Saturday, September 26, 2020

ஈரோடு தினம்

ஈரோடு  தினம் என காலையில் FM  கேட்டுக்கொண்டு செல்லும்போதே காதில் விழுந்தது.   கூடவே வாசலின் ஈரோடு  குறித்த அனுபவம்,  நினைவுகளைக் கீற ஆரம்பித்து, கொசுவர்த்திச்  சுருளை மலர விட்டது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஈரோடு வேறு வேறு பரிணாமத்தை எனக்கு வழங்கியுள்ளது. பள்ளிக்காலங்களில் பேருந்துகளில் வரும்பொழுது சும்மா வேடிக்கை பார்ப்பது திரையரங்குகளின் மீதான ஈர்ப்பாக மாறுகின்றது.  கொங்காளம்மன் கோவில் வீதி, நகைக்கடை வீதி சில காலம்  முக்கியமானதாக இருந்தது. கல்லூரி செல்லும்போது பேருந்து நிலையமும், பஸ்களும் பிடித்தமானதாக  இருந்தது.  அதன்பின் வெளியூர் சென்ற காலகட்டங்களில் ரயில் பேருந்து மற்றும் நிலையத்தில் இருந்து ஏற்றிவிடும் ஒரு ஹப் ஆக மட்டுமே இருந்தது.  இன்று வாசலின் வழி வேறு ஒரு பரிமாணம் எனலாம்.  
பள்ளி காலங்களில் ஈரோடு என்பது எங்களுக்கு ஒரு வெளிநாடு போவது போலத்தான்.  ஈரோடு போவது என்றால் ஒருவித மகிழ்ச்சி குடிகொண்டு விடும்.   "நாளைக்கு ஈரோடு போகப் போறேண்டா ",  "இன்னிக்கு ஈரோடு போய்ட்டு  வந்தேன்டா"  என்று நண்பர்களிடம் சொன்னாலே கெத்தாக  இருக்கும்.   ஈரோட்டில் திரைப்படம் பார்த்துவிட்டு சென்றால் காலர் தூக்கி விட்டுக்கொண்டு சுற்றலாம்.   அதற்கான சாட்சியாக டிக்கெட் எல்லாம் பல நாட்கள் பத்திரமாக இருக்கும்.  

கரகாட்டக்காரன் திரைப்படம் சக்கை போடு போட்ட போது குடும்பம் குடும்பமாக பல ஊர்களில் இருந்தும் ஈரோடு சென்று பார்த்தார்கள்.   அப்பொழுது புதிய படங்களைப்  பார்க்க சுற்று வட்டாரமும் ஈரோடு தான் வர வேண்டும்.  மொடக்குறிச்சி தியேட்டர் வர ஐந்து ஆறு மாதம்  வரை ஆகலாம்.  ஈரோட்டிலும்  ஒரேயொரு தியேட்டரில் தான் படத்தினை வெளியிடுவார்கள்.  ரஜினி கமல் படம் எனில் ரெண்டு தியேட்டர்கள்.     ஊரில் அண்ணா ஒருவர் ஓரிரு குடும்பங்களை ஒன்று சேர்த்து கரகாட்டக்காரன் படத்திற்கு சுற்றுலா(?) கூட்டிச் சென்றார்.  ஸ்டார் தியேட்டரில் ஐம்பது, அறுபது நாட்களைக் கடந்து படம் ஓடிக்கொண்டு இருந்தது.   பேருந்து நிலையத்தில் இறங்கி, ஸ்டார் தியேட்டர் வரை நடந்தே கூட்டிச்சென்றார்.  ஒரு மணி நேரம் முன்பே சென்று டிக்கெட் கவுண்டரின் முன்பு காத்திருந்து உள்ளே சென்றோம்.  காத்திருந்த அந்த நேரத்தில், பல சுவாரசியமான சம்பவங்களை கூறிக்கொண்டே செல்வார். அவர், அதற்கு முன்  இரண்டு முறை பார்த்திருந்தார்.   "இந்தப் படத்துல கடசீல மாரியம்மா மாரியம்மா பாட்டு  வரும்.   கொட்டாய்ல  சாமி வந்தெல்லாம் ஆடுவாங்க" என்றார்.  கூறியது போலத்தான்  திரைக்கு முன்புறம் இருந்த பெண்கள், மாரியம்மா பாட்டின் போது  சாமி ஆடினார்கள்.    "அந்த தீ மிதிக்கிறதெல்லாம்  செட்டிங்ஸ்.  அடியில செவப்பு கலர் சீரியல் பல்பு போட்டு எடுத்துருக்காங்க" என்று வாரமலரில் படித்ததையும் கலந்து கூறுவார்.   இப்படித்தான் ஈரோட்டில் முதல் திரைப்படம் பார்த்தேன்.

ஈரோடு அபிராமியில் படம் பார்ப்பது என்பது பலரின் கனவு.   அப்பாவும், அவர் நண்பரும் ஈரோடு ஒரு  வேலையாக வந்தபோது கூட்டிக்கொண்டு சென்றார்கள்.  வந்த வேலை மாலைக்கு  தள்ளி சென்றதால் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது.  பக்கத்தில் தான் அபிராமி காம்ப்ளக்ஸ்.  A  என்று அபிராமியின் ஸ்டைலான லோகோ, அபிராமி எழுத்தின் பின் இருந்த A/C 70MM,  அதன் முன்புற படிக்கட்டு அமைப்பு, வாயிலின் முன்பு தோரணங்கள், பெரிய போஸ்டர், கட் அவுட் என  'பட்டிக்காட்டான் முட்டாய் கடை பார்த்த' மொமெண்ட்டை வரவழைக்கும்.   தேவி அபிராமியில்  சிங்காரவேலன் திரைப்படதிற்கு தான் டிக்கெட் கிடைத்தது.  மற்ற தியேட்டர்களின் டிக்கெட்டைவிட,  அபிராமியின் டிக்கெட் பேப்பர் தரமான காகிதத்தில் இருப்பது போல தோன்றும்.  இரண்டு மாடிகள் சாய்தள படிக்கட்டில் ஏறி, உள்ளே நுழைந்தபோது பொது 'சொன்னபடி கேளு' பாட்டு பாதி சென்றுவிட்டது வருத்தம் தான்.  

சின்ன தியேட்டர் என்றாலும் திரை சற்று பெரிதாக, சுவரில் இருந்து வெளியே வந்து சற்று வளைந்தது போல இருக்கும்.  தியேட்டருக்குள் இருக்கும் ஒருவித ஏசி வாசனை ரம்யமாக பார்க்க வைக்கும்.  குசன் சீட்கள் அப்பொழுது ஒரு மாறுபட்ட சினிமா பார்க்கும் அனுபவத்தை கொடுத்தது.   இன்னுமொரு குறிப்பிட வேண்டிய விஷயம்  இடைவேளையில் அங்கு கிடைக்கும் கட்லெட்.  'டொமோடோ  கேட்ச் அப்' போட்டு சிறு பீங்கான் தட்டில் வைத்து தருவார்கள்.  அந்த கட்லெட் சுவையை வேறு எங்கும் சுவைத்ததில்லை.  அபிராமிக்கு சென்றால் எப்போதும்  கட்லெட் மட்டுமே வாங்குவது உண்டு.  ஆனாலும் அப்போது அபிராமியில் படம்  பார்க்க முடியாத வருத்தம்.   

கரகாட்டக்காரன் கூட்டிச் சென்ற அண்ணா ஒரு தீவிர ரஜினி ரசிகர்.  அதே டீமை அதன் பிறகு சில வருடங்கள் கழித்து எஜமான் திரைப்படத்திற்கும் கூட்டிச்  சென்றார். இந்த முறை படம் அபிராமியில்.  இதற்கும் அதேபோல ஒரு மணிநேரம் முன்பாகவே வந்து, போஸ்டரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.   "ரஜினி இந்த படத்துல ஒரே ஒரு சீன்ல மட்டுந்தா  ஜிப்பாவுல வருவாரு,  மத்தபடி படம் முழுக்க வேட்டி சட்டைதான்" என்பார்.  அதேபோல ஒருநாளும் எனை  மறவாத பாட்டு வரும்போது "இதோ இந்த சீன் தான், பாரு பாரு" என்பார்.   இடைவேளையில் அங்குள்ள சீல்டுகளை பார்ப்பதும் ஒரு குதூகலம்.  இப்படியாக அபிராமியில்  திரைப்படம் பார்ப்பது நிறைவேறியது. 

ஈரோட்டில் திரைப்படம் பார்ப்பது ஒரு அனுபவம் எனில், வரும் வழியில் வேடிக்கை பார்ப்பது மற்றுமொரு ஆனந்தம்.  மாமாவின் ஊர் அரச்சலூர். பூந்துறை வழியாக குறுக்கே சென்றால், 30 நிமிடத்தில் வண்டியில் செல்லும் தூரம்.  வண்டி இல்லாத  காலங்களில்  பேருந்து மாற்றித் தான் செல்ல வேண்டும்.   ஒன்று விளக்கேத்தி வழி. இன்னொன்று  நாடர்மேடு பெட்ரோல் பங்க் வழி.   இரண்டாவதே எனக்கு பிடித்தமான வழி.  விளக்கேத்தி வழியில் வேடிக்கை பார்க்க எதுவும் இருக்காது.    நாடார்மேடு பெட்ரோல் பங்க் அப்பொழுது  ஈரோடு நகரின் ஒதுக்குப்புறம்.  பேருந்து நிலையம் கூட்டிச் செல்ல மாட்டர்கள்.   இருந்தாலும் சோலார், கார்மல் பள்ளி என ஏதோ ஒன்று  வேடிக்கை பார்க்க கிடைக்கும். சினிமா போஸ்டர்கள், ஊர் பெயர் பலகைகள் என எதையும் விட்டு விடாமல் வரிசையாக படிப்பதும் உண்டு.   'பஸ்டாண்டு போனா  உக்கார சீட் கிடைக்கும்' என்றாலும், 'அது அர மணி நேரம் சேத்தி ஆகும்' என மாட்டார்கள்.

அம்மாவாசைக்கு திருச்செங்கோடு மலைக்கு செல்வது வழக்கம்.  அதிகாலையில் வரும் முதல் பேருந்து VMS.  அதில் ஏறி ஈரோடு பேருந்து நிலையத்தில் இறங்கி, திருச்செங்கோடு பேருந்தில் மாறுவது தான் எனக்கு நினைவு தெரிந்து முதலில் ஈரோடு வந்த அனுபவமாக இருக்கும். அதிகாலையில் செல்கையில் தூங்கிவிடுவதால், திரும்பி வரும்போது தான்  வேடிக்கை பார்க்கும் படலம்.   எப்படியும்  ஜன்னலோர சீட்டு  கிடைத்துவிடும்.  

ஓரிருவருடன் காலியாக சிவகிரியில் இருந்து 42 டவுன்பஸ் ஏறினால், ஈரோடு பேருந்து நிலையம் அடைய  45 நிமிடம் ஆகும்.    ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் நின்று அனைவரையும் ஏற்றி  ஊர்ந்து நத்தை போல ஊர்ந்து செல்லும்.  ஆனால் ஈரோட்டுக்குள் நுழையும்முன் நிரம்பிவிடும்.   நகருக்குள் நுழைந்ததும் ரயில்வே காலனி பள்ளி தான்  வேடிக்கை பார்க்கும் முதல் இடம்.   தாண்டியதும் ரயில்வே நுழைபாலம்.    தற்போது மேலே செல்லும் உயரம் குறைவான பழைய பாலம் மட்டுமே இருக்கும்.  பல வருடங்களாக குழி வெட்டி உயரம் அதிகமான  நுழைபாலம் கட்டினார்கள்.   அதனை நெருங்கும்போது ஏதேனும் புகைவண்டி தெரியாதா? என தேடுவது இயல்பு.  எப்பொழுதேனும் அதிர்ஷ்டம் கூடும்.   அடுத்தாக  காளைமாடு சிலை.   திமிலேறிய  காங்கேயம் காளையை ஒரு வீரன் அடக்கும், அந்த சிலை ஈரோட்டின் ஒரு அடையாளம்.  சில வருடங்கள் வண்ண, வண்ண லைட்டுகளும், சுற்றிலும் பைப் வைத்து நீர் பீச்சி அடிப்பது அழகாக இருக்கும், குறிப்பாக இரவில்.  
நகர பேருந்து அதனை அரை வட்டமிட்டு நுழைந்தால் fire  சர்வீஸ்.   அதற்கு எதிர்புறம் கோஆப்டெக்ஸ்  கட்டிடம்.   அதனை ஒட்டிய சாலையில் சற்று உள்ளே சென்றால் ஆனூர் தியேட்டர்.   கோழிமொட்டு  தியேட்டர் என்பார்கள்.  அதன் வடிவம் முட்டைபோல இருந்ததால் .  பேருந்தில் இருந்தே தியேட்டர் தெரிகிறதா என பார்ப்போம்.  இந்தியன் திரைப்படம் வந்த பொழுது, கமல் ரசிகர் அங்கு கூட்டிச் சென்றார். 

தீ அணைப்பு நிலையம் தாண்டியதும் சற்று தொலைவு சென்றால் சந்திரன் ஸ்டுடியோ.  பெரும்பாலான வீடுகளில், ஒயரில் பின்னப்பட்ட கூடை நாற்காலியில், குழந்தைகளை உட்கார வைத்து எடுத்த போட்டோக்கள், இங்கு எடுக்கப் பட்டதாகத்தான் இருக்கும்.   அடுத்து ஓடை குறுக்கிடும்.   தாண்டினால் பெரியார் நகர் ஆர்ச்.  பெரியார் அங்கு தான் பிறந்தார் என பல நாள் நம்பிக்கொண்டு இருந்தேன்.  எதிரில் மாணிக்கம் தியேட்டர் மற்றும் நடராசா  தியேட்டர்.   போஸ்ட் ஆபீஸ், அரசு பெண்கள் பள்ளி தாண்டியதும் பன்னீர் செல்வம் பார்க் வந்துவிடும்.      

எங்கள் ஊர் பேருந்துகள் பன்னீர் செல்வம் பார்க்கில்,  இடது புறம் திரும்பிவிடும்.   மாரியம்மன் கோவிலின் அம்மன் பெருந்திலிருந்தே அழகாக தரிசனம் கொடுப்பார்.  வலது கை இயல்பாக கன்னம் நோக்கி ஸ்டைல் கும்பிடு போட செல்லும்.   சற்று தொலைவு சென்றால் அப்பொழுதுதான் வந்த ரேமாண்ட்ஸ், பக்கத்திலியே உயரமான டெலிபோன் பவன் என ப்ர∴ப் ரோடு ஆரம்பிக்கும்.  ப்ர∴ப் ரோடின் மறுமுனையில் சவீதா  மருத்துவமனையின் கட்டிடம் புதிதாக மிரட்டும்.  அதன் பின் சந்துகளில் புகுந்து பேருந்து நிலையத்தின் ஒரு முனையில் நுழையும்.    

ஆனால், தொலைதூர பேருந்துகள், ஊரிலிருந்து 30 நிமிடத்தில் விரைந்து பேருந்து நிலையம் அடையும்.   காளைமாடு சிலைக்குப்பின் ரயில் நிலையம், சூரம்பட்டி  நால்ரோடு,  GH  வழியாக பேருந்து நிலையம் வந்தடையும்.   அது எனக்கு ஒரு போரிங் ரூட்.  வேடிக்கை பார்க்க பெரிதாக ஒன்றும் இருக்காது.  ஆனால் இதில் செல்லும்போது, மூன்று முக்கிய  திரைஅரங்கத்தின் போஸ்டர்களை வேடிக்கை பார்க்கலாம்.   ரயில் நிலையத்தின் எதிரில் இருந்த முத்துக்குமார், பின்பு ஸ்ரீசண்டிகாவாக மாற்றப்பட்டது.   அபிராமி காம்ப்ளக்ஸ்ஸில் இருக்கும்  அபிராமி மற்றும் தேவி அபிராமி. பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்த ராயல் தியேட்டர்.  இந்த திரை அரங்குகளின் போஸ்டர், கட் அவுட் மற்றும் தோரணம் வேடிக்கை பார்ப்பது அலாதி.

அடுத்து இன்னுமொரு வழி, தொலை தூர பேருந்தில் வந்து காளை மாடு சிலை அருகே இறங்கி 1ம்  நம்பர் பிடித்தால் பன்னீர் செல்வம் பார்க் வழியாக மணிக்கூண்டில் இறங்கலாம்.  பன்னீர் செல்வம் பார்க்கில் எங்கே பார்க் என பலமுறை தேடியதுண்டு.   அதேபோலத்தான் மணிக்கூண்டில் எங்கே கடிகாரம் எனவும்.  அந்த சாலை தான் மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் ஈரோட்டின் ரங்கநாதன் தெரு.  குட்டிக்  குட்டி கடைகள். எண்ணற்ற மனிதர்களின் வாழ்வாதாரம்.  

பன்னீர் செல்வம் பார்க் அருகில் பாடல் பதிவு செய்து தரும் கடை இருந்தது.  விரும்பும் பாடல்களை தெளிவாக பதிவு செய்து தருவார். ரெகுலர் கஸ்டமர்.   இளையராஜாவின் பாடல்களை கொடுத்து 90M கேசட்டில் பதிவு செய்தது பலமுறை நடக்கும்.  கேசட் சிஸ்டதிற்குப் பிறகு, CD, பென்டிரைவ் தற்போது இன்டர்நெடில் பாட்டுக்கேட்கும் அளவிற்கு மாறிய தொழில்நுட்பத்தில் இன்று அவர் என்ன செய்து கொண்டு இருப்பார்?  அந்தக்கடை கரும்பு ஜூஸ் கடையாக மாறி இருந்தது.  பெரும்பாலும் பன்னீர் செல்வம் பார்க் டு கொங்காளம்மன் கோவில் வீதி பேருந்து நிறுத்தம் வரை ஷாப்பிங்கோடு நடைதான்.  அங்கு ஏறினால் பேருந்து நிலையத்தை சக்தி ரோடு வழியாக அடையலாம்.  சத்தி சாலை வேடிக்கை பார்க்க பெயிண்ட் கடைகள் மட்டுமே இருக்கும்.   ஒரு சதுரம் போல ஈரோடு என்பது இந்த மூன்று வழிகளிலும் முடிந்துவிடும்.  

அனைத்து  நகரங்களையும் போல, ஈரோடும் எத்தனையோ விதமான மண்ணின் மைந்தர்களின்  உணர்வுகளோடு கலந்து அவர்களையும் வளர்த்து,  தானும் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.   இன்று மொடக்குறிச்சியில்  இருந்து வரும்போது லக்காபுரம்  ரிங் ரோட்டிலிருந்தே  நகரம் ஆரம்பித்து விடுகின்றது.   அப்பொழுது  சென்று வந்த திரையரங்குகளும், கடைகளும், அன்று  வேடிக்கை பார்த்த  பல இடங்களும், காலமாற்றத்தில் இன்று கரைந்தும்,  புதிய பொலிவோடும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது.  ஆவலாக எதிர்கொள்வோம்.

எஸ் பி பாலசுப்ரமணியம்

நேற்றும் இன்றும் FMல்  கேட்டவரைக்கும் எஸ்பிபி பாடல்கள்.   அப்பொழுதெல்லாம் திருச்சி வானொலி நிலையத்தில் காலை 7.30 க்கு  அரை மணி நேரத்திற்கு பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  பள்ளிக்கு கிளம்பிக்கொண்டே பாடல்களைக்  கேட்பது தான் வழக்கம்.  தொகுப்பாளர்கள் ஒரு சில நேரங்களில், பாடலுக்கு முன்பே படத்தின் பெயரை கூறிவிடுவார்கள்.  பிறகு பாடகர்களின் பெயரைக் குறிப்பிடுவார்கள்.  சில நேரங்களில்  படத்தின்  பெயருக்கு முன்பே,  பாடகர்களின்  பெயரைக் குறிப்பிடுவார்கள்.    'நிகழ்ச்சியின் தொடக்கமாக படிக்காதவன் திரைப்படத்தில் இருந்து  எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா பாடிய பாடல்'.  'அடுத்ததாக காக்கி சட்டை திரைப் படத்திலிருந்து எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி பாடிய பாடல்'  என்பார்கள் .   எஸ்பி பாலசுப்ரமணியம் என்று ஆரம்பித்தால் புதிய பாடல் என்று ஒரு குட்டி குதூகலம் அந்த கணத்தில் தோன்றி மறையும்.   'டிஎம்  சௌந்தர்ராஜன் அல்லது பிபி ஸ்ரீனிவாஸ்' என்று தொகுப்பாளர் ஆரம்பித்தால், ஏதோ பழைய பாடல் போடப் போகிறார்கள் என்று சுவாரசியம் குறைந்து விடும்.  அதற்கடுத்து படத்தின் பெயரைக் குறிப்பிடும்போது இது கமல் படமா?  அல்லது ரஜினி படமா?  என்பதில் மனம் உற்சாகமடையும்.

எங்களைப்  பொறுத்தளவில், பாடலை யார் பாடி  இருந்தாலும்,  ரஜினி பாட்டா ?  கமல்  பாட்டா? என்பதுதான்.  பள்ளிக்கு பையைத்  தூக்கிக் கொண்டு செல்லும் பொழுது  'இன்னிக்கு ரெண்டு கமல் பாட்டு, ஒரு ரஜினி பாட்டு தான்டா'  என்று தான் சண்டைகள் நடக்கும்.  ஊர் முடிந்த பின் வரும் கிணற்றை ஒட்டிய வளைவு தாண்டி, விரியம்பழ மரத்தின் அடியில் நடந்துகொண்டே தான் இந்த உரையாடல் நடந்தது.  சிலவற்றை பற்றி யோசிக்கும் பொழுது, அந்த இடமும் சம்பவமும் மனதில் காட்சிபோல பளிச்சென்று விரிகிறது.    அப்பொழுதெல்லாம் எஸ்பி பாலசுப்ரமணியம், மனோ, மலேசியா வாசுதேவன், ஜானகி, சித்ராவை யார் என்றெல்லாம் தெரியாது.   கமலுக்கும், ரஜினிக்கும் மட்டும்  எஸ்பி பாலசுப்ரமணியம்  பாடுவார்கள்;  சிவாஜி, எம்ஜிஆர் என்றால் டிஎம்  சௌந்தர்ராஜன் என்று குத்துமதிப்பாக பேசிக்கொள்வோம்.   அதன் பிறகுதான் படிப்படியாக தெரிந்தது, பாடல்களைப் பின்னணியில் பாடியவர்கள்  வேறு, அதனை முன்னிருந்த நடிப்பவர்கள் வேறு என்பது. 

"மண்ணில் இந்த காதல் இன்றி"  பாட்டு ஹிட் ஆனபோது  பாட்டு புத்தகம் வாங்கி,  பாடலை அவரோடு சேர்ந்து மூச்சுவிடாமல் பாட  முயற்சி செய்தது பலர். அந்த கால கட்டத்தில்  தான் இவர் ஹீரோவாகவும் தடம் பதித்தார். 
 

தேர்வுகளுக்கு இரவில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, வீட்டின் அருகில் ரவி அண்ணன் அவர்களின் டெய்லரிங் கடை  இருக்கும்.  கமல் ரசிகர். அவர்தான் அப்பொழுது ஏரியாவின் பிரபலமான டெய்லர்.  பத்து, பதினோரு மணிக்கு மேல் இரவில் பல மென்மையான பாடல்கள் அங்கிருந்து மிதந்து வரும்.   பெரும்பாலும் கமலஹாசன் + இளையராஜா + எஸ்பி பாலசுப்ரமணியம் கூட்டணி பாடல்கள். பாடப் புத்தகம் சற்று நேரம் படித்தாலே தூக்கம்  வரும்.  கூடவே இவர்களின் கூட்டணி தாலாட்டும், . படிக்கணும் என்று இருக்கும் நேரத்தில்   தூங்க வைத்துவிடும்.  அடுத்தநாள்  'அண்ணா.. என்னண்ணா எப்ப பார்த்தாலும்  சோகப் பாட்டு போடறீங்க, ராத்திரில எல்லாம் நல்ல அடி பாட்டு போடுங்கண்ணா.. அப்ப தான தூக்கம்  வராது"  என்பேன்.  "குமாரு,  இந்த பாட்டெல்லாம்  அருமையா  இருக்கும், வேலை செய்யறதே  தெரியாம வேலை பார்க்கலாம்" என்பார்.   அவர் அன்று கூறியது,  எனக்குப் புரியவில்லை.  ஆனால் நண்பர்களோடு இரவுகளில் வேலை செய்யும் நேரங்களில்  இளையராஜா + எஸ்பிபி பாடல்களில் தான் வாழ்ந்தோம்.  இன்றும்  கூட இரவு நேர அலுவல் வேலைகளிலோ அல்லது மனது அழுத்தமாக இருக்கும்போதோ அவர்களே சரணம்.  கல்லூரி நண்பர் கூட அப்போது கூறுவார் "இன்னைக்கு ரெக்கார்ட் நோட்ட முடிக்கணும்னா,  விடிநைட் உட்காரணும்.  இளையராஜா பாட்டோட முடிச்சிடலாம்" என்பார்.  இங்கு இளையராஜா எனில், எஸ்பிபியும்  கூடவே வந்துவிடுவார். 

கல்லூரி ஹாஸ்டலில் நண்பன் ஒருவனின் டேப்ரிக்கார்டர் இருக்கும்.  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் கேசட் கடையில் பதிவுசெய்த 90M கேசட் கூடவே இருக்கும்.   கல்லூரி முடித்த மாலைகளில்  ஒரு மணிநேரம் அவரை ரசித்த பின்பு தான் அந்த நாள் முழுமையடையும்.    மௌன ராகம் திரைப்படத்தின் ' நிலாவே வா... செல்லாதே வா..'  பாடல் தான் அதில் முதல்.   'உனக்கு புடிச்ச பாட்டு என்ன?' என்று கேள்விக்கான பதில் எப்பொழுதும் இந்த பாடலே. சற்று சோகம் கலந்த மென்மையான பாடல்.  அதற்கு அடுத்ததாக இருந்த பாடல்   "மன்றம் வந்த தென்றலுக்கு.. மஞ்சம் வர நெஞ்சம்  இல்லையா ?".  இந்த பாடலில் அவரின் குரல் மெய் மறக்க வைக்கும்.   இந்த இரண்டு பாடல்களும் ரீவைண்ட் செய்து,  ரிப்பீட் மோடில் அதிகப்படியாக கேட்டவை.  "டேய், கெஸட்டுக்கு வாய் இருந்தா,  கதறிடும் டா" என்பார்கள்   அந்த பாடல்கள் தான் பெரும்பாலான நேரங்களில்  ஹம்மிங் ஆகும்.  அவரின் குரலில் அந்த  உணர்வுகளை நமக்கு கடத்தி விடுவார் இந்த காந்தக் குரலோன்.  

ரஜினி அவர்களுக்கு  அவரது பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடிய பாடலை பாடியவர் எஸ்பிபி.    அண்ணாமலையில்  "வந்தேண்டா பால்காரன்",  பாட்ஷாவில் "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்", அருணாச்சலத்தில்  "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா", முத்து படத்தின்   "ஒருவன் ஒருவன் முதலாளி" , படையப்பாவில் " என் பேரு படையப்பா படையப்பா இளவட்ட நடையப்பா" என வரிசையாக  ரஜினி அறிமுகம் ஆகும் பாடலை எஸ்பிபி மட்டுமே பாடுவார்.  இந்த பாடல்கலில் ரஜினிக்கு ஒரு மாஸ் ஹீரோ பிம்பத்தை ஏற்படுத்தியது, வைரமுத்துவின் வரிகளோடு இவரின் அதிரும் குரல் தான். பாபாவின் தோல்விக்கு சென்டிமென்டாக, எஸ்பிபி அறிமுகப் பாடலைப் பாடாதது  தான் காரணம் என்றும்  கூறுவார்கள். அதன்பிறகு சந்திரமுகியில் 'தேவுடா தேவுடா' பாடலை மீண்டும் அவர் பாடியதுதான், அந்த பட வெற்றிக்கு வெற்றிக்கு காரணம் என்றும் கூறுவார்கள்.   

நாயகனின் புகழ் பாடும் பாடல்கள் அந்த வரிசை என்றால்,  அதன் பிறகு ஒரே பாட்டில் பெரிய ஆளாக மாறும் பூஸ்டர் பாடல்கள் வேறு ரகம்.   அண்ணாமலை திரைப்படத்தில் "வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்" என்ற பாடல்.  அந்த பாடலில்  வரும் "அடே.. நண்பா உண்மை சொல்வேன்... சவால் வேண்டாம்... உன்னை வெல்வேன்" வரிகளுக்கு இவரின் ஹை பிட்ச் குரல், உற்சாக மூட்டும்.  நண்பர்களிடம் செல்ல சண்டைகளுக்கு ,  இந்த பாடல்களை விளையாட்டாக பாடியதும் உண்டு. மற்றுமோர் பூஸ்ட் பாடல் என்று கூறினால்  "வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு" தான்.  படையப்பா திரைப்படம் வந்த நேரம், கல்லூரியின் செமஸ்டர்  தேர்வு நேரம்.  ஒவ்வொரு தேர்வுக்கு செல்லும் முன்பும், சென்டிமெண்டாக இந்த பாடலை அலற விட்டு விட்டுத்தான் பரீட்சை எழுத செல்வோம்.  இன்றும் இந்த பாடல்களை கேட்கும்பொழுது உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.   ஆனால்  அந்த படங்களில்  "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" பாடலை மட்டும் மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடி இருப்பார்.  ரஜினி அவர்கள் இரங்கல் செய்தியில் கூறியது போல, அவரின் வாய்ஸ் ஆக இருந்தது எஸ்பிபி அவர்கள். 

அது ஏனோ துள்ளலான ஜோடியான பாடல் என்றால் எஸ்பிபி அல்லது மனோ தான் படுவார் எனவும், சோகமான பாடல் என்றால் யேசுதாசும், இளையராஜாவும் பாடுவார்கள் என மனதில் பதியப்பட்டு இருந்தது.  
இன்று எனது கணினியில் இருந்த எனக்குப் பிடித்த 80ஸ் பாடல்களை ஒரு பார்வையிட்டேன்.  அந்த 90M கேசட்டில் இருந்தவையும்  இந்த போல்டரில் இருக்கும்.  ரஜினி, கமல் பாடல்களை விட்டுவிட்டு பார்த்தால்  மோகன், ராமராஜன் பாடல்கள் என பலருக்கும் அவர்களின் குரலுக்கு தகுந்தவாறு பாடியவராக எஸ்பிபி தான்  இருந்தார்.  அவரின் வாய்ஸ்  மாடுலேஷன், அந்தந்த நடிகரோடு பொருந்திப் போகும்படி பாட்டு இருக்கும்.   தெலுங்கு தசாவதாரம் படத்தில், அனைத்து கமலுக்கும் வித்தியாசமாக குரல் கொடுத்த பல குரல் மன்னன்.    

இளையராஜாவை கொண்டாடும்  போது  கூட இவரும்  வந்து விடுகிறார்.   இருவரும் இணைந்த பாடல்கள் தான், மழையோடு வரும் வானவில் போல அழகானவை. இறுதிக்காலத்தில் நண்பர்களுக்குள் வரும் பிணக்கு  போல இருந்தாலும், இளையராஜா அவர்கள், எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த போது, 'பாலு எழுந்து வா, நாம் மீண்டும் ஒரே மேடையில் கச்சேரி செய்வோம்' என்று அழைத்தார்.  எஸ்பிபி அவர்களும்  எழுந்து வருவார்.  இந்த இசை நண்பர்களை ஒரே மேடையில் பார்க்கலாம் என ஆவலாகத்தான் இருந்தோம்.  ஆனால் காலம் பாடும் நிலாவிற்கு இசைஞானியை இரங்கற்பா பாட வைத்துவிட்டது.  சும்மா வேணும் இசையை  ரசிப்பதற்காகட்டும், சோகத்தில் இருந்து மீள்வதற்காகட்டும், அவரின் குரலோடு தான் பயணத்திலும் பயணிப்போம்.  நிறைவாழ்வு.  நனி நன்றி எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களே.

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...