Friday, February 26, 2021

ரகிட ரகிட ரகிட

"மரணமாஸ" விட நமக்கு #ULLAALLAA தான்...

in repeat mode..

இரு வருடத்துக்கு முந்தைய #OTD

அந்த  பாட்டு போலவே கடந்த சில நாட்களாக  "ரகிட ரகிட ரகிட ஊ" ரிப்பீட் மோடில்.  ஆனால 'ஊல்லல்லா' பாட்டு,  வழக்கமான தலைவரின் அட்வைஸ் மழை பொழியும் தத்துவ பாடல்..  'ரகிட ரகிட ' அப்படி இல்லாமல் don't care ரக பாடல்.   அந்தப் பாடல் பற்றி அலசுவோம்.


அணிகளில் பிடித்த அணி சொற்பொருள் பின்வருநிலையணி.  எனக்கு சுலபமான அணியும்.  அதில் தான் மிகச் சுலபமான இந்தக் குறளை உதாரணமாக குறிப்பிடலாம். 


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். 


அதற்கடுத்து வஞ்ச புகழ்ச்சி அணி எனலாம்.    


அதற்கான எடுத்துக்காட்டு பெரும்பாலும்  அனைவரும் அறிந்த அதியமான்-தொண்டைமான்-ஒளவை விடு தூது தான்.   ஒரு சமயம் தொண்டைமான்,  அதியமான்மீது படை எடுத்து வரப்போவதாக கேள்விப்பட்ட ஒளவையார், தொண்டைமானை சந்திக்க செல்லுகின்றார்.  தொண்டைமான் படைக்கலங்கள் உடைய அறைக்கு கூட்டிச் சென்று காண்பிக்கிறார்.  அங்கு சென்ற ஒளவை அந்த ஆயுதங்களை பார்வை இடுகிறார். 

 அக்கலங்கள் எல்லாம் புத்தம் புதிதாக,  பளிச் என மின்னுகிறது.  


அதனைக் கண்ட ஒளவை,  அதியமானின் வீரத்தினை தொண்டைமானிடம் எடுத்துக் கூறுகின்றார். 

 எப்படி?  தொண்டைமானைப் புகழ்வது போல ஆரம்பத்தில் தெரியும். 


இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டி,

கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து

கடியுடை வியல்நக ரவ்வே. (புறநானூனு,95)


'தம்பி.. நீ இங்க பளிச்சுன்னு தொடச்சு பூஜை போட்டு வெச்சிருக்கே.   அது நல்லது.  ஆனா இந்த அதியமானின்  படைக்கலங்கள் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வந்தேன்'.  


பகைவர்க் குத்தி,கோடு,நுதி சிதைந்து

கொற்றுறைக் குற்றில மாதோ ! என்றும்

அண்ணல்எம் கோமான்,வைநுதி வேலே (புறநானூறு,95)


அதியமான் பயல் இந்தமாதிரி வெச்சுக்கல.. சுத்துப்பட்டிலயும் போர்க்கு போய் சண்டை அடிக்கடி போட்டு வரார்.  அதனால கொல்லனோட வேல் செய்யும் பட்டறையில் ரிப்பேருக்கு போயிருக்குப்பா'.  அதனால எப்படி வசதி என்று அதியமானை வஞ்ச புகழ்ச்சியாப் புகழ்கின்றார்.  போரை நிறுத்துகிறார்.  இப்படி தான் எதையாவது எழுதி மார்க் வாங்கிருப்போம்.     


இந்த வஞ்ச புகழ்ச்சி அணிக்கு ஆகச் சிறந்த சமீபத்திய உதாரணம் "ரகிட‌ ரகிட‌ ரகிட‌ " பாட்டில் வரும் முதல் சரணம் தான்.  


"நாலு பேரு மதிக்கும்படி

 நீயும் நானும் இருக்கணும்.." 

என ஆரம்பிக்கும்.  முதல் முறை கேட்கும் போது வழக்கமான அட்வைஸ் மழையா  இருக்கும் போல  என நினைத்து  சளிப்போடு தான் கேட்க ஆரம்பித்தேன்.  மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுதுதான் அந்த பாடலை வஞ்ச புகழ்ச்சி அமைப்பில் உருவாக்கி இருப்பது தெரிந்தது.  


பள்ளியில் கல்லூரியில் நண்பர்களிடம் விவாதிக்கும்பொழுது கூட,  இந்த மாதிரி ஏத்திவிட்டு, அவர்களை இறக்கும்பொழுது  'என்ன மச்சி வஞ்ச புகழ்ச்சியா' என்று தான் கூறுவோம்.  அப்படி பேமஸ் ஆனது இந்த அணி.  அதன் சென்னை ஸ்லாங் தான் "என்ன மாப்ள... லந்தா.." என்பது.   இந்த ஒரு வரி உரையாடலை சரணத்தின் இடையில் சொருகி இருப்பார்.  அந்த இடத்தில் பாடல் யூ-டர்ன் போட்டு வஞ்ச புகழ்ச்சியாக மாறி அடுத்த வரி ஆரம்பிக்கும்.  


"அந்த நாலு பேர 

இதுவரைக்கும் பார்த்ததில்ல  நானு..

எனக்கு தேவைப்பட்ட நேர(ம்)  

அந்த பரதேசியக் காணோஓஓஓம்...."


ஒட்டு மொத்தமாக இந்தச் சரணம்,  'Dont listen on others negative words'  என்று ஊர் உலகத்துக்காக பயப்படாம, உனக்கு என்ன பிடிக்குதோ/ தோணுதோ, அதைச் செய் என்பதைக் கூறும்.  




இரண்டாவது சரணம் மோட்டிவேஷனை அள்ளித் தெளிக்கிறது. அடுத்தநாளை எப்படி வரவேற்கிறார்கள் பாருங்க. 


"ஏதோ ஒன்னு கொடுக்கத் தானே

அடுத்த நாளும் வருது..

ஆஹா

நல்லத நான் எடுத்துகிட்டா

நல்லதத்தான் தருது"


"The Secret" எனும் புத்தகம் ஈர்ப்பு விசை பற்றி நுணுக்கமாக கூறி இருப்பார்கள்.  நாம் எந்த விஷயத்தை தீவிரமாக ஈர்க்கிறோமோ அது நம்மை அடைகிறது. ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து,  அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும்.  அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய 

 ஒரு விஷயம்,  கண்டிப்பாக நடக்கும் என்கிறது.   கனவு காணுங்கள்,  என்று அப்துல் கலாம் கூறியதன் சாராம்சமும் இது தான்.  கனவு இலக்கை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும்.   தென்னை மரத்தில் பன்னாடை இருக்கும்.  அது வடிகட்டி மாதிரி, தேவை இல்லாத பூச்சி போன்றவற்றை மட்டும் வடிகட்டும். பல நேரங்களில் நாம கூட தேவை இல்லாத விஷயங்களை மட்டும், மனதில் போட்டு உளப்பிக்கொண்டே கிடப்போம். 


இதையே தான் வள்ளுவர் இப்படி கூறுகிறார் 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.



"எது என் தகுதி…..

யாரு வந்து சொல்லணும்

நெஜமா யார் நான்…….

என்கிட்டதான் கேக்கணும்"


வினாக்களை  யாரிடம் எழுப்பிகிறோம் என்பது தான் இங்கு கேள்வியே.  நமக்குள் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பாமல், நம்மைப் பற்றி, நம் இலக்கைப் பற்றி, அந்தப் பயணத்தில் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. வேறு யாரும் நம்மைப் பற்றி முழுதாக கூற முடியாது. அதனை மனசாட்சிக்கும், நமக்குமான உரையாடல் போல அமைத்திருப்பார் சந்தோஷ் நாராயணன்.




இரண்டாவது சரணத்தில்  கடைசியாக வரும் வரிகள் தான் ஹைலைட். 

  

"என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்

வருவானே……ஏ…..ஏ…..ஏ…..ஏஹே…..ஏஹே….

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே

மன்னிக்கணும் மாம்சே….

அட.. அவனும் இங்க நான்தானே"


#beatyourself #beatyesterday எனும் மோட்டிவேசனல் டேக் லைன் தான் இந்த வரிகள்.   உள்ளத்தனைய உடலில்   ஓடும் பலரும் இந்த ஹேஸ்டேக் போடுவதைக் கண்டுள்ளேன்.  குறிப்பாக ஷான்.  அதே தூரத்தை, முந்தைய நாளைவிட குறைந்த நிமிடத்தில் முடித்துக்கொள்ள இது ஒரு self motivation. நமக்கான போட்டியாளர் வெறும் யாரும் இல்லை நாம் மட்டுமே. 


அடுத்ததாக இந்த பாட்டின் எனர்ஜியே, "ரகிட ரகிட ரகிட" முடித்தவுடன் வரும் 'ஊ' எனும் உற்சாக ஒலி தான்.  கூடவே இடையிடையே வரும் சின்னச் சின்னச் உற்சாக ஒலிகள் தான்.  


 

இப்போது ஆரம்ப வரிகளுக்கு வருவோம் 

"ஹே, என்ன வேணா நடக்கட்டும்..

நா சந்தோசமா இருப்பேன்..

உசிரு இருக்கு வேறன்ன வேணும்

உல்லாசமா இருப்பேன்".

அன்றைய

"ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும் 

எனக்கொரு கவலை இல்ல"பாட்டின்  சமீபத்திய வடிவம்.



முதல் இரு வரிகள் சுயநலம் பேசுவது போல தெரிந்தாலும், அடுத்த வரியையும் சேர்த்து கவனிக்கும்பொழுது தான் அதன் ஆழம் தெரியும்.   வாழ்தல் அறம்  எனும்   ஈரோடு கதிரின் அடிப்படை கோட்பாடு. "எவருக்குமே சாவதற்கான காரணங்களைவிட, வாழ்வதற்கான காரணங்கள் ஒன்றே ஒன்றாவது கூடுதலாக இல்லாமல் போகாது".   அந்த இரு வரிகளும் உணர்த்துவது அதுவே. 



#வஞ்சபுகழ்ச்சி  #sarcasm #Motivation

#ரகிட-ரகிட


குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...