Wednesday, January 16, 2019

அணில் துள்ளி ஓடும் முன்றிலில்!

அடடா... 
நேற்றே வந்திருப்பார்களே..
இன்றும் வரவில்லை....
மூச்சுக்காற்றை வெளியே அனுப்ப முடியாமல் கதவு பூட்டப்பட்டே கிடக்கின்றதே..
என்னைக்  குளிப்பாட்டி
துடைத்து
'பவுடர்' இட்டு 
வேப்பிலையும், பூலப்பூடும்,  ஆவாரம் தலையோடு  காப்பு கட்டி இருக்க வேண்டுமே... 

காகம் வந்தமர்ந்துவிட்டு கரையாமல் போகிறதே..
சின்னஞ்சிறு பாதங்கள் துள்ளி விளையாடுமே
என் மார்மீது..
கீச் மூச்சென சிரிப்பொலி என் தோல் மீது பட்டு எதிரொலிக்குமே..
"வாங்க வாங்க" எனும் சத்தம் சுற்றாருக்காக கேட்டுக் கொண்டே இருக்குமே.. 
ஏன் ஒருவரையும் காணோம்...

திரண்ட மஞ்சள் கொத்தோடு பொங்கல் பானையும்.. அது
பொங்கி வழிந்தோடிய தடமும்...
தோகையோடு செங்கரும்பும்...
வண்ணக் கோலத்தின் நடுவில்
வாழை இலையும்.. அதன் நடுவே
ஆவிபறக்கும் பொங்கலுக்காக
அருகம்புல் சூடிய புள்ளாரும்
காத்திருக்கையில்....
நீர் விலாவி, 
பூ தூவி
சாம்பிராணி காட்டி
கற்பூரம் ஏற்றி முடித்து,
தவளைக்கு ஒதுக்கி...
பொங்கலை கொஞ்சமாக  எடுத்து
என் மீதும் சிந்தியும்
வாயில் இடும் அந்த அறும்புகள் 
எங்கே இன்னும் வரவில்லை..

இருப்பினும் என்ன....  
நாமே கொண்டாடுவோம்...
எறும்புகளின் தாரைகளால் இட்ட கோலத்தோடும்..
காகம் கொண்டுவந்த பொங்கலோடும்...
அணில் துள்ளி ஓடும் முன்றிலில்!!!

"பொங்கலோ பொங்கல்"

இப்படிக்கு
என் இல்லம் 
மொடக்குறிச்சி.
16-1-2019

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...