Wednesday, February 23, 2022

தாய் மொழி தினம்.

 தகவல் தொழில் நுட்ப துறையை பொறுத்த அளவில் பல் மொழி, பல் நாட்டு மக்களுடன் பேச வேண்டும். அதில் தமிழில் பேச ஒருவர் கிடைத்தால் சற்று சுலபமாக புரியவைத்து விடலாம். தமிழில் பேசும் ஒருவர் கிடைக்க மாட்டாரா என ஏங்கும் பிரஜாக்ட்டும் உண்டு. ஈமெயில்/பெயர் வைத்து நம்மூர் மக்களை கண்டுபிடிப்பது சற்று சிக்கலான ஒன்றாக மாறி வருகிறது. தற்பொழுது புதிதாக வந்து சேர்பவர்களின், பெயரின் மூலம் தமிழ்தானா? என்பதில் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. என் அப்பாவின் பெயர் மூலம் தான், நானே தமிழ் என்பதை அறிந்து கொள்வர். சிலர் சேட்டில்(chat) "வணக்கம்" என்று ஆரம்பிப்பார்கள். சிலர் "நீங்க தமிழா?" என நேரிடையாக கேட்டுவிடுவார்கள்.



நானும் இப்படி கண்டுபிடித்து, "வணக்கம்" என்று ஆரம்பித்து, பதில் தமிழில் கிடைத்தால் அதிலேயே தொடர்வேன். நம்மைவிட ஜூனியர்கள் தமிழ் என தெரிந்தால் உடனே ஆரம்பித்து விடுவேன். ஆனால் மேலாளர்கள், க்ளையண்ட் என வரும்போது அவர்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் கொள்கை, பஞ்சாயத்து ஏதும் வராமல் இருக்க. சில தென்னிந்தியப் பெயர்கள் தமிழ் போலவே தோன்றும். அவர்களிடம் பல்பு வாங்கிய சம்பவங்களும் உண்டு.


மலேசியன் ப்ராஜக்ட். அவரின் பெயரின் மூலமும், அக்கம் பக்கம் விசாரித்ததிலும், அவர் சுத்த தமிழ் என்பது நன்றாக தெரிந்தது. ஆனாலும் அவர் கிளையன்ட் மற்றும் மேலாளர் ஆக இருந்தால் , தமிழில் ஆரம்பிக்கவில்லை. ஆங்கிலத்திலேயே 'சேட்' மற்றும் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெரும். ஆறு ஏழு மாதமாக அவ்வாறே தொடர்ந்தது. ஒருநாள் டெஸ்க் தொலைபேசி அழைத்தது. அதில் பரபரப்பாக பேசினார். "எப்ப இந்த ரிப்போர்ட் அனுப்புவே. கொஞ்சம் அத மட்டும் மாத்திட்டு சீக்கிரம் அனுப்பு" என்று தமிழில் சில நிமிடங்கள் கடுமை காட்டிவிட்டு போனை வைத்துவிட்டார். அது தான் முதலும் கடைசியும் அவரிடம் இருந்து வந்த தமிழ். அதன் பிறகு ஒரு வருட காலம் அவரோடு வேலை பார்த்திருப்பேன்.

மற்றொரு கிளையன்ட், லண்டன் அலுவலகம் வருகிறார். நம்ம ஊர் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்திருப்பவர். அவர் சேர்ந்த புதிதில், ஊர்ப்பேர் வரையில் விசாரித்தும் தமிழுக்கு மாறாமல், ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார் அந்த கிளையன்ட் மற்றும் மேலாளர். கொள்கைப்படி நான் தமிழில் தொடரவில்லை. ஒரு வருடமாக தமிழிலேயே பேசாதவர், அன்று காலை ஒரு பத்து மணி இருக்கும் அவசரமாக அலுவலகம் வந்தார். தமிழில் "ஏம்பா, காலைல பிரேக் பாஸ்ட் இன்னும் சாப்பிடல, இந்த கேன்டீன் எங்க இருக்கு?" என கேட்டார். "பிப்த் ப்ளோர்ல இருக்குங்க" "கொஞ்சமா லைட்டா இருந்தா போதும்" என்றார். "சான்டவிச் எப்பவும் கிடைக்கும்... அது வேணாம்னா..காஃபி & மஃபின் இருக்கும் பாருங்க". சாப்பிட கிளம்பினார். சாப்பிட்டு விட்டு தெம்பாய் வந்தவர் போற வரைக்கும் தமிழை ஊறுகாய் அளவு கூட தொடவே இல்லை. ஆனால் அவர்தான் வடநாட்டு மக்களோடு இந்தியில் குலாவிக்கொண்டு இருந்தார்.

அவர்களே அறியாமல், அனிச்சை செயல் போல சில கணங்களை உயிர்ப்பித்து விடுகிறது தாய்மொழி .

#தாய்மொழிதினம்.

Friday, February 11, 2022

குறள் 1040

 *குறள் 1040:*

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

*பொருள்:* எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

என் விளக்கம் :

முதலில் இந்த குறளில் வரும் *அசைஇ எனும் சொல்லிசை அளபெடை* தான், இந்த குறளின் அடிநாதம். அசையாமல் =சோம்பல் எனும் பொருளில் வருகிறது. அதனை வைத்து பார்க்கும் பொழுது, மூன்று வகையான பொருள் எனக்குத் தோன்றுகிறது.
1.
"தாரு காடு? அவங்க காடா? ஒன்னும் போட மாட்டாங்க.. நறுவுசாவே வெச்சிருக்க மாட்டாங்க.. செடி செத்தை மொளச்சு பொதர் மாதிரி கெடக்கும்.. புழு பூச்சி இருந்தா கூட தெரியாது"
சோம்பலால் எந்த வேளாண்மையும் செய்யாமல் இருக்கும் நிலம் சிரிக்கும் என்பதை புல், பூண்டு முளைத்து பயன்படாமல் இருப்பதை //நிலமென்னும் நல்லாள் நகும்.// என்று கூறுகிறார் எனலாம்.
2.
நிலம் பன்மடங்கு வைத்திருந்தவர்கள், கடன் காரணமாக அதனை விற்றுவிட்டு ஒரே ஒரு வீட்டில் இருப்பதையும் காணலாம். படிக்காதவர்கள், ஒரே ஒரு வாடகை வீடு மட்டும் வைத்து இருந்தவர்கள், நிலத்தினை குத்தகைக்கு எடுத்து, உழைப்பின் மூலம் இன்று சொந்த வீட்டிலும் உள்ளார்கள் (அவர்கள் அளவில் அது சாதனை ).
முதலாமவர்க்கு கடன் சோம்பலால் மட்டுமே வந்ததா? இருக்காது, புறக்காரணிகள், பருவம் தப்பிய மழை, வெயில் அல்லது அவர்களின் தவறான முடிவு.
இரண்டாமவர்க்கு, உழைப்பு மட்டுமே காரணமாகுமா? உழவை பொறுத்த வரையில் முயற்சியோடு நேரம் கை கூடவேண்டும். முதலாமவர்க்கு இருந்த அதே புறக்காரணிகள் இவருக்கும் இருந்திருக்கும். ஆனால் hard work உடன் Smart work சேர்த்து செய்து முன்னேறி இருப்பார்.
//நிலமென்னும் நல்லாள் நகும்.// இங்கு நிலமகள் என்பதை ஊர் மக்கள் என்றும் கூறலாம். சோம்பலால் மட்டும் அல்ல, வெற்றிபெறாத மனிதர்களை புறம் பேசி நகைக்கவே செய்வார்கள்.
3.
இந்த குறளை உழவுக்கான குறளாக மட்டும் கருதாமல் முயற்சிக்கான குறளாகவும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுத்துக்கொண்டால்
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்". - இந்த குறளின் சாரம் மேற்சொன்ன 1040 வது குறளில் இருக்கும்.
இந்த குறள் இருக்க, அதேபோல ஏன் மற்றோர் குறள்? இப்ப ட்விட்டர்ல காப்பி பேஸ்ட் ட்ரெண்ட் மாதிரி, வள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்திலும் தனித்தனியாக அதே நல்ல விஷயங்களை வேறு வேறு வகையான மக்களுக்கு கூறியள்ளார் என எடுத்துக்கொள்ளலாம்🙂
இனிய நாளாகட்டும்.

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...