Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, April 04, 2022

குறள் 681

பால்: பொருட்பால்

அதிகாரம்/Chapter: தூது / The Envoy

குறள் 681:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

விளக்கம்:

அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.


**

நம் தமிழ் பாடங்களில் மயில் விடு தூது,  புறா விடு தூது,  தமிழ் விடு தூது படித்திருப்போம்.  லவ் பண்ணிட்டு இருக்கும் தலைவன் போருக்கு போனாலோ அல்லது பார்க்க முடியாமல் போனாலோ,  தலைவி அஃறிணை பொருள் வழியாக தூது விடுற மாதிரி நிறைய செய்யுள்கள் உண்டு.  

தமிழ் திரைப்படங்களின் பாடல்களிலும்  தூது விடும் பாடல்கள் உண்டு.   நான் ரசித்த ஒன்று "சின்னக்கிளி வண்ணக்கிளி சேதி சொல்லும் செல்லக்கிளி"  என்ற சின்னக் கவுண்டர் பட பாடல்.  இது  ஒரு அழகிய கிளி விடு தூது.  சுகன்யாவும்- விஜயகாந்தும் கிளிகளின் வழியே உரையாடிக்கொண்டு இருப்பார்கள்.   ( இதுபோல வேறு பாடல் இருந்தால் பகிருங்கள் )  

ஆனால் வள்ளுவர், இங்கு அரசருக்கு தூது கொடுப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.   இன்றைக்கு இது பொருந்துமா?   அல்லது அன்றும் அப்படி இருந்ததால் வள்ளுவர் தனது ரூல் புத்தகத்தில் இப்படி எழுதி உள்ளாரா என தெரியவில்லை.   

அரசருக்கு என பார்க்கும் பொழுது நம் மாநிலத்திற்கு, நாட்டிற்கு, உலகத்திற்கு என பெரிய அளவில் யோசிப்போம்.  அரசருக்கும் தொழில் அதிபர்களுக்கும்  இடையே இருக்கக்கூடிய  தூது படலங்கள் வேற லெவல்.    இதனை  "லாபி விடு தூது"  எனலாம்.  அதன் சிறிய அளவை "புரோக்கர் விடு தூது" என வகைப்படுத்தலாம்.   

இரண்டுக்கும் என்ன வித்யாசம்.  அரசன் எனில் அரசாங்கமும் தான்.  இதனை நம் அளவிற்கான தூது படலம் என கொள்ளலாம்.    எந்த ஒரு அரசு துறையும் இதில் பொறுத்த முடியும்.   இந்த  ப்ரோக்கர் விடு தூது படலம்  இல்லாமல் எதுவும் இங்கு அசையாது.  

ஒரு சாதாரண பதிவு அலுவலகத்தில் நேரில் சென்ற, இந்த தூது படலம் இல்லாமல் பத்திரப்பதிவு பண்ணிவிட  முடியுமா?  அப்படி தூது செல்பவர்கள் நம்மிடம் பேரன்புடன் தான் உள்ளார்கள்,  தூது படலத்தில் அழகாக பேச தகுதியானவர்களாக  உள்ளார்கள்,  பதிவு செய்யும் அந்த இடத்தின் வேந்தனிடம் ப(ண)ண்பாகவும்  தான் உள்ளார்கள்.   ஆகவே வள்ளுவர் வாக்கினை  எந்த வகையிலாவது பின்பற்றிவிடுகிறார்கள்



Sunday, April 25, 2021

ஈரோடும் தேர்தலும் - 2017 to 2021

2017 ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றிய கட்டுரையில் எழுதியவை முதல் இடம்  பெற்றது. இன்று 2021ல் எப்படி உள்ளது? 


கல்யாணங்களில் ஆடம்பரங்களை கொரானா மட்டுமே தற்போது தற்காலிகமாக  நிறுத்திவைத்து உள்ளது.  கொரானா மட்டுப்பட்டிருந்த கடந்த மூன்று, நான்கு மாதங்களாக, அந்த ஆடம்பரமும் கொஞ்சமேனும் வெளிப்பட்டுத்தான் இருந்தது.  அதே போல எளிமையை உணர்ந்தவர்கள், மிகவும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்து விட்டார்கள்.   நேரில் சென்றே பத்திரிகை வைத்து அழைக்க வேண்டும் என்று இருந்ததையும், கல்யாணத்திற்கு செல்லவில்லை என்றால் கோபித்துக்கொள்வார்கள் என்பதையும் கொரோன காலம் உடைத்துள்ளது.   சில நாட்கள் தங்கி சிறப்பிக்கும் நெருங்கிய வட்டத்தின் கூட்டமும் குறைந்துள்ளது.  மாஸ்க்(போடவில்லை என்றாலும்),  சானிடைசரோடு இது இன்னும் சில காலம் தொடர வாய்ப்பு உள்ளது.


மருத்துவதுறை பற்றி இருந்த பார்வை, எனக்கு மாறியுள்ளது. இப்பொழுது சிசேரியன் டெலிவரி என்பது பெரிய விஷயமாக பேசுபொருள் ஆவது இல்லை. நார்மலா? சிசேரியனா? எனும் ஒற்றைக் கேள்வியில் மக்கள் கடந்து விடுகிறார்கள்.  அதற்கு உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள்  போன்ற பலவகை காரணங்களை உணர்ந்து இருக்கலாம்.  தமிழ்நாட்டில் குழந்தைப் பிறப்பில், குறைந்துள்ள இறப்பு விகிதம் இதன் பயனை பறைசாற்றும். அதேபோல செயற்கைக் கருத்தரிப்பு பற்றிய பார்வையும் மாறியுள்ளது.  அறிவியல், குழந்தை இல்லாதவர்களுக்கு போலிச் சாமியார்களிடம் சென்று ஏமாறாமல் இருக்க ஒரு அற்புதமான மேஜிக்கை கண்டுபிடித்துள்ளது.  வாடகைத்தாய் வழி பிறக்கும் குழந்தைகள் என  உலகம் அறிவியல்  பாதையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு நகர்ந்து கொண்டுதான் உள்ளது.  அதனைப்  பற்றி தனியாகவே எழுதலாம்.    


அதேபோல தெருவுக்கு தெரு மெடிக்கல்ஸ் இருப்பது, மருந்து, மாத்திரைகள் சட்டென சராசரி மக்களுக்கும் கிடைக்க இது உதவுகிறது.  நமது மக்களின் சராசரி ஆயுளை நீட்டித்துக் கொண்டு தான் உள்ளது. குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகள் பற்றிய தவறான புரிதல் மக்களிடம் மாறியுள்ளது.  தடுப்பூசிகளும் அதிவிரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு மக்களை இறப்பிலிருந்தும், கொரானாவின் வீரியத்திலிருந்தும்  தடுத்துக்  கொண்டுள்ளது.  தடுப்பூசி என்பது வியாபார நோக்கம் அல்ல என என் பார்வை மாறியுள்ளது.   


பேஸ்ட் இல்லாமல், இந்த மக்கள்தொகைக்கு வேப்பங்குச்சி மட்டுமே ஈடு கொடுக்க முடியுமா என்பதும் சந்தேகமே.  அது போலத்தான்  சோப்பு, சாம்பு பற்றி பேசுவதும்.   தோல் மற்றும் சாயக்கழிவுகள் நிலை பெரிதாக மாறியுள்ளதாக தெரியவில்லை.  இந்த கழிவுகளை எல்லாம்  ஆறுகளில் கலக்க விடாமல், சுத்திகரிப்பு நிலையத்தை வைப்பதும், முறையாக மறுசுழற்சி செய்வதுமே தீர்வாகும்.  அதனை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர பழங்காலத்திற்கு செல்வதாக இருக்க முடியாது. 


கொரோனா காரணமாக 8 மணிக்கு அடித்துப்பிடித்து குழந்தைகளை பேருந்தில் பள்ளிக்கு ஏற்றிவிடும் வேலை இப்பொழுது இல்லை.  ஆனால் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், வேறு விதமான பிரச்சனைகளை கையாண்டு வருகிறோம்.  குறிப்பாக ஆன்லைன் க்ளாஸ் அழுத்தங்கள் பெற்றோருக்கு எனில், யாரையும் பார்க்காமல், விளையாடாமல் ஆன்லைனில் இருக்கும் குழந்தைக்கு வேறு மாதிரியான மன அழுத்தம். குழந்தைகளை எவ்வாறு முழுநேரமும் பிஸியா வைத்துக்கொள்வது என்பது ஒரு சவாலான விஷயமும்.  கொரோனாவிற்குப் பின் கல்வி முறை மாறுமா? ஓரிடத்தில் அமர்ந்து ஆசிரியர்கள் கூறுவதை கேட்பார்களா? என்பதெல்லாம் காலம் தான் பதில் கூறும்.   

   

புரோட்டா சாப்பிடும் பழக்கம் குறைந்தது போல தெரியவில்லை.  இன்றும் நெகிழிகளில் குழம்பு ஊற்றி எடுத்துச் செல்கிறார்கள்.  டீக்கடைகளில் டீ நெகிழியில் கட்டித் தருவது ட்ரெண்ட்ட்டாகவே மாறியுள்ளது. 

ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.   அங்கங்கு நாம் பார்க்கும் செக்கு எண்ணெய்,  திணை, ஆர்கானிக் கடைகள் இதனை மெய்ப்பிக்கும்.  ஆனாலும் இதில் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளது.  


மாறாக நீர்நிலைகள் பற்றி கொஞ்சமேனும் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. இந்த சில வருடங்களில் நீர்நிலைகள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்றவை அதிகமாகவே நடைபெற்றது. அரசாங்கமே பல நீர் நிலைகளை சீரமைத்தும் உள்ளது.  சில இடங்களில் 100 நாள் திட்டத்தினை இந்த பக்கமும் மடைமாற்றி உள்ளது ஆரோக்கியமான விஷயம். 


ஆனால் கீழ்பவானி, காலிங்கராயன் கரையில்  அல்லது ஏதேனும் நீர்நிலைகளை ஒட்டி, சென்ற இடங்களில், என்னை வருத்தப்பட வைத்த விஷயம் ஒன்று உண்டு. அது அங்கங்கு கிடந்த பாட்டில்கள்,  கூடவே இரண்டு மூன்று பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் கோக் பாட்டில்கள் அல்லது வாட்டர் பாக்கெட்டுகள்.  வாய்க்காலின் கரையில் ஒரு கிலோமீட்டருக்கு சென்று வந்தால் தெரியும்.  பத்து இருபது அடிக்கு ஒரு குவியலாகவும் அல்லது எங்கெல்லாம் நிழல் இருக்கின்றதோ அங்கும், சமூகப் பொறுப்பு  துளியும் இல்லாத குடிமகன்களின்  இந்த தடயங்களை காண முடிந்தது.  'ஐயா, நீங்கள் குடியுங்கள் ஆனால் இந்த பாட்டிலை எங்காவது ஒரு இடத்தில் போட்டுச் செல்லலாமே'.   அரசேகூட அந்த பாட்டில்களை போடுவதற்கு தனியாக  குப்பைத் தொட்டியை அங்கங்கு வைக்கலாம் அல்லது பாட்டிலைத்  திருப்பிக் கொடுத்தால் டாஸ்மாக்கில் தள்ளுபடி அளிக்கலாம்.   பாட்டில்கள் மறுசுழற்சிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.  கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்காலின் இந்த பிரச்சினை தமிழ் நாட்டுப் பானையின் ஒரு சோறு தான். கடந்த அரசு படிப்படியாக டாஸ்மாக்கை குறைக்கவில்லை.  வரும் அரசும்  இதில் கைவைக்காது, ஆனால் இந்த பாட்டில் கழிவுகளை ஒழுங்குமுறைப் படுத்துமா?  


80க்கும்  2010க்குமான பல ஒப்பீடுகள் நகரம் Vs கிராமம் போலவே இருக்கும். 90க்கு பிறகான நகரமயமாக்கல் இவற்றிற்கு முக்கிய காரணம்.  ஆனால் இன்று  நகரத்தின் ருசியை அறிந்தர்வர்கள், நகரங்களை விட்டு வர முடியுமா என்பது கேள்விக்குறி.  அதற்கு மருத்துவ காரணங்கள் தவிர, ஊர்ப்பக்கம் இன்றும் நிலவும் ஏற்ற தாழ்வும், பெண்களுக்கு நகரத்தில் கிடைக்கும் ஒருவித ∴பிரீனஸ்,  இன்னும் வேறு பல காரணங்களும் அடக்கம்.  ஆனால் கிராமங்கள் இப்பொழுதும் இயற்கை, உறவு, நட்பு என வேறு மாதிரி அழகாக உள்ளது. 


ஈரோடு மாவட்டம் பற்றிய கருத்து இப்படி மாறி இருக்க 2019ல் எழுதிய தேர்தல் பற்றிய கட்டுரை, மற்றொரு விதமாக மாறி உள்ளது.  பாராளுமன்றத் தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலம் வாக்காளர்களும் ஏற்றமே.  சென்ற தேர்தலில் அந்தக் கட்சியின் வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே பணம் கொடுத்தார்கள்.   ஆனால் இந்த முறை இரண்டு கட்சிகளுமே வாக்கு வங்கி தவிர, அனைவருக்கும் பணம் கொடுத்துள்ளார்கள்.  மக்களும்  இரண்டு பக்கமும் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதற்கு குத்துவதற்கு தயாராக இருந்தார்கள்.  குத்தினார்கள்.  ஒரு சிலர் பணம் வாங்க மறுத்த சம்பவங்களும் நடந்தது.   


சில தொகுதிகள் எல்லாம் ஒரு மாத காலமாக பரிசுமழை பொழிந்துகொண்டே இருந்தது. புடவை, வேட்டி அவர்கள் குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து உள்ளார்கள்.  'யார்க்கு ஓட்டு போட போறீங்க'  என்ற இருந்த  பேச்சு 'உங்களுக்கு ரெண்டு பக்கம் இருந்தும் வந்துடுச்சா' என்று மக்கள் மட்டத்தில் மாறி விட்டது.   


 90களில் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவது மட்டுமே இருந்தது.  இன்று அரசு மற்றும்  அரசியல்வாதிகள்,  அவர்களின் குற்றத்தை சரிசமமாக மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றார்கள்.  மக்களும் குற்ற உணர்வு இல்லாமல் அதனை வாங்கிக் கொள்கின்றார்கள்.  ஒரு வகையில் இதனைப் பார்க்கும் பொழுது, ஒரு சாமானியன் அரசியல்வாதிகளிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியுமா?  அவர்கள் செய்த எதிர்மறைச் செயலுக்குத் தானே கொடுக்கின்றார்கள்? தேர்தல் கமிஷனே இதனை கண்டு கொள்ளாமல்  யார்மீதும் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நம்  மக்கள் செய்வது சரிதானோ? 


மாற்றம்  ஒன்றே மாறாதது. காலத்தின் பாதையில் கவனித்து பயணிப்போம்.


பி.கு : 

2017 -ல்  "ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில், "ஈரோடு மாவட்டம்" பற்றி எழுதி முதல் இடம் பிடித்த கட்டுரை.


https://tinyurl.com/yxju8tk5



2019-ல் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எழுதியது.  

https://tinyurl.com/n6kwcjma








Monday, June 01, 2020

தற்சார்பு எனப்படுவது யாதெனின்


என்பதுகளின் இறுதியில் ஒட்டகம் மார்க் சீயக்காய் தூள், காந்தி மார்க் சீயக்காய்த்தூள் மிக அதிகமாக விற்பனை ஆகும்.  அதே போல்தான் கோபால் பல்பொடி, பயோரியா பல்பொடி போன்றவையும். சோப்பு என்று பார்த்தால் அது ஹமாம்.  துணி துவைக்க உள்ளூர் சோப்பு தான், டிஸ்கவுண்ட் போலவே இருக்கும்.  அதன் பிறகு 501 சக்கை போடு போட்டது.  அப்பொழுது 501 மற்றும் ஹமாம் இரண்டும் டாடா நிறுவனத்திடம் இருந்தது.  ஹமாம் ஐந்து ரூபாய்.   இந்த இரண்டு சோப்புகளும் பெட்டியில் வாங்குவோம்.  அதனை எடுத்து அழகாக அடுக்கி வைப்பது என் பொறுப்பு.  அதேபோல கலர் குடிப்பதற்கும் குண்டு அழுத்தி உள்ளே விழ  வைக்கும் கோலி  சோடா.  சிகப்பு கலர், மஞ்சள் கலரும்  இருக்கும்.  பிறகு 55 எனப்படும் பன்னீர் சோடா வகை பிரபலம்.  மொடக்குறிச்சியில் அப்பொழுது ஒரு சோப்பு அலகு யூனிட் எனும் கதர் சோப் தொழிற்சாலையும் இருந்தது.    

90-களின் ஆரம்பமாக இருக்கலாம்.    அந்த நேரங்களில் தான் பிரபலமானது  சிக், மீரா  ஷாம்புகள். 
 ஒட்டகம் மார்க் சீயக்காய் தூள், காந்தி மார்க் சீயக்காய்த்தூள் விற்பனை குறைய ஆரம்பித்தது.   குளோசப், மற்றும் கோல்கெட்  பேஸ்ட் விற்பனை அதிகமான நேரம் கோபால் பல்பொடி இறங்கு முகத்தை அடைந்தது.    கூடவே ஹமாம் மற்றும் 501 ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்திற்கு கை மாறியது.   அப்பா கூறுவார்  லாபம் முன்பு போல் இல்லை என.   பெப்சி வர ஆரம்பித்தது உள்ளூர் கோலி  சோடா குறைய ஆரம்பித்தது.   

அப்பொழுது ஊரில் ஒருவர் வந்து சுதேசி இயக்க பொருள்களை தான் நாம் பயன்படுத்த வேண்டும், அப்பொழுது தான் நம் நாடு நன்றாக இருக்கும் என்பார் என்று கூறிவிட்டு செல்வார்.    அதுநாள்  வரையிலும் கடையில் என்ன பொருட்கள் புதிதாக வந்தாலும் அதனை பயன்படுத்த முயற்சிப்பேன்.  பியர்ஸ் சோப்பெல்லாம் அந்த வகையில் போட்டது தான்.  அவரின் மீது இருந்த மதிப்பு காரணமாக, முடிந்த அளவு நமது ஊர்  நிறுவன பொருட்களை மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தேன்.  மெடிமிக்ஸ் க்கும், மீராவிற்கும் 
 மாறினேன்.   அவ்வப்போது இந்த எண்ணம் தோன்றி மறையும்.   அவ்வப்போது இதில் மாற்றமும் வரும்

இப்பொழுது கூட அந்த சீவக்காய் மற்றும் அரப்புத்தூள்களை வாங்கி தலையை அலசிக் கொள்ளலாம் என்று நமது குளிக்கும் அறையில் டைல்ஸ் முழுக்க தெரிந்து விடுகின்றது.  அதற்கேற்ப நம் அளவுகடந்த தண்ணீரையும் வீண் செய்ய வேண்டியுள்ளது 

வேற்று நாட்டு நிறுவனத்திற்கு நாம் வேலை செய்ய ஆரம்பிக்கும் அந்த நொடியில், தற்சார்பு கொள்கை  முடிந்து போய் விடுகின்றது.   இன்று நமது நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்கினாலும்,  அதன் பங்குதாரர்கள் யாரேனும் ஒருவர் வெளிநாட்டில் இருக்கலாம்.  

அப்படியானால் தற்சார்பு என்பது எது?  
தற்சார்பு என்பது எழுபது என்பதுகளின் காலத்திற்கு செல்வது மட்டுமாக இருக்காது. அந்த பொருளாதாரத்தை கடந்து  வந்து வெகு காலம் ஆகிவிட்டது என நினைக்கிறேன். காலத்துக்கு காலம் அதுவும் மாறி மாறித்  தான் வந்திருக்கும்.   கோபால் பல்பொடிக்கு முன்னர் வேப்பங் குச்சியை வைத்து விளக்குவது  தற்சார்பாக இருந்திருக்கலாம்.


வால்காவிலிருந்து கங்கை வரை எனும் புத்தகத்தில் ஆரம்பகால மனிதர்கள் பற்றி குறிப்பிடுவார்கள். 

ரஸ்யாவின் வால்கா நதியிலிருந்து  கங்கை வரை மனிதர்கள்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக புலம் பெயர்ந்து வந்த கதை.  புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காடுகளில்  இருந்தனர். அந்தக் காடுகளில் விலங்குகளுடன், விலங்குகளாக மனித இனம் திரிந்தது. அவர்களுக்குள் மாமிசத்திற்கு சண்டை நடக்கும்.     அங்கு கிடைத்த காய்களையும் பழங்களையும், அங்கிருக்கிற விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு  இருந்ததை  தற்சார்பு என குறிக்கலாம்.

90 க்கு பிறகு பொருளாதார தாராள மயமாக்கல் ரொம்பத் தீவிரமா நடந்த காலகட்டங்கள் மிக முக்கியமானவை.  உலகதோடு ஒட்டி உறவாட ஆரம்பித்து விட்டோம்.    உலகமயமாக்களுக்கு  முன் எப்படி இருந்தது.   இந்தியா முழுக்க இருந்த மக்கள் அங்கங்கு  அவரவர்  கிராமங்களிலும் அவரவர்  ஊர்ளிலும்  இருந்தார்கள்.  வெளி உலகம் தெரியாமலேயே.  பக்கத்தில் இருக்கும் சாமியைப்  பார்த்துக்கொண்டு,  அருகில் இருந்த உறவினர்களை விசாரித்துக்கொண்டு, கிடைத்த  வேலையைப் பார்த்துகொண்டும் தான்  இருந்தார்கள்.   ஆனால் அதில் தான் சாதியப் படிநிலைகள் ரொம்ப தீவிரமாக இருந்தது என்பது பலரும் கூறும் கருத்து.   

 இன்று தமிழ்நாட்டிற்கு எத்தனையோ மக்கள் பஞ்சம் பிழைப்பதற்காக வந்த மக்கள், கொரோனாவின் முடக்கத்தால் திரும்ப அவர்களின் ஊருக்கு போகும், அந்த காட்சிகளையும் நாம் பார்க்கிறோம்.  தமிழகத்தில் இதுவரை பிரச்சனை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வண்டிக்கு டியூ  கட்ட முடியலை,  குழந்தையோட பள்ளிக் கூடத்திற்கு பீஸ் என்ன பண்றதுண்ணு  தெரியவில்லை எனும்  இந்த மாதிரியான விஷயங்களில் பிரச்சினை ஆரம்பித்து உள்ளது.   எனக்கு தெரிந்து பசி, பஞ்சம் மாதிரியான பிரச்சினைகள் இதுவரை வரவில்லை என்கிறார்  பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.   ஒருவிதத்தில்  அது உண்மை என்றே தோன்றுகிறது.   அரிசி முதற்கொண்டு எல்லாமுமே நமக்கு அரசு அளிக்கின்றது,  அதற்கான வருவாய் எந்த வழியாக என்று இப்பொழுது  நம்ம பாக்கத் தேவையில்லை.  

தற்சார்பு பொருளாதாரத்தின் படி, இந்த மாதிரி கிராமங்களில்  வேலை பார்த்துக்கொண்டு இருந்த எல்லாருமே ஏதாவது ஒரு தொழில் சார்ந்த, இண்டஸ்ட்ரீஸ்  மாதிரியான  சூழலுக்கு போய்விட்டோம்.  அந்த தொழில் உலகத்தை சார்ந்து ஒரு கண்ணியாக  இருக்கிறது.   ஓரிடத்தில் அறுபட்டால் அது மற்றோரு பக்கம் பிரச்சினையை விளைவிக்கும்.     

இப்பொழுது தான் நாம்  இண்டஸ்ட்ரியல் வளர்ச்சியால் நடந்த சூழலியல் பிரச்சினைகள் குறித்துப் பேச ஆரம்பிக்கின்றோம்.  இங்கிலாந்திலும் தொழிற்புரட்சிக்குப் பின் நடைபெற்ற சூழலியல் மாற்றங்கள், அதற்குப் பிறகு சூழலின் மீது அக்கறை கொண்டு அவர்கள் மாறியது போல அவற்றைப் பற்றி நிறைய பேசவேண்டும்.    கொரோனா காலம் நம்மை இந்த  நிலைமையை  விட கொஞ்ச காலம் பின்நோக்கி தள்ளி விட்டு போகும். 

 இப்போது  நாம்  செய்துகொண்டு  இருந்த விஷயங்களில் எந்தெந்த  தவறான விஷயம் இருக்கிறது என ஆராய்ந்து அதனை சரி கட்டுவதற்கான வேலைகளை  ஆரம்பிக்கவேண்டும்.   அந்த மனப்பான்மை எல்லா தரப்பு மக்களுக்கும் வரும்.   

தற்சார்பு பொருளாதாரம் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பா முடியாது.  நம் ஒரு மாடு வைத்து பராமரிக்க , அதற்கு இடம் வேணும்.  அந்த இடம் எங்கே கிடைக்கும்? அவன் அந்த இடத்திலிருந்து படித்து மேலே சென்று அந்த இந்த முன்பு இருந்த ஜமீன்தார் இருந்த முறை மாறி இப்போ அது ஒரு ஒரு நிறுவனத்துக்கு கீழே போய் இருக்கிறார்கள்.   இங்கே ஒரு கிராமத்தில் அவர்கள் அடிமையாக இருந்த நிலைமை மாறி இன்றைக்கு ஒரு முதலாளித்துவத்தின் கீழ் ஒரு அடிமையாய் இருக்கிற ஒரு நிலைமையில் தான் இருக்கும்.   அதில் கொஞ்சம் படிக்காமல் விஷயம் தெரியாமல் இருந்திருக்கும்.  இப்போ படித்து விஷயம் தெரிஞ்சு இருக்கும் என தோன்றுகிறது.  

தற்சார்பு விஷயங்களெல்லாம்  நமக்கு ஒத்து வருமா என்றால் நம்ம தற்சார்பு னா என்ன அப்படின்னு இருக்கு ஒரு கேள்விக்குறி?  பதில் எந்தப் பொருளையும் வாங்காமலேயே   உற்பத்தி செய்ய முடியுமா?  அப்போழுது ஒரு துறவயின்  வாழ்க்கையைமட்டுமே  வாழ முடியும் என நினைக்கிறேன்.   இந்த கால கார்பொரேட் துறவிகள் அல்ல.     கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு அப்படியே இருக்கிற வாழ்க்கை.   அந்த வாழ்க்கை முறை நம்ம சாமானியர்களுக்கு இப்போழுது வருமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.   
அப்படியே அது ஒத்து வந்தாலும் இந்த நுகர்வு சமூகத்தில் நம்ம இருக்க முடியுமா?  சிக்கனாமான  மினிமலிஸம் சார்ந்த வாழ்க்கை தான்.   நமக்கு இன்றைய காலகட்டத்தின் தேவை. தேவைக்கு அதிகமாக வாங்குவது நிறுத்தினால் பல பிரச்சனைகள் தீரும்.   

அதற்கடுத்தபடியாக குளோபலைசசன்,  எல்லாருமே கரோனாவிற்கு பின், லோகலைசேஷன் ஆகும் என நினைத்தாலும், அது டி-சென்டர்லைஷேஷன் ஆகுமே ஒழிய  லோகலைசேஷன் ஆகும் வாய்ப்பு குறைவு.  


நெருக்கடிக்குப் பிந்தைய கால கட்டத்தைத்தான் new normal என்று பொருளாதார வட்டாரத்தில் கூறுகிறார்கள்.  new normal என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அது கண்டிப்பாக தற்சார்பை  நோக்கி நகராது, வேண்டுமானால் மினிமலிசம் நோக்கி நகரலாம்.  






Tuesday, August 07, 2018

"ஈரோடு எனது குருகுலம்" கலைஞர்

"ஈரோடு எனது குருகுலம்" கரகரத்த குரலில்  கலைஞர் பேச்சை ஆரம்பித்தவுடன் அங்கங்கு சரக்கடித்துக்கொண்டும், சரக்கடித்து முடித்து தம்மடித்துக்கொண்டு இருக்கும் தொண்டர்கள் பரபரப்புடன் தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டு  இவரின் பேச்சை அமைதியாக கேட்க இவர் பக்கம் திரும்புவார்கள்.   தக  தக என வண்ண சிறு மின் விளக்குகள் உதய சூரியனாகவும், கலைஞராகவும், கருப்பு சிவப்பில்  மின்னிக்கொண்டு இருக்கும்.  இப்படி  கலைஞரை முதன்முதலிலில் பார்த்த இடம்  ஈரோடு வ. ஊ. சி. திடலில் தான். பெரும்பாலான அரசியல் கூட்டம் அங்குதான் நடைபெறும்.   சுமார் ஒரு நாற்பது, ஐம்பது நிமிடங்கள் குறிப்புகளை வைத்துக்கொண்டு, புள்ளி விவரங்களுடன் இடைவிடாமல் அடுக்குமொழியில் பேசிக்கொண்டே செல்வார்.   

தேர்தல் பிரசாரத்திற்கு ஈரோடு வருகிறார் என்றால் எங்கள் ஊரின் உடன்பிறப்புகள் பரபரப்பாவர்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக அண்ணணின் கடையில் கலைஞரின் கூட்டம் பற்றிய பேச்சாகவே இருக்கும்.  'நாங்கல்லாம்'  என ஆரம்பித்து வெறும் "டீ" குடித்துவிட்டு கட்சிக்கு கொடி நட்ட வரலாரை, அதற்கும் முந்தைய தலைமுறையினர் கூறிவிட்டு இவர்களை உசுப்பேத்திவிட்டு செல்வர்.  'அம்மா கட்சிலயாவது ஏதாவது குடுப்பாங்க, நம்ம கூட்டத்துக்குப்போனா நம்ம கட்சில  என்ன தராங்க' என்று சொல்லிக்கொண்டே கூட்டத்துக்கு செல்வார்கள் கழக உடன்பிறப்புகள்.  

அப்பா ஒரு தீவிரமான கலைஞரின் விசிறி.   2011 க்கான தேர்தலில் "அத்தனை ஊழல் பண்ணிருக்காங்க அவங்களுக்கு போடாதிங்க" என்று காலில் விழாத குறையாக  கெஞ்சியும்,  "கலைஞர தவிர வேற யாருக்கும் போட மனசு வரலை" என மீண்டும் அவருக்கே வாக்களித்துவிட்டு  வந்து கூறியவர்.   அவரைப்போலத்தான் ஊர் பக்கம் பலரும், அதுதான் கலைஞரின் சொத்து, திமுகவின் வாக்கு வங்கி.   மதிமுக துவங்கிய புதிதிலும் இது போன்ற பேச்சுக்களை கேட்டுள்ளேன். மதிமுகவில் இருப்பவர்களே கலைஞருக்கு வாக்களித்ததை இப்படி கூறுவார்கள்.   "சூரியனப் பார்த்தா, கை  அங்க தானா போகுதப்பா" . 

ஆறாம் வகுப்பில் பிடித்தமான ஒரு பிரிவேளை ஓவியம்.  ஓவியம் கிறுக்கி, பழகிக்கொண்டு இருந்த காலங்களில், ஒருநாள் ஏனோ உதயசூரியனைப்போட்டு அப்பாவிடம் காட்டி நற்பெயர் எடுக்க முற்பட்டேன்.     என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கலைஞரைக் கொண்டாடியபோது நானும்தெரிந்தும் தெரியாமல்  அவரையே ஆதரிக்க ஆரம்பித்திருந்தேன்.  

1996ல் தான் முதல் முறையாக ஓட்டுரிமை.   அந்த சமயம் தான் பாட்ஷா விழாவில் ஜெ வை எதிர்த்து தலைவர் ரஜினியின் வாய்ஸ்.   பரபரப்பானது தேர்தல்.  அந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிபார்க்கும் வரலாற்று நிகழ்வாக எங்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1033 வேட்பாளர்கள் விவசாய சங்கம் சார்பில் நிறுத்தப்பட்டார்கள்.   அப்போது  +2 தேர்வு சமயம்,  ஆயினும் "ரஜினி-கலைஞர்-மூப்பனார்" என  இவர்களைப்பற்றித்தான் எங்களின் நட்புவட்டம் சிலாகித்துப் பேசிக்கொண்டு இருக்கும். 
எங்கள் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒரு மாதம்  தள்ளிவைக்கப்பட்டு,  புத்தகம் போடுமளவு சென்றது.  அந்த வருடம் பெருவாரியாக திமுக-தமாக வெற்றி பெற்றிருந்தது. 

2006-2011 காலத்தில் சிறு குறுநில மன்னர்கள் துணையுடன்,  குடும்ப ஆதிக்கத்தினால் ஊழல்,  இலங்கை படுகொலைகளில் இவரின் செயல்பாடு,  கட்சிக்காரர்களின் கல்லூரிகள், கொள்கையிலிருந்து வழுவல்  என்று   இவரின்  வரலாற்றில் பெரும் கறை.  அந்த ஐந்து வருடம்  தடம்புரண்டு  போகாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேறுவிதமாக, மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கும். 

இன்று, நின்று நிதானமாக  அவர் செய்த ஊழலைத்தாண்டி யோசித்துப் பார்த்தால், என் ஊரிலிருந்தும்,  நண்பர்கள் வட்டங்களில் இருந்தும்,  சொந்தங்களில் இருந்தும், அன்று திமுக கொடியை நட்டு கதை பேசிக்கொண்டிருந்தோரின் பிள்ளைகள், பேரன்கள் என பலர் அடைந்திருக்கும் பொருளாதார இடம் என்பது  அவரவர்களுக்கே தெரியாமல் கலைஞரின் சமூக நீதியால் கல்லூரிகளில்  இட  ஒதுக்கீட்டின் மூலம்  கிடைத்த இடங்கள் ஒரு மிக முக்கிய காரணம்.   கிராமங்களில் இருந்தவர்களை மேற்படிப்பு படிக்கவிட்டு  விடுதலையாக்கியதில் பெரும்பங்கு அவரையே சாரும்.     கிராமங்களில்  கல்விக்கூடங்களை மீண்டும் திறந்து கல்வியின் விதைகளை ஊன்றியவர் காமராசர் எனில்,  பள்ளியிலிருந்து   அனைத்து விதமான  கல்லூரிகளுக்கும் சென்று படிக்கும் ஆகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதில்  இவர் ஒரு சரித்திர நாயகன்.   இன்றும் தமிழகத்தின்  மிக முக்கியமான கல்லூரிகளில் அனைத்து மக்களும் சேரமுடிகிறதென்றால் அது அவரின் சாதனை.  இந்த பின்புலத்திலிருந்து வந்தவர்கள் எவ்வளவு கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்பதை சொல்ல தேவையில்லை, ஏனெனில் அது அவர்களின்  ஒட்டு மொத்த  தலைமுறையின் கனவு.  இப்பொழுது நீட் எங்களுக்கு வேண்டாம் என போராடுவதன் நீட்சியும் இதுதான். 

படித்துவிட்டு, வேலையின் பொருட்டு சொந்த ஊரை, சொந்த மக்களை விட்டு வெகுதூரம் விட்டு விலகி இருந்தாலும், இந்த வளர்ச்சி எனும் வீக்கம் தேவையா  என்று ஒருபுறம் நினைத்தாலும், கள யதார்த்தம் வேறு.  

இன்றைய நிலையில் தொடர்ந்து  தொலைநோக்குடன் வழி நடத்தும் தலைவர்கள் இல்லை என்பது தான் வேதனை.    நீங்கள் போட்டுக்கொடுத்த வழியில் நடக்க உடன்பிறப்புகள் மட்டுமல்ல உங்களால் பயனடைந்த ஒரு கூட்டம் உலகமெங்கும் விரவிக் கடக்கிறது. 

#சென்றுவாதலைவா

#கலைஞர்

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...