Sunday, August 30, 2020

பெங்களூர்-ஈரோடு; கொரோனாவில்

ஊருக்கு வருவதென்பது எப்போதுமே ஒரு ஆவலான  விஷயம்.   ஆனால் ஆறு மாதங்கள்,  ஆகி இருந்தாலும், இம்முறை தயக்கம்.    ஈ-பாஸ் வழங்குவதில்  ஈரோடு மட்டுமே ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்.   மூன்று வாரங்களுக்கு முன் ஈரோட்டுக்கு போட்ட பாஸ் கிடைக்கவில்லை.  கோவை சுலபமாக கிடைக்கிறது என்றார்கள்.    சென்ற வாரம் போட்ட பாஸ் கிடைத்து விட்டது.  இருந்தும் கிளம்பும் நேரம் வரை நெருடல், தயக்கம், குழப்பம்.  விநாயகர் சதுர்த்தி அன்று  காலை கிளம்பி விட்டோம்.   ஆறு மாத காலமாக  வீட்டுக்கு அரை கிலோ மீட்டரில் இருக்கும் கடைவீதி தாண்டி எங்கும் சென்றதில்லை.   இரு முறை அருகில் உள்ள பள்ளிக்கு புத்தகம் வாங்க சென்றது மட்டுமே.  

காலை 7 மணியளவில் அந்த கடைவீதியை தாண்டியபொழுது விநாயகர் சதுர்த்திக்கான வாழைக் கன்றுகளும், பூக்களும் கடை வீதியில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.  ஒரு சில மக்கள் வாழைக்கன்றையும், இலைகளையும் அந்த காலை நேரத்திலும் வாங்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.   பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடலாமா வேண்டாமா? என்று யோசனை செய்து கொண்டே கடந்தேன்.  ஆறு மாதங்களுக்கு முன்பு கொரோனா லாக் டவுனுக்கு முன்பு,  போட்ட பெட்ரோல் அப்படியே இருந்தது தான் காரணம்.   இரு வாரங்களுக்கு ஒருமுறை மழை  வரும்போது கழுவதற்காகவும், பேட்டரி சார்ஜ் ஆகவும் வெளியில் நிறுத்தி கொஞ்ச நேரம் ஆன் செய்து வைத்தது மட்டுமே.        

ஹோப் பார்ம் சிக்னல்.  மெட்ரோவிற்கான வேலை அப்படியே தான் இருந்தது. பெரிய மாற்றம் தெரியவில்லை.  எனக்கு முன்பு  ஒரு நகரப்பேருந்து சிக்னலில் நின்று இருந்தது.  பெங்களூரில் பாதி எண்ணிக்கையில் நகரப் பேருந்துகள் இயங்கத் துவங்கி சில மாதங்கள் ஆகியிருக்கிறது.  'ஆமா, தினமும்  ட்ராபிக்கில் மாட்டிய போது போட்ட  பெங்களூர் டிராபிக் ஹெஸ் டேக் (#Bangaloretraffic) என்ன ஆனது?' என்று ஒரு யோசனை கூடவே ஓடியது.  கரோனா  பெங்களூர் ட்ராபிக் பிரச்சினையை சட்டென தீர்த்துள்ளது. 
காலை நேரத்திற்கே உரிய சில வாகனங்கள்.  வேடிக்கை பார்த்தவாறே அத்திப்பள்ளியை  அடைந்தேன்.   

அத்திப்பள்ளி டோல் கூட்டம் இல்லை.  சென்ற முறை வந்தபோது போட்டிருந்த பணம் டோல்கேட் அக்கவுண்டில் இருந்தது.  6 மாதம்  வராமல் எக்ஸ்பயரி ஆகிருக்குமோ என யோசிக்கையில் தானியங்கி குச்சி திறந்தது. 'அப்பாடா,  இங்க கண்ணாடியை இறக்கத் தேவைவில்லை'. 

டோல் தாண்டி  சற்று தூரத்திலேயே கர்நாடகா-தமிழ்நாடு பார்டரில்,  தமிழ்நாடு போலீஸ் நின்றுகொண்டிருந்தார்கள்.  நண்பர்களின் ஆலோசனையில் முன்புற கண்ணாடியில்  இ-பாஸ் ஒட்டியிருந்தேன். அவர்கள் ஒருவேளை இறங்கி நோட்டில் எழுதிவிட்டு போக சொல்வார்கள்  என கூறியிருந்தார்கள்.  ஆகவே,  இறங்கிச்சென்று எழுத மனதை தயாராக வைத்து இருந்தேன். கைக்கு கிளவுஸ், மாஸ்க் அணிய முற்பட்டபோது,   இ-பாஸை  பார்த்த காவல்துறை, போகுமாறு சைகையில் கூறி விட்டார்கள். 

ஒரு  நீண்ட பெருமூச்சு.  இங்கு மட்டும் தான் இறங்க வேண்டி இருக்கும் என நினைத்து இருந்ததால்.  வண்டி அதி விரைவுச் சாலையில்  வழுக்க ஆரம்பித்தது.  கூடவே வழக்கமான கார்களும், வாரயிறுதி கார்களும் லாரிகளும் இருந்தன.  

அதிகாலை எழுந்ததால் பசி எடுக்க ஆரம்பித்தது.  ஓசூருக்கும்-கிருஷ்ணகிரிக்கும்  இடையில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம்.  கொண்டு சென்ற தக்காளி சாப்பாடு எடுத்து பிரிக்க ஆரம்பித்தோம்.    ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியில் அமர்ந்து சாப்பிடும் முதல் உணவு.   அந்த இடம் அவ்வளவு ரம்மியமாக இருந்தது.  வனத்துறைக்குச் சொந்தமான ஒரு காபி குடியிலும் இருந்தது.   சுற்றிலும் மரங்கள்,  செம்பருத்தி செடிகள் அதில் பெஞ்ச் என ஒரு பூங்காவை போல் அமைத்து வைத்திருந்தார்கள்.  காலை உணவை முடித்து விட்டு,  செம்பருத்தி செடியில் இரண்டு பூவைப் பறித்து உள்ளே வைத்துவிட்டு வண்டியை மீண்டும் கிளப்பினோம்.  
இந்த கொரோனா நாட்களில் எனக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வந்திருந்தது. காலையில் செடியில் இருக்கும் பூவை பறித்து, ஒரு பாட்டிலில் நீரை ஊற்றி,  அதில் பூவை வைத்தும்  எனது அறையில் வைத்துவிட்டு காலை வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்.  அதன் நீட்சியாகத்தான் இந்த பூவை பறித்திருக்க வேண்டும்.  

 ஓசூர்-கிருஷ்ணகிரியின் சாலை ஒரு இறக்கமான சாலை. ஆக்சிலரேட்டரில் மிதிக்காமலே வழுக்கிக்கொண்டு  செல்லும்.  ஓசூர் கிருஷ்ணகிரி சாலையும், அந்த காலை நேரமும் எனக்கு அலாதியான ஒன்று.  இறங்கும் வேளையில் தொலை தூரத்தில் இருக்கும் மலை முகடுகள் அந்தக் காலை நேர இளம் சூரியனில் பட்டு அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.   

அதி வேகமாக வந்த  பட்டாம்பூச்சி ஒன்று காரை முன் கண்ணாடியைக்  கிழித்து கண்ணில் அடித்து விடுவது போல் வந்தது.  டூ  வீலரில் செல்வது போல தலையை சற்று விலக்கினேன்.  பாட்டம் பூச்சி  சற்று லாவகமாக தப்பித்து செல்கின்றது.    

தேன் உண்ட போதையோடு 
பறந்து திரிகின்றன 
அதி விரைவுச் சாலையில் 
பட்டாம்பூச்சிகள்... 

அவைகளுக்கான 
டாஸ்மாக்கை  திறந்து வைத்துள்ளது 
நட்ட நடு அரளிப் பூச் செடிகள்.. 

அதி வேகமாக வரும் வாகனத்திலிருந்து 
மிக லாவகமாக தப்பி விடுகிறது..
ஒரு சில தவிர... 

ஓட்டும்போது கவிதை போல ஏதோ  தோன்றியது.  
 
இந்த காரின் வேகத்தை எவ்வாறு அது உணர்ந்து சைட் வாங்குகின்றது? என்று யோசித்துக் கொண்டே வண்டியை விரட்டினேன்.   காலை வேளை என்பதாலோ  என்னவோ பட்டாம்பூச்சிகள் ஏகப்பட்டவை இருந்தன.  
அதேபோல இதுவரையில் வாகனங்கள் அதிகமாக செல்லாததாலோ என்னவோ சாலை நடுவில் உள்ள பூக்கள் அழகாக பூத்து குலுங்கி இருந்தன.  

கிருஷ்ணகிரியை 9 மணி அளவில் அடைந்து இருந்தோம்.  வண்டி ஆளில்லாத ஒரு சுங்கச்சாவடியின் குச்சியை ஆட்டோமேட்டிக்காக திறந்தது.   'சுங்கச் சாவடியை பணப்  பரிமாற்றம் இல்லாமல் தானியங்கி முறைக்கு சமீபத்தில் மாற்றியது,  இப்பொழுது ஒரு இந்த கொரோனா சூழ்நிலையில் எப்படி உதவி கொண்டிருக்கின்றது என பேசிக்கொண்டோம.  வெண்புரவி கிருஷ்ணகிரியை தாண்டி சென்று கொண்டிருந்தது 

தர்மபுரி மாவட்டம் நுழையும் முன் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக நகரத் தொடங்கியது.  சற்று தொலைவில் போலீஸ் சோதனைச் சாவடி.  லாரி மற்றும் டு வீலர் போக்குவரத்து ஒரு பக்கம் போய்க் கொண்டுதான் இருந்தது.  கார் போக்குவரத்துகளை  தனி சாலையில் விட்டு சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.   இங்கும்  கண்ணாடியில் இருந்த  இ-பாஸ் பார்த்தவுடன், தூரத்திலேயே போகச் செல்லுமாறு சாடை காட்டிவிட்டார்கள்.   வண்டியை மீண்டும் அழுத்தினேன்.  தர்மபுரிக்கும் சேலத்துக்குமான சாலை நான்குவழிச்சாலை மட்டுமே என்பதால் வாகனங்கள் சற்று நெருக்கமாகத்தான் சென்றது.  

 தொப்பூர் வரும் பொழுது மலை முகடுகள் கடந்த மாதங்களில் பெய்த மழையினால், பச்சை பசேலென வரவேற்றது.  எப்பொழுதும் ஏதேனும் ஒரு விபத்து நடக்கும் பகுதி.  சென்றமுறை வந்தபொழுது தொப்பூர் மலைப்பகுதி சாலையை  விரிவுபடுத்தும் வேலை நடந்துகொண்டு இருந்தது.   இந்த முறை அந்த வேலை நிறைவு பெற்றிருந்தது.   

ஓமலூர் சுங்கச்சாவடியிலும்  ஆளில்லாமல் அழகாக கடந்து சென்று கொண்டிருந்தோம்.   ஆனால் வரும் வழி எங்கும், நான்கு  அல்லது ஆறுவழிப்பாதையின்  முதல் வழி முழுக்க இருசக்கர வாகனங்களில் 3 பேர் சாதாரணமாக வந்து கொண்டேதான் இருந்தார்கள்.   அவர்கள் சில நேரங்களில் அடுத்த லானுக்கும் வந்தது, கேதக்  என இருந்தது.  பேருந்து போக்குவரத்து வழிநெடுகிலும் இல்லவே இல்லை.   ஆனால் எதிரில் மட்டும் ஒரே ஒரு பேருந்து ஓசூரை நோக்கி சென்றது.   சங்ககிரி டோல்கேட்,  லட்சுமி நகர் என பெரிதாக எந்த கெடுபிடியும் இல்லை. ஈரோடு நகர் வராமலே ஊருக்கு  சுற்றி வந்து சேர்ந்தோம்.  

 இப்படியாக இந்த கொரோனா  காலத்தில் ஈரோட்டை ஆறு மாதங்களுக்குப் பிறகு வந்தடைந்தேன்.   இதுதான் இந்தியாவில் இருக்கும் பொழுது நான் அதிக காலம் ஊருக்கு  வராமல் இருந்த  காலகட்டம்.

இந்த வீடுகளுக்குள் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் ரொம்பவும் பயந்து போய் இருக்கின்றோம்.   வெளியே சுற்றிக்கொண்டு காவல்துறை மாதிரி,  மருத்துவர்களும் எவ்வளவு பேர் பம்பரமாக இதே உலகத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல தொழில் முனைவோர்களும், அரசு அலுவலகங்களும் எப்பவும் போல இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.   வரும் வழியில் பழங்கள் அங்கங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள்.  அதுபோலவே எந்த உணவகம் திறக்கவில்லை.   ஆனால் அங்கங்கு டீக்கடைகளில் கூட்டம் இருந்து கொண்டுதான்  இருந்தது.  ஒரு சில உணவுகள் திறந்திருந்தன.   வழக்கமாக ஒரு காபி டீ  குடிக்கவாவது நிறுத்தும் நாங்கள், எங்கும் நிறுத்தவில்லை.   எனக்குத்தெரிந்து கரோனாவிற்குப்பின்  ஓசூர்-சேலம் நெடுஞ்சாலைகளில் பல உணவகங்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றது. 

 சிலவற்றை யோசிக்கும்பொழுது இந்த உலகம் மிக இயல்பாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.   அது எளியவர்களுக்கு ஆனதாக  இருக்கின்றதா?  இல்லையா? என்பது ஆகச்சிறந்த கேள்வி.   அங்கு சோதனைச் சாவடிகளில் நின்றுகொண்டிருந்த காவல்துறையை பார்க்கும்பொழுது மரியாதையும் வணக்கங்களும் தான் தோன்றுகிறது.

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...