Tuesday, August 07, 2018

"ஈரோடு எனது குருகுலம்" கலைஞர்

"ஈரோடு எனது குருகுலம்" கரகரத்த குரலில்  கலைஞர் பேச்சை ஆரம்பித்தவுடன் அங்கங்கு சரக்கடித்துக்கொண்டும், சரக்கடித்து முடித்து தம்மடித்துக்கொண்டு இருக்கும் தொண்டர்கள் பரபரப்புடன் தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டு  இவரின் பேச்சை அமைதியாக கேட்க இவர் பக்கம் திரும்புவார்கள்.   தக  தக என வண்ண சிறு மின் விளக்குகள் உதய சூரியனாகவும், கலைஞராகவும், கருப்பு சிவப்பில்  மின்னிக்கொண்டு இருக்கும்.  இப்படி  கலைஞரை முதன்முதலிலில் பார்த்த இடம்  ஈரோடு வ. ஊ. சி. திடலில் தான். பெரும்பாலான அரசியல் கூட்டம் அங்குதான் நடைபெறும்.   சுமார் ஒரு நாற்பது, ஐம்பது நிமிடங்கள் குறிப்புகளை வைத்துக்கொண்டு, புள்ளி விவரங்களுடன் இடைவிடாமல் அடுக்குமொழியில் பேசிக்கொண்டே செல்வார்.   

தேர்தல் பிரசாரத்திற்கு ஈரோடு வருகிறார் என்றால் எங்கள் ஊரின் உடன்பிறப்புகள் பரபரப்பாவர்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக அண்ணணின் கடையில் கலைஞரின் கூட்டம் பற்றிய பேச்சாகவே இருக்கும்.  'நாங்கல்லாம்'  என ஆரம்பித்து வெறும் "டீ" குடித்துவிட்டு கட்சிக்கு கொடி நட்ட வரலாரை, அதற்கும் முந்தைய தலைமுறையினர் கூறிவிட்டு இவர்களை உசுப்பேத்திவிட்டு செல்வர்.  'அம்மா கட்சிலயாவது ஏதாவது குடுப்பாங்க, நம்ம கூட்டத்துக்குப்போனா நம்ம கட்சில  என்ன தராங்க' என்று சொல்லிக்கொண்டே கூட்டத்துக்கு செல்வார்கள் கழக உடன்பிறப்புகள்.  

அப்பா ஒரு தீவிரமான கலைஞரின் விசிறி.   2011 க்கான தேர்தலில் "அத்தனை ஊழல் பண்ணிருக்காங்க அவங்களுக்கு போடாதிங்க" என்று காலில் விழாத குறையாக  கெஞ்சியும்,  "கலைஞர தவிர வேற யாருக்கும் போட மனசு வரலை" என மீண்டும் அவருக்கே வாக்களித்துவிட்டு  வந்து கூறியவர்.   அவரைப்போலத்தான் ஊர் பக்கம் பலரும், அதுதான் கலைஞரின் சொத்து, திமுகவின் வாக்கு வங்கி.   மதிமுக துவங்கிய புதிதிலும் இது போன்ற பேச்சுக்களை கேட்டுள்ளேன். மதிமுகவில் இருப்பவர்களே கலைஞருக்கு வாக்களித்ததை இப்படி கூறுவார்கள்.   "சூரியனப் பார்த்தா, கை  அங்க தானா போகுதப்பா" . 

ஆறாம் வகுப்பில் பிடித்தமான ஒரு பிரிவேளை ஓவியம்.  ஓவியம் கிறுக்கி, பழகிக்கொண்டு இருந்த காலங்களில், ஒருநாள் ஏனோ உதயசூரியனைப்போட்டு அப்பாவிடம் காட்டி நற்பெயர் எடுக்க முற்பட்டேன்.     என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கலைஞரைக் கொண்டாடியபோது நானும்தெரிந்தும் தெரியாமல்  அவரையே ஆதரிக்க ஆரம்பித்திருந்தேன்.  

1996ல் தான் முதல் முறையாக ஓட்டுரிமை.   அந்த சமயம் தான் பாட்ஷா விழாவில் ஜெ வை எதிர்த்து தலைவர் ரஜினியின் வாய்ஸ்.   பரபரப்பானது தேர்தல்.  அந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிபார்க்கும் வரலாற்று நிகழ்வாக எங்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1033 வேட்பாளர்கள் விவசாய சங்கம் சார்பில் நிறுத்தப்பட்டார்கள்.   அப்போது  +2 தேர்வு சமயம்,  ஆயினும் "ரஜினி-கலைஞர்-மூப்பனார்" என  இவர்களைப்பற்றித்தான் எங்களின் நட்புவட்டம் சிலாகித்துப் பேசிக்கொண்டு இருக்கும். 
எங்கள் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒரு மாதம்  தள்ளிவைக்கப்பட்டு,  புத்தகம் போடுமளவு சென்றது.  அந்த வருடம் பெருவாரியாக திமுக-தமாக வெற்றி பெற்றிருந்தது. 

2006-2011 காலத்தில் சிறு குறுநில மன்னர்கள் துணையுடன்,  குடும்ப ஆதிக்கத்தினால் ஊழல்,  இலங்கை படுகொலைகளில் இவரின் செயல்பாடு,  கட்சிக்காரர்களின் கல்லூரிகள், கொள்கையிலிருந்து வழுவல்  என்று   இவரின்  வரலாற்றில் பெரும் கறை.  அந்த ஐந்து வருடம்  தடம்புரண்டு  போகாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேறுவிதமாக, மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கும். 

இன்று, நின்று நிதானமாக  அவர் செய்த ஊழலைத்தாண்டி யோசித்துப் பார்த்தால், என் ஊரிலிருந்தும்,  நண்பர்கள் வட்டங்களில் இருந்தும்,  சொந்தங்களில் இருந்தும், அன்று திமுக கொடியை நட்டு கதை பேசிக்கொண்டிருந்தோரின் பிள்ளைகள், பேரன்கள் என பலர் அடைந்திருக்கும் பொருளாதார இடம் என்பது  அவரவர்களுக்கே தெரியாமல் கலைஞரின் சமூக நீதியால் கல்லூரிகளில்  இட  ஒதுக்கீட்டின் மூலம்  கிடைத்த இடங்கள் ஒரு மிக முக்கிய காரணம்.   கிராமங்களில் இருந்தவர்களை மேற்படிப்பு படிக்கவிட்டு  விடுதலையாக்கியதில் பெரும்பங்கு அவரையே சாரும்.     கிராமங்களில்  கல்விக்கூடங்களை மீண்டும் திறந்து கல்வியின் விதைகளை ஊன்றியவர் காமராசர் எனில்,  பள்ளியிலிருந்து   அனைத்து விதமான  கல்லூரிகளுக்கும் சென்று படிக்கும் ஆகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதில்  இவர் ஒரு சரித்திர நாயகன்.   இன்றும் தமிழகத்தின்  மிக முக்கியமான கல்லூரிகளில் அனைத்து மக்களும் சேரமுடிகிறதென்றால் அது அவரின் சாதனை.  இந்த பின்புலத்திலிருந்து வந்தவர்கள் எவ்வளவு கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்பதை சொல்ல தேவையில்லை, ஏனெனில் அது அவர்களின்  ஒட்டு மொத்த  தலைமுறையின் கனவு.  இப்பொழுது நீட் எங்களுக்கு வேண்டாம் என போராடுவதன் நீட்சியும் இதுதான். 

படித்துவிட்டு, வேலையின் பொருட்டு சொந்த ஊரை, சொந்த மக்களை விட்டு வெகுதூரம் விட்டு விலகி இருந்தாலும், இந்த வளர்ச்சி எனும் வீக்கம் தேவையா  என்று ஒருபுறம் நினைத்தாலும், கள யதார்த்தம் வேறு.  

இன்றைய நிலையில் தொடர்ந்து  தொலைநோக்குடன் வழி நடத்தும் தலைவர்கள் இல்லை என்பது தான் வேதனை.    நீங்கள் போட்டுக்கொடுத்த வழியில் நடக்க உடன்பிறப்புகள் மட்டுமல்ல உங்களால் பயனடைந்த ஒரு கூட்டம் உலகமெங்கும் விரவிக் கடக்கிறது. 

#சென்றுவாதலைவா

#கலைஞர்

Sunday, July 15, 2018

ஓட்டுனருடன் உரையாடல்


எப்பொழுதும் ஆட்டோவிலோ அல்லது வாடகை காரிலோ சொல்லும்போது டிரைவருடன் பேச்சுக் கொடுப்பது வழக்கம்.  பெரும்பாலும்  நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களே இங்கு டிரைவர்களாக இருப்பர்.  அப்படித்தான் சென்றமுறை பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் சூப்பர் ஸ்டாரைப்பற்றி புகழ்ந்து தள்ளினார், அவரது  அப்பொழுதுதான் சமூக விரோதிகளைப் பற்றி தலைவர்பேசியிருந்த்தால், ஏனோ ஆர்வம் இல்லாமல் பேசிக்கொண்டு வந்தேன்.  இருந்தாலும் அவரின் ஸ்டைலை சிலாகித்துக்கொண்டு. சென்றவாரம்  மூட்டை, முடிச்சுகளை எடுத்துவைத்த போது  நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருந்தைக் கேட்டு வாகன ஓட்டுனரும் தமிழில் 'கதைக்க' ஆரம்பித்தார்.   ஆம் அவர் 18 வருடங்களுக்கு முன் லண்டனுக்கு புலம்பெயர்ந்த  தமிழர், ஈழத்தை சேர்ந்தவர். 

பரஸ்பர விசாரிப்புக்குப்பின்,  பேச்சு அவர்களின் குழந்தைகளின் தமிழைப் பற்றி சென்றது.  "பெரியவங்க யாரும் கூட இல்லைங்க, அவங்க இருந்தா கொஞ்சம் குழந்தைகளோடு தமிழில் கதைப்பாங்க ...அதனால  தமிழ் குழந்தைகளுக்கு கடினமாக தான் இருக்கு, புரியாததை நாங்களும் ஆங்கிலத்துல தான் பேசறோன்ங்க... பள்ளியிலயும், வெளியிலயும் ஆங்கிலம் இருப்பதால அடுத்த தலைமுறை குழந்தைகள்  தமிழ் பேசறது கொஞ்சம்  சிரமம் தான்" என்றார்.  அதைஆமோதித்துவிட்டு "தமிழ்நாட்லயே அந்த நிலைமை தாங்க 'சிட்டில'... ஆங்கில வழி படிப்பு ரொம்ப அதிகமாகிட்டதால,  ஆங்கிலம் கலந்து பேசறவங்க அதிகம்.   இங்லீஸ்  எழுத்துல எழுதி தமிழ்ல படிக்கிறவங்களும்  நிறைய ஆகிட்டாங்க. நீங்க, ஈழத்தமிழர்கள், இங்க தமிழ் வளர்க்கறதைப் பார்க்கறப்ப  மகிழ்ச்சியா இருக்குங்க " என்று கூறிவிட்டு.  "இங்க  பக்கத்துல உங்க ஊர்  அம்மா வாரம் ஒருநாள் தமிழ்  சொல்லிக்கொடுக்காறாங்க, வருட முடிவில் 'எக்ஸாம்' கூட இருக்குங்க" ஆங்கிலம் கலக்காமல் என்னால் சரளமாக பேச முடியவில்லை.

"அப்படீங்களா" என்ற எங்களது பேச்சு குடியுரிமை பற்றி திரும்பியது.  "இங்க சிட்டிசன்சிப் உங்களுக்கு தந்துட்டாங்களாங்க?" "ஓமங்க, அது வந்து ஆரேழு வருடத்திலயே கொடுத்துட்டாங்க" என்றவர்,  "உங்க ஊருக்கு வந்திருக்கேன், அங்க  ஈழத்தமிழர் எப்படி இருக்காங்க?", இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை,அவர்களை எங்கோ ஒரு மூளையில் தானே ஒதுக்கி வைத்துள்ளோம்.   "எங்க ஊருக்கு பக்கத்துல முகாம்ல இருக்கறவங்க எங்க வீடு வேலை செய்யரப்ப பாத்திருக்கேன்.  வேலை ரொம்ப சின்ஸியரா செய்வாங்க. ஆனா அவங்களுக்கு எல்லாம் இன்னும் சிட்டிசன்சிப் அங்க தரலைங்க" என்றேன்.     சீரான வேகத்தில் வாகனத்தை பத்து வழிச்சாலையில் செலுத்திக்கொண்டு நம்மூர் பற்றிய நினைவுகளை மலரவிட்டார்.

"இங்க வர்ரதுக்கு முன்னாடி இலங்கைல இருந்து அங்க வந்தப்பண, மடிப்பாக்கத்துல தான் இருந்தேன்ங்க, கொண்டாட்டம்னா அங்கதாங்க...  பொங்கல், தீபாவளினா ஒரு திருவிழா மாதிரி ஊரே கலகலப்பா, அருமையா இருக்கும்ங்க,  ரொம்ப நல்லா இருந்தது, தமிழ்நாட்டுலயே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்.  இப்ப அங்க எப்படி இருக்குங்க" என்று ஆர்வமோடு கேட்டார்.  'என்னத்த சொல்ல', என்று நம்மூர் பற்றிய அவரின் எண்ணத்தை மாற்ற எண்ணவில்லை எனினும்,   இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியாது " கொண்டாட்டமல்லாம் அப்படியே இருக்குங்க, ஆனா எல்லாத்துக்கும் மக்கள் போராட வேண்டி இருக்கு, அரசியல்ல பார்த்தீங்கன்ன, ஜெ மறைவுக்கு பின்னாடி ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு, ஜெ ஆட்சி நல்லா இருந்ததென சொல்லல, ஊழல்தான்,  ஆனா தமிழ்நாட்டோட உரிமையை பல நேரங்களில் விட்டுக்கொடுக்கலை.   இப்ப மத்திய அரசு சைலன்டா எல்லாம்  திணிக்கறாங்க.     என்ன நடக்கும்ன்னே தெரியலை"   ரொம்ப பயமுறுத்திட்டமோ என நிறுத்திக்கொண்டேன்

"இங்க பிடிச்சிருக்குங்களா?" என்ற வழக்கமான கேள்வி.   "இங்க ஆபிஸ் வேலை அப்படீன்னு ஒரு ஸ்டரக்ட்ர்டு லைப்.  சுத்தமான காற்று,  ட்ராபிக் கிடையாது,   எதுக்கும் க்யூல நிக்க தேவையில்லை, கட்டர டேக்ஸ்ஸ ஒழுங்கா செலவு பண்ணறாங்க.   பணிவான மக்கள்.   ஆனா,  அங்க ஆபீஸ் போறதே பெரும்பாடு தான், ட்ராபிக்ல மாட்டி, பொல்யூசன்ல மாட்டி.  காசு கொடுத்தீங்கன்னா மட்டும்தான் வேலை நடக்கும், இல்லனா ஒன்னும் பண்ண முடியாது.  ஆனா  நண்பர்கள், சொந்தம் எல்லாம் அங்க இருக்கறதால,  சோசியல் லைப்  அங்கதான் இருக்குங்க.   பண்டிகை, பங்ஷன்னா கொண்டாட்டமா இருக்கும்" நான் சொன்னதை அவர் அசை போட்டுக்கொண்டு இருந்தார்.   அவரின் ஊர் ஞாபகம் வந்திருக்க வேண்டும். 

"போர்க்கு முன்னாடியே இங்க வந்துட்டீங்க, இப்ப நீங்க இலங்கை போன விசா எடுக்கனுமா,  இப்ப அங்க நிலமை எப்படி இருக்கு? ஒரு அமைச்சர் கூட விடுதலைப்புலிகளோட தேவை இப்ப ரொம்ப இருக்குன்னு சொல்லிருக்காங்களே?". தோனியதை எல்லாம் சீரியஸாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.

"அவ்வளவு ஒன்னும் சொல்ற மாதிரி இல்லங்க. ராணுவமே ட்ரக்(drug) கொடுக்கறாங்க" "ட்ரக்கா"
"ஓமங்க.. கஞ்சா, மக்கள பயன்படுத்த வெச்சு சமுதாயத்த நாசப்படுத்தி,  சீரழிஞ்சு போகட்டும்மென கவர்ன்மென்ட்டே இதை பண்ணறாங்க.  அப்ப எல்லாம் ஒழுக்கமா , ஒரு கட்டுக்கோப்போடு நல்லா இருந்தாங்க" எங்கயோ இதைப்பற்றி  இவர் கூறியதுபோல் படித்த ஞாபகம் இருந்தது.  நம்மூரின் டாஸ்மாக்கின் சரித்திர விற்பனையும் ஒரு கணம் வந்து சென்றது. 

"இலங்கை அமைச்சர் சொன்னது போல இப்ப யாரவது வழி நடத்த வாய்ப்பு இருக்குங்களா?" 

"இனிமேல் அந்தமாதிரி ஒரு வாய்ப்பே வராதுங்க, பிரபாகரன் மாதிரி இன்னொருவர் கண்டிப்பாக வர முடியாது.  அப்ப எம்ஜிஆர் உதவி பண்ணாங்க,    ஆரம்பத்துல இந்தியாவும் பயிற்சி  கொடுத்தாங்க.   இனிமேல் எந்தநாடும் உதவி பண்ணமாட்டாங்க.   இங்கிலாந்தும் சேர்ந்து எல்லா நாட்டோட ஆதரவோடதான அழிச்சாங்க, அப்புறம் எப்படி..." பட படவென கூறிமுடித்தவரிடம் கணத்த அமைதி.  என்ன சொல்வதென தெரிவில்லை.  பத்து வருடம் கழிந்திருந்தாலும் அந்த அமைதியின் வலி என்ன என்னவோ யோசிக்க வைத்தது. அவரே தொடரட்டும் என காத்திருந்தேன்.

தொடர்ந்தவரின் கடைசி வாக்கியம் பலமாக யோசிக்க வைத்தது.  "தனியா  ஒரு நாடு இருந்த, தமிழ்நாடும் சேர்ந்து  கூட ஆட ஆரம்பிச்சிடுவாங்க என திட்டம்போட்டு பண்ணிட்டாங்க"  உண்மையாகவும் இருக்கலாம்.  கற்பனையிலேயே கலக்கலாக இருந்தது.    

#பயணங்கள்

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...