Monday, June 15, 2020

ஊரும் பெயரும்



இந்த பெயர் மாற்ற மீம்கள் 'மெட்ராஸை' சுற்றிப்பார்க்க வைத்தது. சென்னையில் முதலில் எங்களுக்கு தங்க கிடைத்த இடம் எம்எல்ஏ ஹாஸ்டல். தலைமை செயலகமாக கட்டப்பட்டு இப்பொழுது மருத்துவ மனையாக உள்ள இடத்தில் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி இருந்தது. 'எம்எல்ஏ-க்கு எதுக்கு விடுதி?' என ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அந்த ஓமந்தூரார் தோட்டத்தில், தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெரிய தனித்தனி அடுக்கக வீடு உண்டு. கூடவே அவர்கள் பரிந்துரைத்தால், அவர்களின் சார்பாக ஓரிரு அறைகளும் புது அல்லது பழைய விடுதியில் கிடைக்கும். அங்கு பெரும்பாலும் ஊர்ப் பிரச்சனைகளுக்காக கோட்டையில்(Fort) இருக்கும் தலைமை செயலகத்திற்கு வருபவர்களாக இருக்கும். வருடக்கணக்கில் தங்கிய சிலரையும் பார்த்தது உண்டு. சென்னையின் மையப் பகுதியில் அடர்த்தியான மரங்களின் ஊடக பரந்து விரிந்த அதன் அழகும், கூடவே அங்கு வளைய வந்த அதிகாரமும், சொகுசும் சற்றே மிரட்டியது.





அதனை ஒட்டிய பகுதிதான் திருவல்லிக்கேணி. Triplicane- என்று தான் அனைவருமே கூறுவார்கள். இரண்டும் ஒரே பெயர் என அங்கு இருந்த போதுதான் தெரிந்தது. அதன் வழியாக செல்லும் பேருந்து, 'Anna Square' என ஆங்கிலத்திலும் அண்ணா சதுக்கம் என தமிழிலும் இருக்கும். இப்படி பல ஊர்களின் பெயரும் இரு மொழிகளிலும் பேருந்துகளின் பலகைகளில் இருக்கும்.










சென்னை பல வித்தியாசமான பெயர்கள் கொண்ட பெருநகரம். நெடுநீண்ட வரலாறு கொண்டது. கிட்டத்தட்ட 300 வருடங்கள் ஆங்கிலேயர்கள் இருந்ததால் அதன் பெயர்கள் அவர்களின் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீதிக்கும், ஒவ்வொரு சாலைக்கும், ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு பெயர்கள் இருந்ததை அறிந்துகொள்ள முடிந்தது. சில இடங்களுக்கு மூன்று பெயர்கள் கூட இருக்கும், பூந்தமல்லி-பூவிருந்தவல்லி-Poonamallee அதில் ஒன்று. ஒவ்வொரு பேட்டையில் முடியும் இடங்களையும் பேட் என்று 'இஸ்டைலாக' தான் பீட்டர் விடுவார்கள். சைதாபேட், குரோம்பேட், தேனாம்பேட், ராயப்பேட் என்று பீட்டர் விட, நாமும் பழகிக் கொள்ள வேண்டும். 'பேட்டை-பேட்' போன்றே 'பாக்கங்களும்' 'பாக்' ஆகி இருந்தது. சேப்பாக், கீழ்பாக், புரசைவாக், மீனாம்பாக் என சேப்பாக்கம் என்பதின் 'கம்' விட்டுவிடுவார்கள்.





அண்ணாசாலை- மவுண்ட் ரோடு குழப்பம் நெடியது. எங்கு ஆரம்பிக்கும் எங்கு முடியும் என ஆரம்பத்தில் தெரியாது. அண்ணா சாலையில் நின்று கொண்டே 'ஏங்க, இந்த மவுண்ட் ரோட்டுக்கு எப்படி போகணும்?' என்பதை பலரும் அனுபவித்து இருக்கக்கூடும்.





பரங்கிமலை என்பதும், செயின்ட் தாமஸ் மவுண்ட் என்பதுவும் ஒன்று என அறிந்துகொள்ள சற்று நாட்கள் ஆகியிருந்தது. திருமயிலை எனும் பறக்கும் ரயில் நிலையத்தின் பெயரைப் பார்த்துதான் பலருக்கும் மயிலாப்பூர் என்பதன் உண்மையான பெயர் தெரிய வரும். இன்டர்வியூக்கான ∴பைலை தூக்கிக்கொண்டு காலை நேரங்களில் கிளம்பி விடுவோம். மாலையில் நண்பர்கள் ஒன்று கூடி, அன்று சென்ற இடங்களின் பெயரை அலசும்போது தான், ஒரே இடத்தின் இருவேறு பெயர்களை தெரிந்து கொள்ள நேரிடும்.











எம்ல்ஏ ஹாஸ்டலில் நான்கு மாதம் இருந்துவிட்டு, அப்பொழுது புறநகராக இருந்த வேளச்சேரிக்கு மாறினோம். சைதையில் எந்த பேருந்து வேளச்சேரி செல்லும் என்பதில் குழப்பமாகும் என்பதால், சின்னமலையில் இறங்கித் தான் வேளச்சேரிக்கு பேருந்தைப் பிடிப்போம். மாநகரப் பேருந்தில் கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயரைக் குறிப்பிட்டுதான் பெரும்பாலும் பயணச் சீட்டு கேட்பார்கள். பின்புறம் படியை ஒட்டிய அவரது இருக்கையில் தான் அமர்ந்திருப்பார். ஊரில் இருப்பது போல, சென்னையின் நடத்துனர்கள் கூட்டத்தினுடாக புகுத்து வந்து பயணச்சீட்டு வழங்க மாட்டார்கள். அந்த நெரிசலில்,முன்பு உள்ளவரிடம் சில்லறை கொடுத்து 'சின்ன மலை ஒன்னு வாங்குங்க' என கூறவேண்டும். அந்த சில்லரை ஒவ்வொருவர் கையாக மாறி நடத்துனரை அடையும். அவரிடம் போவதற்குள் அது 'லிட்டில் மவுண்ட்டாக' மாறி இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் கேட்பது தான் அங்கு இயல்பாகவே அனைவருக்கும் வரும்.





பெசன்ட் நகர் பீச்சுக்கு எலியட்ஸ் பீச் என்ற ஒரு பெயரும் உண்டு. எழும்பூர் - Egmore குழப்பத்தில் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுனரிடம் சண்டை போட்ட கதையும் உண்டு. Foreshore estate - பட்டினப்பாக்கம் எனப்படும். இன்னும் இதில் விடுபட்ட நிறைய இடங்கள் உள்ளது. பலவற்றிற்கு அப்படியே மொழி மாற்றி இருப்பார்கள் அதில் ஒன்று தீவுத்திடல் எனும் island grounds. எழிலகம் எனும் அழகான தமிழ்பெயர்கள் கண்டு வியந்ததும் உண்டு.





இதில் குறிப்பிட தோன்றியது சென்னை சென்ட்ரலில் இருந்து, சென்ட்ரல் ஜெயில் பாலம் ஏறி இறங்கியதும் பல்லவன் சாலையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலின் பெயர். முனீஸ்வரன் கோவில் சென்னையிலும் உள்ளதா என நினைக்கையில், Bodygurad முனீஸ்வர் எனும் வித்தியாசமான பெயர் ஈர்க்கும். எப்படி 'பாடிகாட்' முனீஸ்வரர் ஆனார் என்பதில் தான் சென்னை மக்களின் பேர் வைக்கும் திறனை வியக்க வேண்டும். வேறு ஒரு மொழியை உள்வாங்கிக் கொள்வதில் சென்னை மக்கள் எப்போதும் தனி.





1995 - Bombay to Mumbai , 1996 - Madras to Chennai, 2001 - Calcutta to Kolkata என இந்திய பெருநகரங்களின் பெயர்கள் மாற்றம் அடைந்து கொண்டு இருந்தது. எனக்கு சென்னையை விட மெட்ராஸ் 'கெத்தாகத்' தான் இருந்தது. இப்பொழுது சென்னை பழகிவிட்டது. சென்னை நண்பர்களும், அங்கு தலைமுறைகளாக வாழும் மக்களும் 'மெட்ராஸ்'(Madras) என்றுதான் கூறுவார்கள். அங்கு நீண்ட காலம் இருந்த உறவினர் அப்பொழுது "என்னப்பா நீங்க எல்லாம் மெட்றாஸ்ன்னு சொல்லாம, சென்னைன்னு சொல்லறீங்க.. எங்களுக்கு எப்பவும் மெட்ராஸ் தான்" என்பார்.





ஊரிலும் பலருக்கு இன்னமும் மெட்ராஸ் தான். ஊரில் எனைப் பார்த்ததும் விசாரிப்பவர்கள் "ஏப்பா எங்க இருக்க, இப்ப என்ன பண்ணற" என்னும் அன்பர்களின் கேள்விக்கு சட்டென 'மெட்ராஸ்' என்றுதான் வரும். இப்படித்தான் ஒருமுறை "அப்பறம் மெட்ராஸ்ல எங்க இருக்க" என்ற கேள்வி வந்தது. " வேளச்சேரிங்க" என்றேன். " அட.. மெட்ராஸ்ல வேலை செய்யறேன்னு தெரியுது.. அங்க எங்க இருக்கன்னு கேட்டன்" என்று கேட்பார்கள் நம்மைக் கலாய்த்து விட்டு செல்வார்கள் அந்த வெள்ளந்தி மனிதர்கள்.





சென்னை தவிர மற்ற ஊர்களில் இந்த மாதிரியான பெயர்க் குழப்பங்கள் குறைவுதான். 'ஊட்டிக்கு ஒரிஜினல் பெயரே உதகமண்டலம், அத வெள்ளைக்காரங்க ஒத்தக்கமண்ட் என கூப்பிட்டு பார்த்தாங்க... அதுவும் முடியாம ஊட்டி என சுருக்கிட்டாங்க' . 'இப்படித்தான் முந்திரி பழம் வித்துட்டு இருந்த ஆயாகிட்ட, இது என்ன என கேட்க, அந்த ஆயா, காசுக்கு எட்டு என்றார்களாம். அதன் பெயர் என நினைத்து cashew nut என முந்திரியை மாற்றினார்கள்' என்று சிறுவயதில் இந்த பெயர் காரணங்களை வியந்து கொண்டது உண்டு.





என்னளவில் முதலில் இந்த ஆங்கில- தமிழ் பெயர் குழப்பம் அநேகமாக திண்டுக்கலுக்கு தான் வந்து இருக்கும். லாரிகளில் பக்கவாட்டில் பர்மிட்டுக்காக எழுதப்பட்டு இருக்கும் Dindigal எழுதிய பெயரை பார்த்த ஞாபகம். ஈரோட்டில் சுற்றிக்கொண்டு இருந்தபொழுது, எங்கள் ஊரில் பெரிதாக குழப்பம் வந்தது இல்லை, VMC-வேளாளர் மகளிர் கல்லூரி தவிர. மதுரைக்குள் வளம் வந்த போது தான் குழப்பம் இன்னும் அதிகமானது. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கல்லூரிக்கு செல்லும் வழியில் மதுரை கல்லூரி இருக்கும். 'Madura college' என்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பார்கள். மதுரை கல்லூரி என தமிழில் இருக்கும். அதை மதுரை அல்லது மதுரா என்றும் கூற மாட்டார்கள் நண்பர்கள். 'மெஜ்ரா காலேஜ்' என்று தான் கூறுவார்கள்.





மதுரையின் பக்கத்துக்கு ஊர்களில் இருந்து வரும் நண்பர்களின் பேச்சுவழக்கில் அவர்களின் ஊர்களின் பெயர்கள் அலப்பறையாக இருக்கும். திண்டுக்கல் நண்பர்கள் ' திண்டில்' என வேகமாக கூறுவார். நாரோயில், தின்னெலி என்பது நாகர்கோவிலில், திருநெல்வேலி என கேலி கிண்டலுக்குப்பின் தான் தெரிய வரும். மக்களின் பேச்சு வழக்கு என்பது வேறாகத்தான் இருந்து கொண்டிக்கிறது. அது அந்தந்த உள்ளூர் மக்களைப் பொறுத்தளவில் நாகரிகமாக, ஸ்டைலாக பெருமையாக கருதப்படுகிறது.





லண்டனில் இருந்த நேரம். பேச்சுவாக்கில் அங்கிருந்த உள்ளூர் பிரிட்டிஷ் மேலாளரிடம் சென்னை, கொல்கத்தா, மும்பை பெயர் மாற்றம் பற்றிய உரையாடல் வந்தது. அவர் 'எதற்காக இப்படி மக்களின் பழக்கத்தில் உள்ள பெயர்களை மாற்றுகிறார்கள். இது ஒரு நேர, பணம் விரயம் அல்லவா?' என்றார். பதிலுக்கு அவரிடம் "நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து உங்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் மாற்றிக்கொண்டீர்கள். எங்கள் மக்களுக்கு புரிய வேண்டுமல்லவா?" என்றதும் உண்டு. 'அப்படியானால் லண்டன் என்பது லண்டனியம்(Londinium) என்று மாறுமோ?' என்று நம்மை பகடி செய்து கொண்டிருந்தார். லண்டனுக்கான பழைய பெயர் லண்டனியம் என்பதும் அப்போது தான் தெரிந்தது. கவுண்டமணி கூறியது போல 'இந்த வெள்ளைக்காரன் லண்டன்ன்னு எவ்வளவு சின்னதா நாளே எழுத்துல வெச்சுருக்கான். நீ ஏன்டா நீட்டி முழக்கற' என்பது போல நம் ஊர்களின் பெயரை அவர்களின் வசதிக்காக சின்னதாக வைத்துவிட்டு சென்றார்களோ என்னவோ?









இங்கு கர்நாடகத்தில் மைசூரு, பெங்களூரூ( Bengaluru) என்று கன்னடத்தில் மாற்றி இருந்தாலும், அதை 'பேங்ளூர்' (Banglore) என்று சொல்வதையே விருப்பமாக பலரும் கருதுகின்றனர். 'நீங்க எப்படி வேணாலும் பேரு வச்சுக்குங்க, நாங்க இப்படி தான் கூப்பிடுவோம்'. பேச்சு வழக்கில் அந்த மாற்றம் என்பது தலைமுறைகள் கடக்க வேண்டும். அவர்கள் அறியும் பொழுது என்ன பெயர் இருக்கின்றதோ அதைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். இந்த பெயர் மாற்றங்கள் தேவையா இல்லையா எனில், புதிதாக செல்பவர்களுக்கு பல குழப்பங்கள் விளைவிப்பதை தடுக்கும் எனபதால் தேவை தான். ஆனால் பணப்புழக்கம் குறைந்த இக்கட்டான இந்த நேரத்தில் இது தேவையா என்பது யோசிக்க வேண்டியது. கூடவே அதன் ஸ்பெல்லிங் 'வீலுர்' என குழப்பம் விளைவிப்பதாக இருக்ககூடாது.





இந்த பெயர் மாற்றம் தேவையா, இல்லையா என்பது பற்றி ஈரோடு கதிர் மற்றும் ஷான் கருப்பசாமி நேற்று நேரலையில் அடித்து துவைத்து உள்ளார்கள். லிங்க்

https://youtu.be/oONN0Ep_HXY












No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...