Saturday, August 01, 2020

Emotional intelligence கற்போம்...

சென்ற 20ம் நூற்றாண்டு வரை IQ என்று சொல்லக்கூடிய intelligence quotient (நுண்ணறிவு)  மூளை சார்ந்த, திறன் சார்ந்த விஷயங்களுக்கும் மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்தது.  அதன் அடிப்படையில் தான் இந்த ரேங்க் சிஸ்டம் உருவாக்கப்பட்டு இருக்கலாம்.  நாம் இன்னும் இதனை இருக்கப் பற்றிக்கொண்டு இருக்க, இன்று பல வளர்ந்த நாடுகளும் இந்த ரேங்கிங் முறையில் இருந்து வெளியேறி வருகிறார்கள் என்பது வேறு விஷயம். 

 Emotional intelligence - உணர்வுசார் நுண்ணறிவு  இந்த நூற்றாண்டின்  கண்டுபிடிப்பு.  உலக பொருளாதார நிறுவனம் வரும் காலங்களில், ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு EI  ஸ்பெசலிஸ்ட்டின் தேவை கண்டிப்பாக  இருக்கலாம் என்கிறது.  கூடவே இப்பொழுது உயர் பதவியில் இருப்பவர்கள் EI அதிகம் உள்ளவர்கள் எனபதை கோடிட்டுக் காட்டுகிறது.   IQ  நிறைய இருப்பர்களாக இருந்தாலும், EQ  மட்டுமே அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அமர்த்தி வைக்கிறதாம்.    IQ  மட்டுமே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் தேங்கி விடுகிறார்கள். 


"எப்பொழுதெல்லாம் உணர்ச்சி வயப்படுகிறோமோ, அப்பொழுது நமது IQ ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்ளும்" என்கிறார் Daniel  Goleman.   இவர் தான் உணர்வுசார் நுண்ணறிவின் தந்தை.   இவரது Emotional intelligence புத்தகம் 1995ல் வெளிவந்துள்ளது. 

உணர்வுசார் நுண்ணறிவு எந்த கால கட்டத்திலும், வயதிலும் அதனை வளர்த்துக்கொள்ளலாம்.  வேறு எந்தப் பின்னணியும் தேவை இல்லை.  EIக்காக  ஐந்து முக்கியக் குறிப்புகளை கூறுகிறார்.   இவை நமக்கு வேறு விதமான பெயர்களில், வேறு வேறு தளங்களில் சொல்லப்பட்டும் இருக்கலாம்

Self-awareness - நம்மை அறிந்து கொள்வது - நான் யார்
Self-regulation - நம்மை முறைப்படுத்திக் கொள்வது - ஒழுக்கம்
Motivation - நமக்கான உந்து சக்தி - முனைப்பு
Empathy -  மற்றவர்களைப் புரிந்து கொள்வது  - 'அனுசரிச்சு போ'
Social skills - மற்றவர்களிடம் எப்படி உரையாடுகிறோம் என்பது - 'இனிய உளவாக இன்னாத'

இப்பொழுது இதனைப்பற்றி விளக்கி கூறப்போவதில்லை. 

IQவை அப்படியே ப்ரோக்ராம் செய்தால் அது "ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" (AI).   பல  ரோபோக்களை உருவாக்கி உலவவிட முடியும்.  மனிதன் செய்ய முடியாதவற்றையும் ரோபோக்கள் கனகச்சிதமாக செய்யும்.   IQ வழி வந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் AI கும்,  IQ  மட்டுமே நிறைந்த புத்திகூர்மை அதிகம் வாய்ந்த மனிதர்களுக்கும் என்ன வித்யாசம்?     இங்கே தான் இந்த 'உணர்வு சார்ந்த நுண்ணறிவின்' தேவை மனிதனை இயல்பான, எதார்த்தமான மனிதன் ஆக்குகிறது.  ரோபோவிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவது உணர்வு தான்.

AI தற்போதைய நிலையில் திரும்ப திரும்ப மனிதன் செய்யும் வேலைகளை செய்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள்.   IBM’s Watson  ரோபோ இப்பொழுதே மருத்துவ துறையில் பல சிக்கலான பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு இருக்கிறது.    ரோபோ திரைப்படத்தில் சிட்டி ரோபோ காதல் வயப்படும்.  அழகாக ஐஸ்வர்யா ராயிடம் பூ கொடுத்து காதல் செய்யும்.  மனிதன் செய்யும் தவறை இது மிக நேர்த்தியாக தவறில்லாமல் செய்யும்.      இந்த உணர்வு பூர்வமான மனிதன் போன்றவரைத்தான் ஐஸ்வர்யா ராயும் விரும்புவார். எனினும் ரோபோ என கூறி ரோபோவை கைவிட்டுவிடுவார்.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள், உணர்வுப்பூர்வமானதாக இல்லாவிடினும், வருங்காலத்தில் ரோபோவின் வில்லனைப்போல அதுவும் யோசிக்க ஆரம்பிக்கலாம். 

படையப்பாவில்  ரஜினிகாந்த் , சௌந்தர்யாவிடம் காதலை கூற செல்வார்.  சௌந்தர்யாவை  பார்த்து படபடப்பாக உளறுவார்.   அதுதான் ஒரு சாதாரண மனிதர் செய்வது.  அதே படத்தில் ரஜினி, ரம்யாகிருஷ்ணனிடம் பஞ்ச் பேசும்போது படபடப்பு  இல்லாமல் தெளிவாக பேசுவார்.   இது உணர்வினை முறைப்படுத்திய மனிதன் செய்வது.

திரைப்படங்ககள் என்றாலும், இந்த ஹீரோக்களின் பிம்பங்கள் கட்டமைக்கப்படுவது உணர்வுகளின் மீது.   அவர் கோபம் தெறிக்க பேசும் போது நாமும் கோபம் அடைய நேரிடும், அவர்கள் காமெடி செய்யும்போது நாமும்.   அந்த உணர்வுகளைக் பார்த்துக்கொண்டு இருக்கும், மனிதர்களிடம் கடத்துவது தான் இயக்குனரின் வெற்றி.   அந்த உணர்வுகளுக்கு ஆட்படுபவர்கள் அதற்கான செயல்களில் இறங்குகிறார்கள்.     

சற்று நமது செய்தி தொலைக்காட்சிகளின் விவாதங்களைப் பார்த்தால் சில விஷயம் புரியும்.  சிலர் ஆணித்தரமாக கருத்தை ஒட்டி மட்டுமே பேசுவார்கள்.   எதிர்தரப்பு என்ன மாதிரியான கேள்வியை எழுப்பினாலும், கோபம் வரவே வராது.   பொறுமையாக நிதானமாக பேசுவார்கள்.   இன்னும் சிலர் ஒரு சிறிய கேள்விக்கே முதல்வன் திரைப்படத்தில் வரும் ரகுவரன்-அர்ஜுன் பேட்டி காட்சி போல கோபம் அடைந்து விடுவார்கள்.   இங்கு நான் உணர்வினை பற்றி மட்டுமே பேசுகிறேன்.  அங்கு பேசப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை அல்ல.  நிறுத்தி நிதானமாக பேசுபர்கள் பொய்த்தகவலையும் கூறலாம், கோபமாக பேசுபவர்கள் உண்மையாகவும்  இருக்கலாம்.

ஒரு மிகச் சாதாரணமான சொல் நம்மை எவ்வளவு காயப்படுத்தி விடுகிறது.  அல்லது ஒரு தவறான சொல் பிரயோகம், நம்மை எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக்கி  விடுகிறது.   அந்த சொல் அதற்கான எதிர்வினை இவை யாவும் என்ன செய்யும் என்பதை இன்றைய சமூக வலைத்தளங்களில் காணலாம்.     ஒரு பைசாவுக்கு உபயோகமில்லாதவை ட்ரெண்டிங் அடிக்கும், வனிதா-லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சண்டைகள், மகேஷ் பாபு பிறந்தநாள், அஜீத் விஜய் படத்தின் வசூல்,  போன்ற விஷயங்கள்.     அது ஒருவகையில் அதற்குள் நம்மை இழுத்து மன அழுத்தத்தை கூட்டி தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்கி விடுகிறது. நல்ல விஷயங்களுக்காக வரும் ட்ரெண்டிங் கூட அதில் நாம் பங்கேற்றுவிட்டு நமது வேலையைப் பார்க்க சென்றுவிடலாம்.   ஆனால் அதற்குள்ளேயே முழ்கி கிடப்பது தான் பிரச்சினை.   அதுவும் சில நேரங்களில் சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் சிலர் தீர்ப்பு எழுதி விடுவதும் உண்டு.

இந்த உணர்வுகள் நம்மை எதுவும் செய்யாமல் இருக்க, அதே மனநிலையில் சுற்றிக்கொண்டு இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

லண்டனில் இருந்தபோது செமினாரில் கலந்துகொள்ள நேரிட்டது.  அந்த செமினாரை  மில்லியனர் மாங்க்  என்று சொல்லக்கூடிய Eric Ho  என்பவர் நடத்தினார்.    ஒரு மணி நேரம் தான் பயிற்சி.  ஆரம்பித்தவுடன்  "டேக் எ டீப் ப்ரீத்" என்றார்.  மூச்சை இழுத்ததும் சில நொடிகளுக்குப்பின் "அவுட்" என்றார்.      அவருடைய பேச்சுக்கு இடையே,  பத்து நிமிடங்களுக்கு  ஒருமுறை பங்குபெற்றவர்களை செய்ய சொல்லிக்கொண்டே இருந்தார்.   அதேபோல ஒவ்வொருவரும் மூச்சை இழுத்து வெளியே விட்டனர்.   அதற்கான விளக்கத்தையும்  கொடுத்தார்.  "நீங்கள் ஒவ்வொரு முறை மூச்சை வேகமாக இழுத்து வெளியில் விடும்போது,  உங்கள் மூளையில்  இருக்கும் மேகம் விலகி விடுகிறது. சிந்தனையை ஒருமுகப் படுத்த முடியும்." என்றார்   அதாவது மொக்கத்தனமான சிந்தனைகள் வெளியேறும். வேறு ஒரு பக்கம் நமது மைண்ட் டீ குடிக்கச் சென்றிருந்தால் தரதரவென கட்டி இழுத்து அந்த இடத்திற்கு கொண்டு வரமுடியும் என்கிறார்.  அது இயல்பாகவே  நமக்கு நடக்கும்.  நாம் ஒரு சவாலான வேலையை  செய்து முடித்து பெருமூச்சு விடுவது ஒருவித ஆசுவாசம் அளிக்கும். 

தொடர்ந்து படிக்கும் முன்பு இப்ப நீங்க ஒருமுறை செய்து பாருங்கள்.   எப்படி உணர்கிறீர்கள் ?

அதேபோல இன்னுமொரு கார்ப்பரேட் பயிற்சின் போதும் மூச்சு பயிற்சியை வலியுறுத்தினார்கள்.   தினமும் மூன்றுமுறை சில நிமிடங்கள் மூச்சை இழுத்து விட கூறினார்கள்.  காலையில் அலுவலகம் சென்றதும் ஒருமுறை.  ட்ராபிக்கிலிருந்து, பேருந்து நெரிசல்களில் சிக்கியும்  ஒருவழியாக அலுவலகம் சென்று  அவரவர் இருக்கையில் அமரும்போது இயல்பாகவே ஒரு பெருமூச்சு விட்டு நம்மை இலகுவாக்கிக் கொள்வோம்.  இதனை மூச்சு பயிற்சியாக மாற்றச் சொல்கிறார்கள்.    மறுமுறை அலுவலகம் முடிந்து வீடு சென்றதும் செய்யவேண்டும். அலுவலக டென்ஷன்களை வீடுகளில் காட்டாமல் இருப்பதற்கு இது உதவும்.   தூங்கச் செல்லும்போது மூன்றாம் முறை.   அன்றைய நாள் எப்படியாக கழிந்திருந்தாலும் நிம்மதியான உறக்கம் அடைவதற்கு.  இன்றைய கரனோகாலத்தில் WFH  இருப்பதில் முதல் இரண்டும் நடக்க சாத்தியமில்லை.  ஆனால் மூச்சு பயிற்சி  உதவும். 

இந்த மூச்சு பயிற்சிகளை  எனக்கென்னவோ நமது ஊரில் சம்மனங்கால் போட்டு, கை விரல்களை அபிநயம் பிடித்து யோகா, ப்ராணாயாயம்  என்ற ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைத்துளார்கள் என நினைக்கிறேன்.    மேலே சொன்ன மூச்சுப்பயிற்சிகள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு செய்தது தான்.   டேனியல் கோல்மேன் மூச்சுப்பயிற்சி என்பது நம்மை முறைப்படுத்திக் கொள்வது என வலியுறுத்துகிறார். மேற்கத்திய நாடுகள் இந்த பர்னிச்சரை அழகாக உடைத்து மக்களிடம் சேர்த்து உள்ளார்கள்.     

அடுத்தாக ஒரு நடை வெளியே உலவி வரலாம்.  வெளியில் இயற்கையும், மனிதர்களும்  கற்றுக்கொடுக்கும் பாடம் அலாதியானது.

அடுத்தாதாக multi-tasking  அவ்வளவாக வேலை  செய்வதில்லை என்கிறார்.  ஒரு வேலையின்போது இடையில் நிறுத்தி fb பக்கம் அல்லது ஒரு whatsapp பார்ப்பது அந்த வேலையை செய்வதில் தொடர்ந்து இருக்கும் ஈடுபாட்டை  குறைக்கிறதாம்.     

மற்றவர்களிடம் Have a nice day ன்னு சொல்றதுக்கு பதிலா,  Make your day ன்னு சொல்ல சொல்கிறார்.
அதையே நமக்கு நாமே சொல்லிக்கொண்டால்
"Make my day".
கிட்டத்தட்ட அஜீத் படத்தில் வரும் ஒரு பஞ்ச்..."ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும் நானா செதுக்குனது...". 
நாமே செதுக்குவோம் நம்முடைய தினத்தை...
Make your day

இன்றைய கொரோன காலம் பல திருப்பங்களை நிகழ்த்திக்கொண்டு உள்ளது.  அதில் ஒன்று வேகமாக மனிதர்களை தொழில்நுட்பத்தின் பக்கமாக திருப்பி விட்டுள்ளது.   நிறுவனத்திற்கு வரும் காலத்தில் AI  மற்றும் EI இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல தேவை.     AI  போன்ற அட்வான்ஸஸ்ட் டெக்னாலஜி புகுத்தாத நிறுவனம் வளர முடியாது.  இதேபோல வழி  நடத்துபவர்கள் EI அதிகம் இருப்பவராக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பாதையில் செல்ல முடியும்.  இது நமக்கும்  மனிதர்களுக்கும் பொருந்தும்.  EI கற்போம்.

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...