Wednesday, March 23, 2022

அறிவோம் காலிங்கராயன்

1240 - காலிங்கராயர் பிறந்த வருடம்

1260 - கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் படையில் சேர்ந்தார்

1271 - காலிங்கராயன் தடுப்பணை பணிகள்  ஆரம்பம்

1283 - தை மாதம் 5-ந் தேதி காலிங்கராயன் தடுப்பணை திறப்பு

12 வருட கட்டுமானம்

739  வருடங்களாக இன்னும் பயன்பாட்டில் 

15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி

56.2 மைல் (90.5 கிமீ)  - காலிங்கராயன் வாய்க்கால்

36 மைல்கள்- நேர் வழியாக காலிங்கராயன் தொ
டங்கி முடியும் இடம் 

1840 மதகுகள்

544 - வாய்க்கால் தொடங்கும் இடத்தில் கடல் மட்டம்

412 - வாய்க்கால் முடியும் இடத்தில் கடல் மட்டம்






Wednesday, February 23, 2022

தாய் மொழி தினம்.

 தகவல் தொழில் நுட்ப துறையை பொறுத்த அளவில் பல் மொழி, பல் நாட்டு மக்களுடன் பேச வேண்டும். அதில் தமிழில் பேச ஒருவர் கிடைத்தால் சற்று சுலபமாக புரியவைத்து விடலாம். தமிழில் பேசும் ஒருவர் கிடைக்க மாட்டாரா என ஏங்கும் பிரஜாக்ட்டும் உண்டு. ஈமெயில்/பெயர் வைத்து நம்மூர் மக்களை கண்டுபிடிப்பது சற்று சிக்கலான ஒன்றாக மாறி வருகிறது. தற்பொழுது புதிதாக வந்து சேர்பவர்களின், பெயரின் மூலம் தமிழ்தானா? என்பதில் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. என் அப்பாவின் பெயர் மூலம் தான், நானே தமிழ் என்பதை அறிந்து கொள்வர். சிலர் சேட்டில்(chat) "வணக்கம்" என்று ஆரம்பிப்பார்கள். சிலர் "நீங்க தமிழா?" என நேரிடையாக கேட்டுவிடுவார்கள்.



நானும் இப்படி கண்டுபிடித்து, "வணக்கம்" என்று ஆரம்பித்து, பதில் தமிழில் கிடைத்தால் அதிலேயே தொடர்வேன். நம்மைவிட ஜூனியர்கள் தமிழ் என தெரிந்தால் உடனே ஆரம்பித்து விடுவேன். ஆனால் மேலாளர்கள், க்ளையண்ட் என வரும்போது அவர்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் கொள்கை, பஞ்சாயத்து ஏதும் வராமல் இருக்க. சில தென்னிந்தியப் பெயர்கள் தமிழ் போலவே தோன்றும். அவர்களிடம் பல்பு வாங்கிய சம்பவங்களும் உண்டு.


மலேசியன் ப்ராஜக்ட். அவரின் பெயரின் மூலமும், அக்கம் பக்கம் விசாரித்ததிலும், அவர் சுத்த தமிழ் என்பது நன்றாக தெரிந்தது. ஆனாலும் அவர் கிளையன்ட் மற்றும் மேலாளர் ஆக இருந்தால் , தமிழில் ஆரம்பிக்கவில்லை. ஆங்கிலத்திலேயே 'சேட்' மற்றும் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெரும். ஆறு ஏழு மாதமாக அவ்வாறே தொடர்ந்தது. ஒருநாள் டெஸ்க் தொலைபேசி அழைத்தது. அதில் பரபரப்பாக பேசினார். "எப்ப இந்த ரிப்போர்ட் அனுப்புவே. கொஞ்சம் அத மட்டும் மாத்திட்டு சீக்கிரம் அனுப்பு" என்று தமிழில் சில நிமிடங்கள் கடுமை காட்டிவிட்டு போனை வைத்துவிட்டார். அது தான் முதலும் கடைசியும் அவரிடம் இருந்து வந்த தமிழ். அதன் பிறகு ஒரு வருட காலம் அவரோடு வேலை பார்த்திருப்பேன்.

மற்றொரு கிளையன்ட், லண்டன் அலுவலகம் வருகிறார். நம்ம ஊர் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்திருப்பவர். அவர் சேர்ந்த புதிதில், ஊர்ப்பேர் வரையில் விசாரித்தும் தமிழுக்கு மாறாமல், ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார் அந்த கிளையன்ட் மற்றும் மேலாளர். கொள்கைப்படி நான் தமிழில் தொடரவில்லை. ஒரு வருடமாக தமிழிலேயே பேசாதவர், அன்று காலை ஒரு பத்து மணி இருக்கும் அவசரமாக அலுவலகம் வந்தார். தமிழில் "ஏம்பா, காலைல பிரேக் பாஸ்ட் இன்னும் சாப்பிடல, இந்த கேன்டீன் எங்க இருக்கு?" என கேட்டார். "பிப்த் ப்ளோர்ல இருக்குங்க" "கொஞ்சமா லைட்டா இருந்தா போதும்" என்றார். "சான்டவிச் எப்பவும் கிடைக்கும்... அது வேணாம்னா..காஃபி & மஃபின் இருக்கும் பாருங்க". சாப்பிட கிளம்பினார். சாப்பிட்டு விட்டு தெம்பாய் வந்தவர் போற வரைக்கும் தமிழை ஊறுகாய் அளவு கூட தொடவே இல்லை. ஆனால் அவர்தான் வடநாட்டு மக்களோடு இந்தியில் குலாவிக்கொண்டு இருந்தார்.

அவர்களே அறியாமல், அனிச்சை செயல் போல சில கணங்களை உயிர்ப்பித்து விடுகிறது தாய்மொழி .

#தாய்மொழிதினம்.

Friday, February 11, 2022

குறள் 1040

 *குறள் 1040:*

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

*பொருள்:* எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

என் விளக்கம் :

முதலில் இந்த குறளில் வரும் *அசைஇ எனும் சொல்லிசை அளபெடை* தான், இந்த குறளின் அடிநாதம். அசையாமல் =சோம்பல் எனும் பொருளில் வருகிறது. அதனை வைத்து பார்க்கும் பொழுது, மூன்று வகையான பொருள் எனக்குத் தோன்றுகிறது.
1.
"தாரு காடு? அவங்க காடா? ஒன்னும் போட மாட்டாங்க.. நறுவுசாவே வெச்சிருக்க மாட்டாங்க.. செடி செத்தை மொளச்சு பொதர் மாதிரி கெடக்கும்.. புழு பூச்சி இருந்தா கூட தெரியாது"
சோம்பலால் எந்த வேளாண்மையும் செய்யாமல் இருக்கும் நிலம் சிரிக்கும் என்பதை புல், பூண்டு முளைத்து பயன்படாமல் இருப்பதை //நிலமென்னும் நல்லாள் நகும்.// என்று கூறுகிறார் எனலாம்.
2.
நிலம் பன்மடங்கு வைத்திருந்தவர்கள், கடன் காரணமாக அதனை விற்றுவிட்டு ஒரே ஒரு வீட்டில் இருப்பதையும் காணலாம். படிக்காதவர்கள், ஒரே ஒரு வாடகை வீடு மட்டும் வைத்து இருந்தவர்கள், நிலத்தினை குத்தகைக்கு எடுத்து, உழைப்பின் மூலம் இன்று சொந்த வீட்டிலும் உள்ளார்கள் (அவர்கள் அளவில் அது சாதனை ).
முதலாமவர்க்கு கடன் சோம்பலால் மட்டுமே வந்ததா? இருக்காது, புறக்காரணிகள், பருவம் தப்பிய மழை, வெயில் அல்லது அவர்களின் தவறான முடிவு.
இரண்டாமவர்க்கு, உழைப்பு மட்டுமே காரணமாகுமா? உழவை பொறுத்த வரையில் முயற்சியோடு நேரம் கை கூடவேண்டும். முதலாமவர்க்கு இருந்த அதே புறக்காரணிகள் இவருக்கும் இருந்திருக்கும். ஆனால் hard work உடன் Smart work சேர்த்து செய்து முன்னேறி இருப்பார்.
//நிலமென்னும் நல்லாள் நகும்.// இங்கு நிலமகள் என்பதை ஊர் மக்கள் என்றும் கூறலாம். சோம்பலால் மட்டும் அல்ல, வெற்றிபெறாத மனிதர்களை புறம் பேசி நகைக்கவே செய்வார்கள்.
3.
இந்த குறளை உழவுக்கான குறளாக மட்டும் கருதாமல் முயற்சிக்கான குறளாகவும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுத்துக்கொண்டால்
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்". - இந்த குறளின் சாரம் மேற்சொன்ன 1040 வது குறளில் இருக்கும்.
இந்த குறள் இருக்க, அதேபோல ஏன் மற்றோர் குறள்? இப்ப ட்விட்டர்ல காப்பி பேஸ்ட் ட்ரெண்ட் மாதிரி, வள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்திலும் தனித்தனியாக அதே நல்ல விஷயங்களை வேறு வேறு வகையான மக்களுக்கு கூறியள்ளார் என எடுத்துக்கொள்ளலாம்🙂
இனிய நாளாகட்டும்.

Sunday, January 16, 2022

குறள் 108


குறள் 108


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.




கமல் 60 நிகழ்வில் வடிவேலு பேசிய வீடியோ சமீபத்தில் மீண்டும் கண்டேன்.   அதில் நிறைய புகழ் மாலையை  கமலுக்கு அளித்திருப்பார்.  பெரும்பாலும் அது நன்றி பாராட்டுவதாகவே இருக்கும்.  கமல் அவர்கள் ஆரம்ப காலத்தில் செய்த உதவியை மறக்காமல், வடிவேலு அவருக்கே உரிய  நகைச்சுவை உணர்வோடு கூறியிருப்பார்.  சிங்கார வேலன் திரைப்படத்தில் மூன்றே மூன்று டயலாக் பேசி நடித்த வடிவேலுவை பார்த்த கமல்,  தேவர்மகன் திரைப்படத்தில் அவரை நடிக்க முன் பணம் பெற்றுக்கொள்ள நாளை கமல் அலுவலகத்திற்கு செல்ல சொல்வார்.    அடுத்த நாள் போகாமல், அன்று மாலையே சென்று இருப்பார்.  இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு பண்பு. 



அதில் ஒரு இடத்தில் 'கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிற திரையுலகத்தில்'  என்பார், அந்த வரியை திரும்ப திரும்ப யோசித்தால் வள்ளுவரின் 'நன்றல்லது அன்றே மறப்பது நன்று'  பற்றி வடிவேலு இடித்துரைப்பது போல தான் இருக்கும்.   எத்தனை விதமான துரோகங்களை,  நல்லது அல்லாதவற்றை இவர்கள் சந்தித்து இருப்பார்கள், நிறைய மனிதர்கள் புழங்கும் இந்த மாபெரும் கனவு தொழிற்சாலையில்.      அவற்றை அந்த ஒற்றை வரியில் நகைச்சுவையாக பேசி மறந்து கடந்திருப்பார்.  


நன்றல்லது அன்றே மறப்போம்.   இனிய நாளாகட்டும்.


https://www.youtube.com/watch?v=uxanERLYqLE



Sunday, April 25, 2021

ஈரோடும் தேர்தலும் - 2017 to 2021

2017 ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றிய கட்டுரையில் எழுதியவை முதல் இடம்  பெற்றது. இன்று 2021ல் எப்படி உள்ளது? 


கல்யாணங்களில் ஆடம்பரங்களை கொரானா மட்டுமே தற்போது தற்காலிகமாக  நிறுத்திவைத்து உள்ளது.  கொரானா மட்டுப்பட்டிருந்த கடந்த மூன்று, நான்கு மாதங்களாக, அந்த ஆடம்பரமும் கொஞ்சமேனும் வெளிப்பட்டுத்தான் இருந்தது.  அதே போல எளிமையை உணர்ந்தவர்கள், மிகவும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்து விட்டார்கள்.   நேரில் சென்றே பத்திரிகை வைத்து அழைக்க வேண்டும் என்று இருந்ததையும், கல்யாணத்திற்கு செல்லவில்லை என்றால் கோபித்துக்கொள்வார்கள் என்பதையும் கொரோன காலம் உடைத்துள்ளது.   சில நாட்கள் தங்கி சிறப்பிக்கும் நெருங்கிய வட்டத்தின் கூட்டமும் குறைந்துள்ளது.  மாஸ்க்(போடவில்லை என்றாலும்),  சானிடைசரோடு இது இன்னும் சில காலம் தொடர வாய்ப்பு உள்ளது.


மருத்துவதுறை பற்றி இருந்த பார்வை, எனக்கு மாறியுள்ளது. இப்பொழுது சிசேரியன் டெலிவரி என்பது பெரிய விஷயமாக பேசுபொருள் ஆவது இல்லை. நார்மலா? சிசேரியனா? எனும் ஒற்றைக் கேள்வியில் மக்கள் கடந்து விடுகிறார்கள்.  அதற்கு உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள்  போன்ற பலவகை காரணங்களை உணர்ந்து இருக்கலாம்.  தமிழ்நாட்டில் குழந்தைப் பிறப்பில், குறைந்துள்ள இறப்பு விகிதம் இதன் பயனை பறைசாற்றும். அதேபோல செயற்கைக் கருத்தரிப்பு பற்றிய பார்வையும் மாறியுள்ளது.  அறிவியல், குழந்தை இல்லாதவர்களுக்கு போலிச் சாமியார்களிடம் சென்று ஏமாறாமல் இருக்க ஒரு அற்புதமான மேஜிக்கை கண்டுபிடித்துள்ளது.  வாடகைத்தாய் வழி பிறக்கும் குழந்தைகள் என  உலகம் அறிவியல்  பாதையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு நகர்ந்து கொண்டுதான் உள்ளது.  அதனைப்  பற்றி தனியாகவே எழுதலாம்.    


அதேபோல தெருவுக்கு தெரு மெடிக்கல்ஸ் இருப்பது, மருந்து, மாத்திரைகள் சட்டென சராசரி மக்களுக்கும் கிடைக்க இது உதவுகிறது.  நமது மக்களின் சராசரி ஆயுளை நீட்டித்துக் கொண்டு தான் உள்ளது. குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகள் பற்றிய தவறான புரிதல் மக்களிடம் மாறியுள்ளது.  தடுப்பூசிகளும் அதிவிரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு மக்களை இறப்பிலிருந்தும், கொரானாவின் வீரியத்திலிருந்தும்  தடுத்துக்  கொண்டுள்ளது.  தடுப்பூசி என்பது வியாபார நோக்கம் அல்ல என என் பார்வை மாறியுள்ளது.   


பேஸ்ட் இல்லாமல், இந்த மக்கள்தொகைக்கு வேப்பங்குச்சி மட்டுமே ஈடு கொடுக்க முடியுமா என்பதும் சந்தேகமே.  அது போலத்தான்  சோப்பு, சாம்பு பற்றி பேசுவதும்.   தோல் மற்றும் சாயக்கழிவுகள் நிலை பெரிதாக மாறியுள்ளதாக தெரியவில்லை.  இந்த கழிவுகளை எல்லாம்  ஆறுகளில் கலக்க விடாமல், சுத்திகரிப்பு நிலையத்தை வைப்பதும், முறையாக மறுசுழற்சி செய்வதுமே தீர்வாகும்.  அதனை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர பழங்காலத்திற்கு செல்வதாக இருக்க முடியாது. 


கொரோனா காரணமாக 8 மணிக்கு அடித்துப்பிடித்து குழந்தைகளை பேருந்தில் பள்ளிக்கு ஏற்றிவிடும் வேலை இப்பொழுது இல்லை.  ஆனால் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், வேறு விதமான பிரச்சனைகளை கையாண்டு வருகிறோம்.  குறிப்பாக ஆன்லைன் க்ளாஸ் அழுத்தங்கள் பெற்றோருக்கு எனில், யாரையும் பார்க்காமல், விளையாடாமல் ஆன்லைனில் இருக்கும் குழந்தைக்கு வேறு மாதிரியான மன அழுத்தம். குழந்தைகளை எவ்வாறு முழுநேரமும் பிஸியா வைத்துக்கொள்வது என்பது ஒரு சவாலான விஷயமும்.  கொரோனாவிற்குப் பின் கல்வி முறை மாறுமா? ஓரிடத்தில் அமர்ந்து ஆசிரியர்கள் கூறுவதை கேட்பார்களா? என்பதெல்லாம் காலம் தான் பதில் கூறும்.   

   

புரோட்டா சாப்பிடும் பழக்கம் குறைந்தது போல தெரியவில்லை.  இன்றும் நெகிழிகளில் குழம்பு ஊற்றி எடுத்துச் செல்கிறார்கள்.  டீக்கடைகளில் டீ நெகிழியில் கட்டித் தருவது ட்ரெண்ட்ட்டாகவே மாறியுள்ளது. 

ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.   அங்கங்கு நாம் பார்க்கும் செக்கு எண்ணெய்,  திணை, ஆர்கானிக் கடைகள் இதனை மெய்ப்பிக்கும்.  ஆனாலும் இதில் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளது.  


மாறாக நீர்நிலைகள் பற்றி கொஞ்சமேனும் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. இந்த சில வருடங்களில் நீர்நிலைகள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்றவை அதிகமாகவே நடைபெற்றது. அரசாங்கமே பல நீர் நிலைகளை சீரமைத்தும் உள்ளது.  சில இடங்களில் 100 நாள் திட்டத்தினை இந்த பக்கமும் மடைமாற்றி உள்ளது ஆரோக்கியமான விஷயம். 


ஆனால் கீழ்பவானி, காலிங்கராயன் கரையில்  அல்லது ஏதேனும் நீர்நிலைகளை ஒட்டி, சென்ற இடங்களில், என்னை வருத்தப்பட வைத்த விஷயம் ஒன்று உண்டு. அது அங்கங்கு கிடந்த பாட்டில்கள்,  கூடவே இரண்டு மூன்று பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் கோக் பாட்டில்கள் அல்லது வாட்டர் பாக்கெட்டுகள்.  வாய்க்காலின் கரையில் ஒரு கிலோமீட்டருக்கு சென்று வந்தால் தெரியும்.  பத்து இருபது அடிக்கு ஒரு குவியலாகவும் அல்லது எங்கெல்லாம் நிழல் இருக்கின்றதோ அங்கும், சமூகப் பொறுப்பு  துளியும் இல்லாத குடிமகன்களின்  இந்த தடயங்களை காண முடிந்தது.  'ஐயா, நீங்கள் குடியுங்கள் ஆனால் இந்த பாட்டிலை எங்காவது ஒரு இடத்தில் போட்டுச் செல்லலாமே'.   அரசேகூட அந்த பாட்டில்களை போடுவதற்கு தனியாக  குப்பைத் தொட்டியை அங்கங்கு வைக்கலாம் அல்லது பாட்டிலைத்  திருப்பிக் கொடுத்தால் டாஸ்மாக்கில் தள்ளுபடி அளிக்கலாம்.   பாட்டில்கள் மறுசுழற்சிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.  கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்காலின் இந்த பிரச்சினை தமிழ் நாட்டுப் பானையின் ஒரு சோறு தான். கடந்த அரசு படிப்படியாக டாஸ்மாக்கை குறைக்கவில்லை.  வரும் அரசும்  இதில் கைவைக்காது, ஆனால் இந்த பாட்டில் கழிவுகளை ஒழுங்குமுறைப் படுத்துமா?  


80க்கும்  2010க்குமான பல ஒப்பீடுகள் நகரம் Vs கிராமம் போலவே இருக்கும். 90க்கு பிறகான நகரமயமாக்கல் இவற்றிற்கு முக்கிய காரணம்.  ஆனால் இன்று  நகரத்தின் ருசியை அறிந்தர்வர்கள், நகரங்களை விட்டு வர முடியுமா என்பது கேள்விக்குறி.  அதற்கு மருத்துவ காரணங்கள் தவிர, ஊர்ப்பக்கம் இன்றும் நிலவும் ஏற்ற தாழ்வும், பெண்களுக்கு நகரத்தில் கிடைக்கும் ஒருவித ∴பிரீனஸ்,  இன்னும் வேறு பல காரணங்களும் அடக்கம்.  ஆனால் கிராமங்கள் இப்பொழுதும் இயற்கை, உறவு, நட்பு என வேறு மாதிரி அழகாக உள்ளது. 


ஈரோடு மாவட்டம் பற்றிய கருத்து இப்படி மாறி இருக்க 2019ல் எழுதிய தேர்தல் பற்றிய கட்டுரை, மற்றொரு விதமாக மாறி உள்ளது.  பாராளுமன்றத் தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலம் வாக்காளர்களும் ஏற்றமே.  சென்ற தேர்தலில் அந்தக் கட்சியின் வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே பணம் கொடுத்தார்கள்.   ஆனால் இந்த முறை இரண்டு கட்சிகளுமே வாக்கு வங்கி தவிர, அனைவருக்கும் பணம் கொடுத்துள்ளார்கள்.  மக்களும்  இரண்டு பக்கமும் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதற்கு குத்துவதற்கு தயாராக இருந்தார்கள்.  குத்தினார்கள்.  ஒரு சிலர் பணம் வாங்க மறுத்த சம்பவங்களும் நடந்தது.   


சில தொகுதிகள் எல்லாம் ஒரு மாத காலமாக பரிசுமழை பொழிந்துகொண்டே இருந்தது. புடவை, வேட்டி அவர்கள் குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து உள்ளார்கள்.  'யார்க்கு ஓட்டு போட போறீங்க'  என்ற இருந்த  பேச்சு 'உங்களுக்கு ரெண்டு பக்கம் இருந்தும் வந்துடுச்சா' என்று மக்கள் மட்டத்தில் மாறி விட்டது.   


 90களில் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவது மட்டுமே இருந்தது.  இன்று அரசு மற்றும்  அரசியல்வாதிகள்,  அவர்களின் குற்றத்தை சரிசமமாக மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றார்கள்.  மக்களும் குற்ற உணர்வு இல்லாமல் அதனை வாங்கிக் கொள்கின்றார்கள்.  ஒரு வகையில் இதனைப் பார்க்கும் பொழுது, ஒரு சாமானியன் அரசியல்வாதிகளிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியுமா?  அவர்கள் செய்த எதிர்மறைச் செயலுக்குத் தானே கொடுக்கின்றார்கள்? தேர்தல் கமிஷனே இதனை கண்டு கொள்ளாமல்  யார்மீதும் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நம்  மக்கள் செய்வது சரிதானோ? 


மாற்றம்  ஒன்றே மாறாதது. காலத்தின் பாதையில் கவனித்து பயணிப்போம்.


பி.கு : 

2017 -ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றி எழுதி முதல் இடம் பிடித்த கட்டுரை.


https://tinyurl.com/yxju8tk5



2019-ல் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எழுதியது.  

https://tinyurl.com/n6kwcjma








Monday, March 08, 2021

பவானி செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா

 பவானி, செல்லாண்டி அம்மன் மாசி திருவிழா என்பது அந்த கோயிலின் திருவிழா மட்டும் அல்ல.  அதனை சுற்றி இருக்கும் சின்னச் சின்ன தெருக்களில் உள்ள அம்மன்களுக்கும் சேர்ந்ததே.   பலமுறை கலந்து கொண்டு இருந்தாலும், சேத்து வேசம் போடும் நிகழ்வைப்  பார்த்தது இல்லை. அதற்கான நேரமும் வாய்க்கவில்லை என்று தான் கூறவேண்டும்.  புதன்கிழமையில் பண்டிகை வருவதாலோ என்னவோ, தொடர்ந்து  மூன்று நாள் விடுமுறை கிடைக்காது என்பதால்,  புதன் மதியம் நடைபெறும் இந்த நிகழ்வை மட்டும் தவற விட்டுக்கொண்டு இருந்தேன். இம்முறை வீட்டில் இருந்து வேலை செய்ய வைத்த கொரோனாவிற்கு நன்றி.  

மற்ற ஊர்களின் அம்மன் திருவிழாவில் இருந்து, இந்த சேத்து வேசம் நிகழ்வு முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றது.  இதுவரை நான் பார்த்த மாரியம்மன் திருவிழாக்களில் இந்த மாதிரியான நடைமுறை இருந்ததில்லை. தேர் வடம் பிடித்து இழுப்பார்கள், அக்கினிச்சட்டி எடுப்பார்கள், அழகு குத்திக்கொள்வார்கள், குண்டம் இறங்குவார்கள்,  கம்பம் ஆடுவார்கள்,  தெப்பத்தேர், மகந்தேர், மிரமனை வருதல் என்பகை தான்,  அனைத்து பக்கமும் நடைபெறும்.  ஒரு சில  நிகழ்வு மாறுபடும் அல்லது இருக்காது.   இங்கு மட்டும்தான் இவற்றோடு சேர்த்து,  இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி உள்ளது. அது மட்டுமில்லாமல் சனி இரவு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் லைட்டிங்கும் வேறு எங்கும் இல்லாத நிகழ்வு.  

இந்த சேற்று வேடமிடும் நிகழ்ச்சி வழி வழியாக நடந்து கொண்டு உள்ளதாக கூறுகிறார்கள்.  இப்பொழுது இதனை  சேற்ற்றில்  மட்டும் இடும் வேசம் என்று முற்றிலும்கூற முடியாது.   பல வகையான வண்ண வண்ண கலவைகளைத்தான்  உடல், முகம் என பூசி இருந்தார்கள்.  கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காணப்படுபவர்கள் போலவும்,  மாறுவேட போட்டிக்கு போவதுபோலவும், வேசமிட்டு அலப்பறை விட்டுக் கொண்டிருந்தார்கள்.  சுற்றுலா தளத்தில் சில்வர் பூசப்பட்டு தடி ஊன்றி நிற்கும் காந்தி தாத்தா போல நிறைய சில்வர் மனிதர்களையும் காண முடிந்தது.  ஜோக்கர் திரைப்படத்தில் வருவது போல டெரர்ராக முகத்தினை மாற்றியிருந்தார்கள்.  ஜோக்கர் வேடம் தான் அளவுக்கு அதிகமாக இருந்தது.  புலி, பெண், அம்மன் வேடமும் கூடவே.  இவை எல்லாவற்றையும் விட என்னை சட்டெனெ கவர்ந்தது தல ரசிகரின் முதுகில் எழுதப்பட்டு இருந்த வலிமை அப்டேட்.  ட்ரெண்டில் உள்ளார்கள். 





 


 


இந்த  ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அல்லது தப்பாட்ட அடியை கேட்க முடியவில்லை.  அது இல்லாமலே கோலாகலாமாக இருந்தது.  நிகழ்வு முக்கிய சாலையில் கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ தூரம், 3-4 மணி நேரம் நடைபெறுகிறது.  பவானியின் அந்த முக்கிய சாலை அன்று முடக்கப்பட்டு போக்குவரத்து வேறு பக்கம் திருப்பப்படுகிறது. நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்புகளில் நீண்ட நேரம் விளையாடுகிறார்கள்   வேடமிட்டர்வர்கள் முன்னால் நகர்ந்து நகர்ந்து செல்ல சாலையின் இருபுறமும் கூடியிருக்கும் மக்கள் உப்பு மற்றும் மிளகுடன்  சாக்லெட் அல்லது சில்லரையும் கூடவே சேர்த்து அவர்களின் மீது வீசுகின்றார்கள்.   சாக்லேட்டும் , சில்லரையும் எப்பொழுது சேர்ந்திருக்கும் என தெரியவில்லை.  



"அக்கா இந்த பக்கம் போடுங்க " 

"அக்கா வெறும் உப்பு மட்டும் போடாதீங்க சாக்லேட்டோட போடுங்க"...

 "காசு போட்டு போடுங்க"... 

"ஒருபக்கமாக போடாதீங்க"  என்று பலவிதமாக குரல்களில், விசிறும் பெண்களிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இந்த வேடம் இட்டவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருந்தார்கள். வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு இல்லாமல் நடைபெறுகிறது.  ஆண்கள்தான் இந்த சேத்து வேசத்தை  ஏற்று இருந்தார்கள். கூடவே சிறுமிகள் சிலரும். வேடிக்கை பார்ப்பவர்களும் இந்த கலவையை வீசுபவர்களும்  பெரும்பாலும் பெண்களாக இருந்தார்கள்.  


அந்த காசையும், சாக்லேட்டையும் குதித்து 'கேட்ச்' பிடிப்பதில் தான் இதில் இருக்கும் த்ரில்.  போட்டி, விளையாட்டு, கொண்டாட்டம் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.  அந்த காசை இருவரும் பிடித்து விட்டால் அது எனக்கு, உனக்கு என்று அடிதடி. பலரும் அந்த நாணயத்தைக்  கைப்பற்ற மொட்டை வெயிலில், தார் ரோட்டில் அப்படியே  உட்கார்ந்து கொள்கின்றார்கள்.  நாணயத்தை அழுத்தி, நெட்டித் தள்ளி உரிமை கொண்டாடுகிறார்கள்.  இந்த பஞ்சாயத்து சில நிமிடங்கள் நடந்து ஒருவர் விட்டுக்கொடுக்கிறார் அல்லது வெற்றி பெறுகிறார்.  இவையாவும் அங்கங்கு, அக்கூட்டத்தின் ஊடே பலவாறாக நடந்து கொண்டு இருக்கிரது.  அதுதான் நிகழ்வின் எழுதப்படாத விதி.  


முன்பு குழந்தை இல்லாத பலரும் இந்த சேத்து வேச நிகழ்வில் சூறை விடுவதாக வேண்டிக்கொள்வார்களாம்.  வேண்டுதல் நிறைவேறினால் அவர்கள் சொந்தம் சூழ அந்தக் குழந்தையையும் சூறை விடுவார்களாம். குழந்தை அவர்கள் தெரிந்தவர்கள் கையில் கிடைக்காமல் வேறு ஒருவரின் கையில் கிடைத்து விட்டால் அவர்கள் கேட்கும் காசு பணத்தை இவர்கள் கொடுக்க வேண்டுமாம்.   இப்பொழுது அது தடை செய்யப்பட்டு உள்ளது.   சூறை விடுவது என்பது கூட்டத்தில் உப்பு மிளகை வீசுவது போல தூக்கி வீசுவது தான். 


என்னைப்போல வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு அண்ணன், பக்கத்தில் இருந்த பெட்டிக்  கடையில் லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட் ஒரு சரம்  வாங்கினார்.  அதனை ஒவ்வொன்றாக கிழித்து  அவர்களின் மீது சரசரவென ரம்மி விளையாடுகையில் சீட்டுக்கட்டிலிருந்து சீட்டு போடுவதுபோல விசிறினார்.  கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.  கூடவே மற்றொருவர் வேறு பிஸ்கட் பாக்கெட்களை  வாங்கி வீசினார்.  அடுத்ததாக  லேஸ் சிப்ஸ்.  சிலர் 'அண்ணா அண்ணா இங்கயே கொடுங்க' என அருகே வந்து அவரிடம் பிடுங்காத குறை.   ஒருவர் முழு லெஸ் சாரத்தையும் வாங்கிக் கொண்டு ஓட, அவரின் சக போட்டியாளர் அவரைத் துரத்தி அவரிடம் இருந்து பாதியை பங்கிட்டுக் கொண்டார். 


ஒரு பக்கம் தண்ணீர் பாட்டிலையும் வாங்கி விசிறி அடித்தார்கள்.  திடீரென ஒரு கடையில் இருந்து  துணிகளைத் தூக்கி போட்டார்கள்.  இன்னொரு பக்கம் இருந்து வாழைப்பழங்கள்.  என்ன ஒரு ஆனந்தம் அதனை குதித்துப் பிடிப்பவர்களுக்கு.  கலந்துகொண்டு இருந்த சிறுவனின் கையில் மஞ்சள் பை இருந்தது.  அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி நாணயங்கள், சாக்லெட்டுகள் என நிரம்பி இருந்தது.  அவனும் கிடைத்தவற்றை பிடித்து மீண்டும் அந்தப் பையில் திணித்துக்கொண்டு இருந்தான்.  கிட்டத்தட்ட ஆரம்பித்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் வந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.  இன்னும் சற்று தொலைவில் முடிந்துவிடும்.   


தார்ரோடு மதியம் ஒரு மணி வெயில் எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.  வழிநெடுக இதுதான் அவர்களுக்கு விளையாட்டு. அவர்களுக்கு இது கொண்டாட்டமாகத் தான் இருந்தது.  இரு தண்ணிர் வண்டிகள்  பின்னால் வந்து கொண்டிருந்தது.  தண்ணீர் திறந்துவிட்டு சாலைக்கு அடித்துக் கொண்டு வந்தார்கள்.  அந்த வண்டியில்  வேசம் போட்டவர்களும் அவர்களின் வேசம் கலைந்து விடும் என குளித்துக் கொள்ளவில்லை. மற்றவர்கள் அந்த வண்டியின் அடியில் ஷவரில் குளிப்பது போல ஏகாந்தமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். முடித்துவிட்டு மீண்டும் கேட்ச் பிடிக்கும் ஆட்டத்திற்கு வந்தார்கள்.



இந்த ஊர்வலத்தின் எஞ்சின் போல ஒரு குழு.   அந்த  குழுவின் புகைப்படங்களைத்தான் முன்பு பதிவிட்டு இருந்தேன்.  அதில் ஒருவர் கிரிக்கெட் வர்ணனையாளர் போல ஒரு கையில் மைக் வைத்துக்கொண்டு சாலை ஓரத்தில் இருந்தவர்களிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தார்.  அந்த ஊர்வலத்தின் இறுதியில் குதிரை அதன் பின்னே பூக்களால் சோடிக்கப்பட்ட கரகமும், சாமியும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.  அதற்கு மட்டும் கயிற்றில் பாதுகாப்பு வளையம் வைத்து நகர்ந்துகொண்டு இருந்தார்கள்.  ஆனால் கூட்டம் என்னவோ இந்த வேஷம் போட்டு வந்தவர்களையும், சூறை பிடிக்க வருபவர்களிடமும்  தான் தேங்கியிருந்தது.   அவர்கள்தான் கொண்டாட்டத்தை உச்சகட்டமாக மக்களுக்கு அளித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.   


வண்டி வெயிலில் நின்று இருந்ததால் கொதித்தது.  இந்த வெய்யிலிலும் மக்கள் உற்சாகமா இருந்தார்கள் .  .  இந்த ஊர்வலம் நடந்த பாதையின் பின்னே ஏதோ ஒரு கலவரம் நடந்து முடிந்தது போன்ற தோற்றம். கொரோனா ஆரம்பிக்கும் முன் சென்ற வருட நோம்பி  நடந்து முடிந்திருந்தது.  எனக்கு என்னவோ இந்த வருடம் கொரோனாவை சூரசம்ஹாரம் செய்துவிட்டு, இந்த பண்டிகை கொண்டாட்டித் தீர்த்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது    



செல்லாண்டி அம்மன் சேத்து வேசம் பார்த்துவிட்டு வீடு அருகே வந்தேன். 

"நோம்பிக்கு எப்ப வந்தீங்க" என்றார் பக்கத்து வீட்டு பாட்டி.  

"நேத்து நைட்டு வந்தேங்க" என்று தொடர்ந்தேன்  "எங்க யாரையும் காணோம்.  உங்க வீட்ல யாரும் வர்லீங்களா?. நோம்பிக்கு என்ன பண்ணிங்க?" என தொடர் கேள்வியை எழுப்பினேன்.  

 "யாரும் வரலைன்னு சொல்லிட்டாங்க.. வந்தாங்கன்னா எதையாவது சமைக்கலாம்.. எதோ என்னால முடிஞ்சத போடுவேன்..ஒருவேளையாவது வந்துட்டு போனாங்கன்னா நமக்கு நல்லா இருக்கும்" என்றார் வெளியில் சிரித்தபடி.  அவர்கள் மகன்/மகள் வீடு அரை மணிதூரத்தில் தான் இருந்தது.  


கயிற்றுக் கட்டிலை மல்லாக்க போட்டு கட்டிலின் இரண்டு கால்களுக்கும் சேர்த்து புதிய ஜமுக்காளத்தைக் கட்டி இருந்தார்.   கையில் ஊசி வைத்து கோர்த்துக் கொண்டு இருந்தார்.  சட்டென மடைமாற்ற  "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டேன்.  

"தெரிஞ்சவங்க ஜமுக்காளத்துல பேர் எழுதி தர சொன்னாங்க.. இப்பெல்லாம் பண்ணறது இல்லை... சரி தெரிஞ்சவங்கன்னு தான்" என்றார்.   பவானியில் இது  ஒரு முக்கியமான தொழில்.  

 "இதுல ஒரு எழுத்துக்கு ரெண்டு அம்பது  குடுப்பாங்க. தமிழ், இங்லீஸ், இந்தி எதுவா இருந்தாலும் பேப்பர்ல போட்டு கொடுத்தா, நான் ஜமுக்காளத்துல எழுதிருவேன்" என்றார். ஒருவேளை 250ஐ ரெண்டு அம்பது என்று கூறுகிறாரே என நினைத்து "எவ்வளவுங்க?" என மீண்டும் கேட்டேன்   "ரெண்டு ரூவா அம்பது காசுங்க.  நான் ஆரம்பிச்சப்ப அப்பல்லாம் 40 பைசா இருந்தது.  படிப்படியா இப்ப ரெண்டு அம்பது ஆகிடுச்சு" என்றார்.  அதில் ஒரு 20 எழுத்து இருந்திருக்கும்.  50 ரூபாய் கிடைக்கும் 


வெளியே ஊரே கொண்டாட்டமாக இருந்த அந்த நேரத்தில், இது போல தனித்து இருப்பவர்கள் அன்றும் தனித்து தானே இருக்கின்றார்கள். 



Friday, February 26, 2021

ரகிட ரகிட ரகிட

"மரணமாஸ" விட நமக்கு #ULLAALLAA தான்...

in repeat mode..

இரு வருடத்துக்கு முந்தைய #OTD

அந்த  பாட்டு போலவே கடந்த சில நாட்களாக  "ரகிட ரகிட ரகிட ஊ" ரிப்பீட் மோடில்.  ஆனால 'ஊல்லல்லா' பாட்டு,  வழக்கமான தலைவரின் அட்வைஸ் மழை பொழியும் தத்துவ பாடல்..  'ரகிட ரகிட ' அப்படி இல்லாமல் don't care ரக பாடல்.   அந்தப் பாடல் பற்றி அலசுவோம்.


அணிகளில் பிடித்த அணி சொற்பொருள் பின்வருநிலையணி.  எனக்கு சுலபமான அணியும்.  அதில் தான் மிகச் சுலபமான இந்தக் குறளை உதாரணமாக குறிப்பிடலாம். 


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். 


அதற்கடுத்து வஞ்ச புகழ்ச்சி அணி எனலாம்.    


அதற்கான எடுத்துக்காட்டு பெரும்பாலும்  அனைவரும் அறிந்த அதியமான்-தொண்டைமான்-ஒளவை விடு தூது தான்.   ஒரு சமயம் தொண்டைமான்,  அதியமான்மீது படை எடுத்து வரப்போவதாக கேள்விப்பட்ட ஒளவையார், தொண்டைமானை சந்திக்க செல்லுகின்றார்.  தொண்டைமான் படைக்கலங்கள் உடைய அறைக்கு கூட்டிச் சென்று காண்பிக்கிறார்.  அங்கு சென்ற ஒளவை அந்த ஆயுதங்களை பார்வை இடுகிறார். 

 அக்கலங்கள் எல்லாம் புத்தம் புதிதாக,  பளிச் என மின்னுகிறது.  


அதனைக் கண்ட ஒளவை,  அதியமானின் வீரத்தினை தொண்டைமானிடம் எடுத்துக் கூறுகின்றார். 

 எப்படி?  தொண்டைமானைப் புகழ்வது போல ஆரம்பத்தில் தெரியும். 


இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டி,

கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து

கடியுடை வியல்நக ரவ்வே. (புறநானூனு,95)


'தம்பி.. நீ இங்க பளிச்சுன்னு தொடச்சு பூஜை போட்டு வெச்சிருக்கே.   அது நல்லது.  ஆனா இந்த அதியமானின்  படைக்கலங்கள் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வந்தேன்'.  


பகைவர்க் குத்தி,கோடு,நுதி சிதைந்து

கொற்றுறைக் குற்றில மாதோ ! என்றும்

அண்ணல்எம் கோமான்,வைநுதி வேலே (புறநானூறு,95)


அதியமான் பயல் இந்தமாதிரி வெச்சுக்கல.. சுத்துப்பட்டிலயும் போர்க்கு போய் சண்டை அடிக்கடி போட்டு வரார்.  அதனால கொல்லனோட வேல் செய்யும் பட்டறையில் ரிப்பேருக்கு போயிருக்குப்பா'.  அதனால எப்படி வசதி என்று அதியமானை வஞ்ச புகழ்ச்சியாப் புகழ்கின்றார்.  போரை நிறுத்துகிறார்.  இப்படி தான் எதையாவது எழுதி மார்க் வாங்கிருப்போம்.     


இந்த வஞ்ச புகழ்ச்சி அணிக்கு ஆகச் சிறந்த சமீபத்திய உதாரணம் "ரகிட‌ ரகிட‌ ரகிட‌ " பாட்டில் வரும் முதல் சரணம் தான்.  


"நாலு பேரு மதிக்கும்படி

 நீயும் நானும் இருக்கணும்.." 

என ஆரம்பிக்கும்.  முதல் முறை கேட்கும் போது வழக்கமான அட்வைஸ் மழையா  இருக்கும் போல  என நினைத்து  சளிப்போடு தான் கேட்க ஆரம்பித்தேன்.  மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுதுதான் அந்த பாடலை வஞ்ச புகழ்ச்சி அமைப்பில் உருவாக்கி இருப்பது தெரிந்தது.  


பள்ளியில் கல்லூரியில் நண்பர்களிடம் விவாதிக்கும்பொழுது கூட,  இந்த மாதிரி ஏத்திவிட்டு, அவர்களை இறக்கும்பொழுது  'என்ன மச்சி வஞ்ச புகழ்ச்சியா' என்று தான் கூறுவோம்.  அப்படி பேமஸ் ஆனது இந்த அணி.  அதன் சென்னை ஸ்லாங் தான் "என்ன மாப்ள... லந்தா.." என்பது.   இந்த ஒரு வரி உரையாடலை சரணத்தின் இடையில் சொருகி இருப்பார்.  அந்த இடத்தில் பாடல் யூ-டர்ன் போட்டு வஞ்ச புகழ்ச்சியாக மாறி அடுத்த வரி ஆரம்பிக்கும்.  


"அந்த நாலு பேர 

இதுவரைக்கும் பார்த்ததில்ல  நானு..

எனக்கு தேவைப்பட்ட நேர(ம்)  

அந்த பரதேசியக் காணோஓஓஓம்...."


ஒட்டு மொத்தமாக இந்தச் சரணம்,  'Dont listen on others negative words'  என்று ஊர் உலகத்துக்காக பயப்படாம, உனக்கு என்ன பிடிக்குதோ/ தோணுதோ, அதைச் செய் என்பதைக் கூறும்.  




இரண்டாவது சரணம் மோட்டிவேஷனை அள்ளித் தெளிக்கிறது. அடுத்தநாளை எப்படி வரவேற்கிறார்கள் பாருங்க. 


"ஏதோ ஒன்னு கொடுக்கத் தானே

அடுத்த நாளும் வருது..

ஆஹா

நல்லத நான் எடுத்துகிட்டா

நல்லதத்தான் தருது"


"The Secret" எனும் புத்தகம் ஈர்ப்பு விசை பற்றி நுணுக்கமாக கூறி இருப்பார்கள்.  நாம் எந்த விஷயத்தை தீவிரமாக ஈர்க்கிறோமோ அது நம்மை அடைகிறது. ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து,  அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும்.  அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய 

 ஒரு விஷயம்,  கண்டிப்பாக நடக்கும் என்கிறது.   கனவு காணுங்கள்,  என்று அப்துல் கலாம் கூறியதன் சாராம்சமும் இது தான்.  கனவு இலக்கை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும்.   தென்னை மரத்தில் பன்னாடை இருக்கும்.  அது வடிகட்டி மாதிரி, தேவை இல்லாத பூச்சி போன்றவற்றை மட்டும் வடிகட்டும். பல நேரங்களில் நாம கூட தேவை இல்லாத விஷயங்களை மட்டும், மனதில் போட்டு உளப்பிக்கொண்டே கிடப்போம். 


இதையே தான் வள்ளுவர் இப்படி கூறுகிறார் 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.



"எது என் தகுதி…..

யாரு வந்து சொல்லணும்

நெஜமா யார் நான்…….

என்கிட்டதான் கேக்கணும்"


வினாக்களை  யாரிடம் எழுப்பிகிறோம் என்பது தான் இங்கு கேள்வியே.  நமக்குள் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பாமல், நம்மைப் பற்றி, நம் இலக்கைப் பற்றி, அந்தப் பயணத்தில் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. வேறு யாரும் நம்மைப் பற்றி முழுதாக கூற முடியாது. அதனை மனசாட்சிக்கும், நமக்குமான உரையாடல் போல அமைத்திருப்பார் சந்தோஷ் நாராயணன்.




இரண்டாவது சரணத்தில்  கடைசியாக வரும் வரிகள் தான் ஹைலைட். 

  

"என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்

வருவானே……ஏ…..ஏ…..ஏ…..ஏஹே…..ஏஹே….

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே

மன்னிக்கணும் மாம்சே….

அட.. அவனும் இங்க நான்தானே"


#beatyourself #beatyesterday எனும் மோட்டிவேசனல் டேக் லைன் தான் இந்த வரிகள்.   உள்ளத்தனைய உடலில்   ஓடும் பலரும் இந்த ஹேஸ்டேக் போடுவதைக் கண்டுள்ளேன்.  குறிப்பாக ஷான்.  அதே தூரத்தை, முந்தைய நாளைவிட குறைந்த நிமிடத்தில் முடித்துக்கொள்ள இது ஒரு self motivation. நமக்கான போட்டியாளர் வெறும் யாரும் இல்லை நாம் மட்டுமே. 


அடுத்ததாக இந்த பாட்டின் எனர்ஜியே, "ரகிட ரகிட ரகிட" முடித்தவுடன் வரும் 'ஊ' எனும் உற்சாக ஒலி தான்.  கூடவே இடையிடையே வரும் சின்னச் சின்னச் உற்சாக ஒலிகள் தான்.  


 

இப்போது ஆரம்ப வரிகளுக்கு வருவோம் 

"ஹே, என்ன வேணா நடக்கட்டும்..

நா சந்தோசமா இருப்பேன்..

உசிரு இருக்கு வேறன்ன வேணும்

உல்லாசமா இருப்பேன்".

அன்றைய

"ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும் 

எனக்கொரு கவலை இல்ல"பாட்டின்  சமீபத்திய வடிவம்.



முதல் இரு வரிகள் சுயநலம் பேசுவது போல தெரிந்தாலும், அடுத்த வரியையும் சேர்த்து கவனிக்கும்பொழுது தான் அதன் ஆழம் தெரியும்.   வாழ்தல் அறம்  எனும்   ஈரோடு கதிரின் அடிப்படை கோட்பாடு. "எவருக்குமே சாவதற்கான காரணங்களைவிட, வாழ்வதற்கான காரணங்கள் ஒன்றே ஒன்றாவது கூடுதலாக இல்லாமல் போகாது".   அந்த இரு வரிகளும் உணர்த்துவது அதுவே. 



#வஞ்சபுகழ்ச்சி  #sarcasm #Motivation

#ரகிட-ரகிட


Thursday, January 14, 2021

Covid (Be) +

2020 இப்படியாக முடியும் என்றோ,  2021 இப்படி ஆரம்பிக்கும் என்றோ எதிர்பார்க்கவில்லை.  கடைசியாக அது எங்களை நோக்கி வந்து விட்டது.  சென்ற திங்கள் மருத்துவமனையில் அப்பாவிற்கு கோவிட் நெகட்டிவ் என்று கூறி வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் என்றதும் தான் சற்றேனும் தெளிவடைந்தேன்.   11 நாட்கள் மருத்துவமனை வாசம்  அன்றுதான் முடிவுக்கு வந்தது.

வெள்ளிக்கிழமை , கிறிஸ்துமஸ் அன்று மதியத்திற்கு மேல் அப்பாவிற்கு காய்ச்சல்.   அதற்கு இரு நாட்களுக்கு முன் தான் ஊரில் இருந்த மருத்துவரிடம் காண்பித்து காய்ச்சலுக்கு மருந்து வாங்கி இருந்தேன்.  ஆன்டிபயாடிக் மருந்தினை அவர் கொடுக்கவில்லை.  இரண்டு நாட்கள் கழித்து  காய்ச்சல் நிற்கவில்லை என்றால் வர சொல்லி இருந்தார். ஒருநாள் நன்றாக இருந்தவர்,  கிறிஸ்துமஸ் மாலை, சற்று இருமலோடு இருந்தார். கூடவே காய்ச்சலும் அதிகமானது.   ஊரில் அதே மருத்துவர் வர மாலை 6.30/7.00 ஆகும்.  ஈரோடு கிளம்பினோம்.  ஒரு பக்கம், ஈரோடு மருத்துவமனைக்கு செல்ல கொரானா பயம்.  இருந்தாலும் வேறு வழி இல்லாததால் சென்றோம்.  

மருத்துவமனையில் முதலில் காய்ச்சலுக்கான ஊசி போட்டதும் காய்ச்சல் நின்றது.  "நல்லாயிடுச்சு, வீட்டுக்கு போலாமா?" என்றார் அப்பா.   இருமல் இருக்கவே  CT  ஸ்கேன் எடுக்க டாக்டர் கூறினார்.  தெரிந்த மருத்துவர் தான்.   ஓரிரு மணிநேரம் கழித்து CT  ஸ்கேன் முடிவில் கோவிட் பாசிட்டிவ் என்றதும் எனக்கு அதிர்ச்சி.  பனியில் நடைப்பயிற்சி சென்றதால் வந்த சாதாரண சளி காய்ச்சல் என்று  நினைத்துக் கொண்டிருந்தேன்.  நகரத்திலிருந்து விலகி ஒதுக்குப்புறமாக இருக்கும் எங்கள் ஊருக்கு கொரோனா வராது என்ற நினைப்பு பொய்யானது.   எப்படி வந்தது? எங்கிருந்து வந்திருக்கும்? ஒருவேளை காலையில் வாக்கிங் செல்லும்போது காற்றில் பறந்து வந்திருக்குமா?   நான்கு நாட்கள் கழித்து, சென்ற பெரிய காரியத்தில் தொற்றியிருக்குமா?  கடைகளுக்கு சென்ற போது வந்திருக்குமா?   அல்லது கோயிலில் பிரதோஷம் என்று போனார்களே, அங்கு  கூட்டம் என்று கூறினார்களே, அங்கிருந்து  வந்திருக்குமா? பாசிட்டிவ்  என கூறியவுடன், மனதில் தொடர்ந்து குழப்பம் நிறைந்த கேள்விகள், கவலைகள்.   

'சரி, வந்துவிட்டது.  அடுத்து குணமாக என்ன  செய்ய வேண்டுமோ அதை மட்டுமே இப்பொழுது பார்ப்போம்.'  கோவிட் என்று மெதுவாக கூறிய மருத்துவர்   "அட்மிசன் போட்டுடுங்க.  மைல்டா தான் இருக்கு.  ஆறு நாள் கழித்துதான் மறுபடியும் செக் பண்ண முடியும்.  ஸ்வாப் ரிசல்ட் காலைல வரும்" என்றார்.   அதுவரை சுற்றிலும் நின்று கொண்டிருந்த செவிலியர்கள்  தள்ளி நின்று கொள்கிறார்கள்.  அவரது படுக்கை  மறைக்கப்படுகிறது.  தனி அறைக்கு மாற்ற என்னிடம் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.  கிட்டத்தட்ட மணி ஒன்பது.     
 மருத்துவமனையின் உள்ளே நுழைந்து ஊசி ஒன்றை போட்டதுமே, 'காய்ச்சல் போய்டுச்சு தெம்பாயிட்டேன், வீட்டுக்கு போலாமா' என்றவருக்கு என்ன கூறுவது.  ஒருவழியாக என்னை முதலில் திடப்படுத்திக்கொண்டு,  மனதளவில் அவரை தயார் செய்து தனி அறைக்கு அனுப்பினேன்.   "இன்னும் ரெண்டு மூணு நாள் தனியா இருக்கணும் போல இருக்கு.   இருமல் நிக்கணும்.   தைரியமாக இருங்க. சரியாயிடும்" என்று கூறி  ஒரு தனி அறைக்கு அவரை அனுப்பிவிட்டு,  இரவு உணவை வாங்கி கொடுத்து விட்டு அப்பாவிற்கு தேவையான உடமைகளை தம்பியை விட்டு எடுத்து வர சொல்லிவிட்டு கோவிட் வார்டின் முன்பாக காத்து  நின்றேன்.   

என்னைப்போலவே மற்றொருவர், கவலை படிந்த முகத்தோடு கோவிட் வார்டின் முன்பாக நின்றுகொண்டு இருந்தார்.   அவரிடம் விசாரித்தேன், அவரும் அவருடைய அப்பாவை அன்று மாலை அங்கு அட்மிட் செய்திருந்தார்.     அவரின் அப்பவிற்கு என்னென்ன அறிகுறிகள் வந்தன என்பதை உறுதிப்படுத்தி, அவரும் நானும் சமாதானம் ஆகிறோம்.   இவைதான் அவை:

தலை சுற்றல் ஒரு வார காலம்  (இது முக்கியமான ஒன்று)
லேசான சளி ஒரு வார காலம்
உடல் அசதி   ஒரு வார காலம். 
காய்ச்சல் இரு நாட்களுக்கு முன் 
இருமல் ஒரு நாளுக்கு முன். 

அவரது குடும்பத்தில் சிலருக்கும் பாசிட்டிவ் வந்ததாக கூறியவர், அவர்களை வீட்டிலேயே தனிமையில் வைத்து இருப்பதாக கூறினார்.  உடன் இருந்தவர்களையும் டெஸ்ட் எடுக்க கூறினார். 

உடமைகள் வர அதனைக்  கொடுத்துவிட்டு அடுத்தநாள் வருவதாக கூறி விடைபெற்று வீட்டிற்கு வந்தேன். அன்றிரவு எவ்வளவு புரண்டு படுத்தும்  தூக்கம் வர மறுத்தது.    அடுத்த நாளுக்கு எங்களுக்கும்  டெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற திட்டம் மட்டுமே இருந்தது.  அவருக்கு காய்ச்சல் இருந்த இரண்டு நாட்கள் நானும் அம்மாவும் கூடவே இருந்து இருக்கின்றோம்.   நல்லவேளையாக குழந்தைகள், மனைவி அவர்களின் ஊரில் இருந்தார்கள். 

அடுத்த நாள்  சனிக்கிழமை அவருக்குத் தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு சென்றோம்.   
 மருத்துவர் ஸ்வாப் டெஸ்டிலும் பாசிட்டிவ் வந்துள்ளதாக தெரிவிக்கிறார்.  இரவு அப்பாவும் தூங்கவில்லை என்கிறார்.  இருமல் குறையவில்லை. 

எங்களுக்கான கோவிட் டெஸ்ட் அங்கு எடுப்போமா அல்லது பெருந்துறை மருத்துவ கல்லூரியில்  எடுப்போமா எனும் குழப்பம்.   நான் அரசு மருத்துவமனை என்பதில் தெளிவடைந்து இருந்தேன்.  ஆனால் அம்மா, கோவிட் டெஸ்ட் எடுக்க  மறுக்கிறார்கள், அதுவும் அரசு மருத்துவமனைக்கு வர பலத்த மறுப்பு.   ஒருவழியாக  நானும் அங்குதான் எடுக்கப்போகிறேன் என்று சமாதானப்படுத்தி பெருந்துறை செல்கிறோம்.  

 இங்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியை பாராட்டியே ஆகவேண்டும்.   ஊரின்  ஒதுக்குபுறமாக நல்ல திறந்தவெளி.  அனுசரணையான பேச்சுகள்.   30 நிமிடத்தில் சோதனையை எடுத்து அனுப்பி விடுகின்றார்கள்.  நாங்கள் சென்ற பொழுது ஐந்தாறு பேர் இருந்தார்கள்.  முடிவு  36 மணி நேரத்திற்குள் ஈரோடு கோவிட் வெப் சைட்டில் வரும் என்று கூறினார்கள்.  

வீட்டிற்கு சென்று வீடு முழுவதையும் கழுவி விட்டு, துணிமணிகளை அலசி பக்கத்தில் இருந்தவர்களுக்கும் கூறி பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டோம்.  சனிக்கிழமை இரவும் தூக்கம் இல்லாமல் கழிந்தது.  நமக்குள்ளும்  வைரஸ்  இருப்பது போலவே ஒரு குறுகுறு உணர்ச்சி.  உடல் அசதி.  தொண்டை கரகரப்பு.   ஒருவேளை ரெண்டு பேருக்கும் பாசிட்டிவ் வந்தால், பெருந்துறை போலாமா? அல்லது அப்பா இருக்கிற மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகிக்கொள்ளலாமா?   பல கலவையான கவலைகள், யோசனைகள், வருத்தங்ககள்.  அதையும் விட அப்பாவின் இருமல், கூடுதலாக கவலை அளித்துக்கொண்டு கொண்டிருந்தது. 

அப்பாவிற்கு பாசிட்டிவ் ஆன அடுத்தநாள், சனிக்கிழமை ,  ஈரோடு சுகாதாரத்துறையில் இருந்து தொலைபேசியில் அழைத்து அப்பாவின் உடன் இருந்த எங்களையும் மருத்துவ பரிசோதனை எடுக்க சொல்லியிருந்தார்கள்.   ஞாயிறு, மொடக்குறிச்சி சுகாதாரத்துறையில்  இருந்து, எங்களுக்கும் மருத்துவ பரிசோதனை எடுத்துவிட்டதா என்பதை உறுதி செய்து கொண்டார்கள்.  ஞாயிறு  மாலையே ரிசல்ட் வந்து இருக்கும்.   ஆனால் அன்று இரவு நான் பார்க்கவில்லை.  எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று திங்கள் காலையில் தான் ரிசல்ட் பார்க்கின்றேன். 

இருந்தாலும் வெள்ளி மாலை ஆரம்பித்து முன்னெச்சரிக்கையாக அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து மத்திய அரசின் சித்தா வெப்சைட்டில் இருந்தவற்றை கடைபிடித்தோம்.   

1. 5 times salt/turmeric hot water gargle
2. Ginger water for drinking
3. Steam inhale with nochi Or  tulasi 3 times
4. Kabasoor 2 times a day
5. Morning and evening sambrani / neem leaves sambrani
6. Stand in 11 am - 2 pm sun at least 10 mins
7. zincovit tablets 1

நல்லவேளையாக இருவருக்குமே நெகட்டிவ்.   சற்றே நிம்மதி.   திங்கள் காலை எட்டு மணியளவில் பேரூராட்சி ஊழியர் எங்கள் வீடுகளுக்கு முன்பு மருந்து தெளித்து விட்டு உள்ளே சானிடைசர் அடித்துவிட்டு சென்றார்.  ஏரியாவில் பரபரப்பு.  அந்த மருந்து அடிக்கும் பணியாளரிடம் கேட்டேன்.
"வேற எங்கேயாவது இருக்காண்ணா?" 
"கொரோனா ஆரம்பித்ததிலிருந்து சுத்தி சுத்தி மூணு நாலு பேருக்கு  இருந்துட்டே தான் இருக்குங்க.  நேத்து கூட மஞ்சகாட்டு வலசுல. மூணு பேரும் ஒரே ஃபேமிலி.  பாவம் சின்ன குழந்தைக்கும் வந்துடுச்சு"

நான் தான் நமது ஊரில் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தாலும்,  சுற்றிலும் அங்கங்கே இருந்து கொண்டு தான் இருக்கின்றது. தொடர்ந்து நான்கு நாட்கள் அவரின் கடமையை செய்துவிட்டு போனார்.
அவர் வந்து விட்டு சென்றதும் ஊரில் பலரும் விசாரிக்க ஆர்ம்பித்தனர்.  சிலர் "சாமிகிட்ட வேண்டிட்டு  இருக்கேன், சீக்கிரமா நல்லா போயிடும்" என்றார்கள்.  இவர்களின் அன்பு ஒன்று தான் ஆறுதல்.   

செவ்வாய்க்கு பிறகு அப்பாவிற்கு இருமல் லேசாக குறைய ஆரம்பித்தது.   அதன் பிறகுதான் எனது பரிதவிப்பும் சற்று குறைந்தது.  மீண்டும் ஒரு வாரத்திற்குப் பிறகு, நியூ இயர் வெள்ளியன்று சோதனையில் பாசிட்டிவ் என்றே வந்தது.  அன்று நெகடிவ் வரும் வீட்டுக்கு செல்லலாம் என நினைத்து இருந்தோம்.  அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நடந்த டெஸ்டில் நெகடிவ் என்று வரத்தான் நிம்மதி பெருமூச்சு. 11 நாள் முடிந்திருந்தது.  டிஸ்சார்ஜ் செய்து அவரை கூட்டி  செல்லும்போது, பரபரப்பாக வழக்கம் போல இயங்கிக் கொண்டு தான் இருந்தது.  

இன்னும் சில மாதங்கள்   கண்டிப்பாக பத்திரமாக இருக்க வேண்டும். அது  சிற்றூராக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.   அலைச்சல், மன உளைச்சல், மருத்துவமனையில் இருந்து வந்தும் தனிமையில் இருப்பது என்பது  'தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்'  என்பது போலத் தான்.

Monday, November 16, 2020

சூரரைப் போற்று" - an EI View

"சூரரைப் போற்று" அக்குவேரு ஆணி வேராக பலரும் பிரித்து மேய்ந்து விட்டார்கள்.  அதிலும் வழக்கம்போல முரண்பட்ட கருத்துகளும் வந்து போய்விட்டது. 


 ஒரு எமோஷனல் இன்டெலிஜென்ஸ் பார்வையில் இந்த படத்தை அணுகுகிறேன்.  படத்தில் வரும் பாத்திரங்கள்  அனைத்தும் ஏதோ ஒரு வகையில்  உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு பாத்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டதை  சிறப்பாக செய்திருப்பார்கள். அங்கங்கு சென்டிமென்ட்களைத் தூவி  இயக்குனர் சுதா கோங்குரா நம்மை உணர்ச்சியால் கட்டிப்போட்டு இருப்பார்.


 பல நேரங்களில்  நாயகன் மாறனாகிய  சூர்யா ஏதோ ஒரு டென்ஷனில் சுற்றிக்கொண்டு இருப்பது போலவே இருக்கும்.  கோபம் வரும்.  ஆத்திரம் வரும். அழுகை வரும்.  இயலாமை வரும்.   ஒரு ஹீரோத் தனம்  இல்லாத சாதாரண மனிதனாக,  இந்த சாதனையைச் செய்தது போல படத்தில் காண்பித்து இருப்பார்கள்.   அது தான் படத்தின்  வெற்றி.  ஆனால் இந்த திரைப்படத்தில்  சூர்யாவை விட,   EI கற்ற  இரு சிறந்த பாத்திரங்களைக் கூறுவேன். 


 ஒன்று அவர் கூடவே இருக்கும் அவருடைய மனைவி பொம்மி.  சூர்யாவுக்கு சமமான, வித்யாசமாக சிந்திக்கும், தைரியமான, பொறுமையான பாத்திரப் படைப்பு. பல  காட்சிகள் இருந்தாலும், குறிப்பாக இரு இடங்களை கூறவேண்டும்.


 முதல் முறை.  மாறன் பொம்மியை கூட்டிக்கொண்டு கேக் டெலிவரி செய்ய பைக்கில் செல்வார்.  நண்பருக்கு போன் செய்ய சொல்லி பேஜரில் ஒரு செய்தி வரும்.   வண்டியை நிறுத்தி பக்கத்தில் இருந்த போன் பூத்தில் அவரின் நண்பருக்கு  அழைப்பார்.   விமான கண்காட்சிக்கு அவர் பார்த்து வைத்த விமானம் வரவேண்டும் எனில்  அந்த விமானத்தின் ப்ளூ ப்ரிண்ட்  இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என அவர் கூறுவார்.  ' வேறு யார்க்கும் இல்லாத புது ரூல்ஸ் நமக்கு  மட்டும் ஏன்' என சூர்யா உடைந்து போய் விடுவார்.  அந்த டென்சனில்,  என்ன செய்வது என  தெரியாமல், போன் பூத்துக்கு பணம் கொடுக்காமல் அப்படியே பைக் நோக்கி செல்வார்.   'காசு குடுத்துட்டு போங்க என அதன் உரிமையாளர்' பின்னால்  வர,  பூத் வெளியே நிற்கும்  பொம்மி 'அண்ணே  நான் குடுத்துக்கறேன்" என்பார்.  சூர்யா பைக்கை பதட்டமாக உதைத்து ஸ்டார்ட் பண்ணி, ஒரு பத்தடி ஓட்டி  செல்வார்.  பொம்மியை விட்டுவிட்டு செல்வதை உணர்ந்துவிட்டு, வண்டியை நிறுத்தி  திரும்பிப் பார்ப்பார்.   அந்த இடத்தில் அவ்வளவு பதட்டம் தெரியும்.   ஆனால் பொம்மியோ, முகத்தில் குழப்ப ரேகைகள் படித்திருந்தாலும்   தலையை லேசாக ஆட்டி, ஒரு கையில் கேக் பிடித்துக்கொண்டு மறு கையில் அவரைப் போகச் சொல்லும் உடல்மொழியோடு, "நான் ஆட்டோல போயிக்கறேன்.." என்பார். 

அதேபோலத்தான் கிட்டத்தட்ட அனை

த்து பிரச்சினைகளும் முடிந்து குட்டி விமானம் பறக்கத்  தயாராக இருக்கும்.  மினிஸ்டர் உள் இருக்க குட்டி விமானத்தில் முதல் முறையாக ஏறி கிளம்ப முற்படும்போது தீ பிடித்துவிடும்.  ஒரு வழியாக எமெர்ஜென்சி லேண்டிங் செய்து வெளியே வருவார்கள்.  சூர்யாவுக்கு எப்படி நடந்தது என குழப்பம்.  விமான தளத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவரைச் சுற்றி நிருபர்கள். பல கேள்விகள் எழுப்புவார்கள்.  பாதுகாப்பு வசதி இல்லையா என்பது உள்பட.  'அதைப்பற்றி நான் விளக்குகிறேன்' என்பார். 


 அப்பொழுது  தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் பொம்மிக்கு பிரசவவலி வரும்.   அந்த இடத்தில சூர்யா பொம்மியின் வலியைப் பார்த்துவிட்டு பதைபதைப்பாவார்.  அப்பவும் பொம்மி "நான் பார்த்துகிறேன்..நீ போ" என ஒரு தைரியத்தை கொடுக்கும் சொற்களை உதிர்ப்பார்.  பதட்டமில்லாமல் பொறுமையாக 'என்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீ கவலைப்படாம  தைரியமா பேசு' என்பது தான் அது. அந்த  இடங்களில் எல்லாம் பொம்மி பதட்டமடையாமல் இருப்பார்.  அவரின் உணர்ச்சியை மடைமாற்றி வேறு கனிவான சொற்களின் மூலம் பிரதிபலிப்பார்.  பொம்மியின் அந்த சிறு பார்வையும், அந்த உடல்மொழியும், சொற்களும்  தான்  சூர்யாவுக்கு பூஸ்ட்.


இவர்கள் இருவருக்கும் நடக்கும் காதல் கட்சிகளின் கவிதையை விட,  இந்த இடங்களில் பொம்மியின் உணர்வு,  ஊக்கமாக  கண்கள் வழியே கடத்தப்படும்.


மற்றொருவர், மாறனின் மேலதிகாரியாக வரும் நாயுடு(மோகன் பாபு) அவர்களின் கதாபாத்திரம்.  அவர் ஒரு ராணுவ அதிகாரி என்பதாலோ என்னவோ எந்த ஒரு இடத்திலும் அளவுக்கு மீறிய உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளவே மாட்டார்.  அவருக்கும், மாறனுக்கும் ஒரு மோதல் போக்கையே ஆரம்பத்தில் இருந்து காண்பித்திருப்பார்கள்.  ஆனால் அதனைத் தாண்டி 'க்ளுக்' என  ஆனந்தக்கண்ணீர் எட்டிப் பார்க்கும், இரு நெகிழ்ச்சியான காட்சிகளில்.   


முதன்முறையாக குட்டி விமானத்தை தரை இறக்க விட மாட்டார்கள். மாறன், விமானத்தை ஓட்டும் நண்பர் சேவிடம்"நீ தாம்பரத்துல எறக்குடா நான் பார்த்துக்கறேன்" என கூறி, தாம்பரம் விமானப் படைத் தளத்தில் கட்டுப்பாட்டையும் மீறி இறக்குவார்கள்.  

அந்த விதிமீறலுக்காக நண்பர்கள்  மூவரையும் விசாரணைக்கு நிறுத்துவார்கள்.  அந்த காட்சி அவ்வளவு அழகாக இருக்கும்.  நாயுடு சேரில் இருந்து எழுந்து மிடுக்காக நடந்து வருவார்.   அவரின் பேச்சு தெலுங்கு கலந்த தமிழில் ரசிக்கும்படி இருக்கும். 'மேடே(Mayday) டிக்லேர் பண்ணி சென்னை ஏர்போர்ட்ல லேன்ட் பண்ணி இருக்கலாமல்ல' என கூறி அந்த இடத்தில் கேள்விகளைத் துளைப்பார்.   


இருக்கு முன்னாடி இதே மாதிரியான சம்பவத்தை அவர்களிடமிருந்தே போட்டு வாங்குவார். இறுதியில்

"டெல்லி வரைக்கும் எதிரிகளை சம்பாரிச்சிட்ட.  பைன் 25000.  மூனு மாசம் கழிச்சு கொடு."

அப்போதும் அவர்கள் நம்ப முடியாமல் நிற்பார்கள். "என்ன உங்கள கட்டிபிடிச்சு  வழியணுப்பனுமா? போங்க, "


மாறன் "என்னத்தான் உங்களுக்கு பிடிக்காதே, சார்?" என்பார்


"நம்ப இன்னிக்கு பொலிட்டிக்கல் ப்ரசர்ல்ல உன்ன உள்ள வச்சா,  என்னையே நான் மதிக்க மாட்டேன்... தம்புடு...நீ பண்ணனும்ன்னு நினைக்கிறது... உன் ஈகோ, என் ஈகோவ விட பெருசு.   ஒரு சோல்ஜர் அவனை நம்பி வந்தவர்களை உயிரோடு திரும்ப சேர்க்கணும்;  நீ இன்னைக்கு பண்ண மாதிரி.  யூ ஆர் எ லீடர் டுடே"  என்று கூறிவிட்டு ஒரு சிகரெட் எடுப்பார்.   அதன்பிறகு  சூர்யாவுக்கும், நாயுடுவுக்கும் நடக்கும் சிகரெட், வயசு பற்றி உரையாடல் ஒரு ஹைக்கு.  


முன்பிருந்த பகையை மனதில் வைத்து அவர் நினைத்திருந்தால், அந்த இடத்திலேயே மாறனின் கனவை தகர்த்து இருக்க முடியும். 


அதைவிட மிக முக்கியமான காட்சி.   பல பிரச்சினைகளும் முடிந்து, இறுதியாக விமானத்தை இயக்கும் சமயம். இரண்டு மூன்று நாட்களாக மாறன் தூக்கமே இல்லாமல் அலைந்து கொண்டிருப்பார்.  "நாமதான்டா பாதுகாக்கணும், இல்லன்னா தீ கூட வச்சிருவாங்க" என்று நண்பர்களிடம் கூறிவிட்டு அவர் விமானம் நோக்கி அயற்சியான உடற்மொழியோடு வருவார்.  அங்கு அவரின் மேல அதிகாரி, நாயுடுவும் அவரது குழுவும் stand-at-ease ஆக நின்று  கொண்டிருப்பார்கள்.  ஒரு சிறு புன்முறுவலோடு பேசுவார்.   "என்ன நெடுமாறன்  அந்த  கோஸ்சாமிக்கு மட்டும்தான்  ஆள் இருக்குமா?  நமக்கு இல்லையா? நம்மள்ள ஒருத்தர நாம கைவிடமாட்டோம்.  Go and take rest man" என்பார்.  


அவரின் பாத்திரப்படைப்பு எந்த ஒரு இடத்திலும் உணர்ச்சியை மிதமிஞ்சி வெளிக்காட்டாமல் இருக்கும்.  எந்த அளவிற்கு வெளிக்காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படுத்தி இருப்பார்.   அதே நேரம் நாம் ஒரு முயற்சியை நோக்கி நகரும்போது எப்படி பழகிய மனிதர்கள் உதவுகிறார்கள் என்பதுவும்.  


பொம்மி, நாயுடு இரு பாத்திரங்களும் உணர்ச்சிகளை சட்டென கொட்டிவிடாமல்,  கதையை மேலும் அழகாக்குகிறது.

டாக்டர் செலின், US-மொடக்குறிச்சி

சென்ற வாரத்தில் எங்களது ஊர் மொடக்குறிச்சி மீண்டும் தலைப்புச் செய்திகளில்.  சென்ற முறை 1996-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நடந்த போது இருக்கும்.  தினமும் நூறு, ஐம்பது பேராக எங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.  தினமும் மாலை தொலைக்காட்சி செய்தியில் பரபரப்பாக பேசப்படும்.   வேளாண் பிரச்சினைகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக  கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தின் மூலம் 1033 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு கின்னஸ் சாதனை அடைந்தது.  எங்கு சென்றாலும் அதனைப் பற்றியே கேட்பார்கள்.  நக்கலின் உச்சமாக "நீயும் எலக்சன்ல நின்னயா" என்பார்கள்.    இந்த முறை அமெரிக்காவின் செலின் ராஜ் கவுண்டர் அவர்கள் முக்கியச் செய்தியாக இடம்பெற்றுள்ளார்.  அவரது அப்பா ராஜ் அவர்கள் படித்த பள்ளி தான், மொடக்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளி.  தற்போது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி.

 

வருடா வருடம் நடக்கும் பள்ளியின் இலக்கிய மன்ற விழா மற்றும் ஆண்டு விழாக்களில் நாவல் பழ  மரத்தடியிலும், வேப்பமரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டுதான் சிறப்பு விருந்தினருக்கு காத்திருப்போம்.

அந்த காத்திருக்கும் மாலை வெயில் நேரத்தில், சின்ன கல்லை எடுத்து, சற்று தள்ளி உட்கார்ந்திருக்கும் நண்பனின் முதுகில் தூக்கி போட்டு விளையாடி சுவாரசியம் ஆக்கிக் கொண்டதுண்டு.   எப்பொழுதும் பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு முன்பாக சிறப்பு விருந்தினரின் பேச்சு இருக்கும்.  கலை நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் வேளையில்,  சிறப்பு விருந்தினரின் பேச்சு, அவர் கூறும் குட்டிக் கதைகளைப் பொறுத்து ஆர்வம் வரும்.  

 

பெரும்பாலும் சிறப்பு விருந்தினராக SKM நிறுவனத்தின் எஸ்கே மயில்சாமி கவுண்டர் அவர்கள் தான் அழைக்கப்பட்டு இருப்பார்கள்.  எங்கள் பள்ளியில் படித்த அவர், ஒரு சிறந்த தொழிலதிபராக, தனித்துவம் மிக்கவராக இருந்தார் அப்போதும், இப்போதும்.  பள்ளிக்கு கேட்கும் நேரங்களில் நிதி வழங்கிக் கொண்டிருந்தார்.  கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்த அவரது வரலாறை, பேச்சைக் கேட்கக்  கேட்க நம்மில் ஒருவர் என சுவாரசியமும், ஊக்கமும் வரும்.   அவை மூளையின் ஓரத்தில் எங்கோ ஒரு பக்கம் உட்கார்ந்து, வேண்டிய நேரத்தில் நம்மை உசுப்பி விடும்.  சில வருடங்கள் கழித்து எஸ்கே மயில்சாமிக் கவுண்டர் எனும் அவரின் பெயரை,  எஸ்கே மயிலானந்தன் என மாற்றிக்கொண்டார். அவர் மாற்றிக்கொண்ட சமயம்,  நுயுமராலஜி படி மாற்றிக்கொண்டார் என நினைத்துக் கொண்டுதான்  இருந்தேன்.  அதன் பிண்ணணி அப்பொழுது தெரியவில்லை.  அவரது SKM நிறுவனம், இன்று நான்கு கிளை நிறுவனமாக பெருகி, எங்கள் பகுதியில் பலருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் சிறந்த நிறுவனம்.  அவரது பிறந்த ஊரை தத்து எடுத்து,  அவர்களின்  குழந்தைகளுக்கு,   உயர்கல்வி வரை படிக்கவும் வைத்து வருகிறார்.  வாழ்க வளமுடன் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, வேதாந்திரி மகரிஷிக்குப்பின் அதனை வழிநடத்தி வருகிறார்.

 

சரி, எதற்காக இந்த ப்ளாஸ்பேக்.  SKM அவர்களுக்கும், டாக்டர் செலின் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இன்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அவர்களின் கொரோனா குழுவில் இடம்பெற்றுள்ள பெண் மருத்துவர், செலின் கவுண்டர் அவர்கள் என்பது அறிந்ததே.   சென்ற வாரம் அவரைப்பற்றிய செய்திகள் வந்த நேரத்தில், எனது வாட்ஸ்அப் முழுக்க நண்பர்கள் "மச்சி, உங்க ஊர்க்காரங்க போல" என அவரின் பார்வர்டுகளால்  நனைத்துக் கொண்டு  இருந்தார்கள்.  நண்பர் ஒருவர் எனக்கு வாழ்த்தும் கூறினார்.   காரணம் மொடக்குறிச்சி அவரின் பூர்விகம் என்பது மட்டும் தான்.  இது அவரது தனிப்பட்ட முயற்சி, சொந்த சாதனை தான்.  அதையும் தாண்டி, அவர் நான்கு முறை பள்ளிக்கு வந்து, அவரின் டிரஸ்ட் வழியாக நிறைய உதவிகளை செய்துள்ளார் என்பது தான் கூடுதல் மகிழ்ச்சி.

 

அந்த புகைப்படங்களில், நாங்கள் பள்ளியில் உட்கார்ந்து கொண்டு இருந்த திடலில்,  அதே மேடையில் சிறப்பு விருந்தினராக அலங்கரித்து மாணவர்களுக்குப் பரிசை வழங்கிய புகைப்படங்கள் வலம் வந்தன.  நாங்கள் SKM அவர்களின் பேச்சை விளையாட்டாகக்  கேட்டு  உள்வாங்கிக் கொண்டது போல,  அந்தக் கூட்டத்தில் எத்தனையோ மாணவர்கள் டாக்டர் செலின் அவர்களின் உரையைக் கேட்டிருக்க கூடும்.  அது அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சிறு பொறியை கிளப்பிவிடும்.  அந்த சிறு பொறி அவர்களுக்கு ஊன்றுகோலாக, அவர்களை உலகம் முழுக்க எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய உதவும். 

 

அந்த மேடையை நோக்கி அவர் நடந்து வரும் பொழுது, அந்த சிறுவர்கள் வேடிக்கை வைத்திருப்பார்கள். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள்.   'இவங்க தான் இன்னிக்கு பேசறதுக்கு வந்திருக்காங்களா?  எங்கிருந்து வர்ராங்க?  நம்மூர்லயா படிச்சாங்க?  என்னடா, பேன்ட்  சர்ட்டெல்லாம் போட்டுருக்காங்க?'  என்று பல வித கேள்விகள் வந்திருக்கக் கூடும்.  இத்தகைய கேள்விகள் தான் அவர்களுக்குள் ஒரு 'ஸ்பார்க்'. 'அப்ப நாமும் படிச்சால் அங்க போக முடியமா?  இவங்க மாதிரியே சாதிக்க முடியுமா?'  எனும் அடுத்தடுத்து அவர்களை யோசிக்கத் தூண்டும்.     

 

அந்த வியப்பு, ஆச்சரியம் நிறைந்த கிசுகிசு கேள்விகள்,  அவர்களுக்கு எங்கோ ஒரு பொறியை, படிப்பின் தாகத்தை, அமெரிக்காவிற்கான கனவை உருவாக்கி விட்டிருக்க கூடும்.  இன்று இவரின் தந்தையின் கனவுக்காக பள்ளிக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் போல, அந்த முணுமுணுத்த கூட்டத்திலிருந்து ஒருவர்,  பல நாடுகளுக்கும் சென்றுவிட்டு வந்து மேலும் பலரைத் தூக்கி விடலாம்.   அதுதானே இன்றைய மற்றும்  நாளைய தலைமுறையின் தேவையாக இருக்கின்றது.

 

அவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாரா எனத் தெரியவில்லை.   அடுத்த முறை வந்தால் அவர் அங்கேயும் செல்ல வேண்டும்.  நம்மூரில் நாம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் விஷயத்தை அவர் ட்வீட்டாக பதிவு செய்திருந்தார்.  இதுகூட பலருக்கும் அவரவர்களின் பள்ளிக்கு ஏதாவது செய்வோமே என தோன்றி இருக்கும். இவருக்கும் கமலா ஹாரிஸ்க்குமான ஒற்றுமை.   இருவருமே இரண்டாம் தலைமுறையாக அமெரிக்காவில் இருப்பவர்கள்.  முதல் தலைமுறை முயற்சி எடுத்து, வாயுப்புக்களைப் பயன்படுத்தி சென்றதால் தான், இவர்களால் அங்கு சாதிக்க முடிந்தது.  பேச எவ்வளவோ அவரின் சாதனைகள் இருக்கும்போது சமூக வலைதளங்களில் வழக்கம்போல ஏதோ ஒரு எதிர்மறையை எடுத்துக்கொண்டு அவரது பெயர் பற்றி  சர்ச்சையை கிளப்பிக்கொண்டு இருந்தார்கள்.   SKM  அவர்கள் போலவே அவரும் செய்யலாம். 

 

கிட்டத்தட்ட நான் ஊருக்கு வந்ததில் இருந்து, கொரோன ஊரடங்கு தளர்வுக்குப் பின் மீண்டும்  கல்யாணம், விசேஷங்கள் என பரபரப்பாகவே, எனது  தனிப்பட்ட நேரம்  நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றது.  பல வருடங்களுக்குப் பின் இங்கு இருப்பதால் கொரோன பயத்தோடு முக்கியமானவற்றில்  பங்கு கொள்கிறேன்.

பெங்களூர், சென்னையில்  இருக்கும் என்  நண்பர்கள் இதன் காரணமாகவே ஊர்ப்பக்கம் வரவில்லை என்கிறார்கள். "அட, அங்க இருந்தா சின்னச் சின்ன விசேசம் ஒவ்வொன்னுக்கும் கூப்பிடுறாங்க.  போகலைன்னா சங்கடம் வேற.  கோவிச்சுக்கறாங்க".   டாக்டர்  செலின்  போன்ற சாதனையாளர்கள், இவை எல்லாவற்றையும் கடந்து விட்டுத்தானே சாதனைகள் செய்கிறார்கள்.

 

பெரும்பாலான சாதனையாளர்கள் அந்த வட்டத்தை உடைத்து வெளியேறியதால் மட்டும் தான் அவர்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிகிறது.  ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போது, பார்வை விரிவடைய மறுக்கின்றது.  பார்வை விரிவடைய, வெளிவட்டத்தின் வாய்ப்புகளை அறிந்துகொள்ள, உலகத்திற்கான திறவுகோலை வழங்க,  இத்தகைய சிறப்பு விருந்தினர்களின் நேரடிப் பங்கேற்பு உதவும்.  அவர்கள் நம் ஊரில் இருந்து சென்றவர்கள் எனும்போது நாமும் அதனைச் செய்ய முடியும் எனும் நம்ம்பிக்கை ஊற்று பிறக்கிறது. 

 

எங்கள் பகுதியில் இருந்து வெளியில் வந்து பிரபலமானவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அவர்கள் அல்லது அவர்களின் வழித்தோன்றல்கள் எங்கு இருந்தாலும், மீண்டும் வேர்களை நோக்கி விழுதுகளைப் பரப்பி மற்றவர்களைத் தூக்கிவிடுவதென்பது கண்டிப்பாக பாராட்டப்பட  வேண்டிய விஷயம்.   அதுவும் அவரின் அப்பா படித்த பள்ளி என்பது கூடுதலாக பாராட்ட வேண்டிய விஷயம்.  வாழ்த்துக்கள்  டாக்டர் செலின். 

 #mondaymotivation #MotivationalStories

   

 



Saturday, September 26, 2020

ஈரோடு தினம்

ஈரோடு  தினம் என காலையில் FM  கேட்டுக்கொண்டு செல்லும்போதே காதில் விழுந்தது.   கூடவே வாசலின் ஈரோடு  குறித்த அனுபவம்,  நினைவுகளைக் கீற ஆரம்பித்து, கொசுவர்த்திச்  சுருளை மலர விட்டது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஈரோடு வேறு வேறு பரிணாமத்தை எனக்கு வழங்கியுள்ளது. பள்ளிக்காலங்களில் பேருந்துகளில் வரும்பொழுது சும்மா வேடிக்கை பார்ப்பது திரையரங்குகளின் மீதான ஈர்ப்பாக மாறுகின்றது.  கொங்காளம்மன் கோவில் வீதி, நகைக்கடை வீதி சில காலம்  முக்கியமானதாக இருந்தது. கல்லூரி செல்லும்போது பேருந்து நிலையமும், பஸ்களும் பிடித்தமானதாக  இருந்தது.  அதன்பின் வெளியூர் சென்ற காலகட்டங்களில் ரயில் பேருந்து மற்றும் நிலையத்தில் இருந்து ஏற்றிவிடும் ஒரு ஹப் ஆக மட்டுமே இருந்தது.  இன்று வாசலின் வழி வேறு ஒரு பரிமாணம் எனலாம்.  
பள்ளி காலங்களில் ஈரோடு என்பது எங்களுக்கு ஒரு வெளிநாடு போவது போலத்தான்.  ஈரோடு போவது என்றால் ஒருவித மகிழ்ச்சி குடிகொண்டு விடும்.   "நாளைக்கு ஈரோடு போகப் போறேண்டா ",  "இன்னிக்கு ஈரோடு போய்ட்டு  வந்தேன்டா"  என்று நண்பர்களிடம் சொன்னாலே கெத்தாக  இருக்கும்.   ஈரோட்டில் திரைப்படம் பார்த்துவிட்டு சென்றால் காலர் தூக்கி விட்டுக்கொண்டு சுற்றலாம்.   அதற்கான சாட்சியாக டிக்கெட் எல்லாம் பல நாட்கள் பத்திரமாக இருக்கும்.  

கரகாட்டக்காரன் திரைப்படம் சக்கை போடு போட்ட போது குடும்பம் குடும்பமாக பல ஊர்களில் இருந்தும் ஈரோடு சென்று பார்த்தார்கள்.   அப்பொழுது புதிய படங்களைப்  பார்க்க சுற்று வட்டாரமும் ஈரோடு தான் வர வேண்டும்.  மொடக்குறிச்சி தியேட்டர் வர ஐந்து ஆறு மாதம்  வரை ஆகலாம்.  ஈரோட்டிலும்  ஒரேயொரு தியேட்டரில் தான் படத்தினை வெளியிடுவார்கள்.  ரஜினி கமல் படம் எனில் ரெண்டு தியேட்டர்கள்.     ஊரில் அண்ணா ஒருவர் ஓரிரு குடும்பங்களை ஒன்று சேர்த்து கரகாட்டக்காரன் படத்திற்கு சுற்றுலா(?) கூட்டிச் சென்றார்.  ஸ்டார் தியேட்டரில் ஐம்பது, அறுபது நாட்களைக் கடந்து படம் ஓடிக்கொண்டு இருந்தது.   பேருந்து நிலையத்தில் இறங்கி, ஸ்டார் தியேட்டர் வரை நடந்தே கூட்டிச்சென்றார்.  ஒரு மணி நேரம் முன்பே சென்று டிக்கெட் கவுண்டரின் முன்பு காத்திருந்து உள்ளே சென்றோம்.  காத்திருந்த அந்த நேரத்தில், பல சுவாரசியமான சம்பவங்களை கூறிக்கொண்டே செல்வார். அவர், அதற்கு முன்  இரண்டு முறை பார்த்திருந்தார்.   "இந்தப் படத்துல கடசீல மாரியம்மா மாரியம்மா பாட்டு  வரும்.   கொட்டாய்ல  சாமி வந்தெல்லாம் ஆடுவாங்க" என்றார்.  கூறியது போலத்தான்  திரைக்கு முன்புறம் இருந்த பெண்கள், மாரியம்மா பாட்டின் போது  சாமி ஆடினார்கள்.    "அந்த தீ மிதிக்கிறதெல்லாம்  செட்டிங்ஸ்.  அடியில செவப்பு கலர் சீரியல் பல்பு போட்டு எடுத்துருக்காங்க" என்று வாரமலரில் படித்ததையும் கலந்து கூறுவார்.   இப்படித்தான் ஈரோட்டில் முதல் திரைப்படம் பார்த்தேன்.

ஈரோடு அபிராமியில் படம் பார்ப்பது என்பது பலரின் கனவு.   அப்பாவும், அவர் நண்பரும் ஈரோடு ஒரு  வேலையாக வந்தபோது கூட்டிக்கொண்டு சென்றார்கள்.  வந்த வேலை மாலைக்கு  தள்ளி சென்றதால் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது.  பக்கத்தில் தான் அபிராமி காம்ப்ளக்ஸ்.  A  என்று அபிராமியின் ஸ்டைலான லோகோ, அபிராமி எழுத்தின் பின் இருந்த A/C 70MM,  அதன் முன்புற படிக்கட்டு அமைப்பு, வாயிலின் முன்பு தோரணங்கள், பெரிய போஸ்டர், கட் அவுட் என  'பட்டிக்காட்டான் முட்டாய் கடை பார்த்த' மொமெண்ட்டை வரவழைக்கும்.   தேவி அபிராமியில்  சிங்காரவேலன் திரைப்படதிற்கு தான் டிக்கெட் கிடைத்தது.  மற்ற தியேட்டர்களின் டிக்கெட்டைவிட,  அபிராமியின் டிக்கெட் பேப்பர் தரமான காகிதத்தில் இருப்பது போல தோன்றும்.  இரண்டு மாடிகள் சாய்தள படிக்கட்டில் ஏறி, உள்ளே நுழைந்தபோது பொது 'சொன்னபடி கேளு' பாட்டு பாதி சென்றுவிட்டது வருத்தம் தான்.  

சின்ன தியேட்டர் என்றாலும் திரை சற்று பெரிதாக, சுவரில் இருந்து வெளியே வந்து சற்று வளைந்தது போல இருக்கும்.  தியேட்டருக்குள் இருக்கும் ஒருவித ஏசி வாசனை ரம்யமாக பார்க்க வைக்கும்.  குசன் சீட்கள் அப்பொழுது ஒரு மாறுபட்ட சினிமா பார்க்கும் அனுபவத்தை கொடுத்தது.   இன்னுமொரு குறிப்பிட வேண்டிய விஷயம்  இடைவேளையில் அங்கு கிடைக்கும் கட்லெட்.  'டொமோடோ  கேட்ச் அப்' போட்டு சிறு பீங்கான் தட்டில் வைத்து தருவார்கள்.  அந்த கட்லெட் சுவையை வேறு எங்கும் சுவைத்ததில்லை.  அபிராமிக்கு சென்றால் எப்போதும்  கட்லெட் மட்டுமே வாங்குவது உண்டு.  ஆனாலும் அப்போது அபிராமியில் படம்  பார்க்க முடியாத வருத்தம்.   

கரகாட்டக்காரன் கூட்டிச் சென்ற அண்ணா ஒரு தீவிர ரஜினி ரசிகர்.  அதே டீமை அதன் பிறகு சில வருடங்கள் கழித்து எஜமான் திரைப்படத்திற்கும் கூட்டிச்  சென்றார். இந்த முறை படம் அபிராமியில்.  இதற்கும் அதேபோல ஒரு மணிநேரம் முன்பாகவே வந்து, போஸ்டரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.   "ரஜினி இந்த படத்துல ஒரே ஒரு சீன்ல மட்டுந்தா  ஜிப்பாவுல வருவாரு,  மத்தபடி படம் முழுக்க வேட்டி சட்டைதான்" என்பார்.  அதேபோல ஒருநாளும் எனை  மறவாத பாட்டு வரும்போது "இதோ இந்த சீன் தான், பாரு பாரு" என்பார்.   இடைவேளையில் அங்குள்ள சீல்டுகளை பார்ப்பதும் ஒரு குதூகலம்.  இப்படியாக அபிராமியில்  திரைப்படம் பார்ப்பது நிறைவேறியது. 

ஈரோட்டில் திரைப்படம் பார்ப்பது ஒரு அனுபவம் எனில், வரும் வழியில் வேடிக்கை பார்ப்பது மற்றுமொரு ஆனந்தம்.  மாமாவின் ஊர் அரச்சலூர். பூந்துறை வழியாக குறுக்கே சென்றால், 30 நிமிடத்தில் வண்டியில் செல்லும் தூரம்.  வண்டி இல்லாத  காலங்களில்  பேருந்து மாற்றித் தான் செல்ல வேண்டும்.   ஒன்று விளக்கேத்தி வழி. இன்னொன்று  நாடர்மேடு பெட்ரோல் பங்க் வழி.   இரண்டாவதே எனக்கு பிடித்தமான வழி.  விளக்கேத்தி வழியில் வேடிக்கை பார்க்க எதுவும் இருக்காது.    நாடார்மேடு பெட்ரோல் பங்க் அப்பொழுது  ஈரோடு நகரின் ஒதுக்குப்புறம்.  பேருந்து நிலையம் கூட்டிச் செல்ல மாட்டர்கள்.   இருந்தாலும் சோலார், கார்மல் பள்ளி என ஏதோ ஒன்று  வேடிக்கை பார்க்க கிடைக்கும். சினிமா போஸ்டர்கள், ஊர் பெயர் பலகைகள் என எதையும் விட்டு விடாமல் வரிசையாக படிப்பதும் உண்டு.   'பஸ்டாண்டு போனா  உக்கார சீட் கிடைக்கும்' என்றாலும், 'அது அர மணி நேரம் சேத்தி ஆகும்' என மாட்டார்கள்.

அம்மாவாசைக்கு திருச்செங்கோடு மலைக்கு செல்வது வழக்கம்.  அதிகாலையில் வரும் முதல் பேருந்து VMS.  அதில் ஏறி ஈரோடு பேருந்து நிலையத்தில் இறங்கி, திருச்செங்கோடு பேருந்தில் மாறுவது தான் எனக்கு நினைவு தெரிந்து முதலில் ஈரோடு வந்த அனுபவமாக இருக்கும். அதிகாலையில் செல்கையில் தூங்கிவிடுவதால், திரும்பி வரும்போது தான்  வேடிக்கை பார்க்கும் படலம்.   எப்படியும்  ஜன்னலோர சீட்டு  கிடைத்துவிடும்.  

ஓரிருவருடன் காலியாக சிவகிரியில் இருந்து 42 டவுன்பஸ் ஏறினால், ஈரோடு பேருந்து நிலையம் அடைய  45 நிமிடம் ஆகும்.    ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் நின்று அனைவரையும் ஏற்றி  ஊர்ந்து நத்தை போல ஊர்ந்து செல்லும்.  ஆனால் ஈரோட்டுக்குள் நுழையும்முன் நிரம்பிவிடும்.   நகருக்குள் நுழைந்ததும் ரயில்வே காலனி பள்ளி தான்  வேடிக்கை பார்க்கும் முதல் இடம்.   தாண்டியதும் ரயில்வே நுழைபாலம்.    தற்போது மேலே செல்லும் உயரம் குறைவான பழைய பாலம் மட்டுமே இருக்கும்.  பல வருடங்களாக குழி வெட்டி உயரம் அதிகமான  நுழைபாலம் கட்டினார்கள்.   அதனை நெருங்கும்போது ஏதேனும் புகைவண்டி தெரியாதா? என தேடுவது இயல்பு.  எப்பொழுதேனும் அதிர்ஷ்டம் கூடும்.   அடுத்தாக  காளைமாடு சிலை.   திமிலேறிய  காங்கேயம் காளையை ஒரு வீரன் அடக்கும், அந்த சிலை ஈரோட்டின் ஒரு அடையாளம்.  சில வருடங்கள் வண்ண, வண்ண லைட்டுகளும், சுற்றிலும் பைப் வைத்து நீர் பீச்சி அடிப்பது அழகாக இருக்கும், குறிப்பாக இரவில்.  
நகர பேருந்து அதனை அரை வட்டமிட்டு நுழைந்தால் fire  சர்வீஸ்.   அதற்கு எதிர்புறம் கோஆப்டெக்ஸ்  கட்டிடம்.   அதனை ஒட்டிய சாலையில் சற்று உள்ளே சென்றால் ஆனூர் தியேட்டர்.   கோழிமொட்டு  தியேட்டர் என்பார்கள்.  அதன் வடிவம் முட்டைபோல இருந்ததால் .  பேருந்தில் இருந்தே தியேட்டர் தெரிகிறதா என பார்ப்போம்.  இந்தியன் திரைப்படம் வந்த பொழுது, கமல் ரசிகர் அங்கு கூட்டிச் சென்றார். 

தீ அணைப்பு நிலையம் தாண்டியதும் சற்று தொலைவு சென்றால் சந்திரன் ஸ்டுடியோ.  பெரும்பாலான வீடுகளில், ஒயரில் பின்னப்பட்ட கூடை நாற்காலியில், குழந்தைகளை உட்கார வைத்து எடுத்த போட்டோக்கள், இங்கு எடுக்கப் பட்டதாகத்தான் இருக்கும்.   அடுத்து ஓடை குறுக்கிடும்.   தாண்டினால் பெரியார் நகர் ஆர்ச்.  பெரியார் அங்கு தான் பிறந்தார் என பல நாள் நம்பிக்கொண்டு இருந்தேன்.  எதிரில் மாணிக்கம் தியேட்டர் மற்றும் நடராசா  தியேட்டர்.   போஸ்ட் ஆபீஸ், அரசு பெண்கள் பள்ளி தாண்டியதும் பன்னீர் செல்வம் பார்க் வந்துவிடும்.      

எங்கள் ஊர் பேருந்துகள் பன்னீர் செல்வம் பார்க்கில்,  இடது புறம் திரும்பிவிடும்.   மாரியம்மன் கோவிலின் அம்மன் பெருந்திலிருந்தே அழகாக தரிசனம் கொடுப்பார்.  வலது கை இயல்பாக கன்னம் நோக்கி ஸ்டைல் கும்பிடு போட செல்லும்.   சற்று தொலைவு சென்றால் அப்பொழுதுதான் வந்த ரேமாண்ட்ஸ், பக்கத்திலியே உயரமான டெலிபோன் பவன் என ப்ர∴ப் ரோடு ஆரம்பிக்கும்.  ப்ர∴ப் ரோடின் மறுமுனையில் சவீதா  மருத்துவமனையின் கட்டிடம் புதிதாக மிரட்டும்.  அதன் பின் சந்துகளில் புகுந்து பேருந்து நிலையத்தின் ஒரு முனையில் நுழையும்.    

ஆனால், தொலைதூர பேருந்துகள், ஊரிலிருந்து 30 நிமிடத்தில் விரைந்து பேருந்து நிலையம் அடையும்.   காளைமாடு சிலைக்குப்பின் ரயில் நிலையம், சூரம்பட்டி  நால்ரோடு,  GH  வழியாக பேருந்து நிலையம் வந்தடையும்.   அது எனக்கு ஒரு போரிங் ரூட்.  வேடிக்கை பார்க்க பெரிதாக ஒன்றும் இருக்காது.  ஆனால் இதில் செல்லும்போது, மூன்று முக்கிய  திரைஅரங்கத்தின் போஸ்டர்களை வேடிக்கை பார்க்கலாம்.   ரயில் நிலையத்தின் எதிரில் இருந்த முத்துக்குமார், பின்பு ஸ்ரீசண்டிகாவாக மாற்றப்பட்டது.   அபிராமி காம்ப்ளக்ஸ்ஸில் இருக்கும்  அபிராமி மற்றும் தேவி அபிராமி. பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்த ராயல் தியேட்டர்.  இந்த திரை அரங்குகளின் போஸ்டர், கட் அவுட் மற்றும் தோரணம் வேடிக்கை பார்ப்பது அலாதி.

அடுத்து இன்னுமொரு வழி, தொலை தூர பேருந்தில் வந்து காளை மாடு சிலை அருகே இறங்கி 1ம்  நம்பர் பிடித்தால் பன்னீர் செல்வம் பார்க் வழியாக மணிக்கூண்டில் இறங்கலாம்.  பன்னீர் செல்வம் பார்க்கில் எங்கே பார்க் என பலமுறை தேடியதுண்டு.   அதேபோலத்தான் மணிக்கூண்டில் எங்கே கடிகாரம் எனவும்.  அந்த சாலை தான் மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் ஈரோட்டின் ரங்கநாதன் தெரு.  குட்டிக்  குட்டி கடைகள். எண்ணற்ற மனிதர்களின் வாழ்வாதாரம்.  

பன்னீர் செல்வம் பார்க் அருகில் பாடல் பதிவு செய்து தரும் கடை இருந்தது.  விரும்பும் பாடல்களை தெளிவாக பதிவு செய்து தருவார். ரெகுலர் கஸ்டமர்.   இளையராஜாவின் பாடல்களை கொடுத்து 90M கேசட்டில் பதிவு செய்தது பலமுறை நடக்கும்.  கேசட் சிஸ்டதிற்குப் பிறகு, CD, பென்டிரைவ் தற்போது இன்டர்நெடில் பாட்டுக்கேட்கும் அளவிற்கு மாறிய தொழில்நுட்பத்தில் இன்று அவர் என்ன செய்து கொண்டு இருப்பார்?  அந்தக்கடை கரும்பு ஜூஸ் கடையாக மாறி இருந்தது.  பெரும்பாலும் பன்னீர் செல்வம் பார்க் டு கொங்காளம்மன் கோவில் வீதி பேருந்து நிறுத்தம் வரை ஷாப்பிங்கோடு நடைதான்.  அங்கு ஏறினால் பேருந்து நிலையத்தை சக்தி ரோடு வழியாக அடையலாம்.  சத்தி சாலை வேடிக்கை பார்க்க பெயிண்ட் கடைகள் மட்டுமே இருக்கும்.   ஒரு சதுரம் போல ஈரோடு என்பது இந்த மூன்று வழிகளிலும் முடிந்துவிடும்.  

அனைத்து  நகரங்களையும் போல, ஈரோடும் எத்தனையோ விதமான மண்ணின் மைந்தர்களின்  உணர்வுகளோடு கலந்து அவர்களையும் வளர்த்து,  தானும் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.   இன்று மொடக்குறிச்சியில்  இருந்து வரும்போது லக்காபுரம்  ரிங் ரோட்டிலிருந்தே  நகரம் ஆரம்பித்து விடுகின்றது.   அப்பொழுது  சென்று வந்த திரையரங்குகளும், கடைகளும், அன்று  வேடிக்கை பார்த்த  பல இடங்களும், காலமாற்றத்தில் இன்று கரைந்தும்,  புதிய பொலிவோடும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது.  ஆவலாக எதிர்கொள்வோம்.

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...