Tuesday, June 30, 2020

நூறு நாள் கரோனா



நூறு நாள் ஓட்டம் ஆரம்பித்தள்ள தற்போதைய நிலையில், 100 நாட்கள் லாக் டவுன் முடிந்துள்ளது. தினப்படி தமிழக கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் இரண்டு இலக்கத்தில் இருந்து மூன்று இலக்கமாக மாறிய பொழுது நமக்கு கரோனாவின் மீதான பயம் போயிருக்க கூடும். இந்த மாத ஆரம்பத்தில் இலக்கம் 4 ஆக மாறி அதிலும் கடந்த சில நாட்களாக 3000 தொட்டு உள்ளது. மற்ற நாடுகளில் உச்சத்தை தொட்டு இறங்குமுகம் கண்டுவிட்டது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக தற்போது, புதிய புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டே இருக்கின்றது.



ஆனாலும் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர, பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது போல ஒரு தோற்றம் உள்ளது. கிரகணத்தன்று கூட மக்கள் வெளியில் வராமல் முடங்கி இருந்தார்கள். கை கழுவினால் அல்லது மாஸ்க் மட்டும் அணிந்திருந்தால் போதுமானது என்ற ஒரு மூடநம்பிக்கையும் பரவி வருகின்றது. சிலர் அது பற்றியும் கவலைப்படுவதில்லை.





இங்கும் பெங்களூரில் கடந்த சில வாரங்களாக, குறிப்பாக இந்த மாதத்தில் அனைத்து கடைகளும் தாராளமாக திறந்தே உள்ளது. ஏதோ கண்டிப்பாக தேவை என வார நாளில் சென்றிருந்த போதும் கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்தே உள்ளது. கடைவீதி அதற்கான நெரிசலோடு, பரபரப்பாக உள்ளது. பெங்களூரில் 30% மக்களோடு சில அலுவலகம் இயங்க ஆரம்பித்துவிட்டது. நண்பர்கள் செல்ல ஆரம்பித்து உள்ளார்கள். போக்குவரத்து சொற்பமாக உள்ளதாக சென்று வருபவர்கள் கூறுகிறார்கள். நெரிசலும் இல்லை.


இரு வாரங்களுக்கு முன் எந்த உணவகமும் திறக்கப்படவில்லை. இந்த வாரங்களில் அதுவும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று பலர் வழக்கம்போல அமர்ந்து உணவு உண்டு கொண்டு தான் இருந்தனர்.





இப்படித்தான், சில வாரங்களுக்கு முன் மகளின் பள்ளி கட்டணத்தை கட்டுமாறு தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தோம். 'வேறு மாற்று வழி என்ன இருக்கிறது' என்பது தெரியாத ஒரே காரணத்தினால் கட்டணத்தைச் செலுத்தி புத்தகங்களை வாங்க முடிவெடுத்தோம். பள்ளி எப்போது திறக்கும் என்பது கேள்விக்குறி. செப்டம்பரா, டிசம்பரா அல்லது இந்த கல்வி வருடம் முழுவதும் இப்படியாக சென்று விடுமா? இன்றைய நிலையில் யாரும் விடை சொல்ல முடியாது.





இரண்டு கிலோ மீட்டர்தான் பள்ளி. இருந்தாலும் கார் எடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது என அதில் செல்ல முடிவெடுத்தேன். பள்ளியின் பெருங்கதவின் முன் சீருடை மட்டும் அணிந்த காவலாளி. அவருக்கு முகக் கவசம் இல்லை. 'பீவர் கண்' எடுத்து நெற்றியில் வைத்தார். அதை பக்கத்தில் கொண்டு வரும் பொழுது நமக்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது. வாகன நிறுத்துமிடத்தில் கணிசமாக கார்கள். காருக்கும் சோசியல் டிஸ்டன்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டு, முகக்கவசம் சரி செய்துகொண்டு இறங்கி வெளியேறினேன். பிரமாண்டமான போர்டிகோவின் முன்பு ஒரு காவலாளி நின்று காரோனா தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் (நன்றி ஜெகதீசன்). அதையும் வாங்கி வழக்கம்போல கைகளைக் குடிக்கச் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பறையில் ஒரு பெண் அனாவசியமாக உட்கார்ந்து இருந்தார். முக கவசத்தை கவனமாக டேபிளுக்கு போட்டு இருந்தார். ஆங்காங்கு மைதானத்தில் பெற்றோர்கள் ஜோடியாக. குழந்தைகள், அவர்கள் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாராவாரம் சுற்றிய கால்கள் சும்மா இருக்காது.





உள்ளே சென்று வராண்டாவில் சுற்றும் முற்றும் பார்த்த படியே நடந்து பணம் கட்டும் இடம் வந்தடைத்தேன். ஜூன் முதல் வாரங்களில் பள்ளிகளில் இருக்கும் பட்டாம் பூச்சிகளின் ஆட்டமும், ஓட்டமும் இல்லை. க்யா, முயா என்ற கோழிக்குஞ்சு சத்தமும் இல்லை. கோடை கால விடுமுறையில் பள்ளி இருப்பது போல அங்கங்கு சிலர். எனக்கும் முன்பு இருந்தவர் சென்றதும் காசாளரரின் முன்பு நின்றேன. பணம் கட்டிய புகைப்படத்தை மொபைலின் வழி காண்பித்து விட்டு எங்கும் தொடாமல் நின்று கொண்டிருந்தேன். பக்கத்து 'கவுண்டரில் ஒருவர் கண்ணாடிக்கு முன்பு படுத்துக்கொண்டு, உள்ளிருந்த காசாளரிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு முன் இருந்த காசாளரும் வாய்க்கூட்டை கீழே டேபிளின் மீது போட்டிருந்தார். இந்த வருடம் இன்னும் ஒரு மொழிப்பாடம் சேர்த்து கூடுதலாக பணம் கேட்டார்கள். 'அடேய்களா, பள்ளியே நடக்குமான்னு தெரியலை, இதுல இது வேறயா' என மைண்ட் வாய்ஸை முழுங்கிக்கொண்டு


"Paytm, Google pay இல்லைங்களா?"


"இல்லை" என்றார். இப்பொழுது ATM கார்டு உபயோகித்து தான் ஆகவேண்டும். ஒரே ஒரு விரலை மட்டும் வைத்து அழுத்தி, அந்த கார்டை பத்திரமாக வேறு பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.





அவர் கொடுத்த 'பில்லை' வாங்கி பட்டும் படாமல் அதனை எடுத்துக்கொண்டு, புத்தகம் வழங்கும் இடத்திற்கு மேலே ஏறினேன். அங்கு இருந்த பணியாளர்கள் மட்டும் கையுறையும், முக கவசமும் போட்டிருந்தார்கள். புத்தகம் நோட்டு மூட்டைகளைத் தூக்க முடியாமல் இறங்கி, மீண்டும் கார் எடுத்தேன். ஒரு சற்று சுற்றிவிட்டு செல்லலாம் என்று வேறு பாதையில் வண்டியை திருப்பினேன். பக்கத்து ஊரில் கொரோன உள்ளது என்று அந்த ஊருக்கு மட்டும் தடுப்புக் கட்டைகளை வைத்து முடக்கி இருந்தனர். அந்த வழியாக எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. அந்த நுழைவாயிலில் 2 காவல் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள். 24 மணி நேரமும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்களா? காவல் அதிகாரிகளுக்கான பணி அழுத்தம் இங்கு பேச வேண்டியுள்ளது. இதற்காக லாக்கப் கொலைகளை ஒத்துக்கொள்ள முடியாது.





கரோனா பெங்களூரில் ஆரம்பித்த மார்ச் முதல் வாரத்தில் இந்த வருடம் கோடைவிடுமுறை நமக்கு இல்லை என்று தான் நினைத்திருந்தேன். எழுதி இருந்தேன். உலகம் முழுவதும் இணைந்து ஒத்துழைத்து தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தால், ஜூலை வாக்கில் அதனை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்று அப்பொழுதே சீனாவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு ஊசி இப்பொழுது மனிதர்களுக்கான சோதனையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, மற்றும் பிரேசிலில் சோதனைக்கு தயார் படுத்துகின்றனர். இந்த வருட இறுதியில் தான் கிடைக்கும் என தெரிவிக்கிறார்கள்.





சென்ற வாரத்தில் லண்டனில் இருக்கும் சக பணியளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அங்கும் இங்கு நடப்பது போலவே 'மக்களுக்கு கரோனா பற்றிய பயம் இருப்பது போல தெரியவில்லை' என்றார். Pornmoutth என்ற பீச் பகுதியில் அவரது வீடு இருப்பதாக கூறினார். கடந்த மே இறுதியில் நீண்ட வார இறுதி கிடைக்கும். வழக்கம் போல ஒவ்வொரு வருடமும் கூடும் கூட்டம், இந்த வருடமும் குழுமி இருந்தது என்றார். இத்தனைக்கும் அப்பொழுது பொது கழிப்பறைகள் போன்றவை அங்கு திறக்கப்படவில்லை. கரோனா உச்சத்திலும் இருந்தது. உலகமெங்கும் மக்கள் அடைந்து கிடந்து வெளியே செல்லவே நினைக்கின்றார்கள்.





அமெரிக்க நண்பர்களும் சோதனை செய்யும் குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகளுக்கு COVID-19 இருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் குறைந்ததாக தெரியவில்லை என்கின்றனர்.





நம்மூரில் கரோனாவினால் இறப்பு எல்லா வயதினரையும் பாதித்துள்ளது. இளம் வயதினர் 'ஹார்ட் அரெஸ்ட்' என இறந்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஓரிரு குழந்தைகளும் இறந்துள்ளதாக கூறுகிறாரகள். இந்தக் கரோனாவின் மியூட்டேசன் என்பது வேறு வேறு நிலையில் வீரியம் அதிகமாகிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் அதிகமாக இருக்கின்றது என்று சற்று சாதரணமாக எடுத்துக்கொண்டு வெளியில் சுற்ற மக்கள் கிளம்பி விட்டார்களோ? அல்லது வருவது வரட்டும், இன்றைய உணவுக்கு பாப்போம் என அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்களோ?





முதல் வகையான மக்கள் தான் இங்கு பிரச்சினை என கருதுகிறேன். இரண்டாம் வகையான தினக்கூலி மக்களுக்கு வேறு வழி இல்லை. அன்று கிடைப்பது தான் அவர்களுக்கு உணவு. அரசாங்கம் அனைவருக்குமான உணவு கொடுக்க முடிவதில்லை. அதிலும் வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு இன்னும் சிரமம் தான். அரசின் உதவியும் கிடைக்காது.





100 வருடங்களுக்கு முன் வந்த H1N1 ஃப்ளு தொற்றுநோய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு இருந்ததாம். அன்றைய மக்கள் தொகையில் மூன்றில் 1 பகுதியினர் இறந்து போய் உள்ளார்கள் என்கிறது வரலாறு. நவம்பரில் இன்னுமொரு உச்சம் இந்தியாவில் இருக்கும் என்கின்றனர்.





இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை விகிதாசாரப்படி இது குறைவு தான். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தென் மாநில, வளர்ச்சி அடைந்த மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களின் புள்ளி விவரங்கள் (Data) சரியாக இல்லை, என்பதை covid -19.org சுட்டுகிறார்கள். நம் வீட்டுக்குப் பக்கத்தில் பாதிப்பு உள்ளதா இல்லையா எனும் தகவல்களை தெரிந்து கொள்வது தான் இன்றைய தேதியில் அவசியமானது..





நமது தமிழகத்தில் எண்ணிக்கை அதிகம் இருக்க காரணம், அதிகப்படியான சோதனைகள். அதுவும் நல்ல விஷயமே. இப்பொழுது தான் ஸ்டேஜ் 3 எனும் சமூகத்தொற்று அடைந்ததாக கருதுகிறேன். அது இன்னும் சில மாதங்களில் விரிவைடையும். அவரவர் உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு, ரொம்பவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம். வந்தபின் போராடுவதை விட, நாம் தான் வருமுன் காக்க வேண்டும். சுயகட்டுப்பாடு இல்லாவிடில் என்ன நடக்கும் என்பது தெரியாது.








https://www.hindustantimes.com/india-news/oxford-vaccine-in-final-stage-of-clinical-trials/story-sVJz9DRIR4Lm9DRA7261pM.html

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...