Saturday, September 26, 2020

எஸ் பி பாலசுப்ரமணியம்

நேற்றும் இன்றும் FMல்  கேட்டவரைக்கும் எஸ்பிபி பாடல்கள்.   அப்பொழுதெல்லாம் திருச்சி வானொலி நிலையத்தில் காலை 7.30 க்கு  அரை மணி நேரத்திற்கு பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  பள்ளிக்கு கிளம்பிக்கொண்டே பாடல்களைக்  கேட்பது தான் வழக்கம்.  தொகுப்பாளர்கள் ஒரு சில நேரங்களில், பாடலுக்கு முன்பே படத்தின் பெயரை கூறிவிடுவார்கள்.  பிறகு பாடகர்களின் பெயரைக் குறிப்பிடுவார்கள்.  சில நேரங்களில்  படத்தின்  பெயருக்கு முன்பே,  பாடகர்களின்  பெயரைக் குறிப்பிடுவார்கள்.    'நிகழ்ச்சியின் தொடக்கமாக படிக்காதவன் திரைப்படத்தில் இருந்து  எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா பாடிய பாடல்'.  'அடுத்ததாக காக்கி சட்டை திரைப் படத்திலிருந்து எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி பாடிய பாடல்'  என்பார்கள் .   எஸ்பி பாலசுப்ரமணியம் என்று ஆரம்பித்தால் புதிய பாடல் என்று ஒரு குட்டி குதூகலம் அந்த கணத்தில் தோன்றி மறையும்.   'டிஎம்  சௌந்தர்ராஜன் அல்லது பிபி ஸ்ரீனிவாஸ்' என்று தொகுப்பாளர் ஆரம்பித்தால், ஏதோ பழைய பாடல் போடப் போகிறார்கள் என்று சுவாரசியம் குறைந்து விடும்.  அதற்கடுத்து படத்தின் பெயரைக் குறிப்பிடும்போது இது கமல் படமா?  அல்லது ரஜினி படமா?  என்பதில் மனம் உற்சாகமடையும்.

எங்களைப்  பொறுத்தளவில், பாடலை யார் பாடி  இருந்தாலும்,  ரஜினி பாட்டா ?  கமல்  பாட்டா? என்பதுதான்.  பள்ளிக்கு பையைத்  தூக்கிக் கொண்டு செல்லும் பொழுது  'இன்னிக்கு ரெண்டு கமல் பாட்டு, ஒரு ரஜினி பாட்டு தான்டா'  என்று தான் சண்டைகள் நடக்கும்.  ஊர் முடிந்த பின் வரும் கிணற்றை ஒட்டிய வளைவு தாண்டி, விரியம்பழ மரத்தின் அடியில் நடந்துகொண்டே தான் இந்த உரையாடல் நடந்தது.  சிலவற்றை பற்றி யோசிக்கும் பொழுது, அந்த இடமும் சம்பவமும் மனதில் காட்சிபோல பளிச்சென்று விரிகிறது.    அப்பொழுதெல்லாம் எஸ்பி பாலசுப்ரமணியம், மனோ, மலேசியா வாசுதேவன், ஜானகி, சித்ராவை யார் என்றெல்லாம் தெரியாது.   கமலுக்கும், ரஜினிக்கும் மட்டும்  எஸ்பி பாலசுப்ரமணியம்  பாடுவார்கள்;  சிவாஜி, எம்ஜிஆர் என்றால் டிஎம்  சௌந்தர்ராஜன் என்று குத்துமதிப்பாக பேசிக்கொள்வோம்.   அதன் பிறகுதான் படிப்படியாக தெரிந்தது, பாடல்களைப் பின்னணியில் பாடியவர்கள்  வேறு, அதனை முன்னிருந்த நடிப்பவர்கள் வேறு என்பது. 

"மண்ணில் இந்த காதல் இன்றி"  பாட்டு ஹிட் ஆனபோது  பாட்டு புத்தகம் வாங்கி,  பாடலை அவரோடு சேர்ந்து மூச்சுவிடாமல் பாட  முயற்சி செய்தது பலர். அந்த கால கட்டத்தில்  தான் இவர் ஹீரோவாகவும் தடம் பதித்தார். 
 

தேர்வுகளுக்கு இரவில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, வீட்டின் அருகில் ரவி அண்ணன் அவர்களின் டெய்லரிங் கடை  இருக்கும்.  கமல் ரசிகர். அவர்தான் அப்பொழுது ஏரியாவின் பிரபலமான டெய்லர்.  பத்து, பதினோரு மணிக்கு மேல் இரவில் பல மென்மையான பாடல்கள் அங்கிருந்து மிதந்து வரும்.   பெரும்பாலும் கமலஹாசன் + இளையராஜா + எஸ்பி பாலசுப்ரமணியம் கூட்டணி பாடல்கள். பாடப் புத்தகம் சற்று நேரம் படித்தாலே தூக்கம்  வரும்.  கூடவே இவர்களின் கூட்டணி தாலாட்டும், . படிக்கணும் என்று இருக்கும் நேரத்தில்   தூங்க வைத்துவிடும்.  அடுத்தநாள்  'அண்ணா.. என்னண்ணா எப்ப பார்த்தாலும்  சோகப் பாட்டு போடறீங்க, ராத்திரில எல்லாம் நல்ல அடி பாட்டு போடுங்கண்ணா.. அப்ப தான தூக்கம்  வராது"  என்பேன்.  "குமாரு,  இந்த பாட்டெல்லாம்  அருமையா  இருக்கும், வேலை செய்யறதே  தெரியாம வேலை பார்க்கலாம்" என்பார்.   அவர் அன்று கூறியது,  எனக்குப் புரியவில்லை.  ஆனால் நண்பர்களோடு இரவுகளில் வேலை செய்யும் நேரங்களில்  இளையராஜா + எஸ்பிபி பாடல்களில் தான் வாழ்ந்தோம்.  இன்றும்  கூட இரவு நேர அலுவல் வேலைகளிலோ அல்லது மனது அழுத்தமாக இருக்கும்போதோ அவர்களே சரணம்.  கல்லூரி நண்பர் கூட அப்போது கூறுவார் "இன்னைக்கு ரெக்கார்ட் நோட்ட முடிக்கணும்னா,  விடிநைட் உட்காரணும்.  இளையராஜா பாட்டோட முடிச்சிடலாம்" என்பார்.  இங்கு இளையராஜா எனில், எஸ்பிபியும்  கூடவே வந்துவிடுவார். 

கல்லூரி ஹாஸ்டலில் நண்பன் ஒருவனின் டேப்ரிக்கார்டர் இருக்கும்.  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் கேசட் கடையில் பதிவுசெய்த 90M கேசட் கூடவே இருக்கும்.   கல்லூரி முடித்த மாலைகளில்  ஒரு மணிநேரம் அவரை ரசித்த பின்பு தான் அந்த நாள் முழுமையடையும்.    மௌன ராகம் திரைப்படத்தின் ' நிலாவே வா... செல்லாதே வா..'  பாடல் தான் அதில் முதல்.   'உனக்கு புடிச்ச பாட்டு என்ன?' என்று கேள்விக்கான பதில் எப்பொழுதும் இந்த பாடலே. சற்று சோகம் கலந்த மென்மையான பாடல்.  அதற்கு அடுத்ததாக இருந்த பாடல்   "மன்றம் வந்த தென்றலுக்கு.. மஞ்சம் வர நெஞ்சம்  இல்லையா ?".  இந்த பாடலில் அவரின் குரல் மெய் மறக்க வைக்கும்.   இந்த இரண்டு பாடல்களும் ரீவைண்ட் செய்து,  ரிப்பீட் மோடில் அதிகப்படியாக கேட்டவை.  "டேய், கெஸட்டுக்கு வாய் இருந்தா,  கதறிடும் டா" என்பார்கள்   அந்த பாடல்கள் தான் பெரும்பாலான நேரங்களில்  ஹம்மிங் ஆகும்.  அவரின் குரலில் அந்த  உணர்வுகளை நமக்கு கடத்தி விடுவார் இந்த காந்தக் குரலோன்.  

ரஜினி அவர்களுக்கு  அவரது பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடிய பாடலை பாடியவர் எஸ்பிபி.    அண்ணாமலையில்  "வந்தேண்டா பால்காரன்",  பாட்ஷாவில் "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்", அருணாச்சலத்தில்  "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா", முத்து படத்தின்   "ஒருவன் ஒருவன் முதலாளி" , படையப்பாவில் " என் பேரு படையப்பா படையப்பா இளவட்ட நடையப்பா" என வரிசையாக  ரஜினி அறிமுகம் ஆகும் பாடலை எஸ்பிபி மட்டுமே பாடுவார்.  இந்த பாடல்கலில் ரஜினிக்கு ஒரு மாஸ் ஹீரோ பிம்பத்தை ஏற்படுத்தியது, வைரமுத்துவின் வரிகளோடு இவரின் அதிரும் குரல் தான். பாபாவின் தோல்விக்கு சென்டிமென்டாக, எஸ்பிபி அறிமுகப் பாடலைப் பாடாதது  தான் காரணம் என்றும்  கூறுவார்கள். அதன்பிறகு சந்திரமுகியில் 'தேவுடா தேவுடா' பாடலை மீண்டும் அவர் பாடியதுதான், அந்த பட வெற்றிக்கு வெற்றிக்கு காரணம் என்றும் கூறுவார்கள்.   

நாயகனின் புகழ் பாடும் பாடல்கள் அந்த வரிசை என்றால்,  அதன் பிறகு ஒரே பாட்டில் பெரிய ஆளாக மாறும் பூஸ்டர் பாடல்கள் வேறு ரகம்.   அண்ணாமலை திரைப்படத்தில் "வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்" என்ற பாடல்.  அந்த பாடலில்  வரும் "அடே.. நண்பா உண்மை சொல்வேன்... சவால் வேண்டாம்... உன்னை வெல்வேன்" வரிகளுக்கு இவரின் ஹை பிட்ச் குரல், உற்சாக மூட்டும்.  நண்பர்களிடம் செல்ல சண்டைகளுக்கு ,  இந்த பாடல்களை விளையாட்டாக பாடியதும் உண்டு. மற்றுமோர் பூஸ்ட் பாடல் என்று கூறினால்  "வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு" தான்.  படையப்பா திரைப்படம் வந்த நேரம், கல்லூரியின் செமஸ்டர்  தேர்வு நேரம்.  ஒவ்வொரு தேர்வுக்கு செல்லும் முன்பும், சென்டிமெண்டாக இந்த பாடலை அலற விட்டு விட்டுத்தான் பரீட்சை எழுத செல்வோம்.  இன்றும் இந்த பாடல்களை கேட்கும்பொழுது உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.   ஆனால்  அந்த படங்களில்  "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" பாடலை மட்டும் மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடி இருப்பார்.  ரஜினி அவர்கள் இரங்கல் செய்தியில் கூறியது போல, அவரின் வாய்ஸ் ஆக இருந்தது எஸ்பிபி அவர்கள். 

அது ஏனோ துள்ளலான ஜோடியான பாடல் என்றால் எஸ்பிபி அல்லது மனோ தான் படுவார் எனவும், சோகமான பாடல் என்றால் யேசுதாசும், இளையராஜாவும் பாடுவார்கள் என மனதில் பதியப்பட்டு இருந்தது.  
இன்று எனது கணினியில் இருந்த எனக்குப் பிடித்த 80ஸ் பாடல்களை ஒரு பார்வையிட்டேன்.  அந்த 90M கேசட்டில் இருந்தவையும்  இந்த போல்டரில் இருக்கும்.  ரஜினி, கமல் பாடல்களை விட்டுவிட்டு பார்த்தால்  மோகன், ராமராஜன் பாடல்கள் என பலருக்கும் அவர்களின் குரலுக்கு தகுந்தவாறு பாடியவராக எஸ்பிபி தான்  இருந்தார்.  அவரின் வாய்ஸ்  மாடுலேஷன், அந்தந்த நடிகரோடு பொருந்திப் போகும்படி பாட்டு இருக்கும்.   தெலுங்கு தசாவதாரம் படத்தில், அனைத்து கமலுக்கும் வித்தியாசமாக குரல் கொடுத்த பல குரல் மன்னன்.    

இளையராஜாவை கொண்டாடும்  போது  கூட இவரும்  வந்து விடுகிறார்.   இருவரும் இணைந்த பாடல்கள் தான், மழையோடு வரும் வானவில் போல அழகானவை. இறுதிக்காலத்தில் நண்பர்களுக்குள் வரும் பிணக்கு  போல இருந்தாலும், இளையராஜா அவர்கள், எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த போது, 'பாலு எழுந்து வா, நாம் மீண்டும் ஒரே மேடையில் கச்சேரி செய்வோம்' என்று அழைத்தார்.  எஸ்பிபி அவர்களும்  எழுந்து வருவார்.  இந்த இசை நண்பர்களை ஒரே மேடையில் பார்க்கலாம் என ஆவலாகத்தான் இருந்தோம்.  ஆனால் காலம் பாடும் நிலாவிற்கு இசைஞானியை இரங்கற்பா பாட வைத்துவிட்டது.  சும்மா வேணும் இசையை  ரசிப்பதற்காகட்டும், சோகத்தில் இருந்து மீள்வதற்காகட்டும், அவரின் குரலோடு தான் பயணத்திலும் பயணிப்போம்.  நிறைவாழ்வு.  நனி நன்றி எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களே.

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...