Tuesday, August 07, 2018

"ஈரோடு எனது குருகுலம்" கலைஞர்

"ஈரோடு எனது குருகுலம்" கரகரத்த குரலில்  கலைஞர் பேச்சை ஆரம்பித்தவுடன் அங்கங்கு சரக்கடித்துக்கொண்டும், சரக்கடித்து முடித்து தம்மடித்துக்கொண்டு இருக்கும் தொண்டர்கள் பரபரப்புடன் தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டு  இவரின் பேச்சை அமைதியாக கேட்க இவர் பக்கம் திரும்புவார்கள்.   தக  தக என வண்ண சிறு மின் விளக்குகள் உதய சூரியனாகவும், கலைஞராகவும், கருப்பு சிவப்பில்  மின்னிக்கொண்டு இருக்கும்.  இப்படி  கலைஞரை முதன்முதலிலில் பார்த்த இடம்  ஈரோடு வ. ஊ. சி. திடலில் தான். பெரும்பாலான அரசியல் கூட்டம் அங்குதான் நடைபெறும்.   சுமார் ஒரு நாற்பது, ஐம்பது நிமிடங்கள் குறிப்புகளை வைத்துக்கொண்டு, புள்ளி விவரங்களுடன் இடைவிடாமல் அடுக்குமொழியில் பேசிக்கொண்டே செல்வார்.   

தேர்தல் பிரசாரத்திற்கு ஈரோடு வருகிறார் என்றால் எங்கள் ஊரின் உடன்பிறப்புகள் பரபரப்பாவர்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக அண்ணணின் கடையில் கலைஞரின் கூட்டம் பற்றிய பேச்சாகவே இருக்கும்.  'நாங்கல்லாம்'  என ஆரம்பித்து வெறும் "டீ" குடித்துவிட்டு கட்சிக்கு கொடி நட்ட வரலாரை, அதற்கும் முந்தைய தலைமுறையினர் கூறிவிட்டு இவர்களை உசுப்பேத்திவிட்டு செல்வர்.  'அம்மா கட்சிலயாவது ஏதாவது குடுப்பாங்க, நம்ம கூட்டத்துக்குப்போனா நம்ம கட்சில  என்ன தராங்க' என்று சொல்லிக்கொண்டே கூட்டத்துக்கு செல்வார்கள் கழக உடன்பிறப்புகள்.  

அப்பா ஒரு தீவிரமான கலைஞரின் விசிறி.   2011 க்கான தேர்தலில் "அத்தனை ஊழல் பண்ணிருக்காங்க அவங்களுக்கு போடாதிங்க" என்று காலில் விழாத குறையாக  கெஞ்சியும்,  "கலைஞர தவிர வேற யாருக்கும் போட மனசு வரலை" என மீண்டும் அவருக்கே வாக்களித்துவிட்டு  வந்து கூறியவர்.   அவரைப்போலத்தான் ஊர் பக்கம் பலரும், அதுதான் கலைஞரின் சொத்து, திமுகவின் வாக்கு வங்கி.   மதிமுக துவங்கிய புதிதிலும் இது போன்ற பேச்சுக்களை கேட்டுள்ளேன். மதிமுகவில் இருப்பவர்களே கலைஞருக்கு வாக்களித்ததை இப்படி கூறுவார்கள்.   "சூரியனப் பார்த்தா, கை  அங்க தானா போகுதப்பா" . 

ஆறாம் வகுப்பில் பிடித்தமான ஒரு பிரிவேளை ஓவியம்.  ஓவியம் கிறுக்கி, பழகிக்கொண்டு இருந்த காலங்களில், ஒருநாள் ஏனோ உதயசூரியனைப்போட்டு அப்பாவிடம் காட்டி நற்பெயர் எடுக்க முற்பட்டேன்.     என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கலைஞரைக் கொண்டாடியபோது நானும்தெரிந்தும் தெரியாமல்  அவரையே ஆதரிக்க ஆரம்பித்திருந்தேன்.  

1996ல் தான் முதல் முறையாக ஓட்டுரிமை.   அந்த சமயம் தான் பாட்ஷா விழாவில் ஜெ வை எதிர்த்து தலைவர் ரஜினியின் வாய்ஸ்.   பரபரப்பானது தேர்தல்.  அந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிபார்க்கும் வரலாற்று நிகழ்வாக எங்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1033 வேட்பாளர்கள் விவசாய சங்கம் சார்பில் நிறுத்தப்பட்டார்கள்.   அப்போது  +2 தேர்வு சமயம்,  ஆயினும் "ரஜினி-கலைஞர்-மூப்பனார்" என  இவர்களைப்பற்றித்தான் எங்களின் நட்புவட்டம் சிலாகித்துப் பேசிக்கொண்டு இருக்கும். 
எங்கள் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒரு மாதம்  தள்ளிவைக்கப்பட்டு,  புத்தகம் போடுமளவு சென்றது.  அந்த வருடம் பெருவாரியாக திமுக-தமாக வெற்றி பெற்றிருந்தது. 

2006-2011 காலத்தில் சிறு குறுநில மன்னர்கள் துணையுடன்,  குடும்ப ஆதிக்கத்தினால் ஊழல்,  இலங்கை படுகொலைகளில் இவரின் செயல்பாடு,  கட்சிக்காரர்களின் கல்லூரிகள், கொள்கையிலிருந்து வழுவல்  என்று   இவரின்  வரலாற்றில் பெரும் கறை.  அந்த ஐந்து வருடம்  தடம்புரண்டு  போகாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேறுவிதமாக, மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கும். 

இன்று, நின்று நிதானமாக  அவர் செய்த ஊழலைத்தாண்டி யோசித்துப் பார்த்தால், என் ஊரிலிருந்தும்,  நண்பர்கள் வட்டங்களில் இருந்தும்,  சொந்தங்களில் இருந்தும், அன்று திமுக கொடியை நட்டு கதை பேசிக்கொண்டிருந்தோரின் பிள்ளைகள், பேரன்கள் என பலர் அடைந்திருக்கும் பொருளாதார இடம் என்பது  அவரவர்களுக்கே தெரியாமல் கலைஞரின் சமூக நீதியால் கல்லூரிகளில்  இட  ஒதுக்கீட்டின் மூலம்  கிடைத்த இடங்கள் ஒரு மிக முக்கிய காரணம்.   கிராமங்களில் இருந்தவர்களை மேற்படிப்பு படிக்கவிட்டு  விடுதலையாக்கியதில் பெரும்பங்கு அவரையே சாரும்.     கிராமங்களில்  கல்விக்கூடங்களை மீண்டும் திறந்து கல்வியின் விதைகளை ஊன்றியவர் காமராசர் எனில்,  பள்ளியிலிருந்து   அனைத்து விதமான  கல்லூரிகளுக்கும் சென்று படிக்கும் ஆகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதில்  இவர் ஒரு சரித்திர நாயகன்.   இன்றும் தமிழகத்தின்  மிக முக்கியமான கல்லூரிகளில் அனைத்து மக்களும் சேரமுடிகிறதென்றால் அது அவரின் சாதனை.  இந்த பின்புலத்திலிருந்து வந்தவர்கள் எவ்வளவு கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்பதை சொல்ல தேவையில்லை, ஏனெனில் அது அவர்களின்  ஒட்டு மொத்த  தலைமுறையின் கனவு.  இப்பொழுது நீட் எங்களுக்கு வேண்டாம் என போராடுவதன் நீட்சியும் இதுதான். 

படித்துவிட்டு, வேலையின் பொருட்டு சொந்த ஊரை, சொந்த மக்களை விட்டு வெகுதூரம் விட்டு விலகி இருந்தாலும், இந்த வளர்ச்சி எனும் வீக்கம் தேவையா  என்று ஒருபுறம் நினைத்தாலும், கள யதார்த்தம் வேறு.  

இன்றைய நிலையில் தொடர்ந்து  தொலைநோக்குடன் வழி நடத்தும் தலைவர்கள் இல்லை என்பது தான் வேதனை.    நீங்கள் போட்டுக்கொடுத்த வழியில் நடக்க உடன்பிறப்புகள் மட்டுமல்ல உங்களால் பயனடைந்த ஒரு கூட்டம் உலகமெங்கும் விரவிக் கடக்கிறது. 

#சென்றுவாதலைவா

#கலைஞர்

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...