Sunday, July 02, 2017

தொலைந்துபோன பட்டிமன்றமும், அறச்சலூர் திருவிழாவும்

பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த 90களின் காலம்.     தொலைபேசி இல்லாத காலகட்டங்களில் சில நிகழ்வுகள் ஆச்சர்யமாக, முறைப்படி திட்டமிட்டது போல நடக்கும்.   கோடை விடுமுறையில் தாய்மாமாவின்  ஊரான அறச்சலூருக்கு செல்வது  வழக்கம்.   சித்திரை மாதம் அறச்சாலை அம்மன் தேர்த்திருவிழா.   பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட முதல் ஞாயிறு, மாமாவின் பையன்(மாமா என்றுதான் அழைப்போம் - சற்றே எங்களை விட வயது கூடியவர்)  எங்களை அழைத்து செல்ல எப்பொழுது வருவார் என்று காத்துகொண்டு இருப்போம்.  அப்படியே திருவிழாவிற்கு எங்களது வீட்டிற்கு அழைப்பு சொல்லவதற்கும் வருவார்.  ஒரு 15 கிமீ தூரத்தை மிதிவண்டியில் கடந்து வந்து எங்களையும் அதில் அழைத்து செல்வார்.  கீழ்பவானியின்  சிறு மற்றும் சின்னஞ்சிறு கடைமடை வாய்க்கால்கள்  ஓரமாக  எங்கள் பயணம் இருக்கும்.  பங்குனிசித்திரையிலும் பச்சை போர்த்திய வயல்வெளிகளின் ஊடாக,   வயல்களின் ஓரங்களில் இருந்து வரும் தண்ணீர் தெறிக்க, வரப்புகளின் இடையில் பயணப்படுவோம்.  


பள்ளியூத்து அருகே நிறைய நகப்பழ(நாவல்பழ)   மரங்கள்  சாலையின் இரு  ஓரங்களிலும்  ஆசையை தூண்டும்.  அங்கு வண்டியை நிறுத்தி கல் அல்லது  தடி எடுத்து எறிந்து, பொல பொல  என கீழே விழும்,   மண் ஒட்டியசற்று பிஞ்சாகவும், பழமாகவும்  உள்ள பழங்களை ஊதி சாப்பிட்டுக்கொண்டு வண்டியை விடுவோம்.   நாகமலையின்   மொட்டைப்பாறைகளில் செங்குத்தாக ஏறுவதுநாகமலையை  ஒட்டி செல்லும் கீழ்பவானியின் பெரிய கால்வாயில் ஆனந்தக் குளியல்,   இசைக்கல்வெட்டை தட்டி பார்த்தால் சத்தம் வரும் என  தட்டிப்பார்ப்பது  ஆகியவை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செய்யும் கோடைவிடுமுறையின் நேர்த்திக்கடன்கள்.   
அறச்சலூர்   இசைக்கல்வெட்டுகிமு 2ம் நூற்றாண்டில் சமணர்களால் செதுக்கப்பட்ட   இசையைப்பற்றிய குறிப்புக் கல்வெட்டுகள் என்ற கற்பூரவாசனையை அப்போது அறியாதவன்


  தேர்த்திருவிழா இருவாரங்களுக்கு மிக சிறப்பாக நடைபெறும்  குறைந்தது 10 நாட்களுக்கு இரவு கலை நிகழ்ச்சிகள்  நடைபெறும்.  எங்கள் ஊரிலிருந்து பயணம் செய்யும்போது என்ன என்ன நிகழ்ச்சிகள் என்று தொண தொண என கேட்டுக்கொண்டு செல்வது வழக்கம்.     ஊரில் இறங்கியவுடன் கலை நிகழ்ச்சிக்கான நிகழ்ச்சிநிரல் அட்டவணையை பார்ப்பதே ஒரு மகிழ்வாக இருக்கும்.    சுற்று பட்டி 18 கிராமங்களுக்கும் அதில் முறை கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு ஊர் மக்கள் முன்னின்று ஒரு கலைநிகழ்ச்சியை நடத்துவார்கள்.   பெரும்பாலான இரவுகளில்  அந்தந்த  ஊர் நடிகர்களும், இயக்குனர்களும் பங்குபெறும்  நாடகம் நடைபெறும், கடைசி நாளன்று சிறந்த நாடகங்களுக்கான, நடிகர்களுக்கான, இன்னும் பிற  பரிசுகளும் வழங்கப்படும் .    

விழாவின் முக்கிய நாளான புதன் இரவில் இரண்டுமூன்று கலை நிகழ்ச்சிகள்இடையில் 1 மணி நேரம் விண் அதிரும் பிரமாண்டமான  வாணவேடிக்கையும் இடம்பெறும்.     அதில் ஒன்றாக பட்டிமன்றம் கண்டிப்பாக இடம்பெறும்.   அணிக்கு மூவர், புரியாத வயதிலும் சுவையான சம்பவங்களால், குட்டி கதைகளால் கோர்க்கப்பட்ட தெள்ளு தமிழ் பேச்சுக்களை கேட்க மிக அருமையாக இருக்கும்.     நடுவரும் நாம் எதிர்பார்க்காத தீர்ப்பை வழங்கி விடுவார்.  பட்டிமன்றத்தைப் பார்ப்பதற்குஉட்கார இடம் கிடைக்குமளவுக்கு கணிசமான  கூட்டம் இருக்கும்.     அந்த நேரங்களில்  தான்திரைப்பாடலுக்கு நடனம் ஆடும்ஆடல் பாடல் நிகழ்ச்சி பிரபலமான காலகட்டம்.   அபிநயா, நீக்ரோ பாய்ஸ் என இரு பெரும் நடனக்குழுவை கூட்டிக்கொண்டு வர சண்டை நடக்கும் என கேள்விப்பட்டதுண்டு.  

இவ்வாறுதான் பட்டிமன்றம் எனக்கு அறிமுகமானது.    அதன் பின்எங்கள் ஊர்  மொடக்குறிச்சி   கோவில் கும்பாபிஷேகத்தின்போது சாலமன் பாப்பையா அவர்கள்  நடுவராக வந்திருந்த பட்டிமன்றம் நினைவில் உள்ளது.     பிறகுதனியார்  தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட புதிதில்,   தீபாவளி, பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் பட்டிமன்றதில் ஆரம்பித்து அனைத்து நிகழ்ச்சியையும் வாய் மூடாமல் கண்டுகளித்ததுண்டு.  நிறைய தனியார்  தொலைக்காட்சிகள்  வர ஆரம்பித்ததும்விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளின் மீதான கவர்ச்சி வெகுவாக குறைந்த இன்றைய கால கட்டத்திலும்கொஞ்சமேனும் பார்க்கலாம்  என நினைப்பது சாலமன் பாப்பையா அவர்களின் பட்டி மண்டபமேவணிக மற்றும் அரசியல் கட்டமைப்புக்குள் இருந்தாலும்      

ஒருமுறை, இங்கு தமிழ் தெரிந்த கன்னட நண்பர்களிடம் நமது கலாச்சாரங்களைப்பற்றி காரசாரமாக பேசிக்கொண்டு இருக்கும்பொழுது 'பட்டிமன்றம் போன்ற  நிகழ்ச்சிகள் அவர்களது தொலைக்காட்சிகளில் இல்லை' என்று அவர்களும்  நமது பட்டிமன்றங்களைப் பார்ப்பதாக கூறி  நம் பெருமையை  உணர்த்தினார்.  மற்ற மொழிகளில் இந்த நிகழ்வு தற்காலத்தில் இருக்கின்றதா என ஆராயவேண்டியுள்ளது.

பெரும்பாலும் தொலைக்காட்சியில் மட்டுமே  இன்றைய காலத்தில் உள்ள பட்டிமன்றத்தை, சில மாதங்களுக்கு முன் எங்களின்  'ஈரோடு வாசல் குழுமம்',  'வாட்ஸ் அப்' மூலம் நேரடி பட்டிமன்றம் நடத்தி பழைய நினைவுகளை மீட்டிதொழில்நுட்ப வளர்ச்சியை இவ்வாறான நல்லவற்றிற்கும்பயன்படுத்தி கொள்ளலாம் என்று பறைசாற்றியது.  அதேபோலசென்ற வாரம் ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் 'ஈரோடு வாசல்' நட்புக்களை கொண்டு நடந்து முடிந்திருக்கும் பட்டிமன்றம் அதனை, அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சி எனலாம்.    பட்டிமன்றத்தை பற்றி எங்கள் குழுவின் தொடர் பேச்சுக்கள், இந்த நினைவலைகளை மலர செய்தது.

சில வருடங்களுக்குப்பின், நாங்கள் வந்த மிதிவண்டி, TVS50 மற்றும் பைக்காக மாறியது.  கீழ்பவானியின் தண்ணீர் வரத்து கடைமடைகளுக்கு  கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.   ஆடல், பாடல் எனும் குத்தாட்டங்கள்  நாடகங்களையும்பட்டிமன்றத்தையும்கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத்தள்ளிக் கொண்டு இருந்தது.


இன்று, வேரை விட்டு விலகி இருக்கும் நானும் திருவிழாவிற்கு  செல்ல முடிவதில்லை.  பட்டிமன்றமும்  அங்கு நடப்பதில்லை, ஒரு சில நாடகங்களே  நடக்கிறது.   நாடகங்களுக்காக அப்பொழுது இருந்த நிரந்தர மேடை, இப்பொழுது காவலர்களின் குடியிருப்பாக உள்ளது.   சென்ற வழிகள்,  'தார் ரோடு'களா மாறி , கீழ்பவானியின் கடைமடை வாய்க்கால்கள் 'கான்க்ரீட்' போடப்பட்டு தண்ணீர் இன்றி, காய்ந்துபோன எலும்புக்கு கூடுகளாக காட்சி அளிக்கின்றது. 

10*4 நிமிடம் = 1/2 லி கோக்

மாதங்கள் சென்றிருக்கும் இந்த மால்களுக்கு சென்று. மகளின் நச்சரிப்பு வேறு. வழக்கம் போல மரணக்கிணறுல வண்டியை ஓட்டுவது போல, சுற்றி சுற்றி சுற்றி ஒரு வழியாக உள்ளே நுழைந்தாகிவிட்டது. பார்க்கிங் ஏரியாவில் இருந்து மேலே வந்ததும் டொமினோஸ், 'டேய், குட்டி இந்தப்பக்கம் பாரு' என வேறு பக்கம் கவனத்தை திருப்புவதற்குள், "அப்பா, பிஸா வேணும்". ஸ்ஸ்ஸ். மதியம் நடந்த ஒரு பஞ்சாயத்து கண் முன் ஓடியது. "கேக் கேட்டாலும் வாங்கி தர மாட்டேங்கறே , ட்ராபிக்கானா ஜூஸ் கேட்டாலும் வாங்கி தர மாட்டேங்கறே, உங்க ரெண்டு பேர்த்துக்கிட்டயும் டூ " என 'கன்னத்தில் முத்தமிட்டால்' சிறுமி போல உம் என்று கைகட்டி முறைத்து நின்று, அதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததால், விசும்பலுடன் கசிந்த கண்ணீரை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வந்ததே போதும் போதும் என இருந்தது.
'சரி, ஒரு நாளைக்கு ஒரு பஞ்சாயத்து போதும். நாமும் சாப்பிட்டு ரொம்ப காலம் ஆச்சு, வாங்கலமா' என மேலிடத்தில் அனுமதி பெற்று(!!) ஆர்டர் கொடுக்க சென்றேன். “141 உங்க ஆர்டர் நம்பர். 10 நிமிடம் ஆகும்" என சொன்னார்(எனக்கும் அவருக்குமான உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது). அங்குமிங்கும் மகளோடு பராக்கு பார்த்துவிட்டு, எந்த விளையாட்டு அடுத்து என முடிவு செய்துவிட்டு, பத்து நிமிடம் கழித்து சென்றேன்.
அப்பொழுதும் 138ஐ காட்டிக்கொண்டு இருந்தது டிஸ்பிலே. மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும், 138 ல் இருந்த டிஸ்பிலே, டக் என்று 144 ஐ காட்டியது. ' என்னடா இது' என நினைத்துக்கொண்டு, "141 பீசா என்ன ஆச்சு. ரெடியா?" என வினவினேன்.
"சாரி ஸார், கொஞ்சம் மிஸ்டேக் ஆகிருச்சு, வேற பிரெட் போட்டுட்டாங்க , இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும்". "ஏற்கனவே 10 நிமிடம்னு சொல்லி 15 நிமிடம் வெயிட் பண்ணியாச்சு, மறுபடியும் ஒரு 10 நிமிடமா" என கேட்டேன்.
உடனே "சாரி சார், கோக் அரை லிட்டர் இலவசமா கொடுக்கிறோம்".
"அதெல்லாம் வேணாம். சீக்கிரம் பீஸாவ கொடுங்க" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு, எங்க மக்கள் துண்டு போட்டு பிடித்து வைத்திருந்த இடத்தில் அமர்ந்தேன். .
"அப்பா.. எங்கப்பா பிஸா" "இன்னும் பத்து நிமிஸம் ஆகுமாம் டா", "ஏம்பா இவ்வளவு லேட் ஆகுது" என கேட்ட மகளை ஏதோ சொல்லி சமாதானப்படுத்தி வேடிக்கை காட்ட ஆரம்பித்த நேரம்,
"சார், கோக்", என ஒரு அரை லிட்டர் பாட்டில் நான்கு டம்ளரை டேபிள் மீது வைத்தார் கடையின் யுனிபார்மில் இருந்தவர்.
"Sorry, we don't drink coke",
"நோ சார், இட்ஸ் அவர் மிஸ்டேக் அண்ட் இட்ஸ் காம்ப்ளிமென்ட்ரி".
"பரவாயில்லை, நீங்க இலவசமா கொடுக்கறீங்க, இருந்தாலும் நாங்க குடிக்க மாட்டோம் ",
"நோ சார் இட்ஸ் ஃபிரி" என்று சொன்னதையே வேறு விதமாக சொல்லிக்கொண்டு இருந்தார்.
'அடேய், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன்னாடி இருந்தே நாங்க கோக் குடிக்கமாட்டோம் டா' என்று சொல்ல நினைத்து "தட்ஸ் பைன். ப்ளீஸ் டேக் இட் பேக்" என்று முடித்தேன்.
'யார்ரா இவன், சரியான காமெடி பீஸ்' என்று அவன் நினைத்திருக்கக்கூடும். நினைக்கட்டுமே, நமக்கு இது சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்கொள்ளளும் மொமெண்ட் இல்லையா ..
பி.கு : பிஸா நல்லதா அப்படீன்னு கேட்கக்கூடாது. 





-------------------------------------------------------------------------------------------------------------
மொடக்குறிச்சி கிருஷ் 
2-Jun-2017

புத்தகங்களைப் பேசுவோம்

ஈரோடு வாசல் குழுமத்தின் "புத்தகங்களைப் பேசுவோம்" நிகழ்விற்காக ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்" புத்தக அறிமுகம்....முதல் முயற்சி..





--------------------------------------------------------------------------------------------------------------
மொடக்குறிச்சி கிருஷ்
8-Jun-2017 

வாழ்ந்தோம் வெள்ளிமலை எனும் கல்லூரியில்..













வாழ்ந்தோம் வெள்ளிமலை எனும் கல்லூரியில் 

வெள்ளி மலைக்கு களைகட்டி வரும் காலை நேர பேருந்து ...
அந்நேர வராந்தா அரட்டைகள்..
பால்கனியிலிருந்து அடித்த 'சைட்கள்'....
பேசுவதற்கு பயப்பட்ட தாவணித் தோழிகள்...
அச்சத்துடன் வார்த்தைகள் சில பேசியதை
ஓட்டித்தள்ளிய சக மாமன், மச்சான், பங்காளிகள்...
பேராசிரியர் வாரா வகுப்புகள்...
வந்த வகுப்புகளின் தூக்கங்கள்...
அவர்களின் கேள்விக்கு முழித்த வேளைகள்...
அதற்கென வாங்கிய வசவுகள்..
'அசைன்மென்ட்' எழுதாமல் வெளியேற்றப்பட்ட நாட்கள்...
ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்தியும்,
'yes , no' என சமாளித்து
தமிழில் பேசி 'பைன்' கட்டியது...
பயபக்தியுடன் தொட்டுப்பார்த்த
மோனோகுரோம் கணினிகள்...
பகிர்ந்துகொள்ளப்பட்ட மதிய உணவு...
இறுதியில் உண்ண இருக்கும் வடையை பிடுங்கித்தின்று
அந்த கணத்தில் எதிரியான நண்பன்..
அதற்காக முதலில் முடிக்கப்பட்ட வடைகள்...
கல்லூரியில் இருந்து பிரிவுக்கு
கேலியும் கிண்டலுமான நடை..
கல்லூரி பிரிவில் செய்த, செய்ய வைத்த 'ராக்கிங்'...
ஜெயமாருதியில் மாற்றப்பட்ட
திரைப்படங்களுக்காக 'ஸ்ட்ரைக்' நடந்த வெள்ளிகள்...
அதற்கு கூறப்பட்ட அகில உலக காரணங்கள்...
கல்லூரி அளவில் கடலை போடுவதற்காக சேர்ந்த NSS...
சேலைகளில் வலம் வரும் தேவதைகளுக்கான ஆண்டுவிழாக்கள்..
கலவரமான கல்லூரி தேர்தல்கள்..
மொத்தமாக வாங்கிக்கட்டிக்கொண்ட 'வெல்கம் பார்ட்டி'கள்...
சில சின்ன சண்டைகள்..
பேசாமலிருந்த நாட்கள்..
வருத்தத்துடன் விடைபெற்ற இறுதி நாட்கள்..
இதில் விடப்பட்ட இன்னும் இன்னும்....

------------------------------------------------------------
மொடக்குறிச்சி கிருஷ் (23-June-2017)
--------------------------------------------------------------------
திடீரென எங்கள் UG வாட்ஸ் அப் குழுமம், களைகட்டி மலரும் நினைவுகளை மீட்டியது... அதிலிருந்து.......


Thursday, May 25, 2017

நூலகம் - அகத்திலும், இணையத்திலும்



சித்திரை திருநாள் வாரம் சென்னையில் இருக்க நேர்ந்தது.   ஞாயிறு மதியம் உணவு உண்ட பின், வழமையாக தூங்கி அ.
தொலைக்காட்சியுடன் பொழுதை கழிக்க விருப்பம் இல்லாமல், உண்ட களைப்புடன், மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தேன்.     அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'சுஜாதாவின் பன்முக ஆளுமை' என்ற தலைப்பில் பல எழுத்தாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என அறிந்து, உடன் இருந்த அக்காவின் மகனையும் இழுத்துக்கொண்டு வண்டியை விரட்டினேன்.   நேரடியாக அரங்கை தேடி நுழைந்து கேட்க ஆரம்பித்தோம்.   நல்லதொரு நிகழ்வு.  சுஜாதா அவர்கள் பற்றி அறியாத தகவல்களையும் அறிய முடிந்தது.     நிகழ்வின் இடையே தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது(வரலாறு முக்கியம்).  நூலகத்திற்கு  முதன் முறையாக சென்றிருந்தேன்.  நிகழ்வு முடிந்தவுடன் அப்படியே நூலகத்தை சுற்றி பார்வையிட்டோம்.  படிக்கப்படாமல் அலமாரியில் வைக்கப்பட்டுள்ள புதிய புத்தகம்போல், குளிர்சாதன வசதி செய்யப்பட்டும்,  மக்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு  நூலகம்.    சில  வாரங்களாக  பொன் மாலைப்பொழுது என்ற நிகழ்வின் மூலம் பிரபல எழுத்தாளர்களின்  கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதையும்  அறிந்து, 'சென்னையிலேயே வசித்து இருக்கலாமோ' என்ற ஏக்கம் ஒரு கணம் வந்து சென்றது.    இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு என நல்ல முயற்சிகள் திரு உதயச்சத்திரன் அவர்களால் எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி.

திருவான்மியூர் வழியாக திரும்புகையில், மாலை வெயிலில்  கூட்டமாக இளைஞர்கள் கூட்டம் அள்ளியது சத்யம் வாசலில்.  'சரி விடு, தியாஐராஜர் திரையரங்காக  இருந்தபோது, ஞாயிறு மாலை நாமும் இங்கு தானே நின்றுகொண்டு இருந்தோம்'.  


அதே வாரம், ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் ஒரு நிகழ்வு.  நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் உரையாற்றுவதை  கேட்கவும், அவருடன் உரையாடவும் சென்றிருந்தேன்.   இங்கும் ஒரு நேர்த்தியான கருத்தரங்கு கூடம், பயிற்சி வகுப்புகளுக்கான அறை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி படிக்கும் அறைகள் மற்றும் கழிப்பறை  வசதி என  ஒரு 'மினி' அண்ணா நூலகத்தை கொண்டு இருந்தது.   இங்கும் தேநீர் கொடுக்கப்ப்பட்டது(வரலாறு மீண்டும் முக்கியம்).  இரண்டு நூலகத்தின் நிகழ்விலும்  ஏறக்குறைய அரங்கு நிரம்பி இருந்தது(நானே நூலகம் செல்லும்போது, அரங்கு நிறையத்தானே செய்யும்) .  "நல்ல வசதிகளுடன் உள்ளது இந்த நூலகத்தை, நாம் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்" என்று அப்போது கூறிய  ஈரோடு கதிர் அவர்கள்,    கடந்த ஞாயிறு அன்று,   ஈரோடு வாசல் குழுமத்தின்  மலர்களை பேச அழைத்து 'புத்தகங்களைப் பேசுவோம்'  என்ற  தலைப்பில் நடத்தியது,  அண்ணா நூலகத்தின்  நிகழ்வு  போல் ஆன ஒன்று.     .    

இந்த இரு நூலக வடிவமைப்பின் ஒற்றுமையை விட மேலும் ஆச்சர்யமூட்டிய ஒன்று.        அண்ணா நூலகம் பற்றி  சில தகவல்களை அறிய இணையத்தில் தேடும்பொழுது, வந்து விழுந்தவை  'பொன்மாலைப் பொழுதின் காணொளிகள்'(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் .    இந்த காணொளிகள்  காலைப்பொழுதையும் அதன் நடைபயிற்சியையும்  'கற்றலின் கேட்டல்  நன்று' என இனிதாக்குகின்றன.       படிக்க நேரம் கிடைக்காமல் அ. விருப்பம் இல்லாமல்   இருப்பவர்களுக்கு  இந்த காணொளிகள் வரம்.

அதிலிருந்து  எனது செவிக்கு உணவிட்ட  சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களுடனான வயிற்றின் உணவைப்பற்றிய கலந்துரையாடல் இங்கே.

https://www.youtube.com/watch?v=yGJ4xCbYDfg&t=5643s

நடத்துனர் என்னும் மகான்...

கடந்த சனிக்கிழமை.  மாலை நேரம்.  ஈரோட்டில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறினேன்.   சூரம்பட்டி நால்ரோடு நிறுத்தம்.  வழக்கத்திற்கு மாறாக திமுதிமு என்று கூட்டம் முண்டியடித்தது, கூடவே டாஸ்மாக் வாடையும்.   "என்னங்க, இங்க இவ்வளவு பேர் எறுகிறாங்க"  நடத்துனர் அருகில் இருந்ததால் வினவினேன்.  
"இங்கதாங்க கடை இருக்கு" கூறிக்கொண்டே வாடைகளின் ஊடாக, அவர்களுக்கு இடையே நீந்த ஆரம்பித்தார்.
கிட்டதட்ட அங்கிருந்து  மொடக்குறிச்சி வழியாக விளக்கேத்தி வரையிலான சுமார் 20 கிமீ தொலைவிற்கு, பஸ் வசதியுடன் கூடிய கடை இல்லை என்ற பொது அறிவு அப்போது தான் தெரிந்தது.  
நீந்த ஆரம்பித்த நடத்துனர் மகான் இவர்களுக்கு இடையே நெளிந்து சென்று டிக்கெட்  கொடுத்துக்கொண்டே செல்கிறார். தெய்வ லெவல்.  அவருக்கு இந்த வாடை பழகி இருக்குமோ? 
சரி, நம்ம ஊர் பஸ்ல ரொம்ப நல்லா காற்று வருமே, ஏன் வரலைன்னு யோசித்துக்கொண்டே ஜன்னலைப் பார்த்தேன். ஊர் நெருங்கியதை உட்கார்ந்து இருப்பர்களே குனிந்து பார்த்து  தெரிந்து கொள்ளும் அளவிற்கு சிறிய ஜன்னல்.   அவர்கள் வாங்கிக்கொண்டது போக மீதி   காற்று, தலைக்குமேல் உயரமாக நீட்டிக்கொண்டு இருக்கும் இருக்கை நடுவே புகுந்து, கொஞ்ச சில்லரையையும் கொடுக்காமல் போகும்  நடத்துனர்   போல், வர மறுத்தது.  சரி, காற்று தான வரலை வெளியே வேடிக்கை பார்த்து, இந்த ஓல்டு மாங்குகளிடம் இருந்து தப்பிக்கலாம்  என்று, மேல் கண்ணாடியை நோக்கினேன்.     கண்ணாடி முழுவதுமாக  விளம்பரங்களுடன் கூடிய ஸ்டிக்கர்.  ஸ்ஸ்அப்பா ,  எங்க போனாலும்
கேட் போடறாங்களே என்று வடிவேல் மொழியோடு, ஊர் நெருங்கியதை எப்படி தெரிந்து கொள்வது என நொந்து கொண்டு,   மொபைலை நோண்ட ஆரம்பித்தேன்.    
தயவு செய்து பேருந்தை டிஸைன் செய்யும் புண்ணியவான்கள் நன்றாக காற்று வருவதற்கு  வசதி உள்ள ஜன்னல்கள் வைத்து, குடிக்காத பயணிகள், சக பயணியின் மீது உண்ட உணவை உமிழ்வதை  தவிர்க்க  உதவ வேண்டுகிறேன். 
மகளிர் ஸ்பெசல் போல, டாஸ்மாக் ஸ்பெசல் வண்டியை போக்குவரத்து கழகங்கள் யோசிக்கலாம். 
#ஈரோடு #பயணங்கள்

Wednesday, April 26, 2017

அன்னதானம்?

காலை 11 மணி. பெங்களூரின் புறநகர் வர்த்தூர் ஏரி. வழக்கமாக செல்லும் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தேன். சற்று குறுகலான சாலை, ஒருபுரம் ஏரிக்கரை, மறுபக்கம் புதர் மண்டிய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் நிலங்கள். வழக்கமாக அந்த சாலையை நெரிசல் இல்லாமல் கடந்து விடுவேன். இன்று வழக்கத்தை விட சற்று போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 'சரி, ஏதோ ஒரு வண்டி பிரேக் டவுன் ஆகியிருக்கும்' என்று நினைத்துக்கொண்டு, முன் ஊர்ந்த வாகனத்தை, பின் தொடர்ந்து ஊர்ந்தேன். சற்று தொலைவு சென்றதும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மோர் அல்லது பானகம் குடித்துக்கொண்டும், தக்காளி அல்லது புளியோதரை சாதம் சாப்பிட்டுக்கொண்டு மக்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். ‘இங்க எதுக்கு இத கொடுத்துட்டு இருக்கிறாங்க’, என்று நினைக்கையில், புதர்களோடு சேர்ந்து ஒரு சிறிய கோவில், நல்ல அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இந்தமாதிரி அன்னதானம் கொடுப்பதில் சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன...
* மோர் அல்லது பானகம் கொடுப்பதை கூட வெயிலுக்காக 'சரி பரவாயில்லை' என்று விட்டுவிடலாம், ஆனால் 11 மணிக்கு கொடுக்கப்படும் , உணவு உண்மையாக பசியை போக்கவா?
* அடுத்தது, plastic டம்ளர் மற்றும் தட்டுகளில் சாப்பிட்டுவிட்டு, through ball மற்றும் flying disk விளையாடிவிட்டு, சென்றுகொண்டு இருந்தார்கள்.
* அடுத்தது, இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

அறம் செய விரும்பு ....அதில் .....நன்மை கடைபிடி !!!

தாய்மொழி பயிலல்


தாய்மொழி பயிலல் :
 ------------------------------
செய்தி : “பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்!" முதல்வர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி பேச்சு.
அரசியல் தவிர்த்து இதை சற்று உள்நோக்கி பார்ப்போம்.
வேலை நிமித்தமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று வசிப்பவர்கள் இன்றைய கால கட்டத்தில் மிகவும் அதிகம். அவர்கள், தங்களது குழந்தைகளை தங்கள் தாய் மொழியில் படிக்க வைக்க நினைத்தாலும் முடியாத சூழலே 'இந்தி'யாவில் நிலவுகிறது. தாய்மொழிக்காக பலர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தாலும், சொந்த ஊரில் அதே போன்ற, அதே ஊதியத்தில் வேலை கிடைக்குமா என்ற அச்சம், அங்கு திரும்ப நினைப்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. சொந்த மாநிலத்திலும் பெரு நகரங்களையே பணிகளுக்கு நம்பி இருப்பதாலும், சொந்த ஊருக்கும் பெரு நகரத்திற்குமான இடைவெளி மற்றும் போக்குவரத்தில் உள்ள சிக்கல் மற்றோர் காரணமாகவும் உள்ளது.
பெங்களூரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், பெங்களூரை ஒட்டியுள்ள சுமார் 200-300 கிமீ தொலைவில் உள்ள பெருவாரியான மக்கள் பெங்களூரையே வாழ்வாதாரமாக கொண்டு உள்ளார்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல.. ஆந்திர மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கும் பொருந்தும். இதே மனநிலையில் தான் சென்னையில் வாழும் பிற மாநிலத்தவரும் இருக்கக்கூடும் என கருதுகிறேன்.
மோடி அவர்களின் இந்த பேச்சு மனப்பூர்வமாக இருந்தால், மத்திய அரசு இதனை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும். மாநில அரசுகளும், மற்ற மாநில மொழிகளுக்கு மதிப்புக் கொடுத்து இதனை செயல் படுத்த முயற்சி எடுக்கலாம்.
படத்தில் இருப்பது பெங்களூரின் மைய பகுதியில் இருக்கும் அரசு தமிழ்ப் பள்ளி. இதன் பின்னால் அழகாக பொழிவுடன் இருப்பது திப்பு சுல்தான் சம்மர் பேலஸ்.
(சொந்த ஊருக்கு பக்கத்துல இருக்குன்னு பெங்களூர் வந்துட்டு, நாம படும் பாடு இருக்கே... 😥 )

மொடக்குறிச்சி கிருஷ்

27-April-2017

Sunday, April 09, 2017

நீரோடும் எங்கள் ஈரோடு

நீரோடும் எங்கள் ஈரோடு


"ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், கடந்த ஒரு சில வாரங்களாக
நடைபெற்ற"ஈரோடு மாவட்டம்" பற்றிய கட்டுரை எழுதும் போட்டியில் முதல் இடம் பிடித்த எனது கட்டுரை.
-------------------------------------------
நீரோடும் எங்கள் ஈரோடு
==========================

இரு ஓடைகளுக்கு மத்தியில் இருப்பதால் வந்த பெயர். பல காலங்களுக்கு பிறகு இரண்டு ரோடுகளுக்கு மத்தியில் இருப்பதால் ஈரோடு என்ற பெயர் வந்ததாக வரலாறு சொல்லுமளவுக்கு, நமது காலகட்டத்தில் உருமாறிக் கொண்டு உள்ளது.


நம்மூர் கலிங்கராயனில் குட்டிக்கரணம் போட்டு, அம்மாயி ஊருக்கு செல்லும்போது அங்குள்ள கீழ்பவானியிலோ, சுற்றியுள்ள கிணற்றிலோ குமுளி போட்டு நீச்சல் பழகியவர்கள் நாங்கள் என்றால், நமது பிள்ளைகள் கூட நம்ப மறுக்குமளவிற்கு நீர் வரத்து  இன்று இல்லை.   அவ்வாறே ஒரு போகத்திற்கு நீர் வந்தாலும், கழிவுகள் களைந்து முடிவதற்குள் நீர் வரத்து நின்று விடுகிறது.  

நாம் எதையும் மாசு படுத்தவில்லை, இந்த சாயத்தொழிற்சாலைகளே நமது நீரோடைகளையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன  என்று  நம்பிக்கொண்டு இருக்கிறோம்.   ஆனால், நமக்கே தெரியாமல் நாமும் மிக முக்கிய காரணமாக இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை. 

சற்று பின்னோக்கி பயணம் சென்று, 1980 மற்றும் 90 களில் இருந்த ஈரோட்டையும், அதன் கிராமங்களையும் பார்ப்போம்.

பச்சை பந்தலிட்டு
மாயிலை தோரணம்கட்டி..
மாட்டு சாணத்தில் வாசல் மெழுகி
உறவினர்கள் ஒன்றாககூடி
வீட்டோடு திருமணம்.

தொப்புள் கொடி அறுபட
மூதாட்டி துணையோடு
மனையில் சுகமாக பிறந்த
மழழை...

பாட்டி மடியில் கதை பேசி
தாத்தாவுடன் விளையாடி
ஊரார்  ஊட்டி வளர்க்க
வளர்ந்து.

பல் துலக்க ஆலும் , வேலும்
தலை முழுக்க அரப்பும் , சீகைக்காயும்
மேனிக்கு கடலைமாவு
தமக்கை முகம் பூசும் மஞ்சள்
தலைவார தேங்காய் எண்ணெய்.
என்று தூய்மை பேணி.

காலை உணவாக கம்பங்களியும், ராகிக்கூழும்
புறக்கடையில் பறித்து வந்த கீரையும், காய்கறியும்
நம் பெயர் வெட்டிய சிறு போசியில் உண்ட  உணவு.
எவ்விடத்திலும் அள்ளி பருகும் நீரும்

காக்கி வெள்ளையோடு நாம்
கதர் வேட்டி சட்டை கட்டிய அப்பா
நோம்பி என்றால் மட்டுமே அதுவும் கட்டும் தாத்தா
நூல் சேலையில் கொசுவம் வைத்து கட்டும் பாட்டி
நோம்பிகளுக்கு மட்டுமே புடவை எடுக்கும் அம்மா

பள்ளிசெல்ல ஓட்டமும் நடையும்
வேலைக்கு போக ஒரு மிதிவண்டியும்
ஈரோடு டவுனுக்கு செல்ல சில டவுன் பஸ்களும்


மஞ்சள் பையுடன் கடைக்கு செல்லும் குட்டிகள்
செய்தித்தாளில் அன்போடு கட்டிக் கொடுக்கும் கடைக்காரர்

சிறு புண்ணுக்கு கசக்கி விடப்படும் செடி
வேது வைக்க வற்றிய வீக்கம்
தேடி இலை பறித்து
வைத்தியம் செய்யும் ஒரு பாட்டி

சுற்றம் சூழ குளிப்பாட்டி  
பச்சையில் பாடை கட்டி
ஆவரஞ்செடிக்கு பால் ஊற்றி
பாட்டுப்பாடி
விடை அனுப்பப்பட்ட  நம் தாத்தா...

இன்னும் இன்னும்  ....

ஏக்கத்தோடு கூடிய பெரு மூச்சு வருகிறது, இப்படி சின்ன சின்ன கிராமத்து மணமுடன் திகழ்ந்த ஈரோடை இன்று பார்க்கும் பொழுது
....

2017 க்கு வருவோம்

"பெருந்துறை ரோட்டுல X மண்டபம் எப்ப கிடைக்குதுன்னு பாருங்க , கல்யாணத்தஅப்ப வெச்சுக்கலாம்" சம்மந்தி வீட்டினர்.    

ரெண்டு பெரிய ப்ளக்ஸ் முன்னாடி வெச்சுரலாம். இந்த பக்கம் ஒரு கிலோ மீட்டர் அந்தப்பக்கம் ஒரு கிலோமீட்டர்  லைட் மின்னணும். மண்டபம் முழுக்க சீரியல் செட்.   ரெண்டு மூணு  TV  வெச்சு லைவ் டெலிகாஸ்ட்என்று ஒரு அரசியல் கட்சி கூட்டத்தையே மிஞ்சும் அளவுக்கான  தடபுடல்கள்.

சாப்பாட்டு விஷயத்தை பற்றி பேசவேண்டியதில்லை, அதில் வீணாக்கப்படும் உணவுகள் மற்றும் திண்பண்டங்கள்   என்ன  மாதிரியான  விளைவுகளை  நமக்கு விட்டு செல்கிறது என்பதை தெரிந்தும், ஒரு மரக்கன்றையோ, புத்தகங்களையோ பரிசளித்து நல்லவர்களாக காட்டிக்கொள்கிறோம்.


"ஏங்க நா எல்லார்த்துக்கிட்டயும் விசாரிச்சுட்டேன், ஈரோட்டுல அந்த X ஹாஸ்பிடல்ல இருக்குற, Y  டாக்டர் அம்மா ரொம்ப நல்லா பாக்குறாங்களாம், அவங்ககிட்ட போற எல்லோருக்கும் நார்மல் டெலிவரி ஆகுதாம், நாம அங்கேயே பார்த்துக்கலாம்"  ஈரோடு சுற்றுவட்டாரத்தில் இந்த குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை.  இயல்பாக உண்டானாலும் மாதமொரு செக்அப்க்கு, அங்கு சென்றால், நமக்கும் சுகப்பிரசவம் என்ற மூடநம்பிக்கையில், காலை முதல் மாலை வரை அந்த மருத்துவர் பார்க்கும் வரை    காத்திருந்து, வெயிலில் புழுங்கி, ஒரு வழியாக வீடு வந்து சேருவோம். 



இதுக்கு முன்னாடி ஒரு படலம் இருக்கிறது, அது செயற்கை முறை கருத்தரிப்பு.  பல மாவட்டங்களில் இருந்தும் இன்று ஈரோட்க்கு படையெடுத்து வருகிறார்கள் கருத்தரிப்பதற்கு.  பெருந்துறை ரோட்டில் புற்றீசல்போல் முளைத்துக்கொண்டு இருக்கும் கருத்தரிப்பு மையங்கள் இதற்கு சாட்சி சொல்லும்.  அவர்கள் கொடுக்கும் மருந்துகளும் மாத்திரைகளும், அதற்காக தள்ளுபடி விலையில் தெருவுக்கு, தெரு கிளைகள்  திறந்து கொண்டு உள்ள மருந்தகங்களும்ஒரு தனி கதை.


குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் கொடுக்கறாங்களோ இல்லையோ  hygenically packed  பால் பவுடர் வாங்க சொல்லும் மருத்துவர்கள்.   ஒவ்வொரு சில பல மாதங்களுக்கும் போஷாக்கு அளிக்கும்(அழிக்கும் ??)  ஊட்டச்சத்து  பானங்கள்.   வெளிநாட்டில்  இருந்து தருவிக்கப்பட்ட குழந்தைகளுக்கான  சோப்பு மற்றும் பவுடர். தடுப்பூசி என்ற பெயரில் நடக்கும் வணிகம்.  


பல் துலக்க விதவிதமான பற்பசைகள், 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்படும் பிரஷ், ஷாம்பு இட்டு முடி உதிர்ந்த தலைகள், இருக்கும் முடிக்கும் சாயமிடும் நரைதலைகள்,  15 நாளில் அழகு தரும் முகப் பூச்சுக்கள் மற்றும் வண்ண வண்ண சோப்புகள், இவை களையும்போது, கழிவுகள் அனைத்தும் சென்று சேருமிடம் வேறு
எங்கும் இல்லை, கத்தி திரைப்படத்தில் விஜய், மேஜைக்கு அடியில் அண்டர் கிரௌண்ட் மேப்  பார்ப்பது போல பார்த்தால், பெரும்பள்ளம் ஓடை வழியாக காவேரிக்கு  சென்று கொண்டு இருக்கும்.


"X மெஸ்ல பரோட்டா மறக்காம வாங்கிட்டு வாங்க.  அங்கதான் கொளம்பு நல்லா இருக்குதாம்"  பாலிதீன் பையில் சுடசுட ஊற்றிக் கொடுக்கப்படும் குழம்பு புற்றுநோயின் ஒரு காரணி என்பதை அறியாத அப்பாவிப் பெண்மணிகள்.  அப்படியே அறிந்தாலும் எப்பவாவது என்று மாதம் சில  முறையாக பழக்கப்படுத்திக் கொண்டோம். 


"8 மணி ஆயிருச்சு, இந்த ஸ்கூல் வேன எங்க இன்னும் காணோம்" என்று புலம்பாத வீடுகள் குறைவு.  நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு, 5 கிலோமீட்டர்  நடந்து வந்து படிக்கும் குழந்தைகளும்,   நம் குழந்தைகள் 10 கிலோமீட்டர் தள்ளி  உள்ள தனியார்  பள்ளிக்கு  மூச்சுமுட்ட பள்ளிப்பேருந்தில்  பயணம் சென்று படிப்பதும் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

மேட்டூர் சாலையில் சமீபத்தில் துவங்கியுள்ள  துணிக்கடை.   ஒரு பேண்ட், சர்ட்  வாங்க சென்றேன்.  பில் போட்டு டெலிவரி வாங்கும் சமயம், ஒரு அம்மா  "2000 ரூபாய்க்கு மேல வாங்கிருக்கேன்அதனால 2 கட்ட பை கொடுங்க" என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.   டெலிவரி கொடுப்பவரும் முணுமுணுத்துக்கொண்டு இன்னொரு பையை தருகிறார்.   இந்த கட்டபை என்று சொல்லக்கூடிய பை, முன்பு போல சணலால் ஆனதல்ல.  எனக்கும்  ஒரு கட்ட பையில், காக்கி காகித கவரில்  போடப்பட்ட துணியை, வைக்க  முயல்கிறார்.  நான்  "கட்டப்பை வேண்டாங்க, அப்படியே குடுங்க " என்று சொல்லிவிட்டு, காக்கி காகித கவரில்  போடப்பட்டதுணியை  வாங்க, அவர்  என்னை  மேலும் கீழும் பார்க்கிறார்.  


80 மற்றும் 90களில் எவ்வளவு எளிமையான, இயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு  இருந்தோம்.   நாகரீகம்நவீனம் என்ற பெயரில், இன்றளவில் நிகழ்ந்துகொண்டு இருக்கும்இந்த ஒரு சில சம்பவங்கள் ,   நமக்கும், நமது சுற்றுப்புறத்திற்கும் நல்லவை எது, அல்லவை எது என்று பிரித்து அறியமுடியாத அளவில் நம் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்டதை  உணர்த்தும்.     



இன்றளவில் ஈரோட்டை மீட்டெடுக்கலாம் என்று நம்பிக்கையை கொடுத்துக்கொண்டு  இருப்பதுசில நல்  உள்ளம் படைத்த மனிதர்கள்சத்தமில்லாமல் ஈரோட்டில் எற்படுத்திக்கொண்டு இருக்கும் நீர்நிலை பாதுகாப்பு, இயற்கை பற்றிய விழிப்புணர்வுகள், நல்ல உணவுப்பழக்க  வழக்கங்களுக்கான முன்னெடுப்பு.   நம்மளவில் நாம் நமது ஈரோட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும்  எப்படி வைத்துள்ளோம் என்று, காலை முதல் மலை வரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து, நமது பங்களிப்பை அளிக்க முயற்சி எடுப்போம்.



புகைவண்டியில் வரும்பொழுது காவேரிப் பாலம் தடதடவென சப்தமிட்டு ஈரோடு வந்து விட்டதை நினைவு கூறும்.  காவிரியில் எவ்வளவு நீர் சென்றுகொண்டு உள்ளது என்று  நாமும் ஒவ்வொரு முறையும் எட்டி பார்ப்போம்.   காவிரி இன்னுமொரு பாலாறாக மாறாமல் இருக்க, நாம் மாறுவோம், நமக்காக.



மொடக்குறிச்சி கிருஷ்
22-March-2017




குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...