Monday, November 16, 2020

சூரரைப் போற்று" - an EI View

"சூரரைப் போற்று" அக்குவேரு ஆணி வேராக பலரும் பிரித்து மேய்ந்து விட்டார்கள்.  அதிலும் வழக்கம்போல முரண்பட்ட கருத்துகளும் வந்து போய்விட்டது. 


 ஒரு எமோஷனல் இன்டெலிஜென்ஸ் பார்வையில் இந்த படத்தை அணுகுகிறேன்.  படத்தில் வரும் பாத்திரங்கள்  அனைத்தும் ஏதோ ஒரு வகையில்  உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு பாத்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டதை  சிறப்பாக செய்திருப்பார்கள். அங்கங்கு சென்டிமென்ட்களைத் தூவி  இயக்குனர் சுதா கோங்குரா நம்மை உணர்ச்சியால் கட்டிப்போட்டு இருப்பார்.


 பல நேரங்களில்  நாயகன் மாறனாகிய  சூர்யா ஏதோ ஒரு டென்ஷனில் சுற்றிக்கொண்டு இருப்பது போலவே இருக்கும்.  கோபம் வரும்.  ஆத்திரம் வரும். அழுகை வரும்.  இயலாமை வரும்.   ஒரு ஹீரோத் தனம்  இல்லாத சாதாரண மனிதனாக,  இந்த சாதனையைச் செய்தது போல படத்தில் காண்பித்து இருப்பார்கள்.   அது தான் படத்தின்  வெற்றி.  ஆனால் இந்த திரைப்படத்தில்  சூர்யாவை விட,   EI கற்ற  இரு சிறந்த பாத்திரங்களைக் கூறுவேன். 


 ஒன்று அவர் கூடவே இருக்கும் அவருடைய மனைவி பொம்மி.  சூர்யாவுக்கு சமமான, வித்யாசமாக சிந்திக்கும், தைரியமான, பொறுமையான பாத்திரப் படைப்பு. பல  காட்சிகள் இருந்தாலும், குறிப்பாக இரு இடங்களை கூறவேண்டும்.


 முதல் முறை.  மாறன் பொம்மியை கூட்டிக்கொண்டு கேக் டெலிவரி செய்ய பைக்கில் செல்வார்.  நண்பருக்கு போன் செய்ய சொல்லி பேஜரில் ஒரு செய்தி வரும்.   வண்டியை நிறுத்தி பக்கத்தில் இருந்த போன் பூத்தில் அவரின் நண்பருக்கு  அழைப்பார்.   விமான கண்காட்சிக்கு அவர் பார்த்து வைத்த விமானம் வரவேண்டும் எனில்  அந்த விமானத்தின் ப்ளூ ப்ரிண்ட்  இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என அவர் கூறுவார்.  ' வேறு யார்க்கும் இல்லாத புது ரூல்ஸ் நமக்கு  மட்டும் ஏன்' என சூர்யா உடைந்து போய் விடுவார்.  அந்த டென்சனில்,  என்ன செய்வது என  தெரியாமல், போன் பூத்துக்கு பணம் கொடுக்காமல் அப்படியே பைக் நோக்கி செல்வார்.   'காசு குடுத்துட்டு போங்க என அதன் உரிமையாளர்' பின்னால்  வர,  பூத் வெளியே நிற்கும்  பொம்மி 'அண்ணே  நான் குடுத்துக்கறேன்" என்பார்.  சூர்யா பைக்கை பதட்டமாக உதைத்து ஸ்டார்ட் பண்ணி, ஒரு பத்தடி ஓட்டி  செல்வார்.  பொம்மியை விட்டுவிட்டு செல்வதை உணர்ந்துவிட்டு, வண்டியை நிறுத்தி  திரும்பிப் பார்ப்பார்.   அந்த இடத்தில் அவ்வளவு பதட்டம் தெரியும்.   ஆனால் பொம்மியோ, முகத்தில் குழப்ப ரேகைகள் படித்திருந்தாலும்   தலையை லேசாக ஆட்டி, ஒரு கையில் கேக் பிடித்துக்கொண்டு மறு கையில் அவரைப் போகச் சொல்லும் உடல்மொழியோடு, "நான் ஆட்டோல போயிக்கறேன்.." என்பார். 

அதேபோலத்தான் கிட்டத்தட்ட அனை

த்து பிரச்சினைகளும் முடிந்து குட்டி விமானம் பறக்கத்  தயாராக இருக்கும்.  மினிஸ்டர் உள் இருக்க குட்டி விமானத்தில் முதல் முறையாக ஏறி கிளம்ப முற்படும்போது தீ பிடித்துவிடும்.  ஒரு வழியாக எமெர்ஜென்சி லேண்டிங் செய்து வெளியே வருவார்கள்.  சூர்யாவுக்கு எப்படி நடந்தது என குழப்பம்.  விமான தளத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவரைச் சுற்றி நிருபர்கள். பல கேள்விகள் எழுப்புவார்கள்.  பாதுகாப்பு வசதி இல்லையா என்பது உள்பட.  'அதைப்பற்றி நான் விளக்குகிறேன்' என்பார். 


 அப்பொழுது  தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் பொம்மிக்கு பிரசவவலி வரும்.   அந்த இடத்தில சூர்யா பொம்மியின் வலியைப் பார்த்துவிட்டு பதைபதைப்பாவார்.  அப்பவும் பொம்மி "நான் பார்த்துகிறேன்..நீ போ" என ஒரு தைரியத்தை கொடுக்கும் சொற்களை உதிர்ப்பார்.  பதட்டமில்லாமல் பொறுமையாக 'என்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீ கவலைப்படாம  தைரியமா பேசு' என்பது தான் அது. அந்த  இடங்களில் எல்லாம் பொம்மி பதட்டமடையாமல் இருப்பார்.  அவரின் உணர்ச்சியை மடைமாற்றி வேறு கனிவான சொற்களின் மூலம் பிரதிபலிப்பார்.  பொம்மியின் அந்த சிறு பார்வையும், அந்த உடல்மொழியும், சொற்களும்  தான்  சூர்யாவுக்கு பூஸ்ட்.


இவர்கள் இருவருக்கும் நடக்கும் காதல் கட்சிகளின் கவிதையை விட,  இந்த இடங்களில் பொம்மியின் உணர்வு,  ஊக்கமாக  கண்கள் வழியே கடத்தப்படும்.


மற்றொருவர், மாறனின் மேலதிகாரியாக வரும் நாயுடு(மோகன் பாபு) அவர்களின் கதாபாத்திரம்.  அவர் ஒரு ராணுவ அதிகாரி என்பதாலோ என்னவோ எந்த ஒரு இடத்திலும் அளவுக்கு மீறிய உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளவே மாட்டார்.  அவருக்கும், மாறனுக்கும் ஒரு மோதல் போக்கையே ஆரம்பத்தில் இருந்து காண்பித்திருப்பார்கள்.  ஆனால் அதனைத் தாண்டி 'க்ளுக்' என  ஆனந்தக்கண்ணீர் எட்டிப் பார்க்கும், இரு நெகிழ்ச்சியான காட்சிகளில்.   


முதன்முறையாக குட்டி விமானத்தை தரை இறக்க விட மாட்டார்கள். மாறன், விமானத்தை ஓட்டும் நண்பர் சேவிடம்"நீ தாம்பரத்துல எறக்குடா நான் பார்த்துக்கறேன்" என கூறி, தாம்பரம் விமானப் படைத் தளத்தில் கட்டுப்பாட்டையும் மீறி இறக்குவார்கள்.  

அந்த விதிமீறலுக்காக நண்பர்கள்  மூவரையும் விசாரணைக்கு நிறுத்துவார்கள்.  அந்த காட்சி அவ்வளவு அழகாக இருக்கும்.  நாயுடு சேரில் இருந்து எழுந்து மிடுக்காக நடந்து வருவார்.   அவரின் பேச்சு தெலுங்கு கலந்த தமிழில் ரசிக்கும்படி இருக்கும். 'மேடே(Mayday) டிக்லேர் பண்ணி சென்னை ஏர்போர்ட்ல லேன்ட் பண்ணி இருக்கலாமல்ல' என கூறி அந்த இடத்தில் கேள்விகளைத் துளைப்பார்.   


இருக்கு முன்னாடி இதே மாதிரியான சம்பவத்தை அவர்களிடமிருந்தே போட்டு வாங்குவார். இறுதியில்

"டெல்லி வரைக்கும் எதிரிகளை சம்பாரிச்சிட்ட.  பைன் 25000.  மூனு மாசம் கழிச்சு கொடு."

அப்போதும் அவர்கள் நம்ப முடியாமல் நிற்பார்கள். "என்ன உங்கள கட்டிபிடிச்சு  வழியணுப்பனுமா? போங்க, "


மாறன் "என்னத்தான் உங்களுக்கு பிடிக்காதே, சார்?" என்பார்


"நம்ப இன்னிக்கு பொலிட்டிக்கல் ப்ரசர்ல்ல உன்ன உள்ள வச்சா,  என்னையே நான் மதிக்க மாட்டேன்... தம்புடு...நீ பண்ணனும்ன்னு நினைக்கிறது... உன் ஈகோ, என் ஈகோவ விட பெருசு.   ஒரு சோல்ஜர் அவனை நம்பி வந்தவர்களை உயிரோடு திரும்ப சேர்க்கணும்;  நீ இன்னைக்கு பண்ண மாதிரி.  யூ ஆர் எ லீடர் டுடே"  என்று கூறிவிட்டு ஒரு சிகரெட் எடுப்பார்.   அதன்பிறகு  சூர்யாவுக்கும், நாயுடுவுக்கும் நடக்கும் சிகரெட், வயசு பற்றி உரையாடல் ஒரு ஹைக்கு.  


முன்பிருந்த பகையை மனதில் வைத்து அவர் நினைத்திருந்தால், அந்த இடத்திலேயே மாறனின் கனவை தகர்த்து இருக்க முடியும். 


அதைவிட மிக முக்கியமான காட்சி.   பல பிரச்சினைகளும் முடிந்து, இறுதியாக விமானத்தை இயக்கும் சமயம். இரண்டு மூன்று நாட்களாக மாறன் தூக்கமே இல்லாமல் அலைந்து கொண்டிருப்பார்.  "நாமதான்டா பாதுகாக்கணும், இல்லன்னா தீ கூட வச்சிருவாங்க" என்று நண்பர்களிடம் கூறிவிட்டு அவர் விமானம் நோக்கி அயற்சியான உடற்மொழியோடு வருவார்.  அங்கு அவரின் மேல அதிகாரி, நாயுடுவும் அவரது குழுவும் stand-at-ease ஆக நின்று  கொண்டிருப்பார்கள்.  ஒரு சிறு புன்முறுவலோடு பேசுவார்.   "என்ன நெடுமாறன்  அந்த  கோஸ்சாமிக்கு மட்டும்தான்  ஆள் இருக்குமா?  நமக்கு இல்லையா? நம்மள்ள ஒருத்தர நாம கைவிடமாட்டோம்.  Go and take rest man" என்பார்.  


அவரின் பாத்திரப்படைப்பு எந்த ஒரு இடத்திலும் உணர்ச்சியை மிதமிஞ்சி வெளிக்காட்டாமல் இருக்கும்.  எந்த அளவிற்கு வெளிக்காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படுத்தி இருப்பார்.   அதே நேரம் நாம் ஒரு முயற்சியை நோக்கி நகரும்போது எப்படி பழகிய மனிதர்கள் உதவுகிறார்கள் என்பதுவும்.  


பொம்மி, நாயுடு இரு பாத்திரங்களும் உணர்ச்சிகளை சட்டென கொட்டிவிடாமல்,  கதையை மேலும் அழகாக்குகிறது.

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...