Wednesday, April 29, 2020

வாசிப்பில் நேசிப்பு - உடையார்

இப்பொழுது வீட்டிற்குள் மாதக்கணக்கில் முடங்கி இருப்பது போலவே 2009-ல்  வீட்டின் படி தாண்டாமல் இரு வாரங்கள் முடங்கிக் கிடந்தேன்.  காரணம் சின்னம்மை. அப்பொழுது முடங்கியிருந்த இடம் லண்டன்.  அப்பொழுது தான் ஸ்மார்ட் போ∴ன்கள் வர ஆரம்பித்த நேரம்.  அவ்வளவாக புழக்கத்தில் இல்லை.  பாட்டு கேட்பது மட்டுமே பொழுதை ஓட்டியது.   அது போரடிக்க ஆரம்பித்த பொழுது நுழைந்த இடம் புத்தகம்.   அந்த இக்கட்டான நேரத்தில் பெரும் ஆறுதலாகவும், நேரம் கடத்தியாவும்  இருந்தது  புத்தகம் மட்டுமே.  ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் இருந்த பொன்னியின் செல்வனை வரவழைத்து, அதன் வழியாக சோழநாட்டிற்கு பயணப்பட்டேன்.  மீண்டும் இரண்டாவது முறையாக படிக்கும் பொழுது, பொன்னி நதி வேறு மாதிரியான கோணத்தில் புலப்பட ஆரம்பித்தது.  இப்படித்தான் பெரும் புத்தக வாசிப்பு என்னை ஆட்கொண்டது. 

இதில் குறிப்பிட வேண்டிய விசயம், அங்கு நூலகத்தில் 10 புத்தகங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். அந்தப்பகுதியில் பெரும்பான்மையினர்  தமிழ் பேசும் மக்கள் என்பதால், நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும்.  உறுப்பினராக பெரிய நடைமுறைகள் இல்லை, அந்த கவுன்சிலில் கட்டுப்பாட்டுக்குள் முகவரி 
இருந்தால் போதும்.

அதன் பிறகு, கல்கியைத் மீண்டும் ஒரு வலம் வர ஆரம்பித்தேன். பல்லவர்களிடம் இருந்து சோழ நாட்டை மீட்ட பார்த்திபன் கனவு.   இந்த புதினங்களின் வழியாக, சோழர்களின் வரலாறு பற்றிய பெருமை  என்னுள்  அப்பிக் கிடந்தது.  தொடர்ந்து சில மாதங்கள் கழித்து தஞ்சையிலிருந்து  'சிவகாமியின் சபதம்' வழியாக காஞ்சிக்கு      பல்லவர் கால வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள நகர்ந்தேன்.    இப்படியாக கல்கியின் சுவைஞனாக அந்நேரத்தில் மாறியிருந்தேன்.    ஆனாலும், புத்தங்களில் கூறி இருந்ததை மட்டும், பெரும்பாலும் நம்பி வண்டி ஓடிக்கொண்டு இருந்தது.

ஒவ்வொரு முறை தஞ்சைப் பக்கம் போகும்பொழுது, பெரிய கோவில் எனது பார்க்கும் பட்டியலில் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் அதன்மீது ஆச்சர்யம் மேலிடும்.  தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய வரலாற்றை முழுவதும் தெரிந்து கொள்வதில் ஆவல் ஏற்பட்டது.   அது பற்றி ஏதாவது புத்தகம் உள்ளதா? எனும்  தேடல் நின்ற இடம்…

பாலகுமாரனின் உடையார். 

உடையார் புத்தகத்தின் அனைத்து பகுதிகளும், லண்டன் ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் பார்த்திருந்தேன்.   அப்பொழுதெல்லாம் பாலகுமாரனின் மேல் அவ்வளவாக ஈர்ப்பு  இல்லாததால், அவர் பக்கம் செல்லவில்லை.  (ஆமா, இவரு வேற எல்லாரையும் வாசித்துவிட்ட மாதிரி, அதுவரை படித்தது, ரெண்டு புத்தகம் அதுவும் கல்கி அவர்களுடையது.)

 ஐந்தாறு வருடம் முன்பு ஈரோடு புத்தகத் திருவிழாவில் உடையாரின் முதல் பகுதியை வாங்கினேன்.  நம்ம வசிக்கும் வேகம் தான் நமக்கு தெரியுமே?  ஒரு வழியாக, அனைத்து பகுதிகளையும் வருடக் கணக்காக படித்து முடித்தேன்.   இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால்  மூன்று புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு பகுதியாக வாங்கித்தான் முடித்தேன்.  தோராயமாக ஆறு மாத இடைவெளியில் நடக்கும்  சென்னை மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் வாங்கியவை தான். 

தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு நான் சென்ற அனுபவத்தையும், என்  வாசிப்பு அனுபவத்தையும்  உடையாருக்கு முன், உடையாருக்குப்  பின் என்று பிரிக்கலாம். 

ராஜராஜ சோழன் சாளுக்கிய நாடுகளின் மீது படையெடுத்துச் செல்வதை மட்டுமே அவ்வளவு பிரமாண்டமாக ஒரு பாகத்தில் அழகான, விரிவான வர்ணனைகளோடு விவரித்து இருப்பார்.   போருக்கு வீரர்கள் செல்லும் வழியில், அவர்களுக்கு முன் உணவு சமைப்பவர்கள் சென்று தங்கி அவர்களுக்கு சமைத்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்வார்கள்.  பின்னே வீரர்கள் கிளம்பி வருவார்கள்.  இது ஏனோ பழனிக்கு பாத யாத்திரை செல்லும் மக்களை நினைவூட்டியது.  காலகட்டத்திற்கு ஏற்ப முன்னே அவர்களின் கட்ட வண்டி அல்லது  டெம்போவில் சென்று உணவு சமைத்து வைத்திருப்பாப்பார்கள்.   நடைபயணம் வருவோரும் பின்னே வந்து சாப்பிட்டுவிட்டு நடை பயணத்தை தொடர்வார்கள்.  இப்படியாகத் தான்  தஞ்சையிலிருந்து ஹம்பி வரை வாரக்கணக்கில் சென்று உள்ளார்கள்.
 
துங்கபத்திரா நதி காட்டாற்று வெள்ளம் போல சென்று கொண்டிருக்கும் ஒரு நதியாகும்.  புவியியல் ரீதியாகவே துங்கபத்திரா நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பலர் படையெடுத்து வருவதைத் தடுக்கும் அரண்.    ஆற்றுக்கு இந்தப் பக்கம் தங்கி,  தண்ணீர் குறைய காத்திருப்பார்கள்.  ஆனால் ராஜராஜ சோழன்  அந்த காற்றாற்று  நீரில் ஓரிடத்தில் அவரின் குதிரையோடு இறங்கி, சினங்கொண்ட யானை போல ஆற்றைக் கடந்து முன் செல்வார், வீரர்கள் பின் தொடர்வார்கள்.  போர் நடக்கும்.  வெற்றி அடைவார்கள். அங்கு இருந்த செல்வங்களை, பொருட்களை சூறையாடி வருவார்கள்.   இந்த போருக்கான காரணம், தஞ்சை பெரிய கோயில் கட்ட ஆரம்பித்த பிறகு நிதி பற்றாக்குறை வரும் எனும் போதுதான்.  இரு வருடங்களுக்கு முன் துங்கபத்ரா நதியை ஒட்டிய ஹம்பி இடங்களுக்குச் சென்றிருந்தோம்.  உடன் வந்த நண்பர்களிடம்  இதனைக் கூற, நம்புவதற்கு சற்று சிரமப்பட்டார்கள்.

உடையார் புத்தகம், பெரிய கோவிலைக் கட்டுவதற்கான திட்டமிடலில் தொடங்கும்.   கட்டும்பொழுது இடையே நிதி பற்றாமல் போகும்  என படையெடுப்பு.   அதற்கு போகும் திட்டமிடல்.  கோவில் கட்டுவது எக்காரணம் கொண்டும் நிற்கக்கூடாது என்பதற்காக,  ஆரம்பம் முதல் முடிவு வரை முழு வரைபடங்களையும்  ஒன்றன் பின் ஒன்றாக  வரைந்த குஞ்சர மல்லன் ராஜராஜப் பெருந்தச்சன்.     அதில் சிற்பிகள்,  சிலை வடிக்க மாடலிங் போல நின்ற நடனம் ஆடும் பெண்கள்.  ராஜகுருவாக இருக்கும் கருவூர்த் தேவர். கோயிலின் மண்டபத்தின் முதல் தளத்தில் இன்றும் அழியாமல் இருக்கும் ஓவியங்கள்.  இவை ஒவ்வொன்றும் அதில்  சொல்லப்பட்டிருக்கும் விதம் பிரம்மிப்பூட்டும்.  வாசிக்கும் பொழுது நம்மை அந்த இடத்திற்கே கூட்டிச்சென்று விடுவார்.  இப்படி ஐந்து பாகங்களை வாசித்து விட்டு பெரிய கோவிலுக்குச் சென்று அசை போட்டால் எப்படி இருக்கும்?   

உடையாருக்கு முன், தஞ்சைக்கு பெரிய கோயில் பார்க்கும்பொழுது  மனதில் ஒரு வியப்பு மட்டுமே தோன்றும்.   எத்தனை முறை அந்தப் பெரிய லிங்கத்தின் முன்பாக உட்கார்ந்து இருந்தாலும்,  அது பயபக்தி அனுபவமாக இருந்தது.   அது எப்படி கட்டியிருப்பார்கள், இது எப்படி திட்டமிட்டு இருப்பார்கள்  என்று திகைப்பு கலந்த யோசனை வரும்.   உடையாருக்கு பின்,  இப்படித்தானே  இதைக் கட்டினார்கள்,  இந்த இடத்தில்தான் அந்த மணலை மலைப் பாதைபோல கொண்டு போய் இருப்பார்களோ?   அந்த லிங்கத்தை இவ்வாறு தான் ஒட்டி இருப்பார்கள் என்பது பாலகுமாரன் அவர்கள் கூறியது போல கண்ணில் விரியும்.   விவரிக்கும் ஒவ்வொரு இடத்தையும், அந்த இடத்தில் நின்று, மெல்ல அசைபோட்டுப்  பார்க்கும் போது, ஆயிரம் வருடங்களுக்கு முன் செல்லும் பேரனுபவம்,  அலாதியானது,  விவரிக்க முடியாதது.   

கடைசியாக தஞ்சை சென்ற பொழுது, அது ஒரு பொழுது சாய்ந்த பொன் மாலை நேரம். அங்கு நிலவொளியில் ராஜ ராஜரோடும், கருவூர்த் தேவரோடும் பெருந்தச்சரோடும் 11ம் நூற்றாண்டுக்குச் சென்று உலாவினேன். கடைசியாக  அங்குள்ள அலுவலக அதிகாரிகளிடம் அந்த சித்திர மண்டபத்தைப்  பார்க்கலாமா? என்று கேட்டபொழுது தான்,  "நாளைக்கு வாங்க,  மத்தியானத்தில் தான் பார்க்க முடியும்,   இரவில் பார்க்க முடியாது" என்று கூறினார்கள்.  அடுத்த முறை அங்கு செல்லும் பொழுது, கண்டிப்பாக அதனைப் பார்க்க வேண்டும். 

அந்த கால கட்டங்களில் கோயில் காட்டியதை  தேவையில்லை என பொதுமக்கள் பலர் பேசிக்கொள்வதாக   அங்கங்கு கூறி இருப்பார்.  அதாவது இன்று வல்லபாய் பட்டேல் சிலையை நிறுவியிருக்கிறார்கள், அதோடு மட்டும் இல்லாமல் இந்த கரோனா நேரத்திலும் புதிய பாரளுமன்றத்தை கட்ட முனைப்பில் உள்ளார்கள்.   தலைமுறைகள், நூற்றாண்டுகள் கடந்து தங்கள் பெயர் வரலாற்றில் நிலைபெற மன்னர்கள் இதுபோல ஏதேனும் செய்து கொண்டுதான் உள்ளார்களோ  என தோன்றுகிறது.  அந்த காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து இருப்பார்கள் என்பதைப் பற்றி தெரிவதற்கான வாய்ப்புகள் பிரம்மாண்டங்களின் மூலம் குறைவு. 
எப்பொழுதும் இருவேறு கருத்துக்கள் உண்டு, இப்போது இருப்பது போலவே.  இந்த புத்தகத்தில் இருந்த வேறு எதைப் பற்றியோ ராஜராஜ சோழனின் அறிவையும், வீரத்தைப் பற்றியோ மறுப்பதற்கில்லை,  மறைப்பதற்கும் இல்லை.   பாலகுமாரன் இந்த புத்தகத்தில் கற்பனை கலந்தும்   எழுதி  இருக்கலாம்.  இதற்காக ஒரு போருக்கு சென்று, அங்கு சண்டை போட்டு,  அங்குள்ள மக்களைத் துன்புறுத்தி,  அங்கிருந்து பொருட்களை எடுத்து விட்டு வந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களை எழுப்ப வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.   கூடவே இதனைக் கட்டாமல்  இருந்திருந்தால் நமக்கு தமிழர்களின் சோழர்களின்  கட்டிடக்கலையைப் பற்றித் தெரியாமலும் போயிருக்கலாம்.  பல மாதிரியான கோணங்களில், ஒவ்வொரு பிரம்மாண்டத்தின் பின்னால் சென்று பார்க்க,  இந்த உடையாரின் வாசிப்பு எனக்கு கற்றுக் கொடுத்தது
இன்று இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தால், அது மற்றொரு கோணத்தையும் காண்பிக்கலாம்.

வாசிப்போம்.

No comments:

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...