும் குற்ற உணர்வு இல்லாமல் அதனை வாங்கிக் கொள்கின்றார்கள்.  ஒரு வகையில் இதனைப் பார்க்கும் பொழுது, ஒரு சாமானியன் அரசியல்வாதிகளிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியுமா?  அவர்கள் செய்த எதிர்மறைச் செயலுக்குத் தானே கொடுக்கின்றார்கள்? தேர்தல் கமிஷனே இதனை கண்டு கொள்ளாமல்  யார்மீதும் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நம்  மக்கள் செய்வது சரிதானோ? 


மாற்றம்  ஒன்றே மாறாதது. காலத்தின் பாதையில் கவனித்து பயணிப்போம்.


பி.கு : 

2017 -ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றி எழுதி முதல் இடம் பிடித்த கட்டுரை.


https://tinyurl.com/yxju8tk5



2019-ல் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எழுதியது.  

https://tinyurl.com/n6kwcjma








குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...