Monday, June 01, 2020

ஜெயமோகனின் ராஜன் - Rhonda Byrne The secret

ஜெயமோகனின் ராஜன் சிறுகதை.  வாசல் குழுவின் வாசிக்கும் நிகழ்வின் மூலம், இந்த மாத இறுதியில் படிக்க நேர்ந்தது.   Rhonda Byrne எழுதிய  The  secret  - ரகசியம் எனும் புத்தகம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் படித்து முடித்திருந்தேன்.  இவை இரண்டும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உடையதாக உள்ளது.   மொட்டைத்தலை-முழங்கால்,  அம்மாவாசை-அப்துல் காதர் மாதிரி சம்பந்தம் இல்லாத போல தோணும்.  இருந்தாலும் பாப்போம்.     


யானை எப்போதும் ஆச்சரியமான ஒன்று. எங்கள் ஊர் மொடக்குறிச்சி மாரியம்மன் தேர்த் திருவிழாவில் வருடா வருடம் வரும் யானை,  கோயிலின் வலது ஓரம்,  அசை போட்டுக்கொண்டு அமைதியாக நின்று கொண்டிருக்கும்.   அதுதான் எப்பொழுதும் யானை என்றதும் என் முன் வந்து நிற்கும் காட்சி.   ஆடம்பரமான அலங்காரம்  இருக்காது.  ஆனாலும் ஒரு பயபக்தி இருக்கும்.  சற்றுத்தள்ளி யானையின் சாணி, காய்ந்து மண்ணோடு மண்ணாக கிடக்கும்.  பல பேருக்குப் படிப்பைக் கொடுக்க(?!),  மிதிபட்டு சக்கையாக கிடக்கும்.  லுங்கி அணிந்த பாகன் கூடவே இருப்பார்.  சில வேலைகளில் ஓரமாக கணேஷ் பீடி குடித்துக் கொண்டும் இருப்பார்.  'ஆரம்பத்தில் மிதித்தவர்களுக்கு தான் படிப்பு வருமோ?' என்ற அச்சம் இருந்தாலும், வீட்டில் சொல்வதால், அதனை மீண்டும் மிதித்து இருக்கலாம்.  கண்ணாடியைத்  திருப்பினால், ஆட்டோ எப்படி ஓடும் என்பது அப்பொழுதெல்லாம் தெரியாது. 


 இப்பொழுதும் எந்த ஒரு பிரம்மாண்டமான பெரும் கோயிலுக்குச் செல்லும் பொழுதும் பார்த்திருப்போம்.  தேமே என்று அந்தக் கோயிலின் முன்பாகவோ அல்லது ஓரமாகவோ நின்று கொண்டிருக்கும்.   ஈக்களுக்கு தப்பிக்க வாலையும், காதையும் ஆட்டிக்கொண்டு இருக்கும்.  சில நேரங்ககளில், கண்களிலிருந்து ஈரம் கசியவும் செய்யும், கால்களில் சீழ் வடியும் காயங்கள் கூட இருக்கும்.   நாம் கொடுக்கும் சில்லரையையும், சில வேளைகளில் கிடைக்கும் நோட்டுக்களையும் யானைப்பாகனிடம் கொடுத்துவிட்டு, நம் மீது துதிக்கையை தூக்கி 'டோம்' என போட்டு  ஆசிர்வாதம் செய்யும்.   அதற்கென கிடைக்கும் வாழைப் பழங்களை தனது பசிக்கு 'சோளப்பொரியா' தள்ளும்.     இதுதான் நம் ஊரில் நாம் காணும் யானை.  இந்த நம் ஊர் யானை பாவமானதும் கூட.   இந்த கோயிலுக்குள் அடைபட்ட யானைகளுக்கு புத்துணர்வு முகாம் என்பதும் தேவையான ஒன்றே.  


ஆனால் மலையகத்தில், யானை என்பது  ஒரு சொத்து.  மண், பெண், பொன் அதோடு யானையையும் அவர்கள் போற்றுகிறார்கள்.  பொறாமை கொள்கிறார்கள். வஞ்சகம் செய்கிறார்கள். சண்டை செய்கிறார்கள்.   மலைநாடு, யானை, எளிய மனிதன், அரண்மனையின் ஆதிக்கம் என ஒரு நல்ல விறுவிறுப்பான சிறுகதை. இது ஜெயமோகனின் களம்    'கடவுள், யானைகளுக்காக  அருளிய தேசம் கேரளம்'  என பூதத்தான் இந்தக் கதையில் குறிப்பிடுவார்.  அது கதையாக இருந்தாலும், அது தான் உண்மையோ என்றே சிறுகதையின் முடிவில் தோன்ற வைக்கிறது. 


யானையின் மூளையின் எடை 5 கிலோ.  நீல திமிங்கலத்தின் எடை அதை விட இருமடங்காம்.   யானைகள் மனிதர்கள் போலவே யோசிக்கும் திறன் உடையவை என்றும் கூறுகிறார்கள்.  இவ்வளவு பிரமாண்டமான யானையை,  ஒரு சாதாரண மனிதன், ஒரு சிறிய அங்குலத்தை வைத்து எவ்வாறு அடக்குகின்றான் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.  பூதத்தான் அது போன்ற ஒரு சாதாரண  மனிதன், பாகன்.   


ராஜன் எனும் 11 அடி உயர பெரும் யானையை கொல்வதற்கு,  அவனுக்கு கட்டளை வருகிறது.  காரியஸ்தன் அதனை கூறுகிறார், கெஞ்சுகிறார்.   மிரட்டுகிறார்.  அதுவரை அவனை அடிமை போல காண்பித்து இருப்பார்கள்.   கேரளா கடவுளின் தேசம் என  நெடு நீண்ட கதையை ஒரே மூச்சோடு சொல்லி,  அவர்களிடம் பொங்கி எழுந்து சவால் விட்டு வெளியேறுவான் பூதத்தான்.  அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் தொடையைத் தட்டி சபதமிட்டு வெளியேறுவது போல,  'சாது மிரண்டால்' எனும் ட்ரான்ஸ்பர்மேஷன் இடம்.  வேறொருவர் மூலமும்  யானையை கொன்றுவிடுவார்கள் என தெரிந்து, நேராக ஒரே சிந்தனை ஓட்டத்தோடு ராஜனை நோக்கி செல்வார்.   அது யானையை காப்பற்றும் வெறிகொண்ட ஓட்டம்.  ஆறு, ஊர், காடு என பல மைல் தூரம் அவனின் ஓட்டத்தை விவரித்த இடம், காட்சி போல் விரிகிறது 


பல மைல்கள் தூரத்தில் இருக்கும், முன்பின் பார்க்காத ராஜன் எனும் யானைக்கு இவன் வருவது எப்படித் தெரிகிறது.  அவனை எப்படி ஆரத் தழுவுகிறது .  அவனோடு எப்படி அன்பு கொள்கிறது.  கதை தான்.  இருந்தாலும் 'ரகசியம்' புத்தகத்தில் படித்த ஒரு விசயம் இங்கு பொருந்துகிறது.  இந்த பிரபஞ்சத்தில்  ஒவ்வொறுவரும், நேரடி பேச்சு  இல்லாமல் எண்ண அலைவரிசைகளாலும், தொடர்புகள் நிகழ்ந்து  கொண்டிருக்கிறதாம்.  அந்த எண்ண அலைவரிசை இந்த பூதத்தானுக்கும்,  யானைக்கும் இடையில் நிகழ்ந்து இருக்குமோ என்று யோசிக்க வைக்கின்றது.  


சிலவேளைகளில் நம்ம ஊர் கோயில்களில் பரபர என்று சாமியாடி வாக்குமூலம் கொடுப்பார்கள்  சிலர்.   அதுவும் இதனால்தானோ? அந்த instinct  எனும் அலைவரிசை என்பது மூடநம்பிக்கையோ?  இது சாத்தியமா? அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்றா? 


"ரகசியத்தில்" என்ன கூறுகிறார்கள் என்றால், ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து,  அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும்.  அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய 

 ஒரு விஷயம்,  கண்டிப்பாக நடக்கும் என்கிறது.     இதைத்தான் அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று குறிப்பிட் டார் போல.  சில நேரங்களில் நமக்கே கூட இவ்வாறு தோன்றியிருக்கும்.  "இப்பதான் நான் நினைச்சிட்டு இருந்தேன்,  நீங்க போன் பண்ணீட்டிங்க,உங்களுக்கு 100 வயசு".     இந்த மாதிரியான சில சம்பவங்கள் எதனால்,  எவ்வாறு எப்படி நிகழ்கிறது என்பது தெரியவில்லை.    இந்த பிரபஞ்சம் எண்ண அலைவரிசைகளால் ஆனது தானோ? 


சிறுகதைக்கு மீண்டும் வருவோம்.  

 

//“டேய் நீயாடா பூதத்தான்?” என்றபடி அவர் குருவிபோல ஓசையிட்டு வெற்றிலைச்சாற்றின் மிச்சத்தை கூர்மையாக அவன் மேல் துப்பினார்.//   இந்த ஒரு சொற்றொடரில் அவர்களின் ஆதிக்க மனோநிலையை அறிய முடிகிறது.  


//அவருடைய கூனும் குறுகலும் அகன்றுவிட்டிருந்தன முகமும் வேறுமாதிரி மாறியது//   முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் அவருடைய இடத்தில் அமர்ந்ததும்  அவர் எஜமானர் ஆகிறார், பூதத்தானை ஏவ ஆரம்பிக்கிறார்.   அடிமைத்தனத்தின் அடுக்கு இங்கு தெரிகிறது.   


ஒரு யானையை வாங்க, 8 யானை விலை கொடுக்க நினைக்கிறார், அரண்மனை ராஜா -கண்ணன்குமாரன்.     நம் ஊர் ஏலத்தில் ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு வெறும் கெரவத்திற்காக பலர் அதிக விலை கொடுத்து வைத்து வாங்குவது போல தான்.  மீண்டும் அண்ணாமலை படத்தில், ஏலம் எடுக்கும் இடம் எனக்கு ஞாபகம் வருகிறது.  


பெயர்களின் பின் இருக்கும் சமூகம்

யானையின் பெயர்கள்  - வலிய சங்கரன், பர்வதராஜன்.   


அரண்மனையில் உள்ளவர்களின் பெயர்கள் - குமாரன் நாயர் , அரண்மனை ராஜா-கண்ணன்குமாரன் , முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் , சட்டம்பி கருணாகரன் நாயர், கதகளி ஆசான் கிருஷ்ணன் நாயர் என பெரும்பாலும் பெருந்தெய்வ  கடவுள்களின் பெயர்களே,   பூதத்தானை ஆதிக்கம்  செய்பவர்களுக்கு    உள்ளது.  கூடவே தெய்வமாக போற்றப்படும் யானைக்கும்.   


யானைப்பாகனாக வரும் பூதத்தான்.   இவரின் பின்னே நாயர் உள்ளதா என்றால் இல்லை.  பூதத்தான் ஒரு சிறு தெய்வம்.  பூதத்தான் கோவில் சுடலைமாட சாமி கோவிலோடு கன்யாகுமரியில் திருவிதாங்கோடு  எனும் ஊரில் உள்ளது.  பார்க்க லிங்க்.  


"பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் என்பது ஈண்டு நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , தீ எனும் பஞ்ச பூதமும் அல்ல" -   இவ்வாறு நாஞ்சில் நாடான் கூறுகிறார்.  

அந்த சமூக அடுக்கின் கீழ் மட்டத்தில் இருப்பவனை மேல் மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் இருப்பவர்கள் எவ்வாறு அவனை மரியாதை இல்லாமல் விழிக்கிறார்கள் என்பது கதையில் இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கும்.  


ஜெமோகனுக்கு அறிய பொருட்களின் மீதான காதல்  இருக்கும் என நினைக்கிறேன்.  ஆர்சனிக்(Arsenic) - சீமை விஷம் பற்றி இதில் கூறி  இருப்பார்.   அது எவ்வளவு கொடிய விஷம்  என்பதை கூகுளால் அறியமுடிகிறது. 


கதையின் காலம் 50 வருடம் பின்னோக்கி இருக்கலாம்.  ஜெயமோகன் அவர்களுக்கு யானைகளின் மீது ஆகச்சிறந்த பிரியங்கள் இருக்கக்கூடும். அவரது கதைகளில் பெரும்பாலும் யானைகளை சேர்த்துவிடுகிறார் அல்லது நான் அவரின் யானை கதைகளை மட்டும் படித்திருக்கக்கூடும்.  யானை டாக்டர் எனும் கதையும்  ஒரு அற்புதமான ஒன்று.   


இறுதியாக பாகன் பூதத்தானும், யானை ராஜனும் என்ன ஆகிறார்கள்?  சண்டைக்கு வந்தவர்கள் ஏன் அவ்வாறு ஆகிறார்கள்?  அந்த ரகசியத்தில் வரும் பிரபஞ்சத்தின் அலைவரிசை தானோ? 

Wednesday, April 29, 2020

வாசிப்பில் நேசிப்பு - உடையார்

இப்பொழுது வீட்டிற்குள் மாதக்கணக்கில் முடங்கி இருப்பது போலவே 2009-ல்  வீட்டின் படி தாண்டாமல் இரு வாரங்கள் முடங்கிக் கிடந்தேன்.  காரணம் சின்னம்மை. அப்பொழுது முடங்கியிருந்த இடம் லண்டன்.  அப்பொழுது தான் ஸ்மார்ட் போ∴ன்கள் வர ஆரம்பித்த நேரம்.  அவ்வளவாக புழக்கத்தில் இல்லை.  பாட்டு கேட்பது மட்டுமே பொழுதை ஓட்டியது.   அது போரடிக்க ஆரம்பித்த பொழுது நுழைந்த இடம் புத்தகம்.   அந்த இக்கட்டான நேரத்தில் பெரும் ஆறுதலாகவும், நேரம் கடத்தியாவும்  இருந்தது  புத்தகம் மட்டுமே.  ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் இருந்த பொன்னியின் செல்வனை வரவழைத்து, அதன் வழியாக சோழநாட்டிற்கு பயணப்பட்டேன்.  மீண்டும் இரண்டாவது முறையாக படிக்கும் பொழுது, பொன்னி நதி வேறு மாதிரியான கோணத்தில் புலப்பட ஆரம்பித்தது.  இப்படித்தான் பெரும் புத்தக வாசிப்பு என்னை ஆட்கொண்டது. 

இதில் குறிப்பிட வேண்டிய விசயம், அங்கு நூலகத்தில் 10 புத்தகங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். அந்தப்பகுதியில் பெரும்பான்மையினர்  தமிழ் பேசும் மக்கள் என்பதால், நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும்.  உறுப்பினராக பெரிய நடைமுறைகள் இல்லை, அந்த கவுன்சிலில் கட்டுப்பாட்டுக்குள் முகவரி 
இருந்தால் போதும்.

அதன் பிறகு, கல்கியைத் மீண்டும் ஒரு வலம் வர ஆரம்பித்தேன். பல்லவர்களிடம் இருந்து சோழ நாட்டை மீட்ட பார்த்திபன் கனவு.   இந்த புதினங்களின் வழியாக, சோழர்களின் வரலாறு பற்றிய பெருமை  என்னுள்  அப்பிக் கிடந்தது.  தொடர்ந்து சில மாதங்கள் கழித்து தஞ்சையிலிருந்து  'சிவகாமியின் சபதம்' வழியாக காஞ்சிக்கு      பல்லவர் கால வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள நகர்ந்தேன்.    இப்படியாக கல்கியின் சுவைஞனாக அந்நேரத்தில் மாறியிருந்தேன்.    ஆனாலும், புத்தங்களில் கூறி இருந்ததை மட்டும், பெரும்பாலும் நம்பி வண்டி ஓடிக்கொண்டு இருந்தது.

ஒவ்வொரு முறை தஞ்சைப் பக்கம் போகும்பொழுது, பெரிய கோவில் எனது பார்க்கும் பட்டியலில் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் அதன்மீது ஆச்சர்யம் மேலிடும்.  தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய வரலாற்றை முழுவதும் தெரிந்து கொள்வதில் ஆவல் ஏற்பட்டது.   அது பற்றி ஏதாவது புத்தகம் உள்ளதா? எனும்  தேடல் நின்ற இடம்…

பாலகுமாரனின் உடையார். 

உடையார் புத்தகத்தின் அனைத்து பகுதிகளும், லண்டன் ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் பார்த்திருந்தேன்.   அப்பொழுதெல்லாம் பாலகுமாரனின் மேல் அவ்வளவாக ஈர்ப்பு  இல்லாததால், அவர் பக்கம் செல்லவில்லை.  (ஆமா, இவரு வேற எல்லாரையும் வாசித்துவிட்ட மாதிரி, அதுவரை படித்தது, ரெண்டு புத்தகம் அதுவும் கல்கி அவர்களுடையது.)

 ஐந்தாறு வருடம் முன்பு ஈரோடு புத்தகத் திருவிழாவில் உடையாரின் முதல் பகுதியை வாங்கினேன்.  நம்ம வசிக்கும் வேகம் தான் நமக்கு தெரியுமே?  ஒரு வழியாக, அனைத்து பகுதிகளையும் வருடக் கணக்காக படித்து முடித்தேன்.   இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால்  மூன்று புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு பகுதியாக வாங்கித்தான் முடித்தேன்.  தோராயமாக ஆறு மாத இடைவெளியில் நடக்கும்  சென்னை மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் வாங்கியவை தான். 

தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு நான் சென்ற அனுபவத்தையும், என்  வாசிப்பு அனுபவத்தையும்  உடையாருக்கு முன், உடையாருக்குப்  பின் என்று பிரிக்கலாம். 

ராஜராஜ சோழன் சாளுக்கிய நாடுகளின் மீது படையெடுத்துச் செல்வதை மட்டுமே அவ்வளவு பிரமாண்டமாக ஒரு பாகத்தில் அழகான, விரிவான வர்ணனைகளோடு விவரித்து இருப்பார்.   போருக்கு வீரர்கள் செல்லும் வழியில், அவர்களுக்கு முன் உணவு சமைப்பவர்கள் சென்று தங்கி அவர்களுக்கு சமைத்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்வார்கள்.  பின்னே வீரர்கள் கிளம்பி வருவார்கள்.  இது ஏனோ பழனிக்கு பாத யாத்திரை செல்லும் மக்களை நினைவூட்டியது.  காலகட்டத்திற்கு ஏற்ப முன்னே அவர்களின் கட்ட வண்டி அல்லது  டெம்போவில் சென்று உணவு சமைத்து வைத்திருப்பாப்பார்கள்.   நடைபயணம் வருவோரும் பின்னே வந்து சாப்பிட்டுவிட்டு நடை பயணத்தை தொடர்வார்கள்.  இப்படியாகத் தான்  தஞ்சையிலிருந்து ஹம்பி வரை வாரக்கணக்கில் சென்று உள்ளார்கள்.
 
துங்கபத்திரா நதி காட்டாற்று வெள்ளம் போல சென்று கொண்டிருக்கும் ஒரு நதியாகும்.  புவியியல் ரீதியாகவே துங்கபத்திரா நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பலர் படையெடுத்து வருவதைத் தடுக்கும் அரண்.    ஆற்றுக்கு இந்தப் பக்கம் தங்கி,  தண்ணீர் குறைய காத்திருப்பார்கள்.  ஆனால் ராஜராஜ சோழன்  அந்த காற்றாற்று  நீரில் ஓரிடத்தில் அவரின் குதிரையோடு இறங்கி, சினங்கொண்ட யானை போல ஆற்றைக் கடந்து முன் செல்வார், வீரர்கள் பின் தொடர்வார்கள்.  போர் நடக்கும்.  வெற்றி அடைவார்கள். அங்கு இருந்த செல்வங்களை, பொருட்களை சூறையாடி வருவார்கள்.   இந்த போருக்கான காரணம், தஞ்சை பெரிய கோயில் கட்ட ஆரம்பித்த பிறகு நிதி பற்றாக்குறை வரும் எனும் போதுதான்.  இரு வருடங்களுக்கு முன் துங்கபத்ரா நதியை ஒட்டிய ஹம்பி இடங்களுக்குச் சென்றிருந்தோம்.  உடன் வந்த நண்பர்களிடம்  இதனைக் கூற, நம்புவதற்கு சற்று சிரமப்பட்டார்கள்.

உடையார் புத்தகம், பெரிய கோவிலைக் கட்டுவதற்கான திட்டமிடலில் தொடங்கும்.   கட்டும்பொழுது இடையே நிதி பற்றாமல் போகும்  என படையெடுப்பு.   அதற்கு போகும் திட்டமிடல்.  கோவில் கட்டுவது எக்காரணம் கொண்டும் நிற்கக்கூடாது என்பதற்காக,  ஆரம்பம் முதல் முடிவு வரை முழு வரைபடங்களையும்  ஒன்றன் பின் ஒன்றாக  வரைந்த குஞ்சர மல்லன் ராஜராஜப் பெருந்தச்சன்.     அதில் சிற்பிகள்,  சிலை வடிக்க மாடலிங் போல நின்ற நடனம் ஆடும் பெண்கள்.  ராஜகுருவாக இருக்கும் கருவூர்த் தேவர். கோயிலின் மண்டபத்தின் முதல் தளத்தில் இன்றும் அழியாமல் இருக்கும் ஓவியங்கள்.  இவை ஒவ்வொன்றும் அதில்  சொல்லப்பட்டிருக்கும் விதம் பிரம்மிப்பூட்டும்.  வாசிக்கும் பொழுது நம்மை அந்த இடத்திற்கே கூட்டிச்சென்று விடுவார்.  இப்படி ஐந்து பாகங்களை வாசித்து விட்டு பெரிய கோவிலுக்குச் சென்று அசை போட்டால் எப்படி இருக்கும்?   

உடையாருக்கு முன், தஞ்சைக்கு பெரிய கோயில் பார்க்கும்பொழுது  மனதில் ஒரு வியப்பு மட்டுமே தோன்றும்.   எத்தனை முறை அந்தப் பெரிய லிங்கத்தின் முன்பாக உட்கார்ந்து இருந்தாலும்,  அது பயபக்தி அனுபவமாக இருந்தது.   அது எப்படி கட்டியிருப்பார்கள், இது எப்படி திட்டமிட்டு இருப்பார்கள்  என்று திகைப்பு கலந்த யோசனை வரும்.   உடையாருக்கு பின்,  இப்படித்தானே  இதைக் கட்டினார்கள்,  இந்த இடத்தில்தான் அந்த மணலை மலைப் பாதைபோல கொண்டு போய் இருப்பார்களோ?   அந்த லிங்கத்தை இவ்வாறு தான் ஒட்டி இருப்பார்கள் என்பது பாலகுமாரன் அவர்கள் கூறியது போல கண்ணில் விரியும்.   விவரிக்கும் ஒவ்வொரு இடத்தையும், அந்த இடத்தில் நின்று, மெல்ல அசைபோட்டுப்  பார்க்கும் போது, ஆயிரம் வருடங்களுக்கு முன் செல்லும் பேரனுபவம்,  அலாதியானது,  விவரிக்க முடியாதது.   

கடைசியாக தஞ்சை சென்ற பொழுது, அது ஒரு பொழுது சாய்ந்த பொன் மாலை நேரம். அங்கு நிலவொளியில் ராஜ ராஜரோடும், கருவூர்த் தேவரோடும் பெருந்தச்சரோடும் 11ம் நூற்றாண்டுக்குச் சென்று உலாவினேன். கடைசியாக  அங்குள்ள அலுவலக அதிகாரிகளிடம் அந்த சித்திர மண்டபத்தைப்  பார்க்கலாமா? என்று கேட்டபொழுது தான்,  "நாளைக்கு வாங்க,  மத்தியானத்தில் தான் பார்க்க முடியும்,   இரவில் பார்க்க முடியாது" என்று கூறினார்கள்.  அடுத்த முறை அங்கு செல்லும் பொழுது, கண்டிப்பாக அதனைப் பார்க்க வேண்டும். 

அந்த கால கட்டங்களில் கோயில் காட்டியதை  தேவையில்லை என பொதுமக்கள் பலர் பேசிக்கொள்வதாக   அங்கங்கு கூறி இருப்பார்.  அதாவது இன்று வல்லபாய் பட்டேல் சிலையை நிறுவியிருக்கிறார்கள், அதோடு மட்டும் இல்லாமல் இந்த கரோனா நேரத்திலும் புதிய பாரளுமன்றத்தை கட்ட முனைப்பில் உள்ளார்கள்.   தலைமுறைகள், நூற்றாண்டுகள் கடந்து தங்கள் பெயர் வரலாற்றில் நிலைபெற மன்னர்கள் இதுபோல ஏதேனும் செய்து கொண்டுதான் உள்ளார்களோ  என தோன்றுகிறது.  அந்த காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து இருப்பார்கள் என்பதைப் பற்றி தெரிவதற்கான வாய்ப்புகள் பிரம்மாண்டங்களின் மூலம் குறைவு. 
எப்பொழுதும் இருவேறு கருத்துக்கள் உண்டு, இப்போது இருப்பது போலவே.  இந்த புத்தகத்தில் இருந்த வேறு எதைப் பற்றியோ ராஜராஜ சோழனின் அறிவையும், வீரத்தைப் பற்றியோ மறுப்பதற்கில்லை,  மறைப்பதற்கும் இல்லை.   பாலகுமாரன் இந்த புத்தகத்தில் கற்பனை கலந்தும்   எழுதி  இருக்கலாம்.  இதற்காக ஒரு போருக்கு சென்று, அங்கு சண்டை போட்டு,  அங்குள்ள மக்களைத் துன்புறுத்தி,  அங்கிருந்து பொருட்களை எடுத்து விட்டு வந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களை எழுப்ப வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.   கூடவே இதனைக் கட்டாமல்  இருந்திருந்தால் நமக்கு தமிழர்களின் சோழர்களின்  கட்டிடக்கலையைப் பற்றித் தெரியாமலும் போயிருக்கலாம்.  பல மாதிரியான கோணங்களில், ஒவ்வொரு பிரம்மாண்டத்தின் பின்னால் சென்று பார்க்க,  இந்த உடையாரின் வாசிப்பு எனக்கு கற்றுக் கொடுத்தது
இன்று இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தால், அது மற்றொரு கோணத்தையும் காண்பிக்கலாம்.

வாசிப்போம்.

Sunday, April 26, 2020

கொரோனாவும் கொள்ளுப்பருப்பும்

உகாதி மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பில் ஆரம்பித்தது  21 நாள் ஊரடங்கு உத்தரவு.      விஷு மற்றும் தமிழ் வருடப்பிறப்பில்(!?) மீண்டும் தொடர்ந்து கொண்டுள்ளது.  இந்த இடைவெளியில் கொரோனா  இந்தியாவில் மெதுவாக ஆரம்பித்து, இரண்டாவது ஊரடங்கில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டுள்ளது.   இப்பொழுது தான் மூன்றாவது ஸ்டேஜ்  அடைந்துள்ளதாக நினைக்கிறேன்.  எண்ணிக்கை தினமும் மேல்நோக்கியே உள்ளது.  இதே நிலைமை இன்னும் பத்து  நாட்களுக்கும்  நீடித்தால்,  மே 3-ல் ஊரடங்கு உத்தரவை, மத்திய அரசு தளர்த்துவது பெரும் கேள்விக்குறி.   தளர்த்தினாலும், பெரு மற்றும் சிறு நகரங்களில், சகஜ நிலை இருக்காது என்று தான் தெரிகிறது.  


தமிழகத்தில் எண்ணிக்கை அரசின் அறிவிப்பின் படி குறைந்தும்  வருகிறது.  அதிலும் நோய்  பூரணமாக குணமாகி வெளியே வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி நம்பிக்கையை வளர்ந்துள்ளது.  ஆனாலும், மருத்துவர்கள் பாதிப்படைந்து இறப்பதும், அவர்களின் அடையாள போராட்டமும் யோசிக்க வைக்கிறது.  கூடவே சத்யம் தொலைக்காட்சி அதன் ஊழியர்கள் பாதிப்படைந்ததால் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதையும் உற்று நோக்க வேண்டும்.   கூடவே முதல் கட்டமாக ரெட் அலர்ட்டில் வந்த ஈரோட்டிலும் அரசு அதிகாரிகளின் முனைப்பால் மிக நன்றாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று அது ஆம்பர் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  


கர்நாடகாவில் பெங்களூரிலிலும் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  நான் எதிர்பார்த்த அளவில் பரவல் இல்லை என்பது சற்று ஆறுதல்.


அமெரிக்கா, ஸ்பெய்ன், பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கின்றது.  இறப்பு விகிதமும்  அதிகம்.  ஒரு குடும்பத்தில் ஆறு பேறும்  தாத்தா பாட்டி, அப்பா அம்மா குழந்தைகள் என மொத்தமாக உயிரிளந்தது  அதிர்ச்சி அளிக்கிறது.   


 இதற்கு காரணமாக சின்னம்மை, பெரியம்மை மற்றும் சில தடுப்பூசிகளை,  நாம் இன்றும் போட்டுக்கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் பேசிக்கொள்கிறார்கள்.  வளர்ந்த மற்றும் மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற நோய்களை முன்னரே நிரந்தரமாக தடுத்துவிட்டதால்,   இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதில்லை  என்ற கருத்தும்  நிலவுகிறது.    கூடவே மலேரியாவிற்கான மருந்தினை,  அமெரிக்காவிற்கும், பிரேசிலுக்கும் உதவும் என்று அந்தந்த நாட்டின் அதிபர்களும்,  பிரதமர்களும்  நம்மிடம் மிரட்டியும் கெஞ்சியும் வாங்குகிறார்கள்.    தடுப்பூசிக்கான ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.   கண்டுபிடிக்கப்பட்டவுடன்,  வளர்ந்த நாடுகள் ராபிட் டெஸ்ட் கிட்டை வழிப்பறி செய்தது போல, இதனையும்   எடுத்துக்கொண்டு,  அது நம் கையில் கிடைக்க சில மாதங்கள் ஆகலாம்.    அந்த கிட், சரியாக சோதனை செய்யவில்லை என்பது வேறு விசயம்.    


இதுவரை நாம் ஊரடங்கினால் ஒழிந்து கொண்டு இருந்ததால், இப்பொழுது இதன் வேகம் குறைவாகவும்  இருக்கலாம்.  மீண்டும் இதுபோல ஒரு அலை கூட அடிக்கலாம்.   இந்த கண்ணாமூச்சி விளையாட்டு இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாரும் கணிக்க இயலவில்லை.  கண்டிப்பாக மற்ற வைரஸ்களைப்போல கொரோனாவோடு தான் வாழப்  பழகுவோம் நேர்மறையாக.    


இந்த காலகட்டம் எப்படி சென்று கொண்டிருக்கின்றது?


இந்த ஊரடங்கு  காலகட்டம் குழந்தைகளுக்கு எப்படி சென்று கொண்டிருக்கின்றது?


முதல் ஒரு வாரம்,  இந்த பதைபதைப்பு ஒரு பக்கம் நமக்கு இருந்தாலும், குழந்தைகளுக்கு விடுமுறை மனநிலை  தான்.    குழந்தைகள் அவரவர் போக்கில் டிவியில் மூழ்கினர்.    டிவியில் இருந்து அவர்களை விடுவிக்க சற்று படாத பாடு பட வேண்டியதாக இருந்தது.     ஒரு பொன்னான(!) நாளில், அவர்களின் செல்ஃப்களில் இருந்த  சென்ற வருட புத்தகங்களை எடுத்துவிட்டு,  அடுத்து வருடத்திற்கு தயாராவதற்கு, அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம்.   பள்ளி மீண்டும் எப்பொழுது ஆரம்பிப்பார்கள் என்பது கொரோன விட்ட வழி தான்.   இருந்தாலும், நமக்கு வளையும்போது கடமையை செய்துவிட வேண்டும்.   அந்த சுரங்கத்தில்(!) இருந்து ,பழைய உண்டி ஒன்று சற்றே கணமாகக்  கிடைத்தது.   திறந்து சில்லறைகளை எண்ணிப் பார்த்ததில் கணிசமாக கிடைத்தது 116 ரூபாய்.  


 "என்கிட்ட இந்த காயின்ஸ்  எல்லாமே குடுடா,   உனக்கு அதுக்கு பதிலா 100 ரூபா நோட்டு தாறேன்.  நீங்க ஒரு நாளைக்கு மூணு  மணி நேரம் மட்டும் டிவி பாருங்க.. உங்களுக்கு தினமும் ஒரு ரூபா தாறேன்... உண்டில போட்டு வைங்க " எப்படியோ இந்த யோசனை வந்தது.  


கேட்டதும், உடனே தந்து விடுவார்களா என்ன?  அதிலும் டிவியில் வேற கைய வெச்சாச்சு. கொஞ்ச நேரம் விளக்கி, அவர்களின் 100 ரூ நோட்டும், அதிலேயே இருக்கும் என கூற வேண்டியதிருந்தது.   ஒருவழியாக சமாதானமாகி அந்த சில்லறைகளை கொடுத்து நோட்டை வாங்கி அதனுள்ளே  போட்டதும் திருப்தி அடைகிறார்கள்.  இதுல இன்னொருவருக்கு பழைய உண்டியில் ஒன்றுமே  இல்லாததால், பஞ்சாயத்தைத்  தீர்க்க சும்மாவேனும் கொடுக்க வேண்டி இருந்தது.     


அந்த மூன்று மணி நேர கணக்கு என்னவென்றால்,  மூன்று வேளையும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை  டிஸ்னி கிட்ஸ்  டிவி யில் வரும் "லிட்டில் சிங்கம்" எனும் அரை மண்டையன் தான் "ஆத்தா.. மாகி.. சதக்களி" என்று  அவர்களுக்கு சோறு ஊட்டுவான். 


'சரி, இதையே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம்' என்று நினைத்து, அவர்கள் சில செய்யாத  காரியங்களையும் பட்டியல் இட ஆரம்பித்தோம்.  ஒவ்வொரு காரியத்திற்கும் ரூபாய் கொடுத்தால் கம்பெனிக்கு கட்டுபடியாகாது.  இங்கு தான் இந்த சூப்பர் மார்க்கெட் தந்திரம்  உதவியது. 

"அஞ்சாறு பாயிண்ட் சேர்த்தால் ஒரு ரூபாய் வெச்சுக்கலாமா?" .என்றதும் ஏதோ விளையாட்டு என்று நினைத்து அவர்களாகவே மகிழ்ச்சியுடன் 'சரி' என்றார்கள்.   பின்னாடி வரும் விளைவுகள் அவர்களுக்குத் தெரியவில்லை.    "காலைல எந்திரிச்சு, மூஞ்சி கழுவி, பிரஸ் பண்ணி பெட்சீட் மடிச்சு போட்டீங்கன்னா,  ஒரு பாயிண்ட்".   எனக்கே,  'இது எல்லாத்துக்கும் ஒரு பாய்ண்டா தானா?'  என்று தான் இருந்தது.  அவர்களே சரி என்று விட்டார்கள்.    
"அப்புறம் பூச்செடிக்கெல்லாம்  தண்ணி ஊத்தணும்.  அதுக்கு ஒரு பாயிண்ட்.  கழுவிய  பாத்திரமெல்லாம் அங்க அங்க எடுத்து வச்சீங்கன்னா அதுக்கும் ஒரு பாய்ண்ட்"   நம்ம டிபார்ட்மெண்ட்டெல்லாம் நைசாக சேர்த்துக் கொண்டே வந்தேன்.     "அப்புறம் அம்மாவுக்கு  என்ன ஹெல்ப் பண்ணுனாலும்  ஒரு பாயிண்ட்"  (பஞ்சாயத்து வந்துடக்கூடாது).. "நீயே தூங்க போறதுக்கு முன்னாடி எவ்வளவு பாயிண்ட்னு சொல்லிரு." இருவரும் ரொம்பவும் உற்சாகம் ஆகிவிட்டார்கள்.  


இரண்டு மூன்று நாட்கள் சென்றது.  அவர்களே இரவு எத்தனை புள்ளிகள் எடுத்தார்கள் என்பதைக் கூறினர்.    அவர்கள் சொல்வதைக் கொண்டு அந்தந்த  நாட்களுக்கான  1 ரூபாய் கொடுத்தேன்.   புள்ளிகள் சற்று கூட குறைய இருந்தாலும் கொடுத்தேன்.    இன்னும் இதை செம்மைப்படுத்த,  "ஒரு நோட்ல உங்களுக்கு எதற்கெல்லாம் பாயிண்ட் வேண்டும் என்று யோசிக்கிறயோ, அதெல்லாம் வரிசையா எழுதுடா" 


ஒரு பத்து பன்னிரண்டு சிறு சிறு வேலைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள்.   அதில் குறிப்பாக டிவி நேரத்தை குறைத்தோம்.  "டிவி ஒன்றரை மணி நேரம் பாத்தீங்கன்னா.. 2 பாயிண்ட்.   மூன்று மணி நேரம் பாத்தீங்கன்னா ஒரே பாயிண்ட்  தான்...   அதுக்கு மேல போயிருச்சுனா பாயிண்ட் இல்லை, சரியா?"     ரெண்டு பாயிண்ட் கிடைப்பதால், சரி என்பதற்கான தலையாட்டல் உற்சாகமாக வந்தது.  

லிஸ்ட் போட்ட மறுநாளே அவர்களைப் பொறுத்த அளவில் சிக்கல்.  "அப்பா, இன்னிக்கு நான் 8 பாயிண்ட்.  6 பாய்ண்ட்டுக்கு ஒரு ரூபா.  மீதி ரெண்டு பாய்ண்ட்ட என்ன பண்ணலாம்.  அதுக்கு எவ்வளவு இன்னிக்கு?" என்றாள்.    " மீதி பாயிண்ட நாளைக்கு  சேர்த்திக்க, அவ்வளவு தான்" 


இப்படியா ஆரம்பித்து  நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.   டிவி முற்றிலும் குறையவில்லை என்றாலும், தொடர்ந்து மணிக் கணக்காக பார்ப்பது குறைந்து விட்டிருந்தது.   சில உருப்படியான வேலைகள்  நடக்க ஆரம்பித்தது.  


இரண்டு  மூன்று நாட்கள் கழித்து சாப்பாட்டு  நேரத்தில் டிவி பார்ப்பதை நிறுத்த இன்னொரு புள்ளி கொடுத்தோம்.    சில நாட்கள் கதைகள், சில நாட்கள் அட்லாஸ் விளையாட்டு என ஓடும். அட்லாஸ் என்பது  "வாட் பிக்சர்" போல ஊர்களின் பெயர்கள்.  முடியும் எழுத்தில் தொடர வேண்டும்.  இது கொஞ்சம் அனைவருக்கும் பொதுவாக இருந்தது.   இப்போதைக்கு சினிமா பெயர்கள் அவ்வளவாக அவர்களுக்குத் தெரியாது.     
     
அப்படித்தான் அன்று கொள்ளுப்பருப்பு. 


"சரி வாங்க.. தட்டெல்லாம் எடுத்து வைங்க.. டிவி  பாக்கமாக சேர்ந்து சாப்பிடுவோம்" 
"ஓகே"  என வந்து சேர்ந்து விட்டார்கள்.  


"இந்த கொள்ளு பருப்ப எப்படி சாப்பிடனும் தெரியுமா?"
" "
"சோறு போட்டு.. அதுமேல கொள்ளுப்பருப்பு போட்டு.. நடுவுல ஒரு பெரிய குழி பண்ணனும்.   குழி நம்பர வரைக்கும்  நல்லெண்ணெய் ஊத்தி, நல்லா பெசஞ்சுக்கணும். இப்ப வாய்க்கு அளவா உருண்டை பிடிச்சு வெச்சுக்கணும்.   இப்போ ஒரு உருண்டை எடுத்துக்குங்க.   இந்த உருண்டைய யாருக்குக்  குடுக்கலாம்?"
" " அமைதி 
"உங்களுக்கு யாரு ரொம்ப பிடிக்கும்?"  
"தியா"
"சரி,  தியாவுக்கு ஒரு ஆப்பு போட்டுக்குங்க"
"சென்னைல  தான தியா  இருக்கா... எப்படி கொடுக்கறது?"  இந்தமாதிரி லாஜிக்கானா  கேள்வியெல்லாம் நாம் கேட்டிருப்போமா? எனத் தெரியவில்லை.   
"அவுங்க பேர சொல்லிட்டு நாம போட்டுக்கணும், அது அவங்களுக்கு போய் சேர்ந்துடும்"
"ஓகே"
"ஆஆப்" 


ஒருவழியாக முதல் உருண்டையின் சுவையை உணர்ந்து, மெதுவாக மென்று முழுங்க ஆரம்பித்தார்கள்.   இதற்கிடையில் எனக்கு, பசி தாங்க முடியாமல் இன்னோர் உருண்டையும் நைசாக போட ஆரம்பித்தேன்.  


"அப்புறம் அடுத்த வாய் யார்க்கு? "
"அம்மாக்கு"


 "இங்க இருக்கறவங்களுக்கு கொடுக்க தேவையில்லை, சரி  இருந்தாலும் பரவால்ல,  ஆஆப் போட்டுக்குங்க" 


அடுத்தடுத்து அப்பா, அம்மாயி, ஆயா, தாத்தாக்கள், ஜனனி அக்கா, அத்தை, மாமா என  உருண்டைகள் காலி ஆகி இருந்தது.  


கொரோனா ஊரடங்கில் இந்த பாய்ண்ட் சிஸ்டம், கொள்ளுப் பருப்புடன் நன்றாகவே வேலை செய்ய  ஆரம்பித்துள்ளது. எப்பொழுதுமே சாப்பாட்டுத் தட்டில் ஒரு வாய் சோறு வைத்து விடும் பழக்கமும் உண்டு.  சமுத்திரக்கனியாக மாறி அதற்கும் விளக்கம் கொடுத்து அதுவும் குறைந்து உள்ளது.    இதற்கு  முன்பு சோறு ஊட்டிக் கொண்டிருந்த அந்த "லிட்டில் சிங்கம்" மற்ற நேரங்களுக்கு  அளவாக சென்று விட்டான்.  சாப்பிட்டு முடித்துவிட்டு  "அப்பா, காத்தால கோட்டா ஹால்ப் ஏ ஹவர்க்கு அந்த அரை மண்டையன  பார்த்துக்குறோம்" என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். 


அவர்களாகவே சாப்பாட்டுத் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு கதைபேச, விளையாட, ஏதேனும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளார்கள்.  கூடவே டிவிக்கான நேரம் குறைந்து விட்டதால் சமையல் உதவிக்கும்(?) வந்து விடுகிறார்கள்.   ஒவ்வொரு வேளையும் வேறு வேறு விதமாக அவர்களுக்கு சென்றுகொண்டு உள்ளது, கூடவே நமக்கும்.  சின்னச்சின்ன மாற்றமும், முயற்சியில் தான் உள்ளது.  ஊரடங்கு உங்களுக்கு எப்படி?  

Wednesday, April 01, 2020

பெங்களூரில் கொரோனா -2


அதிகாரப்பூர்வமாக பெங்களூரில்  மூன்றாவது  வாரம் வீடடங்கி இருத்தலில் உள்ளோம்.  மார்ச் 10 பெங்களூரின் முதல் கொரோன நபர் ( இந்தியாவின் 'Patient 51') மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அந்த வாரத்தின் சில நாட்கள் பயத்தோடு அலுவலகம் சென்று வந்தோம்.   அடுத்த திங்கள் முதல்  வீடு மட்டுமே. கர்நாடக அரசும் அதன் பிறகு பெங்களூரை ஊரடங்கின் கீழ் கொண்டு வந்துவிடுகிறார்கள்.  இப்படியாக பிரதமர் ஊரடங்கை  அறிவித்த 24ம் தேதிக்கு,  முன் கிட்டத்தட்ட ஒருவாரம் முன்னதாகவே இங்கு வீட்டினுள் உள்ளோம்.     

தற்பொழுது இங்கு  ஒரு ஆறுதல் செய்தி.   முதலில் கோரோனோவுக்கு பாதிப்படைந்த  'Patient 51',  2666 பேரை மறைமுகமாகப் பாதித்ததாக கர்நாடக அரசு கூறியிருந்தனர்.   அவரின் மனைவி மற்றும் குழந்தையைத் தவிர வேறு யாருக்கும் அவர் தொற்றை இதுவரை அளிக்கவில்லை.  இந்த ஆறுதல்,  கலவரமடைந்து இருந்த எங்களை சற்று ஆசுவாசமடைய வைக்கிறது.   இவர் பெங்களூர் கொரோனா தொற்றுக்கு நல்லவிதமான நிகழ்தகவின் (best  case) உதாரணம்.  ஆனால் முன்பே கூறியது போல, தென் கொரியாவின் 'patient  31'  போல மோசமான  நிகழ்தகவாக (Worst case)  இருந்திருந்தால்,  இங்கு நிலைமையை கற்பனை செய்ய முடியவில்லை.  நிலைமை மிக மோசமாக போய்  இருக்கும்.       


இரு வாரங்களுக்கு முன் இதனைப் பற்றி எழுதும்பொழுது,
தமிழ்நாடு - 0
கர்நாடகா - 1
யுகே  - 396

இன்றைய நிலைமை நமக்கே தெரியும்.  பல மடங்காக  வேகமாக பரவி வருகிறது.  
        

தமிழத்தில் நேற்றும்,  இன்றும்  இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது.   இத்தோடு  முடிந்துவிடக் கூடாதா என்று எண்ண  வைக்கிறது.  கூடவே  அச்சத்தையும்  விளைவிக்கிறது.    திடீரென அதிகப்படியான எண்ணிக்கையில்  ஈரோட்டுடன் நேற்று திருநெல்வேலியும், நாமக்கலும்  சேர்ந்து கொண்டது.    இன்று கோவையில் சட்டென அதிகரித்துள்ளது.   இந்திய அளவில் தமிழ் நாடு மூன்றாம் இடத்துக்கு நகர்ந்துள்ளதும் அதிர்ச்சி.   தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருநெல்வேலியில் பரவ மிக  முக்கிய காரணமாக டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாடு என்பது மேலும் அதிர்ச்சித் தகவல்.  இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கணிசமாக ஆந்திரா , தெலுங்கானாவிலும்  கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் என இங்குள்ள நண்பர்கள் கூறுகிறார்கள்.  இந்த இக்கட்டான நேரத்தில், மார்ச் முதல் வாரத்தில் நடைபெற்ற  இந்த மாநாட்டிற்கு  எதற்காக அனுமதி அளித்தார்கள் என்பது தெரியவில்லை.     

பிரதமர் அறிவித்த ஊரடங்கை ஒருவாரம்  கழித்து உற்று நோக்கினால், இதுவும் டிமானிடைசேஷன் போல பின் விளைவுகளை யோசிக்காமல் எடுத்து விட்ட முடிவோ என்றும் தோன்றுகிறது.  பல இடங்களில் கட்டிட மற்றும் கூலி தொழிளார்கள் உண்ண உணவு இல்லாமல், சொந்த ஊருக்கு நடை பயணமாக திரும்பும்  காட்சி கலங்கடிக்கிறது.  குழந்தைகளுடன் நடந்து வரும் பெண்கள், நம் நாட்டின் ஏற்ற தாழ்வை பொட்டில் அடித்தாற்போல உணர்த்தி விடுகிறார்கள்.  இந்த மனிதர்களுக்கும் பயத்தைப் போக்கி  அங்கங்கு இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை  உதவ சொல்லி கொஞ்சம் மனிதத்தையும் அரசு காட்டி இருக்கலாம்.  பயப்படாமல்  இருக்க இந்த விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெளிவாக தெரிவிக்கலாம். 

தமிழக அரசு இந்த விஷயத்தில்  மிகத்தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.  பாராட்ட  வேண்டிய ஒன்று.  சமூக வலைத்தளங்களை நல்ல விதமாக பயன்படுத்தி மாவட்ட ஆட்சியருக்கு நேரடியான  உத்தரவுகள் நடக்கிறது.   கூடவே வேறு மாநில முதல்வர்களுக்கும், அங்கங்கு தவிக்கும் தமிழ் மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்.   கொரோனாவிற்கு எதிரான போரை வழி நடத்தும் மருத்துவர்களின் பணியைப் பற்றி கூறத் தேவையில்லை.   அத்தோடு காவலர்களின் பணி  மகத்தானது. ஊரடங்கை  மீறுவோருக்கு தோப்புக்கரணம், முட்டிங்கால், கை நீட்டி வைத்தல், உறுதிமொழி எடுக்க வைத்தல்  என வித விதமான தண்டனைகள் பள்ளி காலத்தை நினைவு படுத்துகிறது.   விதிமீறும் பொது மக்கள் சிலரின் ஆணவப் பேச்சுக்கள் அவர்களை லாடம் காட்டினால்  தான் என்ன என நமக்கே பொறுமை போகிறது. 

இதில் கவலை கொள்ளும் விஷயமாக இருப்பது  ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கும் மக்கள். 
சென்ற ஞாயிறு இறைச்சிக்கடையில் குழுமியிருந்த எதனை உணர்த்துகிறார்கள் என்று தெரியவில்லை இன்னும் இவர்கள் கொரோனாவின் 'பிரியத்தை' உணர்ந்ததாக தெரியவில்லை.  இந்தியாவின் கொரோன புள்ளி விவரத்தைப்  தற்பொழுது பார்க்கும் பொழுது  அது 4, 5 மையப் புள்ளிகளை உருவாக்கியுள்ளது.   சென்ற வாரத்தில் கிளஸ்டர் எதுவுமே இல்லாமல்  இருந்தது ( பார்க்க சுட்டி).   மேலும் மையப்புள்ளிகள் உருவாகாமல் இருக்க நம்மால் இயன்றது  வீட்டில் அடங்கி இருந்து முழு அளவில்  அரசுக்கு ஒத்துழைப்பு தருவது மட்டுமே.  இது மட்டுமே நம்மால் அரசுக்கு  தற்போதைக்கு உதவ முடியும்.    


இதே நேரத்தில் உலகெங்கும் அடுக்கடுக்காக  நோய்த்தொற்று பரவி வருகிறது. அப்பொழுது களத்தில் இல்லாத அமெரிக்காவை  இப்பொழுது கொரோனா மையம் கொண்டு உள்ளது.   இத்தாலியில் இப்பொழுது இறங்கு முகம்.   சீனா  நான்கு மாத கடும் போராட்டத்திற்குப் பிறகு எந்த தொற்றும் இப்பொழுது இல்லை என அறிவித்து  அவர்களின் வுகாண் நகரத்தின் வௌவால் மார்க்கெட்டை திறந்திருக்கிறது.    சைனா வைரஸ் என்று கூறிக்கொண்டு இருந்த டிரம்ப் கொரோன  வைரஸ் என கூற ஆரம்பிக்கிறார்.   இவர்களின் ஆடுபுலி ஆட்டம்  நமக்குத்தான் புரிபடவில்லை. 

கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பது யாருக்குமே தெரியவில்லை.   உலகின்  பொருளாதாரம்  எவ்வளவு மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து மீண்டு வரும் என்பது யாருக்கும் புரியாத ஒன்று.   ஜெர்மனியின்  நிதியமைச்சர் இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒவ்வொரு அரசாங்கமும் இந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள், அதனைப் பற்றிய விளைவுகள் பொருளாதார ரீதியாக தெரிய சில மாதங்கள் ஆகும்.    அவற்றை நாம் பிற்காலங்களில் வரலாறாக மட்டுமே பேச முடியும்.   இப்பொழுது நாம் பத்திரமாக இருப்பது மட்டுமே நம் கையில். 

இன்னும் சற்று கூர்நோக்கிப் பார்த்து இன்னும் ஒரு சில மாதங்களுக்கு நம் வாழ்விற்க்கு தேவையான பொருள்  இருப்பை  வைத்துக் கொள்வது  அவசியம்.    சிக்கனமான  நடைமுறைகளைக் கையாள  வேண்டும். இதன் பாதிப்பினால் ஆறு மாதம் கழித்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.  பொருளாதார வீழ்ச்சியால் என்ன மாதிரியான பின்விளைவுகள்  வரும்,   அது ஒவ்வொருவருக்கும் பாதிப்பை எப்படி ஏற்படுத்தும் என்பது நம்மால் இப்பொழுது எண்ணிப் பார்க்க முடியாது.    இதையொட்டி நேற்று முன்தினமும் ட்விட்டரில் பஞ்ச காலத்தைப் பற்றிய ஒரு விவாதம் சென்று கொண்டிருந்தது.   விவசாயம் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அன்றைய காலத்தில் பஞ்ச நேரங்களில் கற்றாழை கிழங்குகளையும்,  மரவள்ளிக்கிழங்கும்  தேடி எடுத்து மக்கள் சாப்பிட்டது  வரலாறு.   கண்டிப்பாக விலைவாசி ஏறலாம்.  பொருள் தட்டுப்பாடு வரலாம்.  இன்னும் மூன்று மாதங்களுக்கான தேவையான அத்தியாவசியமான பொருட்களை அவரவர் அளவில் தற்காத்து வைத்துக் கொள்ள வேண்டும் என கருதுகிறேன்.   இப்போதும்,  இன்னும் கொஞ்ச காலத்திற்கும் மினிமலிசம் எனப்படும் எளிய வாழ்க்கை முறைக்கு பழகிக்கொள்தல் நலம்.   இப்பொழுது இருந்தே அதற்கான ஆயுதத்தை மேற்கொள்ள வேண்டும்.  

இவை எப்படியாக இருப்பினும் தற்போதைய நமது நிலைமை மனதினை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமே.   பலரும் காலை, மாலை மட்டும் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் செய்தியை பார்க்க பரிந்துரைகின்றனர்.   திரும்பத்  திரும்ப கொரோனாவில் உழன்று கொண்டிருந்தால்,  தேவையில்லாத  மன உளைச்சல்  வரும் என்கிறார்கள்.   குறிப்பாக குடும்பம் இல்லாமல் தனியாக இருக்கும் பலர்.   
  • யாராவது சில  மக்களோடு தினமும் பேசுங்கள்;  சும்மாவேனும் பேசுங்கள்;  அது உங்களது மன உளைச்சலில் இருந்து விடுதலை கொடுக்கும். அது உங்கள் நண்பர் ஆகவும் இருக்கலாம், தூரத்து உறவினர் ஆகவும் இருக்கலாம்.  எப்பொழுதோ சந்தித்த நண்பராகவும் இருக்கலாம்.  
  • இந்த நேரத்தை குடும்பத்தோடு, குழந்தைகளோடு எப்படி செலவிட வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தலாம். 
  • புதிதாக இதுவரை செய்யாத ஒரு வேலையை செய்யலாம்.
  • தள்ளிப்போட்ட சில வேலைகளை முடிக்கலாம். 


இன்னமும் 21 நாட்களுக்கு பிறகு கோடை விடுமுறை கிடைக்கும் எங்காவது செல்லலாம் என்று நினைத்திருப்போர் தயவுசெய்து அமைதி காக்கவும்.   நமக்கு இந்த வருட  கோடை விடுமுறை என்பது கிடையாது.   குழந்தைகளை பதட்டப்படாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்து அவர்களை முறைப்படுத்துவது நமது கையில் தான் உள்ளது.   இது ஒரு இக்கட்டான தருணம்.   அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும்  இந்தத் தருணத்தை கடப்பது அவரவர்களிடம் மட்டுமே உள்ளது.   இதையும் தைரியமாக  கடப்போம். 


Friday, March 13, 2020

பெங்களூரில் கொரோனா



எங்கயோ அது சீனாபக்கம், இத்தாலிப் பக்கம் என்று சொல்லிக்கொண்டிருந்த கொரோனா, பெங்களூரில் எங்கள் பக்கத்துக்கு ஊருக்கும் வந்தேவிட்டது. அது நான் முன்பு வசித்த பகுதி. அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக வந்தவர், இங்கு இறக்குமதி செய்துவிட்டார். அவரது மனைவிக்கும், அவரின் மகளுக்கும் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். ஆனால் COVID-19 கண்டறியப்படும் முன் அவர் அலுவலகமும் சென்றுள்ளார். இப்பொழுது அவரின் அலுவலகத்தின் அதே தளத்தில் வேலை பார்த்த அனைவரும், வீட்டிலிருத்து வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அடுத்த 10 நாட்களுக்கு அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கப் போகிறார்கள். அலுவலகம் மட்டுமல்லாமல், அவரது அடுக்ககம், அவர் சென்ற இடங்கள், சூப்பர் மார்க்கெட் என, கிட்டத்தட்ட 2666 பேரை அவர் மறைமுகமாக பாதித்திருக்கலாம் என்று கர்நாடக அரசு கூறுகிறது.
இந்த எண் தான் சற்று அடிவயிற்றில் கலவரத்தை உண்டு செய்கிறது. சற்று யோசிக்கவும் வைக்கிறது. 2666 என்ற எண் எனக்கு சற்று குறைவாகவே தெரிகின்றது. உண்மையான எண் சற்று கூடுதலாகவும் இருக்கலாம். அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடப்பதாக அரசு கூறியுள்ளது. கொரோனா அவர்களில் ஒருவர்க்கு தொற்றி இருந்தாலும், அவர்கள் மக்கள் நெருக்கமான இடங்களுக்கு சென்றாலும் அது மேலும் விரிவடையும்.
அந்த சிறுமியும், அவருக்கும் COVID-19 வைரஸ் பாதிப்பு உள்ளது என கண்டறியும் முன், பள்ளிக்கு சில நாட்கள் சென்றிருக்கின்றார். இப்பொழுது அந்தப் பள்ளி முழுவதும் மூடப்பட்டுள்ளது. அதில் படிக்கும் 1700 மாணவ மாணவிகளும், பணியாற்றும் 300 ஆசிரியர்களும் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் சிலருக்கு பரிசோதனை ஆரம்பித்துள்ளதாம். இது ஆரம்பம் என்றே நினைக்கிறேன். முடிவாக இருந்தால் மகிழ்ச்சி.
எப்பொழுதும் இன்ச் இன்சாக நகரும் பெங்களூரின் போக்குவரத்து கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. வேலை நிறுத்தமான நாள் போல சாலைகளும் சற்று வெறிச்சோட ஆரம்பித்துள்ளது. பல அலுவலகங்களும் வீடுகளில் இருந்தே வேலை செய்யப் பணித்துள்ளார்கள்.
கடந்த திங்களன்று 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தார்கள். செவ்வாய் 5ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கும் அதேபோல காலவரையற்ற விடுமுறை விட்டு விட்டார்கள். கூடவே பல பள்ளிகளில் இந்த வருடம் 5ம் வகுப்பு வரையான சிறுவர்களுக்கு தேர்வு இல்லை என்ற அறிவிப்பும். இதுவரை இந்த கல்வி ஆண்டில் நடந்த, எழுதிய தேர்வுகளை எடுத்துக்கொண்டு மாணவர்களை அடுத்த வருடத்திற்கு தேர்ச்சி செய்ய உள்ளார்கள். குறைவான மதிப்பெண் எடுத்த தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டும் மே மாத வாக்கில் தேர்வு நடைபெறும் என கூறுகிறார்கள்.
இங்கு மூன்று மாதங்கள் விடுமுறை அளித்த காரணத்தினால் பெங்களூர் மக்கள், குறிப்பாக இருவரும் பணிக்கு செல்லும் பெற்றோர்கள், எப்படி குழந்தைகளை சமாளிப்பது? என்ன செய்வது? என்ற யோசனைகளில் இருக்கின்றார்கள். அதனையொட்டி நகைச்சுவைத் துணுக்குகளும் வந்துகொண்டிருக்கின்றன. 'அடுத்த மூன்று மாசம் குழந்தைகள் செய்யும் இம்சைகளை பொறுக்க முடியாமல் அம்மாக்களே மருந்தினை கண்டு பிடித்து விடுவார்களாம்'. ('சரி அப்ப நீங்க மிக்ஸர் சாப்பிட போறீங்களா?' என்பது ஆண்களுக்கான பெண்களின் கேள்வி). நகைச்சுவை கடந்து உற்று நோக்கினால், சற்று சிரமம் தான்.
நண்பர் "என்ன செய்றதுன்னே தெரியலை?" என்றவரிடம் "குழந்தைகளை ஊருக்கு அனுப்பிடுங்க" என்றேன்.
"நாங்க இதுவரைக்கும் தனியா அனுப்பினதே இல்லை" என்று புலம்ப ஆரம்பிக்கிறார். பிரிட்ஜில் வளர்த்தப்பட்ட குழந்தைகளின் நிலையும் இது தான்.
மற்ற வகுப்புகளுக்கும் தேர்வை உடனடியாக நடத்தி ஒரு வாரத்தில் முடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு விடுமுறையை விட்டுள்ளார்கள். தேர்வு நாள் அன்று வந்தால் போதுமானதாம். கூட்டம் கூடும் விழாக்களை கர்நாடக அரசு தடை செய்துள்ளதாகவும் தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும், வழக்கமான கோடைகால விடுமுறை போல இந்த கோடை விடுமுறை இருக்க வாய்ப்பில்லை. சுற்றுலா, சொந்தங்களின் சந்திப்பு, பயணம் இவை இல்லாமல் அவரவர்களின் வீட்டில் தான் அடைபட்டு இருக்க முடியும். வழக்கமாக வெளியில் சுற்றிக் கொண்டிருப்பது போல் இந்த வருடமும் இருக்கமுடியாது என்பது நன்றாகத் தெரிகிறது. இதுவரை நாம் இந்தமாதிரியான சூழலைக் கடந்ததில்லை என எண்ணுகிறேன்.
பல நாடுகளுக்கும் பரவி உள்ளதால், நேற்று WHO(World Health Org) இதனை தொற்று நோயாக அறிவித்துள்ளது. சீனாவின் மருத்துவர் இது அனைத்து நாடுகளும் இணைந்தால் ஜூன் மாத வாக்கில் காட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்கிறார்.
எப்படி உள்ளது?
கோரோனா பற்றிய செய்திகளை, வீடியோக்களை பார்த்துக் கொண்டு வரும்பொழுது, இது பற்றிய வீடியோ பிபிசியில் கிடைத்தது. சீனாவின் 'வுகன்' நகரத்தில் வாழும் பிரிட்டிஷ் ஒருவரை பிபிசி பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. இளம் வயதில் இருக்கும் இவர் இதிலிருந்து மீண்டு வந்தவர். "வழக்கமாக ஆரம்பித்த இருமல் மற்றும் சளி இரண்டு நாட்கள் கழித்து சரியானது போல இருந்தது. அதன் பிறகு மூச்சுத் திணறல் ஆரம்பம். அது சற்றே பயப்படுத்தியது. நிமோனியா வந்தபோது இருந்ததைப் போல 20% மட்டுமே மூச்சு விட முடிந்தது"
கலகலப்பான மக்கள், பரபரப்புடன் இருக்கும் 'வுகன்' நகரம் வெறிச்சோடி கிடப்பதாக கூறுகிறார். குறிப்பாக தனிமை அவரை கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். நோய்வாய்ப்பட்ட நேரத்தில் அவர் படித்துக் கொண்டும இருந்தாலும், வெளியுலகத் தொடர்பு சமூக வலைத்தளங்களின் மூலம் இருந்தாலும் அந்த நேரத்தில் தனிமை மிகவும் கொடுமையானது என்கிறார். நாடு கடந்து நாடு செல்பவர்களுக்கு, அங்கு நோயினால் பாதிப்பு இருந்தால், அது மிகவும் கொடுமையான உணர்வுதான்.
யூகேவில் 596 பேர் பதிப்படைத்துள்ளனர். இது இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. அங்கு வழக்கம் போல 'பாரசத்தமால்' மாத்திரை கொடுத்து அனுப்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். யூகே தமிழ்நாடு போன்ற மக்கள் தொகை கொண்ட, கிட்டத்தட்ட அதே பரப்பளவு கொண்ட ஒரு நாடு. தமிழ் நாட்டில் இருந்த ஒரே ஒரு கொரோனா எண்ணிக்கையும் முறியடிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். என்னதான் ஊழல் என்று நாம் நம்மூரை கிண்டல் செய்து மட்டம் தட்டிக் கொண்டு இருந்தாலும், இந்த நேரங்களில் தீயாக வேலை பார்த்து விடுவார்கள். ஒரு விஷயம், யூகேவில் வரும் எண்ணிக்கை உண்மையாக இருக்கும். ஆனால் நம்மூரில் நம்ப முடியாது. இருப்பினும் தமிழ்நாட்டில் பயப்படும் படியான சூழல் இல்லை எனலாம். சற்று பயம் கொள்ள வைப்பது பெங்களூரில் இருக்கும் தற்போதைய நிலை.
முன்னெச்சரிக்கை :
சமீபத்தில் சிக்கன் குனியாவின் தூரத்து சொந்த வைரஸ் போன்ற ஒரு காய்ச்சலால் பாதிப்படைந்திருந்தேன். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், முன்னெச்சரிக்கை இல்லாததே. வழக்கமாக பாதிப்படைந்தவர்களை பார்க்க செல்லும் பொழுது நாம் வாய்க்கூடு போட்டுக்கொள்வதில்லை அல்லது பாதிப்படைந்தவர்களும் போட்டுக்கொள்வதில்லை. "அட, நமக்கென்ன வரப்போகுது" என்ற அசால்ட்டான எண்ணம் அல்லது சங்கடமாக இருக்கும் என்பதாகவும் இருக்கலாம். அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு தெரிந்தவர்களை பார்க்க வரும் 99% நம் மக்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தான் செல்கிறார்கள். இது போன்ற முன்னெச்சரிக்கைகளில் நாம் பின் தங்கியே உள்ளோம் என நினைக்கிறேன். இதில் நாம் மாற வேண்டும்
ஆனாலும், கொரோனாவை முன்னிட்டு சென்ற வாரத்திலிருந்தே இந்தியாவின் பல இடங்களிலிலும் மாஸ்க் விலை கூடிக்கொண்டே வருகிறது என்ற செய்தியும் சாதாரணமாக கடந்து விட முடியாது. சாதாரண சர்ஜிகல் மாஸ்க் என்று சொல்லக்கூடிய பச்சை நிற அறுவைச் சிகிச்சை வாய்க்கூடு கிடைப்பதில்லை. வருவதே இல்லை என்றும் மருந்தகத்தில் கூறினார்கள். ஒருவித செயற்கை தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மாஸ்க் இப்பொழுது தேவையா? தேவை இல்லையா? என்று யோசிக்க முடிவதில்லை.
பக்கத்தில் ஒருவர் தும்மினாலும் இருமினாலும் பயப்படக்கூடிய நிலை. தெரியாமல் வழக்கம்போல கேன்டீனில் தும்மிவிட்டேன், பக்கத்தில் இருந்த அனைவரும் என்னை முறைத்துக்கொண்டே சற்று தள்ளிப் போய்விட்டார்கள். அதேபோல ஊரில் இருந்து ஒரு கூரியர் அனுப்ப சொன்னோம். proffessional கூரியர் பாதிக்கப்பட்ட பெங்களூரின் இரண்டு பின்கோடுகளுக்கும் அனுப்ப மறுத்துள்ளனர். ஒரு வழியாக அஞ்சல் அலுவலகம் அதனை வாங்கி உள்ளார்கள். இதன் தீவிரத்தன்மையை உணர முடியும்.
பெங்களூர் நம்மூரோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் நகரம். கேரளாவை விடவும் பெங்களூருக்கு வந்து செல்லும் மக்கள் அதிகம். ஆதலால், தொடர்ந்து சில வாரங்களுக்கு இங்கும், அங்குமான பயணங்களைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். சாதாரணமாக நமக்கு வராது என இல்லாமல் பெருத்த முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம். இது பீதியை கிளப்பும் நோக்கில் செய்யப்பட்ட பதிவு அல்ல. பயணம் தவிர்ப்போம். பயம் இல்லாமல் முன்னெச்சரிக்கையாக இருப்போம்.

Sunday, March 01, 2020

படி விளையாடுதலும் சிவராத்திரியும்....

நேற்று காலையிலிருந்தே பக்கத்து ஊரில் இருந்து பக்திப் பாட்டுச் சத்தம் கன்னடத்தில், தமிழிலும், தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும்,மலையாளத்திலும் கலந்து கட்டிக்  கேட்டுக்கொண்டே இருந்தது. அலுவலகம் முடித்து வந்த சாயங்காலமும் கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு எட்டு மணி வாக்கில் ட்ரம்ஸ் முழங்க, பேண்ட் செட் அடி சத்தம் வீட்டை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க ஆரம்பித்தது.   தப்பாட்ட அடி போல கால்களை ஆட இழுத்தது. 'என்னதான் நடக்கிறது' என்று வேடிக்கை பார்க்கச் செல்ல முனைந்தேன். இவர்கள் ஊரின் சிவராத்திரி எப்படித்தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதில் உண்டு. வாண்டுகளும் "நாங்களும் வருவோம்" என்று சேர்ந்து கொண்டார்கள்.    


வண்டியை கிளை சாலையில் நிறுத்திவிட்டு,  வேடிக்கை பார்க்கும் மக்களோடு ஐக்கியமானோம்.  நின்று கொண்டு இருந்த இடத்தை, பேண்ட் செட் குழு முதலில் நெருங்கியது.  பின்னால் சற்று தொலைவில் ரதம். தள்ளிக்கொண்டு வந்த பெரிய ட்ரம்ஸ் நின்றது.  கூடவே பேண்ட் செட் அடியை சற்று நிறுத்தினார்கள். ஒரு தவுசண்ட் வாலாவை கீழே வைத்து பற்ற வைத்தார்கள்.    வாண்டுகள் காதுகளை மூடிக்கொண்டார்கள்.  

பட படவென  ஐந்து நிமிடம் வெடித்து ஓய்ந்தது.  ட்ரம்ஸ், பேண்ட் செட் மறுபடியும் நம்மை ஆட அழைப்பது போல அடியை ஆரம்பித்தார்கள். மெல்லமாக நகர ஆரம்பிக்க, பின்னால் ஒரு குழு நடந்து சென்றது.   ஆட்டம் இல்லை.     


 ரதம் போன்ற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அமைப்பு பக்கமாக வந்தது.   மின்மினி விளக்குகளால் சுற்றிலும் ஒளிர்ந்து கொண்டு வந்தது. மனித முகம் போல ஒரு தகடு வைக்கப்பட்டு பிரமாண்டமாக சோடிக்கப்பட்டு இருந்தது.  வழக்கமான சிவன் முகம் மாதிரியும் தெரியவில்லை. வேறு ஏதேனும் சாமியோ? சந்தேகத்தை தெளிந்திட பக்கத்தில் இருந்த உள்ளூர்காரரிடம், கன்னடம், தமிழ், ஆங்கிலம் கலந்து தயங்கியபடியே ஒருவாராக கேட்டேன்.

 

"ஏனு சாமிங்?" ( அந்த நம்மூரு ங்க மட்டும் சட்டென போவதில்லை)

 "சிவா" 

 "கோயில் எள்ளிதே?" 

 "ஈக்கட ஆலமரம் பேக் சைடு"  அந்த ரதம் வந்த வழியாக கையைக்  காண்பித்தார். அது ஊரின் பின்பகுதி.      அந்த ஆலமரத்தின் வழியாக பலமுறை காலை ஓட்டம் ஓடி இருந்தாலும், அங்கு ஒரு சிவன் கோவில் இருந்ததை இதுவரை பார்த்ததில்லை.   


"இதி ரவுண்ட் ஹோகிதா?" 

"ஆக்கட ஹோகி ஈக்கட பரித்தே" என இப்படிக்கா போயி அப்படிக்கா ஊரைச் சுற்றிக்கொண்டு வரும் என்றார்.  


வேடிக்கை பார்த்த மக்கள் ஒவ்வொருவராக ரதத்தின் அருகில் சென்று குங்குமம் வாங்கிக்கொண்டு வந்தார்கள்.  அவரின் மனைவியும் குங்குமம் வாங்கிக்கொண்டு வந்தார். அவருக்கு கொடுத்துவிட்டு, என் வாண்டுகளுக்கும் வைத்துவிட்டார், கூடவே எனக்கும் கொடுத்தார்.   சாதாரண மனிதர்களின் அன்புக்கு மொழி ஒரு பொருட்டே இல்லை.         

   

அந்த ரதமும், மேள தாளமும் மெதுவாக தேங்கித் தேங்கிச் செல்ல ஆரம்பித்தது.   கோவில் எப்படி இருக்கு என ரதம் வந்த வழியில் கோயிலை நோக்கி சென்றோம். ஆலமரம் சீரியல் லைட் விழுதுகளால்  மின்னிக்கொண்டு இருந்தது. கீழே வயலுக்கு செல்லும் வழி. பக்கவாட்டில் சப்போட்டா தோப்பு. நெடுக பளிச் அலங்கரிப்பு.  தரையில் விரிப்பு. விரிப்பின் இறுதியில் கோவில். ஒரு பத்துக்குப் பத்து தான் இருக்கும். திறந்தவெளியில் நந்தி.   சுற்றிலும் எந்த சுற்றுச்சுவரும் இல்லை. உள்ளே ரதத்தில் பார்த்தது போன்ற தகடால் ஆன ஒரு குட்டி மனித முகம் போன்ற அமைப்பு.   என்னால் மீண்டும் சிவன் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தீபாராதனை உடன், பாலையும் தயிரையும் கலந்து கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினோம்.    


அங்கங்கு ஒரு முப்பது பேராவது இருப்பார்கள்.  பெருங் கூட்டம் இல்லை. ஆனாலும் கூட்டம் வந்த வண்ணமும், கலைந்தும் சென்று கொண்டும்  இருந்தது. உள்ளூர் மக்களைத் தவிர வடக்கு, தெற்கு என பல தரப்பட்ட கூட்டம். நகரமயமாக்கல் பெங்களூரின் புறநகரில் உள்ள இதுபோன்ற கிராமங்களையும், தன்னோடு இணைத்து பெருநகரமாகிக்  கொண்டு இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து இந்த சிற்றூரை, கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துக் கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், இந்த கிராமத்தின், இந்த சிறு கோவிலின் சிவராத்திரிக்கான கூட்டம் கண்டிப்பாக அதிகரித்து இருக்கும் என்று சொல்லமுடியும்.  உள்ளூர் மக்கள் என் போன்ற மக்களை குறு குறு என பார்ப்பது போன்ற உணர்வு. வாண்டுகளின் தமிழைக் கேட்டு இன்னொரு தமிழ் குடும்பம் புன்முறுவல் இட்டு கடந்தார்கள்.  



வெளியேறும் தருவாயில் நண்பர் ஒருவர் வந்தார்.   "சின்ன கோவில் தான் போலங்க. ரதம் வந்துச்சு, சரி கோயில் எங்க இருக்குன்னு பார்க்க வந்தோம்"  

"ஆமாங்க, இது சுயம்புவாக உருவான கோவில், நாங்க இங்க வந்ததிலிருந்து ரெண்டு.மூணு வருஷமா  வந்துட்டு இருக்கோம்" என்றார்.  


வண்டியை எடுத்து வந்த வழியில் திரும்பினாள்,  ரதமும் அந்த கூட்டமும் ஒரு 50 அடி தொலைவு நகர்ந்து  சென்றிருந்தது.   


இங்குள்ள சிவ வழிபாடு என்பது 11-12 ம் நூற்றாண்டில் பசவன்னா அவர்கள் உருவாக்கிய லிங்காயத்து சமயம் சார்ந்ததாக இருக்கலாம்.    அது நமது 6-7ம் நூற்றாண்டின் நாயன்மார்கள் உருவாக்கிய சைவம் சார்ந்து வந்துள்ளது என்றும் கூறுகிறார்கள். அது அப்படியே அகத்தியர் வரை செல்கிறது. காலத்திற்கேற்ப கொண்டாட்டமும் குடி இருக்கலாம்.   இத லிங்காயத்து சமய வழி வந்தவர் தான் சென்ற வருடம் மறைந்த 111 வருடம் வாழ்ந்த சிவகுமார் சுவாமிகள். இந்த லிங்காயத்து சமயம் சாதிய ஏற்ற தாழ்வு இல்லாமல் கட்டமைக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால்  இப்பொழுது அப்படியா என தெரியவில்லை.    

 


சிவராத்திரியின் போது அப்பொழுதெல்லாம் என்ன நடக்கும்  என ஊர் சார்ந்த அனுபவம் ஒப்பீடாக வந்து சென்றது. இப்படியாகத்தானே காட்டுக்  கருப்பண்ண சாமி கோவிலுக்கு சென்று வருவோம்? படி விளையாடுதல் என்று ஒரு நிகழ்வு நடக்குமே! அது என்ன ஆச்சு?


வீட்டிற்குள்  வநுழைந்தால் டிவியில் ஜக்கி  அந்த நெடு நீண்ட மேடையில் நடந்து கொண்டு இருந்தார். அவ்வப்போது ஆடிக்கொண்டிருந்தார்.   "என்ன இந்தய்யனெல்லாம் ஆடராறு?" என்று ஒரு கமெண்ட் எங்கம்மாவிடம் இருந்து வந்தது.  

    

இப்படியாக  இந்தப்பக்கம்(சமூக வலைத்தளங்களுக்கு) வந்தால்,  சிவராத்திரியை சீரியஸா எடுத்துக்கிட்டு ஒரு க்ரூப்.  கழுவி ஊத்த ஒரு பெரும் குரூப்.    


நமது சிற்றுர்களில் ஒவ்வொரு சமூகமும் அவர்களுக்கான தனிக்  கோவிலை கட்டி எழுப்பி இருப்பார்கள். கருப்பணன், மதுரை வீரன், முனியப்பன் போன்ற பண்பாட்டுத் தெய்வங்களாகவே இவையாவும் இருக்கும்.    பிள்ளையார், பொட்டுசாமி இதில் கலந்துகொள்ள மாட்டார்கள். இவுங்க முறை வேறு நாட்களில் வரும். அப்போது ஊரில் இருந்த சிவன் கோவில் கூட சிவராத்திரி அன்று திறந்து வைத்திருந்த ஞாபகம் இல்லை.   அப்பாவும் அதனை ஆமோதித்தார்.  


சிவராத்திரி வரும் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு  முன் அதற்குட்பட்ட அங்காளி, பங்காளிகள் சேர்ந்து கொள்வார்கள்.  "இந்த வருஷம் செவன்ராத்திரி சனிக்கெழம வருது. எப்ப விளையாட போலாம்?"   "எங்க இருந்து ஆரம்பிக்கலாம்?" என்ற ஒரு கேள்விக்கு ஒரு செயல்திட்டம் வாய்வழியாகவே உருவாகும்.     இங்கு விளையாடுதல் என்பது படி விளையாடுவதைக் குறிக்கும்.   


 கிட்டதட்ட என் அப்பாவுக்கு ஞாபகம் தெரிந்து இது நடைபெற்றதாம், படிப்படியாக இப்பொழுது ஒரு பத்து/பதினைந்து வருடங்களாக நடைபெறுவதில்லை என்றார்.   சமீபத்தில் கேட்ட ஜெயரஞ்சன் அவர்களின் நிலக்கிழார் என்ற அமைப்பு எப்படி மறைந்துபோனது என்பதை நினைத்துக் கொண்டேன். 


அவரவர்களுக்கு, ஒவ்வொரு சமூகத்திற்கும், பாத்தியப்பட்ட நான்கைந்து அல்லது பத்து பதினெட்டு ஊர்களுக்கு கூட செல்வார்கள்.   "அட எங்கப்பா... இந்த வருஷம் மழையே இல்லாம, எல்லாம் காஞ்சு போய் கிடக்குது. ஒன்னும் கிடைக்காது. பேசாம விட்டறலாம்" 

 "இதெல்லாம் வழி வழியா சாமிக்கு பண்ணறது,  சாங்கியதுக்கு ஒரே ஒரு ஊருக்கு மட்டுமாவது போயிட்டு வரலாம்.  சாமிக்குன்னா எல்லாருமே செய்வாங்கப்பா " என்று வறட்சி காலத்தில் பேருக்காக,  ஒரு சில ஊர்களுக்கு சில வீடுகளுக்கு மட்டும் செல்வதும் உண்டு.   


குறைந்தது ஐந்தாறு பேர்.  அதில் பூசாரி எனப்படுபவர் கையில் தட்டு. மறு கையில்  மணி. தட்டு நிறைய திருநீர். ஒரு உயரமான வேல். திருநீறு பொட்டு வைக்கப்பட்டு, எலுமிச்சை குத்தப்பட்டு இருக்கும்.  கதம்ப பூவால் நளினமாக சுற்றப்பட்டு இருக்கும். கூடவே ஒரு வாள். அதனைப் பிடித்துக்கொள்ள இருவர். சிண்டு, சிறுசுகளிடம் செவண்டி, மணி.    சாயங்காலம் இருட்டியதும் ஆரம்பிப்பார்கள். ஒரு கை விளக்கு. அவ்வப்போது எண்ணெய் ஊற்றிக்கொள்வார்கள்.   


 ஒரு  ஊரை எடுத்துக்கொண்டு, ஒரு பக்கமா இருந்து ஆரம்பிப்பார்கள்.  அல்லது பெரிய தலைக்கட்டு குடும்பத்திடம் இருந்து ஆரம்பிப்பார்கள்.   பெரும் நிலம் வைத்து இருந்தர்வர்கள் நெல்லை முறத்தில் கொண்டு வந்து போடுவார்கள்.   சிலர் வள்ளத்தில் அளந்து போடுவார்கள். பூசணி, சேனைக்கிழங்கு என காட்டில் விளைவதைக் கொடுப்பார்கள்.  கை விளக்கிற்கும் எண்ணெயும் கொடுக்கப்படும்.    


" எப்ப  பொங்க, 

"அடுத்த ஞாயித்துக்கெழமைங்" 

"அந்தன்னிக்கு வந்து எளனி வாங்கிட்டுப் போயிருப்பா, பாலு கீழு வேணும்னாலும் வாங்கிக்க"


சில வீடுகளில் அரிசியும் உண்டு.   நெல், அரிசி கொடுக்காதவர்கள் அல்லது இல்லாதவர்கள் காணிக்கை மட்டும் இடுவதுண்டு.  இவையாவும் பக்திக்காக, சாமிக்கானது மட்டுமல்ல; அப்போதைய கிராமப் பொருளாதாரத்தின் ஒரு அன்பு பிணைந்த நெட்வொர்க்.  இப்படியாக இரவு ஒன்பது, பத்து மணிக்கு முடியும். 


ஆயுதபூஜைக்கு பொரி  போல, சிவன் ராத்திரிக்கு கண்டிக்கிழங்கு.    ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு சாப்பிடும் பொருள் பேமஸ் தானே.  அன்று காலையில் கண்டிக்கிழங்கு மூட்டை மூட்டையாக ஊரின் முக்கிய கடையில் கடை போட்டுவிடுவார்கள்.   ஒவ்வொரு வீடுகளிலும் சாயங்காலம் கண்டிப்பாக வேவிக்கப்படும். கோவில்களில் சுண்டல், கிழங்கு, மொச்சக்கொட்டை,  பாசி பயிர், பூசணி என இரவு முழுவதும் வேக வைப்பார்கள். விடிகாலை பூசை. அத்தோடு சிவராத்திரி முடிவடையும். பெரிய ஆர்ப்பாட்டம் இருக்காது.  


கொண்டாட்டம் என்பது தொடர்ந்து மாசி பங்குனியில் வரும் அந்த காவல் தெய்வங்களின் பொங்கல் பண்டிகை தான்.  காலையிலிருந்தே மைக் செட் கட்டி விட்டிருப்பார்கள். இந்த ஒற்றுமை இந்தியா முழுவதும் இருக்குதோ என்னவோ?  படி விளையாண்டு சேர்த்த நெல், அதில் கிடைத்த காணிக்கையோடு அந்த காவல் தெய்வங்களுக்கு தீர்த்தம் அழைத்தல், கெடா வெட்டுதல், படையல், காவு சோற்று என ஒரு நாள் முழுக்க வழக்கமான ஊர் கொண்டாட்டத்துடன் நடக்கும்.   


அன்று சின்னதாக வசூல் செய்து அவர்களுக்கு உரிய வகையில் கெடா வெட்டு, சாராயம் என்று இருந்தார்கள். இன்று பெரிய அளவில் மார்க்கெட்டிங், அதன் மூலம் வசூல் செய்து அனைத்து டிவியிலும், வலை தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்து, அவர்களுக்கு உரிய வகையிலான 'கொண்டாட்டத்தில்' இருக்கிறார்.   எப்படி மற்ற எல்ல விஷயங்களும் சந்தைப்படுத்தப் பட்டுள்ளதோ, அது போலவே. கூடவே சாதாரண மக்களுக்கு உரிய கொண்டாட்டம் அதன் போக்கில் மாறிக்கொண்டு அன்பு பறிமாறிக்கொண்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சிவராத்திரி மற்றொரு நாளாக சென்றுகொண்டே இருக்கிறது.



குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...