Sunday, August 30, 2020
பெங்களூர்-ஈரோடு; கொரோனாவில்
புதன்கிழமை சந்தை
காரோனா அதன்போக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பலதரப்பட்ட மக்கள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஊரில் திருமணங்கள், கிடா வெட்டு விசேஷங்கள் குறைந்த எண்ணிக்கையில் நிகழத் துவங்கியுள்ளது. அரசும் லாக் டவுனை(?!) கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது. இருந்தாலும் நகரங்களில் முடிந்தளவு மக்கள் இன்னும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம். முன்புபோல இயல்பான நிலைக்கு மாறி விட்டோமா? என்றால் இல்லவே இல்லை.
கடந்த ஆறுமாத கால கட்டம் பல பழக்கங்களை மாற்றி உள்ளது. அதிலும் கடைகளுக்கு சென்று மளிகை பொருட்கள், காய்கறி வாங்கும் முறை முற்றிலும் மாறி இருக்கின்றது. இந்த நான்கைந்து மாதங்களில் காய்கறிகளை வாங்கியவுடன் சுத்தமாக கழுவியது போல், வேறு எப்போதும் கழுவியது உண்டா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். காய்கறிகள் கழுவிக்கொண்டு இருக்கும்பொழுது சோகமாக இப்படியும் நான் உளறுவது உண்டு 'காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது, காய்கறிகளை நீ கழுவினால் என்னவாகும் மனது' என்று.
லாக்டவுன் ஆரம்பித்த புதிதில் செய்த செயல்கள் வரலாறு முக்கியம் அமைச்சரே போன்றவை. காய்கறிகள் வாங்கி வந்தவுடன் அவற்றை வெளியே வைத்து, முக்கால் பக்கெட் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் கரைசல் தயாராகும். அதில் எல்லா காய்கறிகளையும் கொட்டி, கொஞ்ச நேரம் ஊற வைத்து விடுவேன். பின் ஒரு பெரிய துணியை விரித்து, அதன் மேல் காய்கறிகளைக் கொட்டி நீண்ட நேரம் ஈரம் காய உலர வைத்து விடுவோம். அதன் பின் அதனை குளிர்சாதன பெட்டியில் ஒவ்வொறாக தனி தனி டப்பா அல்லது கவர் அல்லது பையில் எடுத்து வைப்போம். இது ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் நடைபெற்று வந்தது.
காய்கறிக்கே அப்படி என்றால் நமக்கு. நேராக குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு, அந்த துணிமணிகளை சோப்பு போட்டு துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் அடுத்த வேலை. வேறு ஏதேனும் காய்கறிகள் தவிர மளிகைப் பொருட்கள் வாங்கி வந்தால் அதனையும் வெளியில் வைத்துவிட்டு, அதற்கும் சனிடைசர் அல்லது டெட்டால் கரைசலில் துடைத்து வைத்ததும் நடந்தது. பின்னர் ஓரிரு நாட்கள் கழித்துத் தான் அந்தப் பொருட்களை எடுத்து உபயோகப் படுத்தி இருக்கிறோம்.
அதுவும் லாக்டவுன் ஆரம்பித்த மார்ச் இறுதியில் இது மிகவும் அதிகம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த இரு மாதங்களாக அதுவும் மங்கிப் போய் உள்ளது. கொரோனாவை நாம் புரிந்து கொள்ள ஆர்மபித்துவிட்டோம் எனலாம் அல்லது சோம்பேறித்தனம் என்றும் கூறலாம். காய்கறிகளின் மூலமாக கொரோனா தொற்று வராது என்று நம்பிக் கொண்டும் இருக்கலாம்.
அதுபோல எங்கும் தொடாமல் காய்கறிகளை வாங்கி விட்டு வந்தவுடன், அதற்காக கொண்டு சென்ற பணத்தை அப்படியே சோப்பு நீரில் ஊறவைத்து கழுவி அதையும் காய வைத்துவிட்டு, வண்டி சாவியையும் கழுவி காய வைத்துவிட்டு பின்னர்தான் குளிக்க செல்வேன். கூடவே வண்டியின் கைப்பிடி, கதவு என தொட்ட ஒவ்வொன்றையும் துடைத்தது வரலாற்றில் குறித்துக்கொள்ள வேண்டும்.
முதல் ஓரிரு மாதங்கள் இப்படியாகத் தான் சென்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட அனைத்து பண பரிமாற்றமும் Gpay மற்றும் paytm க்கு மாறியிருந்தது. இப்பொழுது பணம் அவ்வளவாக எடுத்துச் செல்வதில்லை. ஆனாலும் வெளியில் சாலையில் கடை போட்டிருக்கும் அந்த பாட்டியை பார்த்தவுடன் அவர்களிடம் தான் வாங்க தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க எங்களது கம்யூனிட்டிக்கு நான்கு சக்கர வாகனத்தில், ஒருவர் காய்கறியை நேரடியாக கொண்டு வர ஆரம்பித்து விட்டார். இது இன்னும் சுலபமாகவே இருந்தது. அவர் உள்ளே நுழைந்ததும் ஆப் அலாரம் அடிக்கும். பலர் பரபரப்பாக ஓடி வந்து முதலில் வாங்க ஆரம்பித்தார்கள். அந்த கூட்டம் எனக்கு சற்று பயத்தை கொடுத்ததால், கூட்டம் குறைந்த பின்னர் கடைசியாக சென்று வாங்குவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டேன். அவரிடமும் நெருக்கம் ஆகி விட்டது.
"என்ன சார், இன்னிக்கு ரொம்ப லேட்டா வரீங்க?" "கீரை பிரெஷ் சார் வாங்கிக்கோங்க" என்பார். கன்னடமும், தெலுங்கும் ஹிந்தியும் பேசுவார். இந்த மொழி சார்ந்த விஷயம் பெங்களூரில் ஆச்சர்யமான ஒன்று. தொழில் செய்யும் பலரும் குறைந்தது மூன்று நான்கு மொழிகளாவது பேசுவார்கள்.
சில வாரங்கள் அவர்களின் குழந்தைகளோடு வந்தார். "என்ன இன்னிக்கு உங்க பசங்கள காணோம்? " "இல்ல சார் ரொம்ப லேட் ஆகுது, அவங்க சாப்பிட லேட் ஆகிடுது" என்றார்.
"இன்னிக்கு என்ன ஆச்சு ரொம்ப லேட்டா வந்துருக்கீங்க" எனும் மற்றோரு நாளின் கேள்விக்கு " சார், வேற வண்டி சார் இது, என்னோட வண்டி பஞ்சர் ஆயிடுச்சு" என்பார்.
மற்றொரு நாள் "இன்னிக்கி KR புரம் மார்க்கெட் போகலைங்க.." "கொரோன அந்த பக்கம் இருக்கறதால இப்படி இந்த பக்கமா போயி சிந்தாமணியில் வாங்கிட்டு வந்துட்டேன்."
இவ்வாறாக பலவாறான பேச்சுக்கள் அவரோடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பெரும்பாலான காய்கறிகள் அவரிடம் பேரம் பேசாமல் வாங்கிச் செல்வேன். ஒரு சிலவற்றை வேறோரிடத்தில் வாங்கினால்
குறைவாகத்தான் இருக்கும். அங்குள்ள ஒரு சிலர் வெளியில கம்மியா இருக்கு என பேரம் பேசுவார்கள். அது ஏனோ இவர்களிடம் பேரம் பேசும் ஆட்களை பார்த்தவுடன் சற்று ஆயாசமாக தான் இருக்கின்றது. இவர்களிடம் பேரம் பேசி என்ன கொண்டு செல்லப் போகிறார்கள். என்ன நூறு ரூபாயா அதிகமாக வைத்து விடுவார்கள் ? சூப்பர் மார்க்கெட்டிலும் அல்லது அமேசான்களில் அதிகமாக வைத்திருப்பது போல. எனக்கு கண்கூடாக தெரிந்தது வெளியில் நான் சென்று வாங்கினால் ஒரு பத்து இருபது ரூபாய் குறையத்தான் செய்யும். பரவாயில்லை. நம்மைத் தேடி வருகின்றார். அவரிடம் வாங்குவது தானே முறையாக இருக்கும்.
எனக்கு இந்த மாதிரி வெளியில் சென்று காய்கறி வாங்கிவிட்டு வந்தவுடன் இவ்வளவு சுத்தமாக இருப்பது, எனது தாத்தாவின் காலத்தை நினைவூட்டியது. பள்ளி முடிந்து புதன்கிழமை என்றதும் அவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். ஆயாவும், தாத்தாவும் சந்தையிலிருந்து வாங்கி வரும் தயிர்வடைக்காக. இன்றும் அவர்கள் நினைவு தினம் கும்பிடும் வேளையிலே, தயிர்வடை அவர்களுக்கு பிரியமானது என இலையில் படைப்பது உண்டு. அல்லி இலையில் சுற்றி அடியில் ஒரு காகிதம் வைத்து நூலில் சுற்றப்பட்டு இருக்கும் அந்த பொட்டலம். அதில் குட்டி குட்டி போண்டாக்கள். ஒன்றை எடுத்து வாயில் போட்டாலும், அது அப்படியே மெதுவாக தயிரின் புளிப்புச் சுவையோடு கலந்து அவ்வளவு அமிர்தமாக இருக்கும். இப்பொழுதும் இதை எழுத நாவில் எச்சில் ஊறுகிறது.
சந்தைக்கு சென்று விட்டு வந்தவுடன் நேரடியாக கிணத்தடிக்கு சென்று குளித்துவிடுவார். அனைத்து உடைமைகளையும் துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் தாத்தா உள்ளே செல்வார். இந்தப் பழக்கத்தை அப்பாவிடமும் கண்டதுண்டு. புதன்கிழமை சந்தை சென்று வந்ததும் என்ன தீனி இருக்கும் என்று பார்க்கும் நான் தான், அந்த காய்கறிகளை எங்கள் வீட்டில் எடுத்து அடுக்குவது உண்டு. அந்த வாரத்திற்கு தேவையான காய்கறிகள் என அனைத்தையும் பரந்த மூங்கில் கூடைகளில் கூறு போட்டு வைப்பதும் உண்டு. முக்கியமாக அப்பொழுது ஆப்பிள் மற்றும் மாதுளை கிடைப்பது அரிது. அன்றைய வார சந்தைக்கும் இன்று வாரம் ஒருமுறை வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இடையில்தான் தினமும் ஒருமுறை காய்கறிகள் வாங்க வேண்டும் என்பது வந்திருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன்.
அதுபோலவே அவர் காலத்தில் கசங்கிய, கிழிந்த, அழுக்குப்படிந்த ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நோட்டுகளை கடைகளில் வாங்க மாட்டார்கள். அதனை சோப்பு போட்டு கழுவி, புத்தம் புது நோட்டு போல ஆக்கி செலுத்தி விடுவார். அவர்கள் காலத்தில், 2 ரூபாயே சந்தை செலவுக்கு அதிகம் என்பார்.
இன்று கொரோனா காலத்தில் சில பழைய பழக்கங்களை நம்மை அறியாமல் நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
Tuesday, June 30, 2020
நூறு நாள் கரோனா
நூறு நாள் ஓட்டம் ஆரம்பித்தள்ள தற்போதைய நிலையில், 100 நாட்கள் லாக் டவுன் முடிந்துள்ளது. தினப்படி தமிழக கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் இரண்டு இலக்கத்தில் இருந்து மூன்று இலக்கமாக மாறிய பொழுது நமக்கு கரோனாவின் மீதான பயம் போயிருக்க கூடும். இந்த மாத ஆரம்பத்தில் இலக்கம் 4 ஆக மாறி அதிலும் கடந்த சில நாட்களாக 3000 தொட்டு உள்ளது. மற்ற நாடுகளில் உச்சத்தை தொட்டு இறங்குமுகம் கண்டுவிட்டது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக தற்போது, புதிய புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டே இருக்கின்றது.
ஆனாலும் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர, பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது போல ஒரு தோற்றம் உள்ளது. கிரகணத்தன்று கூட மக்கள் வெளியில் வராமல் முடங்கி இருந்தார்கள். கை கழுவினால் அல்லது மாஸ்க் மட்டும் அணிந்திருந்தால் போதுமானது என்ற ஒரு மூடநம்பிக்கையும் பரவி வருகின்றது. சிலர் அது பற்றியும் கவலைப்படுவதில்லை.
இங்கும் பெங்களூரில் கடந்த சில வாரங்களாக, குறிப்பாக இந்த மாதத்தில் அனைத்து கடைகளும் தாராளமாக திறந்தே உள்ளது. ஏதோ கண்டிப்பாக தேவை என வார நாளில் சென்றிருந்த போதும் கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்தே உள்ளது. கடைவீதி அதற்கான நெரிசலோடு, பரபரப்பாக உள்ளது. பெங்களூரில் 30% மக்களோடு சில அலுவலகம் இயங்க ஆரம்பித்துவிட்டது. நண்பர்கள் செல்ல ஆரம்பித்து உள்ளார்கள். போக்குவரத்து சொற்பமாக உள்ளதாக சென்று வருபவர்கள் கூறுகிறார்கள். நெரிசலும் இல்லை.
இரு வாரங்களுக்கு முன் எந்த உணவகமும் திறக்கப்படவில்லை. இந்த வாரங்களில் அதுவும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று பலர் வழக்கம்போல அமர்ந்து உணவு உண்டு கொண்டு தான் இருந்தனர்.
இப்படித்தான், சில வாரங்களுக்கு முன் மகளின் பள்ளி கட்டணத்தை கட்டுமாறு தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தோம். 'வேறு மாற்று வழி என்ன இருக்கிறது' என்பது தெரியாத ஒரே காரணத்தினால் கட்டணத்தைச் செலுத்தி புத்தகங்களை வாங்க முடிவெடுத்தோம். பள்ளி எப்போது திறக்கும் என்பது கேள்விக்குறி. செப்டம்பரா, டிசம்பரா அல்லது இந்த கல்வி வருடம் முழுவதும் இப்படியாக சென்று விடுமா? இன்றைய நிலையில் யாரும் விடை சொல்ல முடியாது.
இரண்டு கிலோ மீட்டர்தான் பள்ளி. இருந்தாலும் கார் எடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது என அதில் செல்ல முடிவெடுத்தேன். பள்ளியின் பெருங்கதவின் முன் சீருடை மட்டும் அணிந்த காவலாளி. அவருக்கு முகக் கவசம் இல்லை. 'பீவர் கண்' எடுத்து நெற்றியில் வைத்தார். அதை பக்கத்தில் கொண்டு வரும் பொழுது நமக்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது. வாகன நிறுத்துமிடத்தில் கணிசமாக கார்கள். காருக்கும் சோசியல் டிஸ்டன்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டு, முகக்கவசம் சரி செய்துகொண்டு இறங்கி வெளியேறினேன். பிரமாண்டமான போர்டிகோவின் முன்பு ஒரு காவலாளி நின்று காரோனா தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் (நன்றி ஜெகதீசன்). அதையும் வாங்கி வழக்கம்போல கைகளைக் குடிக்கச் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பறையில் ஒரு பெண் அனாவசியமாக உட்கார்ந்து இருந்தார். முக கவசத்தை கவனமாக டேபிளுக்கு போட்டு இருந்தார். ஆங்காங்கு மைதானத்தில் பெற்றோர்கள் ஜோடியாக. குழந்தைகள், அவர்கள் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாராவாரம் சுற்றிய கால்கள் சும்மா இருக்காது.
உள்ளே சென்று வராண்டாவில் சுற்றும் முற்றும் பார்த்த படியே நடந்து பணம் கட்டும் இடம் வந்தடைத்தேன். ஜூன் முதல் வாரங்களில் பள்ளிகளில் இருக்கும் பட்டாம் பூச்சிகளின் ஆட்டமும், ஓட்டமும் இல்லை. க்யா, முயா என்ற கோழிக்குஞ்சு சத்தமும் இல்லை. கோடை கால விடுமுறையில் பள்ளி இருப்பது போல அங்கங்கு சிலர். எனக்கும் முன்பு இருந்தவர் சென்றதும் காசாளரரின் முன்பு நின்றேன. பணம் கட்டிய புகைப்படத்தை மொபைலின் வழி காண்பித்து விட்டு எங்கும் தொடாமல் நின்று கொண்டிருந்தேன். பக்கத்து 'கவுண்டரில் ஒருவர் கண்ணாடிக்கு முன்பு படுத்துக்கொண்டு, உள்ளிருந்த காசாளரிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு முன் இருந்த காசாளரும் வாய்க்கூட்டை கீழே டேபிளின் மீது போட்டிருந்தார். இந்த வருடம் இன்னும் ஒரு மொழிப்பாடம் சேர்த்து கூடுதலாக பணம் கேட்டார்கள். 'அடேய்களா, பள்ளியே நடக்குமான்னு தெரியலை, இதுல இது வேறயா' என மைண்ட் வாய்ஸை முழுங்கிக்கொண்டு
"Paytm, Google pay இல்லைங்களா?"
"இல்லை" என்றார். இப்பொழுது ATM கார்டு உபயோகித்து தான் ஆகவேண்டும். ஒரே ஒரு விரலை மட்டும் வைத்து அழுத்தி, அந்த கார்டை பத்திரமாக வேறு பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
அவர் கொடுத்த 'பில்லை' வாங்கி பட்டும் படாமல் அதனை எடுத்துக்கொண்டு, புத்தகம் வழங்கும் இடத்திற்கு மேலே ஏறினேன். அங்கு இருந்த பணியாளர்கள் மட்டும் கையுறையும், முக கவசமும் போட்டிருந்தார்கள். புத்தகம் நோட்டு மூட்டைகளைத் தூக்க முடியாமல் இறங்கி, மீண்டும் கார் எடுத்தேன். ஒரு சற்று சுற்றிவிட்டு செல்லலாம் என்று வேறு பாதையில் வண்டியை திருப்பினேன். பக்கத்து ஊரில் கொரோன உள்ளது என்று அந்த ஊருக்கு மட்டும் தடுப்புக் கட்டைகளை வைத்து முடக்கி இருந்தனர். அந்த வழியாக எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. அந்த நுழைவாயிலில் 2 காவல் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள். 24 மணி நேரமும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்களா? காவல் அதிகாரிகளுக்கான பணி அழுத்தம் இங்கு பேச வேண்டியுள்ளது. இதற்காக லாக்கப் கொலைகளை ஒத்துக்கொள்ள முடியாது.
கரோனா பெங்களூரில் ஆரம்பித்த மார்ச் முதல் வாரத்தில் இந்த வருடம் கோடைவிடுமுறை நமக்கு இல்லை என்று தான் நினைத்திருந்தேன். எழுதி இருந்தேன். உலகம் முழுவதும் இணைந்து ஒத்துழைத்து தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தால், ஜூலை வாக்கில் அதனை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்று அப்பொழுதே சீனாவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு ஊசி இப்பொழுது மனிதர்களுக்கான சோதனையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, மற்றும் பிரேசிலில் சோதனைக்கு தயார் படுத்துகின்றனர். இந்த வருட இறுதியில் தான் கிடைக்கும் என தெரிவிக்கிறார்கள்.
சென்ற வாரத்தில் லண்டனில் இருக்கும் சக பணியளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அங்கும் இங்கு நடப்பது போலவே 'மக்களுக்கு கரோனா பற்றிய பயம் இருப்பது போல தெரியவில்லை' என்றார். Pornmoutth என்ற பீச் பகுதியில் அவரது வீடு இருப்பதாக கூறினார். கடந்த மே இறுதியில் நீண்ட வார இறுதி கிடைக்கும். வழக்கம் போல ஒவ்வொரு வருடமும் கூடும் கூட்டம், இந்த வருடமும் குழுமி இருந்தது என்றார். இத்தனைக்கும் அப்பொழுது பொது கழிப்பறைகள் போன்றவை அங்கு திறக்கப்படவில்லை. கரோனா உச்சத்திலும் இருந்தது. உலகமெங்கும் மக்கள் அடைந்து கிடந்து வெளியே செல்லவே நினைக்கின்றார்கள்.
அமெரிக்க நண்பர்களும் சோதனை செய்யும் குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகளுக்கு COVID-19 இருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் குறைந்ததாக தெரியவில்லை என்கின்றனர்.
நம்மூரில் கரோனாவினால் இறப்பு எல்லா வயதினரையும் பாதித்துள்ளது. இளம் வயதினர் 'ஹார்ட் அரெஸ்ட்' என இறந்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஓரிரு குழந்தைகளும் இறந்துள்ளதாக கூறுகிறாரகள். இந்தக் கரோனாவின் மியூட்டேசன் என்பது வேறு வேறு நிலையில் வீரியம் அதிகமாகிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் அதிகமாக இருக்கின்றது என்று சற்று சாதரணமாக எடுத்துக்கொண்டு வெளியில் சுற்ற மக்கள் கிளம்பி விட்டார்களோ? அல்லது வருவது வரட்டும், இன்றைய உணவுக்கு பாப்போம் என அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்களோ?
முதல் வகையான மக்கள் தான் இங்கு பிரச்சினை என கருதுகிறேன். இரண்டாம் வகையான தினக்கூலி மக்களுக்கு வேறு வழி இல்லை. அன்று கிடைப்பது தான் அவர்களுக்கு உணவு. அரசாங்கம் அனைவருக்குமான உணவு கொடுக்க முடிவதில்லை. அதிலும் வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு இன்னும் சிரமம் தான். அரசின் உதவியும் கிடைக்காது.
100 வருடங்களுக்கு முன் வந்த H1N1 ஃப்ளு தொற்றுநோய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு இருந்ததாம். அன்றைய மக்கள் தொகையில் மூன்றில் 1 பகுதியினர் இறந்து போய் உள்ளார்கள் என்கிறது வரலாறு. நவம்பரில் இன்னுமொரு உச்சம் இந்தியாவில் இருக்கும் என்கின்றனர்.
இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை விகிதாசாரப்படி இது குறைவு தான். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தென் மாநில, வளர்ச்சி அடைந்த மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களின் புள்ளி விவரங்கள் (Data) சரியாக இல்லை, என்பதை covid -19.org சுட்டுகிறார்கள். நம் வீட்டுக்குப் பக்கத்தில் பாதிப்பு உள்ளதா இல்லையா எனும் தகவல்களை தெரிந்து கொள்வது தான் இன்றைய தேதியில் அவசியமானது..
நமது தமிழகத்தில் எண்ணிக்கை அதிகம் இருக்க காரணம், அதிகப்படியான சோதனைகள். அதுவும் நல்ல விஷயமே. இப்பொழுது தான் ஸ்டேஜ் 3 எனும் சமூகத்தொற்று அடைந்ததாக கருதுகிறேன். அது இன்னும் சில மாதங்களில் விரிவைடையும். அவரவர் உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு, ரொம்பவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம். வந்தபின் போராடுவதை விட, நாம் தான் வருமுன் காக்க வேண்டும். சுயகட்டுப்பாடு இல்லாவிடில் என்ன நடக்கும் என்பது தெரியாது.
https://www.hindustantimes.com/india-news/oxford-vaccine-in-final-stage-of-clinical-trials/story-sVJz9DRIR4Lm9DRA7261pM.html
Wednesday, April 01, 2020
பெங்களூரில் கொரோனா -2
- யாராவது சில மக்களோடு தினமும் பேசுங்கள்; சும்மாவேனும் பேசுங்கள்; அது உங்களது மன உளைச்சலில் இருந்து விடுதலை கொடுக்கும். அது உங்கள் நண்பர் ஆகவும் இருக்கலாம், தூரத்து உறவினர் ஆகவும் இருக்கலாம். எப்பொழுதோ சந்தித்த நண்பராகவும் இருக்கலாம்.
- இந்த நேரத்தை குடும்பத்தோடு, குழந்தைகளோடு எப்படி செலவிட வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தலாம்.
- புதிதாக இதுவரை செய்யாத ஒரு வேலையை செய்யலாம்.
- தள்ளிப்போட்ட சில வேலைகளை முடிக்கலாம்.
Friday, March 13, 2020
பெங்களூரில் கொரோனா
நண்பர் "என்ன செய்றதுன்னே தெரியலை?" என்றவரிடம் "குழந்தைகளை ஊருக்கு அனுப்பிடுங்க" என்றேன்.
"நாங்க இதுவரைக்கும் தனியா அனுப்பினதே இல்லை" என்று புலம்ப ஆரம்பிக்கிறார். பிரிட்ஜில் வளர்த்தப்பட்ட குழந்தைகளின் நிலையும் இது தான்.
கோரோனா பற்றிய செய்திகளை, வீடியோக்களை பார்த்துக் கொண்டு வரும்பொழுது, இது பற்றிய வீடியோ பிபிசியில் கிடைத்தது. சீனாவின் 'வுகன்' நகரத்தில் வாழும் பிரிட்டிஷ் ஒருவரை பிபிசி பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. இளம் வயதில் இருக்கும் இவர் இதிலிருந்து மீண்டு வந்தவர். "வழக்கமாக ஆரம்பித்த இருமல் மற்றும் சளி இரண்டு நாட்கள் கழித்து சரியானது போல இருந்தது. அதன் பிறகு மூச்சுத் திணறல் ஆரம்பம். அது சற்றே பயப்படுத்தியது. நிமோனியா வந்தபோது இருந்ததைப் போல 20% மட்டுமே மூச்சு விட முடிந்தது"
சமீபத்தில் சிக்கன் குனியாவின் தூரத்து சொந்த வைரஸ் போன்ற ஒரு காய்ச்சலால் பாதிப்படைந்திருந்தேன். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், முன்னெச்சரிக்கை இல்லாததே. வழக்கமாக பாதிப்படைந்தவர்களை பார்க்க செல்லும் பொழுது நாம் வாய்க்கூடு போட்டுக்கொள்வதில்லை அல்லது பாதிப்படைந்தவர்களும் போட்டுக்கொள்வதில்லை. "அட, நமக்கென்ன வரப்போகுது" என்ற அசால்ட்டான எண்ணம் அல்லது சங்கடமாக இருக்கும் என்பதாகவும் இருக்கலாம். அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு தெரிந்தவர்களை பார்க்க வரும் 99% நம் மக்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தான் செல்கிறார்கள். இது போன்ற முன்னெச்சரிக்கைகளில் நாம் பின் தங்கியே உள்ளோம் என நினைக்கிறேன். இதில் நாம் மாற வேண்டும்
குறள் 681
பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...
-
தமிழில் பங்குவணிகம் பங்குவணிகம் தொடர்பான தகவல்கள் மற்றும் குறிப்புகள் It is always easy to understand if we learn something in our mother-to...
-
Inspiring story.., I have read through, voted and circulating to you all., thatz the minimum that I can do 2010 – உலகின் தலை சிறந்த ஹீர...

