Monday, November 16, 2020

சூரரைப் போற்று" - an EI View

"சூரரைப் போற்று" அக்குவேரு ஆணி வேராக பலரும் பிரித்து மேய்ந்து விட்டார்கள்.  அதிலும் வழக்கம்போல முரண்பட்ட கருத்துகளும் வந்து போய்விட்டது. 


 ஒரு எமோஷனல் இன்டெலிஜென்ஸ் பார்வையில் இந்த படத்தை அணுகுகிறேன்.  படத்தில் வரும் பாத்திரங்கள்  அனைத்தும் ஏதோ ஒரு வகையில்  உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு பாத்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டதை  சிறப்பாக செய்திருப்பார்கள். அங்கங்கு சென்டிமென்ட்களைத் தூவி  இயக்குனர் சுதா கோங்குரா நம்மை உணர்ச்சியால் கட்டிப்போட்டு இருப்பார்.


 பல நேரங்களில்  நாயகன் மாறனாகிய  சூர்யா ஏதோ ஒரு டென்ஷனில் சுற்றிக்கொண்டு இருப்பது போலவே இருக்கும்.  கோபம் வரும்.  ஆத்திரம் வரும். அழுகை வரும்.  இயலாமை வரும்.   ஒரு ஹீரோத் தனம்  இல்லாத சாதாரண மனிதனாக,  இந்த சாதனையைச் செய்தது போல படத்தில் காண்பித்து இருப்பார்கள்.   அது தான் படத்தின்  வெற்றி.  ஆனால் இந்த திரைப்படத்தில்  சூர்யாவை விட,   EI கற்ற  இரு சிறந்த பாத்திரங்களைக் கூறுவேன். 


 ஒன்று அவர் கூடவே இருக்கும் அவருடைய மனைவி பொம்மி.  சூர்யாவுக்கு சமமான, வித்யாசமாக சிந்திக்கும், தைரியமான, பொறுமையான பாத்திரப் படைப்பு. பல  காட்சிகள் இருந்தாலும், குறிப்பாக இரு இடங்களை கூறவேண்டும்.


 முதல் முறை.  மாறன் பொம்மியை கூட்டிக்கொண்டு கேக் டெலிவரி செய்ய பைக்கில் செல்வார்.  நண்பருக்கு போன் செய்ய சொல்லி பேஜரில் ஒரு செய்தி வரும்.   வண்டியை நிறுத்தி பக்கத்தில் இருந்த போன் பூத்தில் அவரின் நண்பருக்கு  அழைப்பார்.   விமான கண்காட்சிக்கு அவர் பார்த்து வைத்த விமானம் வரவேண்டும் எனில்  அந்த விமானத்தின் ப்ளூ ப்ரிண்ட்  இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என அவர் கூறுவார்.  ' வேறு யார்க்கும் இல்லாத புது ரூல்ஸ் நமக்கு  மட்டும் ஏன்' என சூர்யா உடைந்து போய் விடுவார்.  அந்த டென்சனில்,  என்ன செய்வது என  தெரியாமல், போன் பூத்துக்கு பணம் கொடுக்காமல் அப்படியே பைக் நோக்கி செல்வார்.   'காசு குடுத்துட்டு போங்க என அதன் உரிமையாளர்' பின்னால்  வர,  பூத் வெளியே நிற்கும்  பொம்மி 'அண்ணே  நான் குடுத்துக்கறேன்" என்பார்.  சூர்யா பைக்கை பதட்டமாக உதைத்து ஸ்டார்ட் பண்ணி, ஒரு பத்தடி ஓட்டி  செல்வார்.  பொம்மியை விட்டுவிட்டு செல்வதை உணர்ந்துவிட்டு, வண்டியை நிறுத்தி  திரும்பிப் பார்ப்பார்.   அந்த இடத்தில் அவ்வளவு பதட்டம் தெரியும்.   ஆனால் பொம்மியோ, முகத்தில் குழப்ப ரேகைகள் படித்திருந்தாலும்   தலையை லேசாக ஆட்டி, ஒரு கையில் கேக் பிடித்துக்கொண்டு மறு கையில் அவரைப் போகச் சொல்லும் உடல்மொழியோடு, "நான் ஆட்டோல போயிக்கறேன்.." என்பார். 

அதேபோலத்தான் கிட்டத்தட்ட அனை

த்து பிரச்சினைகளும் முடிந்து குட்டி விமானம் பறக்கத்  தயாராக இருக்கும்.  மினிஸ்டர் உள் இருக்க குட்டி விமானத்தில் முதல் முறையாக ஏறி கிளம்ப முற்படும்போது தீ பிடித்துவிடும்.  ஒரு வழியாக எமெர்ஜென்சி லேண்டிங் செய்து வெளியே வருவார்கள்.  சூர்யாவுக்கு எப்படி நடந்தது என குழப்பம்.  விமான தளத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவரைச் சுற்றி நிருபர்கள். பல கேள்விகள் எழுப்புவார்கள்.  பாதுகாப்பு வசதி இல்லையா என்பது உள்பட.  'அதைப்பற்றி நான் விளக்குகிறேன்' என்பார். 


 அப்பொழுது  தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் பொம்மிக்கு பிரசவவலி வரும்.   அந்த இடத்தில சூர்யா பொம்மியின் வலியைப் பார்த்துவிட்டு பதைபதைப்பாவார்.  அப்பவும் பொம்மி "நான் பார்த்துகிறேன்..நீ போ" என ஒரு தைரியத்தை கொடுக்கும் சொற்களை உதிர்ப்பார்.  பதட்டமில்லாமல் பொறுமையாக 'என்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீ கவலைப்படாம  தைரியமா பேசு' என்பது தான் அது. அந்த  இடங்களில் எல்லாம் பொம்மி பதட்டமடையாமல் இருப்பார்.  அவரின் உணர்ச்சியை மடைமாற்றி வேறு கனிவான சொற்களின் மூலம் பிரதிபலிப்பார்.  பொம்மியின் அந்த சிறு பார்வையும், அந்த உடல்மொழியும், சொற்களும்  தான்  சூர்யாவுக்கு பூஸ்ட்.


இவர்கள் இருவருக்கும் நடக்கும் காதல் கட்சிகளின் கவிதையை விட,  இந்த இடங்களில் பொம்மியின் உணர்வு,  ஊக்கமாக  கண்கள் வழியே கடத்தப்படும்.


மற்றொருவர், மாறனின் மேலதிகாரியாக வரும் நாயுடு(மோகன் பாபு) அவர்களின் கதாபாத்திரம்.  அவர் ஒரு ராணுவ அதிகாரி என்பதாலோ என்னவோ எந்த ஒரு இடத்திலும் அளவுக்கு மீறிய உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளவே மாட்டார்.  அவருக்கும், மாறனுக்கும் ஒரு மோதல் போக்கையே ஆரம்பத்தில் இருந்து காண்பித்திருப்பார்கள்.  ஆனால் அதனைத் தாண்டி 'க்ளுக்' என  ஆனந்தக்கண்ணீர் எட்டிப் பார்க்கும், இரு நெகிழ்ச்சியான காட்சிகளில்.   


முதன்முறையாக குட்டி விமானத்தை தரை இறக்க விட மாட்டார்கள். மாறன், விமானத்தை ஓட்டும் நண்பர் சேவிடம்"நீ தாம்பரத்துல எறக்குடா நான் பார்த்துக்கறேன்" என கூறி, தாம்பரம் விமானப் படைத் தளத்தில் கட்டுப்பாட்டையும் மீறி இறக்குவார்கள்.  

அந்த விதிமீறலுக்காக நண்பர்கள்  மூவரையும் விசாரணைக்கு நிறுத்துவார்கள்.  அந்த காட்சி அவ்வளவு அழகாக இருக்கும்.  நாயுடு சேரில் இருந்து எழுந்து மிடுக்காக நடந்து வருவார்.   அவரின் பேச்சு தெலுங்கு கலந்த தமிழில் ரசிக்கும்படி இருக்கும். 'மேடே(Mayday) டிக்லேர் பண்ணி சென்னை ஏர்போர்ட்ல லேன்ட் பண்ணி இருக்கலாமல்ல' என கூறி அந்த இடத்தில் கேள்விகளைத் துளைப்பார்.   


இருக்கு முன்னாடி இதே மாதிரியான சம்பவத்தை அவர்களிடமிருந்தே போட்டு வாங்குவார். இறுதியில்

"டெல்லி வரைக்கும் எதிரிகளை சம்பாரிச்சிட்ட.  பைன் 25000.  மூனு மாசம் கழிச்சு கொடு."

அப்போதும் அவர்கள் நம்ப முடியாமல் நிற்பார்கள். "என்ன உங்கள கட்டிபிடிச்சு  வழியணுப்பனுமா? போங்க, "


மாறன் "என்னத்தான் உங்களுக்கு பிடிக்காதே, சார்?" என்பார்


"நம்ப இன்னிக்கு பொலிட்டிக்கல் ப்ரசர்ல்ல உன்ன உள்ள வச்சா,  என்னையே நான் மதிக்க மாட்டேன்... தம்புடு...நீ பண்ணனும்ன்னு நினைக்கிறது... உன் ஈகோ, என் ஈகோவ விட பெருசு.   ஒரு சோல்ஜர் அவனை நம்பி வந்தவர்களை உயிரோடு திரும்ப சேர்க்கணும்;  நீ இன்னைக்கு பண்ண மாதிரி.  யூ ஆர் எ லீடர் டுடே"  என்று கூறிவிட்டு ஒரு சிகரெட் எடுப்பார்.   அதன்பிறகு  சூர்யாவுக்கும், நாயுடுவுக்கும் நடக்கும் சிகரெட், வயசு பற்றி உரையாடல் ஒரு ஹைக்கு.  


முன்பிருந்த பகையை மனதில் வைத்து அவர் நினைத்திருந்தால், அந்த இடத்திலேயே மாறனின் கனவை தகர்த்து இருக்க முடியும். 


அதைவிட மிக முக்கியமான காட்சி.   பல பிரச்சினைகளும் முடிந்து, இறுதியாக விமானத்தை இயக்கும் சமயம். இரண்டு மூன்று நாட்களாக மாறன் தூக்கமே இல்லாமல் அலைந்து கொண்டிருப்பார்.  "நாமதான்டா பாதுகாக்கணும், இல்லன்னா தீ கூட வச்சிருவாங்க" என்று நண்பர்களிடம் கூறிவிட்டு அவர் விமானம் நோக்கி அயற்சியான உடற்மொழியோடு வருவார்.  அங்கு அவரின் மேல அதிகாரி, நாயுடுவும் அவரது குழுவும் stand-at-ease ஆக நின்று  கொண்டிருப்பார்கள்.  ஒரு சிறு புன்முறுவலோடு பேசுவார்.   "என்ன நெடுமாறன்  அந்த  கோஸ்சாமிக்கு மட்டும்தான்  ஆள் இருக்குமா?  நமக்கு இல்லையா? நம்மள்ள ஒருத்தர நாம கைவிடமாட்டோம்.  Go and take rest man" என்பார்.  


அவரின் பாத்திரப்படைப்பு எந்த ஒரு இடத்திலும் உணர்ச்சியை மிதமிஞ்சி வெளிக்காட்டாமல் இருக்கும்.  எந்த அளவிற்கு வெளிக்காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படுத்தி இருப்பார்.   அதே நேரம் நாம் ஒரு முயற்சியை நோக்கி நகரும்போது எப்படி பழகிய மனிதர்கள் உதவுகிறார்கள் என்பதுவும்.  


பொம்மி, நாயுடு இரு பாத்திரங்களும் உணர்ச்சிகளை சட்டென கொட்டிவிடாமல்,  கதையை மேலும் அழகாக்குகிறது.

டாக்டர் செலின், US-மொடக்குறிச்சி

சென்ற வாரத்தில் எங்களது ஊர் மொடக்குறிச்சி மீண்டும் தலைப்புச் செய்திகளில்.  சென்ற முறை 1996-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நடந்த போது இருக்கும்.  தினமும் நூறு, ஐம்பது பேராக எங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.  தினமும் மாலை தொலைக்காட்சி செய்தியில் பரபரப்பாக பேசப்படும்.   வேளாண் பிரச்சினைகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக  கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தின் மூலம் 1033 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு கின்னஸ் சாதனை அடைந்தது.  எங்கு சென்றாலும் அதனைப் பற்றியே கேட்பார்கள்.  நக்கலின் உச்சமாக "நீயும் எலக்சன்ல நின்னயா" என்பார்கள்.    இந்த முறை அமெரிக்காவின் செலின் ராஜ் கவுண்டர் அவர்கள் முக்கியச் செய்தியாக இடம்பெற்றுள்ளார்.  அவரது அப்பா ராஜ் அவர்கள் படித்த பள்ளி தான், மொடக்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளி.  தற்போது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி.

 

வருடா வருடம் நடக்கும் பள்ளியின் இலக்கிய மன்ற விழா மற்றும் ஆண்டு விழாக்களில் நாவல் பழ  மரத்தடியிலும், வேப்பமரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டுதான் சிறப்பு விருந்தினருக்கு காத்திருப்போம்.

அந்த காத்திருக்கும் மாலை வெயில் நேரத்தில், சின்ன கல்லை எடுத்து, சற்று தள்ளி உட்கார்ந்திருக்கும் நண்பனின் முதுகில் தூக்கி போட்டு விளையாடி சுவாரசியம் ஆக்கிக் கொண்டதுண்டு.   எப்பொழுதும் பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு முன்பாக சிறப்பு விருந்தினரின் பேச்சு இருக்கும்.  கலை நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் வேளையில்,  சிறப்பு விருந்தினரின் பேச்சு, அவர் கூறும் குட்டிக் கதைகளைப் பொறுத்து ஆர்வம் வரும்.  

 

பெரும்பாலும் சிறப்பு விருந்தினராக SKM நிறுவனத்தின் எஸ்கே மயில்சாமி கவுண்டர் அவர்கள் தான் அழைக்கப்பட்டு இருப்பார்கள்.  எங்கள் பள்ளியில் படித்த அவர், ஒரு சிறந்த தொழிலதிபராக, தனித்துவம் மிக்கவராக இருந்தார் அப்போதும், இப்போதும்.  பள்ளிக்கு கேட்கும் நேரங்களில் நிதி வழங்கிக் கொண்டிருந்தார்.  கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்த அவரது வரலாறை, பேச்சைக் கேட்கக்  கேட்க நம்மில் ஒருவர் என சுவாரசியமும், ஊக்கமும் வரும்.   அவை மூளையின் ஓரத்தில் எங்கோ ஒரு பக்கம் உட்கார்ந்து, வேண்டிய நேரத்தில் நம்மை உசுப்பி விடும்.  சில வருடங்கள் கழித்து எஸ்கே மயில்சாமிக் கவுண்டர் எனும் அவரின் பெயரை,  எஸ்கே மயிலானந்தன் என மாற்றிக்கொண்டார். அவர் மாற்றிக்கொண்ட சமயம்,  நுயுமராலஜி படி மாற்றிக்கொண்டார் என நினைத்துக் கொண்டுதான்  இருந்தேன்.  அதன் பிண்ணணி அப்பொழுது தெரியவில்லை.  அவரது SKM நிறுவனம், இன்று நான்கு கிளை நிறுவனமாக பெருகி, எங்கள் பகுதியில் பலருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் சிறந்த நிறுவனம்.  அவரது பிறந்த ஊரை தத்து எடுத்து,  அவர்களின்  குழந்தைகளுக்கு,   உயர்கல்வி வரை படிக்கவும் வைத்து வருகிறார்.  வாழ்க வளமுடன் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, வேதாந்திரி மகரிஷிக்குப்பின் அதனை வழிநடத்தி வருகிறார்.

 

சரி, எதற்காக இந்த ப்ளாஸ்பேக்.  SKM அவர்களுக்கும், டாக்டர் செலின் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இன்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அவர்களின் கொரோனா குழுவில் இடம்பெற்றுள்ள பெண் மருத்துவர், செலின் கவுண்டர் அவர்கள் என்பது அறிந்ததே.   சென்ற வாரம் அவரைப்பற்றிய செய்திகள் வந்த நேரத்தில், எனது வாட்ஸ்அப் முழுக்க நண்பர்கள் "மச்சி, உங்க ஊர்க்காரங்க போல" என அவரின் பார்வர்டுகளால்  நனைத்துக் கொண்டு  இருந்தார்கள்.  நண்பர் ஒருவர் எனக்கு வாழ்த்தும் கூறினார்.   காரணம் மொடக்குறிச்சி அவரின் பூர்விகம் என்பது மட்டும் தான்.  இது அவரது தனிப்பட்ட முயற்சி, சொந்த சாதனை தான்.  அதையும் தாண்டி, அவர் நான்கு முறை பள்ளிக்கு வந்து, அவரின் டிரஸ்ட் வழியாக நிறைய உதவிகளை செய்துள்ளார் என்பது தான் கூடுதல் மகிழ்ச்சி.

 

அந்த புகைப்படங்களில், நாங்கள் பள்ளியில் உட்கார்ந்து கொண்டு இருந்த திடலில்,  அதே மேடையில் சிறப்பு விருந்தினராக அலங்கரித்து மாணவர்களுக்குப் பரிசை வழங்கிய புகைப்படங்கள் வலம் வந்தன.  நாங்கள் SKM அவர்களின் பேச்சை விளையாட்டாகக்  கேட்டு  உள்வாங்கிக் கொண்டது போல,  அந்தக் கூட்டத்தில் எத்தனையோ மாணவர்கள் டாக்டர் செலின் அவர்களின் உரையைக் கேட்டிருக்க கூடும்.  அது அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சிறு பொறியை கிளப்பிவிடும்.  அந்த சிறு பொறி அவர்களுக்கு ஊன்றுகோலாக, அவர்களை உலகம் முழுக்க எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய உதவும். 

 

அந்த மேடையை நோக்கி அவர் நடந்து வரும் பொழுது, அந்த சிறுவர்கள் வேடிக்கை வைத்திருப்பார்கள். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள்.   'இவங்க தான் இன்னிக்கு பேசறதுக்கு வந்திருக்காங்களா?  எங்கிருந்து வர்ராங்க?  நம்மூர்லயா படிச்சாங்க?  என்னடா, பேன்ட்  சர்ட்டெல்லாம் போட்டுருக்காங்க?'  என்று பல வித கேள்விகள் வந்திருக்கக் கூடும்.  இத்தகைய கேள்விகள் தான் அவர்களுக்குள் ஒரு 'ஸ்பார்க்'. 'அப்ப நாமும் படிச்சால் அங்க போக முடியமா?  இவங்க மாதிரியே சாதிக்க முடியுமா?'  எனும் அடுத்தடுத்து அவர்களை யோசிக்கத் தூண்டும்.     

 

அந்த வியப்பு, ஆச்சரியம் நிறைந்த கிசுகிசு கேள்விகள்,  அவர்களுக்கு எங்கோ ஒரு பொறியை, படிப்பின் தாகத்தை, அமெரிக்காவிற்கான கனவை உருவாக்கி விட்டிருக்க கூடும்.  இன்று இவரின் தந்தையின் கனவுக்காக பள்ளிக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் போல, அந்த முணுமுணுத்த கூட்டத்திலிருந்து ஒருவர்,  பல நாடுகளுக்கும் சென்றுவிட்டு வந்து மேலும் பலரைத் தூக்கி விடலாம்.   அதுதானே இன்றைய மற்றும்  நாளைய தலைமுறையின் தேவையாக இருக்கின்றது.

 

அவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாரா எனத் தெரியவில்லை.   அடுத்த முறை வந்தால் அவர் அங்கேயும் செல்ல வேண்டும்.  நம்மூரில் நாம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் விஷயத்தை அவர் ட்வீட்டாக பதிவு செய்திருந்தார்.  இதுகூட பலருக்கும் அவரவர்களின் பள்ளிக்கு ஏதாவது செய்வோமே என தோன்றி இருக்கும். இவருக்கும் கமலா ஹாரிஸ்க்குமான ஒற்றுமை.   இருவருமே இரண்டாம் தலைமுறையாக அமெரிக்காவில் இருப்பவர்கள்.  முதல் தலைமுறை முயற்சி எடுத்து, வாயுப்புக்களைப் பயன்படுத்தி சென்றதால் தான், இவர்களால் அங்கு சாதிக்க முடிந்தது.  பேச எவ்வளவோ அவரின் சாதனைகள் இருக்கும்போது சமூக வலைதளங்களில் வழக்கம்போல ஏதோ ஒரு எதிர்மறையை எடுத்துக்கொண்டு அவரது பெயர் பற்றி  சர்ச்சையை கிளப்பிக்கொண்டு இருந்தார்கள்.   SKM  அவர்கள் போலவே அவரும் செய்யலாம். 

 

கிட்டத்தட்ட நான் ஊருக்கு வந்ததில் இருந்து, கொரோன ஊரடங்கு தளர்வுக்குப் பின் மீண்டும்  கல்யாணம், விசேஷங்கள் என பரபரப்பாகவே, எனது  தனிப்பட்ட நேரம்  நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றது.  பல வருடங்களுக்குப் பின் இங்கு இருப்பதால் கொரோன பயத்தோடு முக்கியமானவற்றில்  பங்கு கொள்கிறேன்.

பெங்களூர், சென்னையில்  இருக்கும் என்  நண்பர்கள் இதன் காரணமாகவே ஊர்ப்பக்கம் வரவில்லை என்கிறார்கள். "அட, அங்க இருந்தா சின்னச் சின்ன விசேசம் ஒவ்வொன்னுக்கும் கூப்பிடுறாங்க.  போகலைன்னா சங்கடம் வேற.  கோவிச்சுக்கறாங்க".   டாக்டர்  செலின்  போன்ற சாதனையாளர்கள், இவை எல்லாவற்றையும் கடந்து விட்டுத்தானே சாதனைகள் செய்கிறார்கள்.

 

பெரும்பாலான சாதனையாளர்கள் அந்த வட்டத்தை உடைத்து வெளியேறியதால் மட்டும் தான் அவர்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிகிறது.  ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போது, பார்வை விரிவடைய மறுக்கின்றது.  பார்வை விரிவடைய, வெளிவட்டத்தின் வாய்ப்புகளை அறிந்துகொள்ள, உலகத்திற்கான திறவுகோலை வழங்க,  இத்தகைய சிறப்பு விருந்தினர்களின் நேரடிப் பங்கேற்பு உதவும்.  அவர்கள் நம் ஊரில் இருந்து சென்றவர்கள் எனும்போது நாமும் அதனைச் செய்ய முடியும் எனும் நம்ம்பிக்கை ஊற்று பிறக்கிறது. 

 

எங்கள் பகுதியில் இருந்து வெளியில் வந்து பிரபலமானவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அவர்கள் அல்லது அவர்களின் வழித்தோன்றல்கள் எங்கு இருந்தாலும், மீண்டும் வேர்களை நோக்கி விழுதுகளைப் பரப்பி மற்றவர்களைத் தூக்கிவிடுவதென்பது கண்டிப்பாக பாராட்டப்பட  வேண்டிய விஷயம்.   அதுவும் அவரின் அப்பா படித்த பள்ளி என்பது கூடுதலாக பாராட்ட வேண்டிய விஷயம்.  வாழ்த்துக்கள்  டாக்டர் செலின். 

 #mondaymotivation #MotivationalStories

   

 



குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...