Showing posts with label KrishMotivation. Show all posts
Showing posts with label KrishMotivation. Show all posts

Friday, February 26, 2021

ரகிட ரகிட ரகிட

"மரணமாஸ" விட நமக்கு #ULLAALLAA தான்...

in repeat mode..

இரு வருடத்துக்கு முந்தைய #OTD

அந்த  பாட்டு போலவே கடந்த சில நாட்களாக  "ரகிட ரகிட ரகிட ஊ" ரிப்பீட் மோடில்.  ஆனால 'ஊல்லல்லா' பாட்டு,  வழக்கமான தலைவரின் அட்வைஸ் மழை பொழியும் தத்துவ பாடல்..  'ரகிட ரகிட ' அப்படி இல்லாமல் don't care ரக பாடல்.   அந்தப் பாடல் பற்றி அலசுவோம்.


அணிகளில் பிடித்த அணி சொற்பொருள் பின்வருநிலையணி.  எனக்கு சுலபமான அணியும்.  அதில் தான் மிகச் சுலபமான இந்தக் குறளை உதாரணமாக குறிப்பிடலாம். 


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். 


அதற்கடுத்து வஞ்ச புகழ்ச்சி அணி எனலாம்.    


அதற்கான எடுத்துக்காட்டு பெரும்பாலும்  அனைவரும் அறிந்த அதியமான்-தொண்டைமான்-ஒளவை விடு தூது தான்.   ஒரு சமயம் தொண்டைமான்,  அதியமான்மீது படை எடுத்து வரப்போவதாக கேள்விப்பட்ட ஒளவையார், தொண்டைமானை சந்திக்க செல்லுகின்றார்.  தொண்டைமான் படைக்கலங்கள் உடைய அறைக்கு கூட்டிச் சென்று காண்பிக்கிறார்.  அங்கு சென்ற ஒளவை அந்த ஆயுதங்களை பார்வை இடுகிறார். 

 அக்கலங்கள் எல்லாம் புத்தம் புதிதாக,  பளிச் என மின்னுகிறது.  


அதனைக் கண்ட ஒளவை,  அதியமானின் வீரத்தினை தொண்டைமானிடம் எடுத்துக் கூறுகின்றார். 

 எப்படி?  தொண்டைமானைப் புகழ்வது போல ஆரம்பத்தில் தெரியும். 


இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டி,

கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து

கடியுடை வியல்நக ரவ்வே. (புறநானூனு,95)


'தம்பி.. நீ இங்க பளிச்சுன்னு தொடச்சு பூஜை போட்டு வெச்சிருக்கே.   அது நல்லது.  ஆனா இந்த அதியமானின்  படைக்கலங்கள் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வந்தேன்'.  


பகைவர்க் குத்தி,கோடு,நுதி சிதைந்து

கொற்றுறைக் குற்றில மாதோ ! என்றும்

அண்ணல்எம் கோமான்,வைநுதி வேலே (புறநானூறு,95)


அதியமான் பயல் இந்தமாதிரி வெச்சுக்கல.. சுத்துப்பட்டிலயும் போர்க்கு போய் சண்டை அடிக்கடி போட்டு வரார்.  அதனால கொல்லனோட வேல் செய்யும் பட்டறையில் ரிப்பேருக்கு போயிருக்குப்பா'.  அதனால எப்படி வசதி என்று அதியமானை வஞ்ச புகழ்ச்சியாப் புகழ்கின்றார்.  போரை நிறுத்துகிறார்.  இப்படி தான் எதையாவது எழுதி மார்க் வாங்கிருப்போம்.     


இந்த வஞ்ச புகழ்ச்சி அணிக்கு ஆகச் சிறந்த சமீபத்திய உதாரணம் "ரகிட‌ ரகிட‌ ரகிட‌ " பாட்டில் வரும் முதல் சரணம் தான்.  


"நாலு பேரு மதிக்கும்படி

 நீயும் நானும் இருக்கணும்.." 

என ஆரம்பிக்கும்.  முதல் முறை கேட்கும் போது வழக்கமான அட்வைஸ் மழையா  இருக்கும் போல  என நினைத்து  சளிப்போடு தான் கேட்க ஆரம்பித்தேன்.  மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுதுதான் அந்த பாடலை வஞ்ச புகழ்ச்சி அமைப்பில் உருவாக்கி இருப்பது தெரிந்தது.  


பள்ளியில் கல்லூரியில் நண்பர்களிடம் விவாதிக்கும்பொழுது கூட,  இந்த மாதிரி ஏத்திவிட்டு, அவர்களை இறக்கும்பொழுது  'என்ன மச்சி வஞ்ச புகழ்ச்சியா' என்று தான் கூறுவோம்.  அப்படி பேமஸ் ஆனது இந்த அணி.  அதன் சென்னை ஸ்லாங் தான் "என்ன மாப்ள... லந்தா.." என்பது.   இந்த ஒரு வரி உரையாடலை சரணத்தின் இடையில் சொருகி இருப்பார்.  அந்த இடத்தில் பாடல் யூ-டர்ன் போட்டு வஞ்ச புகழ்ச்சியாக மாறி அடுத்த வரி ஆரம்பிக்கும்.  


"அந்த நாலு பேர 

இதுவரைக்கும் பார்த்ததில்ல  நானு..

எனக்கு தேவைப்பட்ட நேர(ம்)  

அந்த பரதேசியக் காணோஓஓஓம்...."


ஒட்டு மொத்தமாக இந்தச் சரணம்,  'Dont listen on others negative words'  என்று ஊர் உலகத்துக்காக பயப்படாம, உனக்கு என்ன பிடிக்குதோ/ தோணுதோ, அதைச் செய் என்பதைக் கூறும்.  




இரண்டாவது சரணம் மோட்டிவேஷனை அள்ளித் தெளிக்கிறது. அடுத்தநாளை எப்படி வரவேற்கிறார்கள் பாருங்க. 


"ஏதோ ஒன்னு கொடுக்கத் தானே

அடுத்த நாளும் வருது..

ஆஹா

நல்லத நான் எடுத்துகிட்டா

நல்லதத்தான் தருது"


"The Secret" எனும் புத்தகம் ஈர்ப்பு விசை பற்றி நுணுக்கமாக கூறி இருப்பார்கள்.  நாம் எந்த விஷயத்தை தீவிரமாக ஈர்க்கிறோமோ அது நம்மை அடைகிறது. ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து,  அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும்.  அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய 

 ஒரு விஷயம்,  கண்டிப்பாக நடக்கும் என்கிறது.   கனவு காணுங்கள்,  என்று அப்துல் கலாம் கூறியதன் சாராம்சமும் இது தான்.  கனவு இலக்கை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும்.   தென்னை மரத்தில் பன்னாடை இருக்கும்.  அது வடிகட்டி மாதிரி, தேவை இல்லாத பூச்சி போன்றவற்றை மட்டும் வடிகட்டும். பல நேரங்களில் நாம கூட தேவை இல்லாத விஷயங்களை மட்டும், மனதில் போட்டு உளப்பிக்கொண்டே கிடப்போம். 


இதையே தான் வள்ளுவர் இப்படி கூறுகிறார் 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.



"எது என் தகுதி…..

யாரு வந்து சொல்லணும்

நெஜமா யார் நான்…….

என்கிட்டதான் கேக்கணும்"


வினாக்களை  யாரிடம் எழுப்பிகிறோம் என்பது தான் இங்கு கேள்வியே.  நமக்குள் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பாமல், நம்மைப் பற்றி, நம் இலக்கைப் பற்றி, அந்தப் பயணத்தில் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. வேறு யாரும் நம்மைப் பற்றி முழுதாக கூற முடியாது. அதனை மனசாட்சிக்கும், நமக்குமான உரையாடல் போல அமைத்திருப்பார் சந்தோஷ் நாராயணன்.




இரண்டாவது சரணத்தில்  கடைசியாக வரும் வரிகள் தான் ஹைலைட். 

  

"என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்

வருவானே……ஏ…..ஏ…..ஏ…..ஏஹே…..ஏஹே….

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே

மன்னிக்கணும் மாம்சே….

அட.. அவனும் இங்க நான்தானே"


#beatyourself #beatyesterday எனும் மோட்டிவேசனல் டேக் லைன் தான் இந்த வரிகள்.   உள்ளத்தனைய உடலில்   ஓடும் பலரும் இந்த ஹேஸ்டேக் போடுவதைக் கண்டுள்ளேன்.  குறிப்பாக ஷான்.  அதே தூரத்தை, முந்தைய நாளைவிட குறைந்த நிமிடத்தில் முடித்துக்கொள்ள இது ஒரு self motivation. நமக்கான போட்டியாளர் வெறும் யாரும் இல்லை நாம் மட்டுமே. 


அடுத்ததாக இந்த பாட்டின் எனர்ஜியே, "ரகிட ரகிட ரகிட" முடித்தவுடன் வரும் 'ஊ' எனும் உற்சாக ஒலி தான்.  கூடவே இடையிடையே வரும் சின்னச் சின்னச் உற்சாக ஒலிகள் தான்.  


 

இப்போது ஆரம்ப வரிகளுக்கு வருவோம் 

"ஹே, என்ன வேணா நடக்கட்டும்..

நா சந்தோசமா இருப்பேன்..

உசிரு இருக்கு வேறன்ன வேணும்

உல்லாசமா இருப்பேன்".

அன்றைய

"ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும் 

எனக்கொரு கவலை இல்ல"பாட்டின்  சமீபத்திய வடிவம்.



முதல் இரு வரிகள் சுயநலம் பேசுவது போல தெரிந்தாலும், அடுத்த வரியையும் சேர்த்து கவனிக்கும்பொழுது தான் அதன் ஆழம் தெரியும்.   வாழ்தல் அறம்  எனும்   ஈரோடு கதிரின் அடிப்படை கோட்பாடு. "எவருக்குமே சாவதற்கான காரணங்களைவிட, வாழ்வதற்கான காரணங்கள் ஒன்றே ஒன்றாவது கூடுதலாக இல்லாமல் போகாது".   அந்த இரு வரிகளும் உணர்த்துவது அதுவே. 



#வஞ்சபுகழ்ச்சி  #sarcasm #Motivation

#ரகிட-ரகிட


Monday, November 16, 2020

டாக்டர் செலின், US-மொடக்குறிச்சி

சென்ற வாரத்தில் எங்களது ஊர் மொடக்குறிச்சி மீண்டும் தலைப்புச் செய்திகளில்.  சென்ற முறை 1996-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நடந்த போது இருக்கும்.  தினமும் நூறு, ஐம்பது பேராக எங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.  தினமும் மாலை தொலைக்காட்சி செய்தியில் பரபரப்பாக பேசப்படும்.   வேளாண் பிரச்சினைகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக  கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தின் மூலம் 1033 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு கின்னஸ் சாதனை அடைந்தது.  எங்கு சென்றாலும் அதனைப் பற்றியே கேட்பார்கள்.  நக்கலின் உச்சமாக "நீயும் எலக்சன்ல நின்னயா" என்பார்கள்.    இந்த முறை அமெரிக்காவின் செலின் ராஜ் கவுண்டர் அவர்கள் முக்கியச் செய்தியாக இடம்பெற்றுள்ளார்.  அவரது அப்பா ராஜ் அவர்கள் படித்த பள்ளி தான், மொடக்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளி.  தற்போது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி.

 

வருடா வருடம் நடக்கும் பள்ளியின் இலக்கிய மன்ற விழா மற்றும் ஆண்டு விழாக்களில் நாவல் பழ  மரத்தடியிலும், வேப்பமரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டுதான் சிறப்பு விருந்தினருக்கு காத்திருப்போம்.

அந்த காத்திருக்கும் மாலை வெயில் நேரத்தில், சின்ன கல்லை எடுத்து, சற்று தள்ளி உட்கார்ந்திருக்கும் நண்பனின் முதுகில் தூக்கி போட்டு விளையாடி சுவாரசியம் ஆக்கிக் கொண்டதுண்டு.   எப்பொழுதும் பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு முன்பாக சிறப்பு விருந்தினரின் பேச்சு இருக்கும்.  கலை நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் வேளையில்,  சிறப்பு விருந்தினரின் பேச்சு, அவர் கூறும் குட்டிக் கதைகளைப் பொறுத்து ஆர்வம் வரும்.  

 

பெரும்பாலும் சிறப்பு விருந்தினராக SKM நிறுவனத்தின் எஸ்கே மயில்சாமி கவுண்டர் அவர்கள் தான் அழைக்கப்பட்டு இருப்பார்கள்.  எங்கள் பள்ளியில் படித்த அவர், ஒரு சிறந்த தொழிலதிபராக, தனித்துவம் மிக்கவராக இருந்தார் அப்போதும், இப்போதும்.  பள்ளிக்கு கேட்கும் நேரங்களில் நிதி வழங்கிக் கொண்டிருந்தார்.  கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்த அவரது வரலாறை, பேச்சைக் கேட்கக்  கேட்க நம்மில் ஒருவர் என சுவாரசியமும், ஊக்கமும் வரும்.   அவை மூளையின் ஓரத்தில் எங்கோ ஒரு பக்கம் உட்கார்ந்து, வேண்டிய நேரத்தில் நம்மை உசுப்பி விடும்.  சில வருடங்கள் கழித்து எஸ்கே மயில்சாமிக் கவுண்டர் எனும் அவரின் பெயரை,  எஸ்கே மயிலானந்தன் என மாற்றிக்கொண்டார். அவர் மாற்றிக்கொண்ட சமயம்,  நுயுமராலஜி படி மாற்றிக்கொண்டார் என நினைத்துக் கொண்டுதான்  இருந்தேன்.  அதன் பிண்ணணி அப்பொழுது தெரியவில்லை.  அவரது SKM நிறுவனம், இன்று நான்கு கிளை நிறுவனமாக பெருகி, எங்கள் பகுதியில் பலருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் சிறந்த நிறுவனம்.  அவரது பிறந்த ஊரை தத்து எடுத்து,  அவர்களின்  குழந்தைகளுக்கு,   உயர்கல்வி வரை படிக்கவும் வைத்து வருகிறார்.  வாழ்க வளமுடன் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, வேதாந்திரி மகரிஷிக்குப்பின் அதனை வழிநடத்தி வருகிறார்.

 

சரி, எதற்காக இந்த ப்ளாஸ்பேக்.  SKM அவர்களுக்கும், டாக்டர் செலின் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இன்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அவர்களின் கொரோனா குழுவில் இடம்பெற்றுள்ள பெண் மருத்துவர், செலின் கவுண்டர் அவர்கள் என்பது அறிந்ததே.   சென்ற வாரம் அவரைப்பற்றிய செய்திகள் வந்த நேரத்தில், எனது வாட்ஸ்அப் முழுக்க நண்பர்கள் "மச்சி, உங்க ஊர்க்காரங்க போல" என அவரின் பார்வர்டுகளால்  நனைத்துக் கொண்டு  இருந்தார்கள்.  நண்பர் ஒருவர் எனக்கு வாழ்த்தும் கூறினார்.   காரணம் மொடக்குறிச்சி அவரின் பூர்விகம் என்பது மட்டும் தான்.  இது அவரது தனிப்பட்ட முயற்சி, சொந்த சாதனை தான்.  அதையும் தாண்டி, அவர் நான்கு முறை பள்ளிக்கு வந்து, அவரின் டிரஸ்ட் வழியாக நிறைய உதவிகளை செய்துள்ளார் என்பது தான் கூடுதல் மகிழ்ச்சி.

 

அந்த புகைப்படங்களில், நாங்கள் பள்ளியில் உட்கார்ந்து கொண்டு இருந்த திடலில்,  அதே மேடையில் சிறப்பு விருந்தினராக அலங்கரித்து மாணவர்களுக்குப் பரிசை வழங்கிய புகைப்படங்கள் வலம் வந்தன.  நாங்கள் SKM அவர்களின் பேச்சை விளையாட்டாகக்  கேட்டு  உள்வாங்கிக் கொண்டது போல,  அந்தக் கூட்டத்தில் எத்தனையோ மாணவர்கள் டாக்டர் செலின் அவர்களின் உரையைக் கேட்டிருக்க கூடும்.  அது அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சிறு பொறியை கிளப்பிவிடும்.  அந்த சிறு பொறி அவர்களுக்கு ஊன்றுகோலாக, அவர்களை உலகம் முழுக்க எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய உதவும். 

 

அந்த மேடையை நோக்கி அவர் நடந்து வரும் பொழுது, அந்த சிறுவர்கள் வேடிக்கை வைத்திருப்பார்கள். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள்.   'இவங்க தான் இன்னிக்கு பேசறதுக்கு வந்திருக்காங்களா?  எங்கிருந்து வர்ராங்க?  நம்மூர்லயா படிச்சாங்க?  என்னடா, பேன்ட்  சர்ட்டெல்லாம் போட்டுருக்காங்க?'  என்று பல வித கேள்விகள் வந்திருக்கக் கூடும்.  இத்தகைய கேள்விகள் தான் அவர்களுக்குள் ஒரு 'ஸ்பார்க்'. 'அப்ப நாமும் படிச்சால் அங்க போக முடியமா?  இவங்க மாதிரியே சாதிக்க முடியுமா?'  எனும் அடுத்தடுத்து அவர்களை யோசிக்கத் தூண்டும்.     

 

அந்த வியப்பு, ஆச்சரியம் நிறைந்த கிசுகிசு கேள்விகள்,  அவர்களுக்கு எங்கோ ஒரு பொறியை, படிப்பின் தாகத்தை, அமெரிக்காவிற்கான கனவை உருவாக்கி விட்டிருக்க கூடும்.  இன்று இவரின் தந்தையின் கனவுக்காக பள்ளிக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் போல, அந்த முணுமுணுத்த கூட்டத்திலிருந்து ஒருவர்,  பல நாடுகளுக்கும் சென்றுவிட்டு வந்து மேலும் பலரைத் தூக்கி விடலாம்.   அதுதானே இன்றைய மற்றும்  நாளைய தலைமுறையின் தேவையாக இருக்கின்றது.

 

அவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாரா எனத் தெரியவில்லை.   அடுத்த முறை வந்தால் அவர் அங்கேயும் செல்ல வேண்டும்.  நம்மூரில் நாம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் விஷயத்தை அவர் ட்வீட்டாக பதிவு செய்திருந்தார்.  இதுகூட பலருக்கும் அவரவர்களின் பள்ளிக்கு ஏதாவது செய்வோமே என தோன்றி இருக்கும். இவருக்கும் கமலா ஹாரிஸ்க்குமான ஒற்றுமை.   இருவருமே இரண்டாம் தலைமுறையாக அமெரிக்காவில் இருப்பவர்கள்.  முதல் தலைமுறை முயற்சி எடுத்து, வாயுப்புக்களைப் பயன்படுத்தி சென்றதால் தான், இவர்களால் அங்கு சாதிக்க முடிந்தது.  பேச எவ்வளவோ அவரின் சாதனைகள் இருக்கும்போது சமூக வலைதளங்களில் வழக்கம்போல ஏதோ ஒரு எதிர்மறையை எடுத்துக்கொண்டு அவரது பெயர் பற்றி  சர்ச்சையை கிளப்பிக்கொண்டு இருந்தார்கள்.   SKM  அவர்கள் போலவே அவரும் செய்யலாம். 

 

கிட்டத்தட்ட நான் ஊருக்கு வந்ததில் இருந்து, கொரோன ஊரடங்கு தளர்வுக்குப் பின் மீண்டும்  கல்யாணம், விசேஷங்கள் என பரபரப்பாகவே, எனது  தனிப்பட்ட நேரம்  நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றது.  பல வருடங்களுக்குப் பின் இங்கு இருப்பதால் கொரோன பயத்தோடு முக்கியமானவற்றில்  பங்கு கொள்கிறேன்.

பெங்களூர், சென்னையில்  இருக்கும் என்  நண்பர்கள் இதன் காரணமாகவே ஊர்ப்பக்கம் வரவில்லை என்கிறார்கள். "அட, அங்க இருந்தா சின்னச் சின்ன விசேசம் ஒவ்வொன்னுக்கும் கூப்பிடுறாங்க.  போகலைன்னா சங்கடம் வேற.  கோவிச்சுக்கறாங்க".   டாக்டர்  செலின்  போன்ற சாதனையாளர்கள், இவை எல்லாவற்றையும் கடந்து விட்டுத்தானே சாதனைகள் செய்கிறார்கள்.

 

பெரும்பாலான சாதனையாளர்கள் அந்த வட்டத்தை உடைத்து வெளியேறியதால் மட்டும் தான் அவர்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிகிறது.  ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போது, பார்வை விரிவடைய மறுக்கின்றது.  பார்வை விரிவடைய, வெளிவட்டத்தின் வாய்ப்புகளை அறிந்துகொள்ள, உலகத்திற்கான திறவுகோலை வழங்க,  இத்தகைய சிறப்பு விருந்தினர்களின் நேரடிப் பங்கேற்பு உதவும்.  அவர்கள் நம் ஊரில் இருந்து சென்றவர்கள் எனும்போது நாமும் அதனைச் செய்ய முடியும் எனும் நம்ம்பிக்கை ஊற்று பிறக்கிறது. 

 

எங்கள் பகுதியில் இருந்து வெளியில் வந்து பிரபலமானவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அவர்கள் அல்லது அவர்களின் வழித்தோன்றல்கள் எங்கு இருந்தாலும், மீண்டும் வேர்களை நோக்கி விழுதுகளைப் பரப்பி மற்றவர்களைத் தூக்கிவிடுவதென்பது கண்டிப்பாக பாராட்டப்பட  வேண்டிய விஷயம்.   அதுவும் அவரின் அப்பா படித்த பள்ளி என்பது கூடுதலாக பாராட்ட வேண்டிய விஷயம்.  வாழ்த்துக்கள்  டாக்டர் செலின். 

 #mondaymotivation #MotivationalStories

   

 



குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...