Showing posts with label பயணங்கள். Show all posts
Showing posts with label பயணங்கள். Show all posts

Sunday, August 30, 2020

பெங்களூர்-ஈரோடு; கொரோனாவில்

ஊருக்கு வருவதென்பது எப்போதுமே ஒரு ஆவலான  விஷயம்.   ஆனால் ஆறு மாதங்கள்,  ஆகி இருந்தாலும், இம்முறை தயக்கம்.    ஈ-பாஸ் வழங்குவதில்  ஈரோடு மட்டுமே ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்.   மூன்று வாரங்களுக்கு முன் ஈரோட்டுக்கு போட்ட பாஸ் கிடைக்கவில்லை.  கோவை சுலபமாக கிடைக்கிறது என்றார்கள்.    சென்ற வாரம் போட்ட பாஸ் கிடைத்து விட்டது.  இருந்தும் கிளம்பும் நேரம் வரை நெருடல், தயக்கம், குழப்பம்.  விநாயகர் சதுர்த்தி அன்று  காலை கிளம்பி விட்டோம்.   ஆறு மாத காலமாக  வீட்டுக்கு அரை கிலோ மீட்டரில் இருக்கும் கடைவீதி தாண்டி எங்கும் சென்றதில்லை.   இரு முறை அருகில் உள்ள பள்ளிக்கு புத்தகம் வாங்க சென்றது மட்டுமே.  

காலை 7 மணியளவில் அந்த கடைவீதியை தாண்டியபொழுது விநாயகர் சதுர்த்திக்கான வாழைக் கன்றுகளும், பூக்களும் கடை வீதியில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.  ஒரு சில மக்கள் வாழைக்கன்றையும், இலைகளையும் அந்த காலை நேரத்திலும் வாங்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.   பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடலாமா வேண்டாமா? என்று யோசனை செய்து கொண்டே கடந்தேன்.  ஆறு மாதங்களுக்கு முன்பு கொரோனா லாக் டவுனுக்கு முன்பு,  போட்ட பெட்ரோல் அப்படியே இருந்தது தான் காரணம்.   இரு வாரங்களுக்கு ஒருமுறை மழை  வரும்போது கழுவதற்காகவும், பேட்டரி சார்ஜ் ஆகவும் வெளியில் நிறுத்தி கொஞ்ச நேரம் ஆன் செய்து வைத்தது மட்டுமே.        

ஹோப் பார்ம் சிக்னல்.  மெட்ரோவிற்கான வேலை அப்படியே தான் இருந்தது. பெரிய மாற்றம் தெரியவில்லை.  எனக்கு முன்பு  ஒரு நகரப்பேருந்து சிக்னலில் நின்று இருந்தது.  பெங்களூரில் பாதி எண்ணிக்கையில் நகரப் பேருந்துகள் இயங்கத் துவங்கி சில மாதங்கள் ஆகியிருக்கிறது.  'ஆமா, தினமும்  ட்ராபிக்கில் மாட்டிய போது போட்ட  பெங்களூர் டிராபிக் ஹெஸ் டேக் (#Bangaloretraffic) என்ன ஆனது?' என்று ஒரு யோசனை கூடவே ஓடியது.  கரோனா  பெங்களூர் ட்ராபிக் பிரச்சினையை சட்டென தீர்த்துள்ளது. 
காலை நேரத்திற்கே உரிய சில வாகனங்கள்.  வேடிக்கை பார்த்தவாறே அத்திப்பள்ளியை  அடைந்தேன்.   

அத்திப்பள்ளி டோல் கூட்டம் இல்லை.  சென்ற முறை வந்தபோது போட்டிருந்த பணம் டோல்கேட் அக்கவுண்டில் இருந்தது.  6 மாதம்  வராமல் எக்ஸ்பயரி ஆகிருக்குமோ என யோசிக்கையில் தானியங்கி குச்சி திறந்தது. 'அப்பாடா,  இங்க கண்ணாடியை இறக்கத் தேவைவில்லை'. 

டோல் தாண்டி  சற்று தூரத்திலேயே கர்நாடகா-தமிழ்நாடு பார்டரில்,  தமிழ்நாடு போலீஸ் நின்றுகொண்டிருந்தார்கள்.  நண்பர்களின் ஆலோசனையில் முன்புற கண்ணாடியில்  இ-பாஸ் ஒட்டியிருந்தேன். அவர்கள் ஒருவேளை இறங்கி நோட்டில் எழுதிவிட்டு போக சொல்வார்கள்  என கூறியிருந்தார்கள்.  ஆகவே,  இறங்கிச்சென்று எழுத மனதை தயாராக வைத்து இருந்தேன். கைக்கு கிளவுஸ், மாஸ்க் அணிய முற்பட்டபோது,   இ-பாஸை  பார்த்த காவல்துறை, போகுமாறு சைகையில் கூறி விட்டார்கள். 

ஒரு  நீண்ட பெருமூச்சு.  இங்கு மட்டும் தான் இறங்க வேண்டி இருக்கும் என நினைத்து இருந்ததால்.  வண்டி அதி விரைவுச் சாலையில்  வழுக்க ஆரம்பித்தது.  கூடவே வழக்கமான கார்களும், வாரயிறுதி கார்களும் லாரிகளும் இருந்தன.  

அதிகாலை எழுந்ததால் பசி எடுக்க ஆரம்பித்தது.  ஓசூருக்கும்-கிருஷ்ணகிரிக்கும்  இடையில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம்.  கொண்டு சென்ற தக்காளி சாப்பாடு எடுத்து பிரிக்க ஆரம்பித்தோம்.    ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியில் அமர்ந்து சாப்பிடும் முதல் உணவு.   அந்த இடம் அவ்வளவு ரம்மியமாக இருந்தது.  வனத்துறைக்குச் சொந்தமான ஒரு காபி குடியிலும் இருந்தது.   சுற்றிலும் மரங்கள்,  செம்பருத்தி செடிகள் அதில் பெஞ்ச் என ஒரு பூங்காவை போல் அமைத்து வைத்திருந்தார்கள்.  காலை உணவை முடித்து விட்டு,  செம்பருத்தி செடியில் இரண்டு பூவைப் பறித்து உள்ளே வைத்துவிட்டு வண்டியை மீண்டும் கிளப்பினோம்.  
இந்த கொரோனா நாட்களில் எனக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வந்திருந்தது. காலையில் செடியில் இருக்கும் பூவை பறித்து, ஒரு பாட்டிலில் நீரை ஊற்றி,  அதில் பூவை வைத்தும்  எனது அறையில் வைத்துவிட்டு காலை வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்.  அதன் நீட்சியாகத்தான் இந்த பூவை பறித்திருக்க வேண்டும்.  

 ஓசூர்-கிருஷ்ணகிரியின் சாலை ஒரு இறக்கமான சாலை. ஆக்சிலரேட்டரில் மிதிக்காமலே வழுக்கிக்கொண்டு  செல்லும்.  ஓசூர் கிருஷ்ணகிரி சாலையும், அந்த காலை நேரமும் எனக்கு அலாதியான ஒன்று.  இறங்கும் வேளையில் தொலை தூரத்தில் இருக்கும் மலை முகடுகள் அந்தக் காலை நேர இளம் சூரியனில் பட்டு அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.   

அதி வேகமாக வந்த  பட்டாம்பூச்சி ஒன்று காரை முன் கண்ணாடியைக்  கிழித்து கண்ணில் அடித்து விடுவது போல் வந்தது.  டூ  வீலரில் செல்வது போல தலையை சற்று விலக்கினேன்.  பாட்டம் பூச்சி  சற்று லாவகமாக தப்பித்து செல்கின்றது.    

தேன் உண்ட போதையோடு 
பறந்து திரிகின்றன 
அதி விரைவுச் சாலையில் 
பட்டாம்பூச்சிகள்... 

அவைகளுக்கான 
டாஸ்மாக்கை  திறந்து வைத்துள்ளது 
நட்ட நடு அரளிப் பூச் செடிகள்.. 

அதி வேகமாக வரும் வாகனத்திலிருந்து 
மிக லாவகமாக தப்பி விடுகிறது..
ஒரு சில தவிர... 

ஓட்டும்போது கவிதை போல ஏதோ  தோன்றியது.  
 
இந்த காரின் வேகத்தை எவ்வாறு அது உணர்ந்து சைட் வாங்குகின்றது? என்று யோசித்துக் கொண்டே வண்டியை விரட்டினேன்.   காலை வேளை என்பதாலோ  என்னவோ பட்டாம்பூச்சிகள் ஏகப்பட்டவை இருந்தன.  
அதேபோல இதுவரையில் வாகனங்கள் அதிகமாக செல்லாததாலோ என்னவோ சாலை நடுவில் உள்ள பூக்கள் அழகாக பூத்து குலுங்கி இருந்தன.  

கிருஷ்ணகிரியை 9 மணி அளவில் அடைந்து இருந்தோம்.  வண்டி ஆளில்லாத ஒரு சுங்கச்சாவடியின் குச்சியை ஆட்டோமேட்டிக்காக திறந்தது.   'சுங்கச் சாவடியை பணப்  பரிமாற்றம் இல்லாமல் தானியங்கி முறைக்கு சமீபத்தில் மாற்றியது,  இப்பொழுது ஒரு இந்த கொரோனா சூழ்நிலையில் எப்படி உதவி கொண்டிருக்கின்றது என பேசிக்கொண்டோம.  வெண்புரவி கிருஷ்ணகிரியை தாண்டி சென்று கொண்டிருந்தது 

தர்மபுரி மாவட்டம் நுழையும் முன் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக நகரத் தொடங்கியது.  சற்று தொலைவில் போலீஸ் சோதனைச் சாவடி.  லாரி மற்றும் டு வீலர் போக்குவரத்து ஒரு பக்கம் போய்க் கொண்டுதான் இருந்தது.  கார் போக்குவரத்துகளை  தனி சாலையில் விட்டு சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.   இங்கும்  கண்ணாடியில் இருந்த  இ-பாஸ் பார்த்தவுடன், தூரத்திலேயே போகச் செல்லுமாறு சாடை காட்டிவிட்டார்கள்.   வண்டியை மீண்டும் அழுத்தினேன்.  தர்மபுரிக்கும் சேலத்துக்குமான சாலை நான்குவழிச்சாலை மட்டுமே என்பதால் வாகனங்கள் சற்று நெருக்கமாகத்தான் சென்றது.  

 தொப்பூர் வரும் பொழுது மலை முகடுகள் கடந்த மாதங்களில் பெய்த மழையினால், பச்சை பசேலென வரவேற்றது.  எப்பொழுதும் ஏதேனும் ஒரு விபத்து நடக்கும் பகுதி.  சென்றமுறை வந்தபொழுது தொப்பூர் மலைப்பகுதி சாலையை  விரிவுபடுத்தும் வேலை நடந்துகொண்டு இருந்தது.   இந்த முறை அந்த வேலை நிறைவு பெற்றிருந்தது.   

ஓமலூர் சுங்கச்சாவடியிலும்  ஆளில்லாமல் அழகாக கடந்து சென்று கொண்டிருந்தோம்.   ஆனால் வரும் வழி எங்கும், நான்கு  அல்லது ஆறுவழிப்பாதையின்  முதல் வழி முழுக்க இருசக்கர வாகனங்களில் 3 பேர் சாதாரணமாக வந்து கொண்டேதான் இருந்தார்கள்.   அவர்கள் சில நேரங்களில் அடுத்த லானுக்கும் வந்தது, கேதக்  என இருந்தது.  பேருந்து போக்குவரத்து வழிநெடுகிலும் இல்லவே இல்லை.   ஆனால் எதிரில் மட்டும் ஒரே ஒரு பேருந்து ஓசூரை நோக்கி சென்றது.   சங்ககிரி டோல்கேட்,  லட்சுமி நகர் என பெரிதாக எந்த கெடுபிடியும் இல்லை. ஈரோடு நகர் வராமலே ஊருக்கு  சுற்றி வந்து சேர்ந்தோம்.  

 இப்படியாக இந்த கொரோனா  காலத்தில் ஈரோட்டை ஆறு மாதங்களுக்குப் பிறகு வந்தடைந்தேன்.   இதுதான் இந்தியாவில் இருக்கும் பொழுது நான் அதிக காலம் ஊருக்கு  வராமல் இருந்த  காலகட்டம்.

இந்த வீடுகளுக்குள் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் ரொம்பவும் பயந்து போய் இருக்கின்றோம்.   வெளியே சுற்றிக்கொண்டு காவல்துறை மாதிரி,  மருத்துவர்களும் எவ்வளவு பேர் பம்பரமாக இதே உலகத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல தொழில் முனைவோர்களும், அரசு அலுவலகங்களும் எப்பவும் போல இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.   வரும் வழியில் பழங்கள் அங்கங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள்.  அதுபோலவே எந்த உணவகம் திறக்கவில்லை.   ஆனால் அங்கங்கு டீக்கடைகளில் கூட்டம் இருந்து கொண்டுதான்  இருந்தது.  ஒரு சில உணவுகள் திறந்திருந்தன.   வழக்கமாக ஒரு காபி டீ  குடிக்கவாவது நிறுத்தும் நாங்கள், எங்கும் நிறுத்தவில்லை.   எனக்குத்தெரிந்து கரோனாவிற்குப்பின்  ஓசூர்-சேலம் நெடுஞ்சாலைகளில் பல உணவகங்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றது. 

 சிலவற்றை யோசிக்கும்பொழுது இந்த உலகம் மிக இயல்பாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.   அது எளியவர்களுக்கு ஆனதாக  இருக்கின்றதா?  இல்லையா? என்பது ஆகச்சிறந்த கேள்வி.   அங்கு சோதனைச் சாவடிகளில் நின்றுகொண்டிருந்த காவல்துறையை பார்க்கும்பொழுது மரியாதையும் வணக்கங்களும் தான் தோன்றுகிறது.

Wednesday, April 29, 2020

வாசிப்பில் நேசிப்பு - உடையார்

இப்பொழுது வீட்டிற்குள் மாதக்கணக்கில் முடங்கி இருப்பது போலவே 2009-ல்  வீட்டின் படி தாண்டாமல் இரு வாரங்கள் முடங்கிக் கிடந்தேன்.  காரணம் சின்னம்மை. அப்பொழுது முடங்கியிருந்த இடம் லண்டன்.  அப்பொழுது தான் ஸ்மார்ட் போ∴ன்கள் வர ஆரம்பித்த நேரம்.  அவ்வளவாக புழக்கத்தில் இல்லை.  பாட்டு கேட்பது மட்டுமே பொழுதை ஓட்டியது.   அது போரடிக்க ஆரம்பித்த பொழுது நுழைந்த இடம் புத்தகம்.   அந்த இக்கட்டான நேரத்தில் பெரும் ஆறுதலாகவும், நேரம் கடத்தியாவும்  இருந்தது  புத்தகம் மட்டுமே.  ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் இருந்த பொன்னியின் செல்வனை வரவழைத்து, அதன் வழியாக சோழநாட்டிற்கு பயணப்பட்டேன்.  மீண்டும் இரண்டாவது முறையாக படிக்கும் பொழுது, பொன்னி நதி வேறு மாதிரியான கோணத்தில் புலப்பட ஆரம்பித்தது.  இப்படித்தான் பெரும் புத்தக வாசிப்பு என்னை ஆட்கொண்டது. 

இதில் குறிப்பிட வேண்டிய விசயம், அங்கு நூலகத்தில் 10 புத்தகங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். அந்தப்பகுதியில் பெரும்பான்மையினர்  தமிழ் பேசும் மக்கள் என்பதால், நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும்.  உறுப்பினராக பெரிய நடைமுறைகள் இல்லை, அந்த கவுன்சிலில் கட்டுப்பாட்டுக்குள் முகவரி 
இருந்தால் போதும்.

அதன் பிறகு, கல்கியைத் மீண்டும் ஒரு வலம் வர ஆரம்பித்தேன். பல்லவர்களிடம் இருந்து சோழ நாட்டை மீட்ட பார்த்திபன் கனவு.   இந்த புதினங்களின் வழியாக, சோழர்களின் வரலாறு பற்றிய பெருமை  என்னுள்  அப்பிக் கிடந்தது.  தொடர்ந்து சில மாதங்கள் கழித்து தஞ்சையிலிருந்து  'சிவகாமியின் சபதம்' வழியாக காஞ்சிக்கு      பல்லவர் கால வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள நகர்ந்தேன்.    இப்படியாக கல்கியின் சுவைஞனாக அந்நேரத்தில் மாறியிருந்தேன்.    ஆனாலும், புத்தங்களில் கூறி இருந்ததை மட்டும், பெரும்பாலும் நம்பி வண்டி ஓடிக்கொண்டு இருந்தது.

ஒவ்வொரு முறை தஞ்சைப் பக்கம் போகும்பொழுது, பெரிய கோவில் எனது பார்க்கும் பட்டியலில் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் அதன்மீது ஆச்சர்யம் மேலிடும்.  தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய வரலாற்றை முழுவதும் தெரிந்து கொள்வதில் ஆவல் ஏற்பட்டது.   அது பற்றி ஏதாவது புத்தகம் உள்ளதா? எனும்  தேடல் நின்ற இடம்…

பாலகுமாரனின் உடையார். 

உடையார் புத்தகத்தின் அனைத்து பகுதிகளும், லண்டன் ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் பார்த்திருந்தேன்.   அப்பொழுதெல்லாம் பாலகுமாரனின் மேல் அவ்வளவாக ஈர்ப்பு  இல்லாததால், அவர் பக்கம் செல்லவில்லை.  (ஆமா, இவரு வேற எல்லாரையும் வாசித்துவிட்ட மாதிரி, அதுவரை படித்தது, ரெண்டு புத்தகம் அதுவும் கல்கி அவர்களுடையது.)

 ஐந்தாறு வருடம் முன்பு ஈரோடு புத்தகத் திருவிழாவில் உடையாரின் முதல் பகுதியை வாங்கினேன்.  நம்ம வசிக்கும் வேகம் தான் நமக்கு தெரியுமே?  ஒரு வழியாக, அனைத்து பகுதிகளையும் வருடக் கணக்காக படித்து முடித்தேன்.   இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால்  மூன்று புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு பகுதியாக வாங்கித்தான் முடித்தேன்.  தோராயமாக ஆறு மாத இடைவெளியில் நடக்கும்  சென்னை மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் வாங்கியவை தான். 

தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு நான் சென்ற அனுபவத்தையும், என்  வாசிப்பு அனுபவத்தையும்  உடையாருக்கு முன், உடையாருக்குப்  பின் என்று பிரிக்கலாம். 

ராஜராஜ சோழன் சாளுக்கிய நாடுகளின் மீது படையெடுத்துச் செல்வதை மட்டுமே அவ்வளவு பிரமாண்டமாக ஒரு பாகத்தில் அழகான, விரிவான வர்ணனைகளோடு விவரித்து இருப்பார்.   போருக்கு வீரர்கள் செல்லும் வழியில், அவர்களுக்கு முன் உணவு சமைப்பவர்கள் சென்று தங்கி அவர்களுக்கு சமைத்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்வார்கள்.  பின்னே வீரர்கள் கிளம்பி வருவார்கள்.  இது ஏனோ பழனிக்கு பாத யாத்திரை செல்லும் மக்களை நினைவூட்டியது.  காலகட்டத்திற்கு ஏற்ப முன்னே அவர்களின் கட்ட வண்டி அல்லது  டெம்போவில் சென்று உணவு சமைத்து வைத்திருப்பாப்பார்கள்.   நடைபயணம் வருவோரும் பின்னே வந்து சாப்பிட்டுவிட்டு நடை பயணத்தை தொடர்வார்கள்.  இப்படியாகத் தான்  தஞ்சையிலிருந்து ஹம்பி வரை வாரக்கணக்கில் சென்று உள்ளார்கள்.
 
துங்கபத்திரா நதி காட்டாற்று வெள்ளம் போல சென்று கொண்டிருக்கும் ஒரு நதியாகும்.  புவியியல் ரீதியாகவே துங்கபத்திரா நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பலர் படையெடுத்து வருவதைத் தடுக்கும் அரண்.    ஆற்றுக்கு இந்தப் பக்கம் தங்கி,  தண்ணீர் குறைய காத்திருப்பார்கள்.  ஆனால் ராஜராஜ சோழன்  அந்த காற்றாற்று  நீரில் ஓரிடத்தில் அவரின் குதிரையோடு இறங்கி, சினங்கொண்ட யானை போல ஆற்றைக் கடந்து முன் செல்வார், வீரர்கள் பின் தொடர்வார்கள்.  போர் நடக்கும்.  வெற்றி அடைவார்கள். அங்கு இருந்த செல்வங்களை, பொருட்களை சூறையாடி வருவார்கள்.   இந்த போருக்கான காரணம், தஞ்சை பெரிய கோயில் கட்ட ஆரம்பித்த பிறகு நிதி பற்றாக்குறை வரும் எனும் போதுதான்.  இரு வருடங்களுக்கு முன் துங்கபத்ரா நதியை ஒட்டிய ஹம்பி இடங்களுக்குச் சென்றிருந்தோம்.  உடன் வந்த நண்பர்களிடம்  இதனைக் கூற, நம்புவதற்கு சற்று சிரமப்பட்டார்கள்.

உடையார் புத்தகம், பெரிய கோவிலைக் கட்டுவதற்கான திட்டமிடலில் தொடங்கும்.   கட்டும்பொழுது இடையே நிதி பற்றாமல் போகும்  என படையெடுப்பு.   அதற்கு போகும் திட்டமிடல்.  கோவில் கட்டுவது எக்காரணம் கொண்டும் நிற்கக்கூடாது என்பதற்காக,  ஆரம்பம் முதல் முடிவு வரை முழு வரைபடங்களையும்  ஒன்றன் பின் ஒன்றாக  வரைந்த குஞ்சர மல்லன் ராஜராஜப் பெருந்தச்சன்.     அதில் சிற்பிகள்,  சிலை வடிக்க மாடலிங் போல நின்ற நடனம் ஆடும் பெண்கள்.  ராஜகுருவாக இருக்கும் கருவூர்த் தேவர். கோயிலின் மண்டபத்தின் முதல் தளத்தில் இன்றும் அழியாமல் இருக்கும் ஓவியங்கள்.  இவை ஒவ்வொன்றும் அதில்  சொல்லப்பட்டிருக்கும் விதம் பிரம்மிப்பூட்டும்.  வாசிக்கும் பொழுது நம்மை அந்த இடத்திற்கே கூட்டிச்சென்று விடுவார்.  இப்படி ஐந்து பாகங்களை வாசித்து விட்டு பெரிய கோவிலுக்குச் சென்று அசை போட்டால் எப்படி இருக்கும்?   

உடையாருக்கு முன், தஞ்சைக்கு பெரிய கோயில் பார்க்கும்பொழுது  மனதில் ஒரு வியப்பு மட்டுமே தோன்றும்.   எத்தனை முறை அந்தப் பெரிய லிங்கத்தின் முன்பாக உட்கார்ந்து இருந்தாலும்,  அது பயபக்தி அனுபவமாக இருந்தது.   அது எப்படி கட்டியிருப்பார்கள், இது எப்படி திட்டமிட்டு இருப்பார்கள்  என்று திகைப்பு கலந்த யோசனை வரும்.   உடையாருக்கு பின்,  இப்படித்தானே  இதைக் கட்டினார்கள்,  இந்த இடத்தில்தான் அந்த மணலை மலைப் பாதைபோல கொண்டு போய் இருப்பார்களோ?   அந்த லிங்கத்தை இவ்வாறு தான் ஒட்டி இருப்பார்கள் என்பது பாலகுமாரன் அவர்கள் கூறியது போல கண்ணில் விரியும்.   விவரிக்கும் ஒவ்வொரு இடத்தையும், அந்த இடத்தில் நின்று, மெல்ல அசைபோட்டுப்  பார்க்கும் போது, ஆயிரம் வருடங்களுக்கு முன் செல்லும் பேரனுபவம்,  அலாதியானது,  விவரிக்க முடியாதது.   

கடைசியாக தஞ்சை சென்ற பொழுது, அது ஒரு பொழுது சாய்ந்த பொன் மாலை நேரம். அங்கு நிலவொளியில் ராஜ ராஜரோடும், கருவூர்த் தேவரோடும் பெருந்தச்சரோடும் 11ம் நூற்றாண்டுக்குச் சென்று உலாவினேன். கடைசியாக  அங்குள்ள அலுவலக அதிகாரிகளிடம் அந்த சித்திர மண்டபத்தைப்  பார்க்கலாமா? என்று கேட்டபொழுது தான்,  "நாளைக்கு வாங்க,  மத்தியானத்தில் தான் பார்க்க முடியும்,   இரவில் பார்க்க முடியாது" என்று கூறினார்கள்.  அடுத்த முறை அங்கு செல்லும் பொழுது, கண்டிப்பாக அதனைப் பார்க்க வேண்டும். 

அந்த கால கட்டங்களில் கோயில் காட்டியதை  தேவையில்லை என பொதுமக்கள் பலர் பேசிக்கொள்வதாக   அங்கங்கு கூறி இருப்பார்.  அதாவது இன்று வல்லபாய் பட்டேல் சிலையை நிறுவியிருக்கிறார்கள், அதோடு மட்டும் இல்லாமல் இந்த கரோனா நேரத்திலும் புதிய பாரளுமன்றத்தை கட்ட முனைப்பில் உள்ளார்கள்.   தலைமுறைகள், நூற்றாண்டுகள் கடந்து தங்கள் பெயர் வரலாற்றில் நிலைபெற மன்னர்கள் இதுபோல ஏதேனும் செய்து கொண்டுதான் உள்ளார்களோ  என தோன்றுகிறது.  அந்த காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து இருப்பார்கள் என்பதைப் பற்றி தெரிவதற்கான வாய்ப்புகள் பிரம்மாண்டங்களின் மூலம் குறைவு. 
எப்பொழுதும் இருவேறு கருத்துக்கள் உண்டு, இப்போது இருப்பது போலவே.  இந்த புத்தகத்தில் இருந்த வேறு எதைப் பற்றியோ ராஜராஜ சோழனின் அறிவையும், வீரத்தைப் பற்றியோ மறுப்பதற்கில்லை,  மறைப்பதற்கும் இல்லை.   பாலகுமாரன் இந்த புத்தகத்தில் கற்பனை கலந்தும்   எழுதி  இருக்கலாம்.  இதற்காக ஒரு போருக்கு சென்று, அங்கு சண்டை போட்டு,  அங்குள்ள மக்களைத் துன்புறுத்தி,  அங்கிருந்து பொருட்களை எடுத்து விட்டு வந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களை எழுப்ப வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.   கூடவே இதனைக் கட்டாமல்  இருந்திருந்தால் நமக்கு தமிழர்களின் சோழர்களின்  கட்டிடக்கலையைப் பற்றித் தெரியாமலும் போயிருக்கலாம்.  பல மாதிரியான கோணங்களில், ஒவ்வொரு பிரம்மாண்டத்தின் பின்னால் சென்று பார்க்க,  இந்த உடையாரின் வாசிப்பு எனக்கு கற்றுக் கொடுத்தது
இன்று இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தால், அது மற்றொரு கோணத்தையும் காண்பிக்கலாம்.

வாசிப்போம்.

Sunday, July 15, 2018

ஓட்டுனருடன் உரையாடல்


எப்பொழுதும் ஆட்டோவிலோ அல்லது வாடகை காரிலோ சொல்லும்போது டிரைவருடன் பேச்சுக் கொடுப்பது வழக்கம்.  பெரும்பாலும்  நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களே இங்கு டிரைவர்களாக இருப்பர்.  அப்படித்தான் சென்றமுறை பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் சூப்பர் ஸ்டாரைப்பற்றி புகழ்ந்து தள்ளினார், அவரது  அப்பொழுதுதான் சமூக விரோதிகளைப் பற்றி தலைவர்பேசியிருந்த்தால், ஏனோ ஆர்வம் இல்லாமல் பேசிக்கொண்டு வந்தேன்.  இருந்தாலும் அவரின் ஸ்டைலை சிலாகித்துக்கொண்டு. சென்றவாரம்  மூட்டை, முடிச்சுகளை எடுத்துவைத்த போது  நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருந்தைக் கேட்டு வாகன ஓட்டுனரும் தமிழில் 'கதைக்க' ஆரம்பித்தார்.   ஆம் அவர் 18 வருடங்களுக்கு முன் லண்டனுக்கு புலம்பெயர்ந்த  தமிழர், ஈழத்தை சேர்ந்தவர். 

பரஸ்பர விசாரிப்புக்குப்பின்,  பேச்சு அவர்களின் குழந்தைகளின் தமிழைப் பற்றி சென்றது.  "பெரியவங்க யாரும் கூட இல்லைங்க, அவங்க இருந்தா கொஞ்சம் குழந்தைகளோடு தமிழில் கதைப்பாங்க ...அதனால  தமிழ் குழந்தைகளுக்கு கடினமாக தான் இருக்கு, புரியாததை நாங்களும் ஆங்கிலத்துல தான் பேசறோன்ங்க... பள்ளியிலயும், வெளியிலயும் ஆங்கிலம் இருப்பதால அடுத்த தலைமுறை குழந்தைகள்  தமிழ் பேசறது கொஞ்சம்  சிரமம் தான்" என்றார்.  அதைஆமோதித்துவிட்டு "தமிழ்நாட்லயே அந்த நிலைமை தாங்க 'சிட்டில'... ஆங்கில வழி படிப்பு ரொம்ப அதிகமாகிட்டதால,  ஆங்கிலம் கலந்து பேசறவங்க அதிகம்.   இங்லீஸ்  எழுத்துல எழுதி தமிழ்ல படிக்கிறவங்களும்  நிறைய ஆகிட்டாங்க. நீங்க, ஈழத்தமிழர்கள், இங்க தமிழ் வளர்க்கறதைப் பார்க்கறப்ப  மகிழ்ச்சியா இருக்குங்க " என்று கூறிவிட்டு.  "இங்க  பக்கத்துல உங்க ஊர்  அம்மா வாரம் ஒருநாள் தமிழ்  சொல்லிக்கொடுக்காறாங்க, வருட முடிவில் 'எக்ஸாம்' கூட இருக்குங்க" ஆங்கிலம் கலக்காமல் என்னால் சரளமாக பேச முடியவில்லை.

"அப்படீங்களா" என்ற எங்களது பேச்சு குடியுரிமை பற்றி திரும்பியது.  "இங்க சிட்டிசன்சிப் உங்களுக்கு தந்துட்டாங்களாங்க?" "ஓமங்க, அது வந்து ஆரேழு வருடத்திலயே கொடுத்துட்டாங்க" என்றவர்,  "உங்க ஊருக்கு வந்திருக்கேன், அங்க  ஈழத்தமிழர் எப்படி இருக்காங்க?", இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை,அவர்களை எங்கோ ஒரு மூளையில் தானே ஒதுக்கி வைத்துள்ளோம்.   "எங்க ஊருக்கு பக்கத்துல முகாம்ல இருக்கறவங்க எங்க வீடு வேலை செய்யரப்ப பாத்திருக்கேன்.  வேலை ரொம்ப சின்ஸியரா செய்வாங்க. ஆனா அவங்களுக்கு எல்லாம் இன்னும் சிட்டிசன்சிப் அங்க தரலைங்க" என்றேன்.     சீரான வேகத்தில் வாகனத்தை பத்து வழிச்சாலையில் செலுத்திக்கொண்டு நம்மூர் பற்றிய நினைவுகளை மலரவிட்டார்.

"இங்க வர்ரதுக்கு முன்னாடி இலங்கைல இருந்து அங்க வந்தப்பண, மடிப்பாக்கத்துல தான் இருந்தேன்ங்க, கொண்டாட்டம்னா அங்கதாங்க...  பொங்கல், தீபாவளினா ஒரு திருவிழா மாதிரி ஊரே கலகலப்பா, அருமையா இருக்கும்ங்க,  ரொம்ப நல்லா இருந்தது, தமிழ்நாட்டுலயே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்.  இப்ப அங்க எப்படி இருக்குங்க" என்று ஆர்வமோடு கேட்டார்.  'என்னத்த சொல்ல', என்று நம்மூர் பற்றிய அவரின் எண்ணத்தை மாற்ற எண்ணவில்லை எனினும்,   இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியாது " கொண்டாட்டமல்லாம் அப்படியே இருக்குங்க, ஆனா எல்லாத்துக்கும் மக்கள் போராட வேண்டி இருக்கு, அரசியல்ல பார்த்தீங்கன்ன, ஜெ மறைவுக்கு பின்னாடி ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு, ஜெ ஆட்சி நல்லா இருந்ததென சொல்லல, ஊழல்தான்,  ஆனா தமிழ்நாட்டோட உரிமையை பல நேரங்களில் விட்டுக்கொடுக்கலை.   இப்ப மத்திய அரசு சைலன்டா எல்லாம்  திணிக்கறாங்க.     என்ன நடக்கும்ன்னே தெரியலை"   ரொம்ப பயமுறுத்திட்டமோ என நிறுத்திக்கொண்டேன்

"இங்க பிடிச்சிருக்குங்களா?" என்ற வழக்கமான கேள்வி.   "இங்க ஆபிஸ் வேலை அப்படீன்னு ஒரு ஸ்டரக்ட்ர்டு லைப்.  சுத்தமான காற்று,  ட்ராபிக் கிடையாது,   எதுக்கும் க்யூல நிக்க தேவையில்லை, கட்டர டேக்ஸ்ஸ ஒழுங்கா செலவு பண்ணறாங்க.   பணிவான மக்கள்.   ஆனா,  அங்க ஆபீஸ் போறதே பெரும்பாடு தான், ட்ராபிக்ல மாட்டி, பொல்யூசன்ல மாட்டி.  காசு கொடுத்தீங்கன்னா மட்டும்தான் வேலை நடக்கும், இல்லனா ஒன்னும் பண்ண முடியாது.  ஆனா  நண்பர்கள், சொந்தம் எல்லாம் அங்க இருக்கறதால,  சோசியல் லைப்  அங்கதான் இருக்குங்க.   பண்டிகை, பங்ஷன்னா கொண்டாட்டமா இருக்கும்" நான் சொன்னதை அவர் அசை போட்டுக்கொண்டு இருந்தார்.   அவரின் ஊர் ஞாபகம் வந்திருக்க வேண்டும். 

"போர்க்கு முன்னாடியே இங்க வந்துட்டீங்க, இப்ப நீங்க இலங்கை போன விசா எடுக்கனுமா,  இப்ப அங்க நிலமை எப்படி இருக்கு? ஒரு அமைச்சர் கூட விடுதலைப்புலிகளோட தேவை இப்ப ரொம்ப இருக்குன்னு சொல்லிருக்காங்களே?". தோனியதை எல்லாம் சீரியஸாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.

"அவ்வளவு ஒன்னும் சொல்ற மாதிரி இல்லங்க. ராணுவமே ட்ரக்(drug) கொடுக்கறாங்க" "ட்ரக்கா"
"ஓமங்க.. கஞ்சா, மக்கள பயன்படுத்த வெச்சு சமுதாயத்த நாசப்படுத்தி,  சீரழிஞ்சு போகட்டும்மென கவர்ன்மென்ட்டே இதை பண்ணறாங்க.  அப்ப எல்லாம் ஒழுக்கமா , ஒரு கட்டுக்கோப்போடு நல்லா இருந்தாங்க" எங்கயோ இதைப்பற்றி  இவர் கூறியதுபோல் படித்த ஞாபகம் இருந்தது.  நம்மூரின் டாஸ்மாக்கின் சரித்திர விற்பனையும் ஒரு கணம் வந்து சென்றது. 

"இலங்கை அமைச்சர் சொன்னது போல இப்ப யாரவது வழி நடத்த வாய்ப்பு இருக்குங்களா?" 

"இனிமேல் அந்தமாதிரி ஒரு வாய்ப்பே வராதுங்க, பிரபாகரன் மாதிரி இன்னொருவர் கண்டிப்பாக வர முடியாது.  அப்ப எம்ஜிஆர் உதவி பண்ணாங்க,    ஆரம்பத்துல இந்தியாவும் பயிற்சி  கொடுத்தாங்க.   இனிமேல் எந்தநாடும் உதவி பண்ணமாட்டாங்க.   இங்கிலாந்தும் சேர்ந்து எல்லா நாட்டோட ஆதரவோடதான அழிச்சாங்க, அப்புறம் எப்படி..." பட படவென கூறிமுடித்தவரிடம் கணத்த அமைதி.  என்ன சொல்வதென தெரிவில்லை.  பத்து வருடம் கழிந்திருந்தாலும் அந்த அமைதியின் வலி என்ன என்னவோ யோசிக்க வைத்தது. அவரே தொடரட்டும் என காத்திருந்தேன்.

தொடர்ந்தவரின் கடைசி வாக்கியம் பலமாக யோசிக்க வைத்தது.  "தனியா  ஒரு நாடு இருந்த, தமிழ்நாடும் சேர்ந்து  கூட ஆட ஆரம்பிச்சிடுவாங்க என திட்டம்போட்டு பண்ணிட்டாங்க"  உண்மையாகவும் இருக்கலாம்.  கற்பனையிலேயே கலக்கலாக இருந்தது.    

#பயணங்கள்

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...