Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Saturday, August 01, 2020

ஊரும் நீரும்




இன்று நாம் குடிக்கும் நீர் RO மூலம் சுத்தப்படுத்தி சுகாதாரமான நீரை குடிக்கிறோம். கடைகளில் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துகிறோம். இப்பொழுது எங்கள் ஊருக்கு சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர் பல மைல் கடந்து தெருமுனைகளுக்கும், சிலரின் வீடுகளுக்குமே வருகிறது. தண்ணீரை வியாபாரமாக்கி உள்ளார்கள் எனும் சர்ச்சைக்கு செல்லவில்லை. அதேபோல காவிரியில் கலக்கும் கழிவுகளுக்கும் செல்லவில்லை. அதில் இருக்கும் சில பிரச்சினைகள் களையப்பட வேண்டும்.  அது பலரும் பேசிய விஷயம். ஆனால் இந்த சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கும் இந்த சுகாதாரமான நிலைமைக்கு எப்படி வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இந்த கட்டுரை.


எங்கள் ஊரின் ஆரம்பப் பள்ளியின் அருகில் ஒரு அமுக்கு பைப் இருக்கும். அது தான் எங்கள் ஊருக்கு வந்த முதல் அடி பம்ப். அதுவரையில் ஊரின் மத்தியில் இருந்த கிணற்றில் இருந்து மட்டுமே தண்ணீர் சேந்தி எடுத்துச் செல்வார்கள். அந்த கிணற்றை சுற்றியும் வட்டமாக இடுப்புயர சுவர். அதன் மேல் சம இடைவெளியில் மூன்று சுவர் தடிமனுக்கு தூண்கள். அதன் மேல் மூன்று பக்கம் இரும்பில் விட்டம். ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் முக்கோணமாக இருக்கும். ஒவ்வொரு விட்டத்தின் நடுவில் உருளை இருக்கும். அதில் கயிறு போட்டு பக்கெட் ஒன்றை கட்டி, அதனைக் கிணற்றில் விட்டு தண்ணீர் இறைப்பார்கள். சிலர் 'அட பாக்கெட் பக்கெட்டா ஊத்தி என்னைக்கு நாம்பறது" என குடங்களையே கயிற்றில் கட்டி ஒரே இழுப்பில் தண்ணீர் கிணற்றில் இருந்து எடுத்துவிடுவார்கள். ஊர்க்காரர்கள் புரளி பேசும் இடம். சைட் அடிக்க கூடுமிடமாகவும் இருக்கும். இது தான் ஒட்டுமொத்த ஊரின் நல்ல குடிநீருக்கான மையம்.


அப்பாவின் காலத்தில் அந்த ஊர்க்கிணறும் இல்லை. ஊர்ப் பெரியவர்களின் வீடுகளில் கிணறு இருக்குமாம். அதுவும் மூன்றே மூன்று.  அதில் பள்ளிக்கு செல்லும்முன் தண்ணீர் பல நடை மோந்து ஊற்றி வைக்க வேண்டும். பெரும்பாலும் அந்த கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டால், காட்டுக்குள் இருக்கும் செம்மண்குழி கிணற்றில் எடுப்பார்களாம். 


 அடி பம்ப் வந்தவுடன் நல்ல குடிநீருக்கான மையமாக இந்த பம்ப் மாறியிருந்தது. சைக்கிள்களில் இருபுறமும் குடங்களைக் கட்டிக்கொண்டு பலரும் எடுத்துச் செல்வார்கள். நாங்கள் இரண்டு பேர் சேர்ந்து இதனை வேகமாக அழுத்துவது ஒரு விளையாட்டு. அந்த பம்பை அடைத்து வேக வேகமாக அழுத்தி சுற்றிலும் தண்ணீரை பீச்சி அடித்து ட்ரவுசர் சட்டைகளை நனைத்து ஜாலியாக நடைபெறும் தினசரி சம்பவம். அதிலும் யாரும் இல்லாதபோது நாமே அடித்துவிட்டு வேகமாக ஓடிவந்து தண்ணீரைக் குடிக்க வேண்டும். 


தென்னை மரங்களை சுற்றி ஒரு பாத்தி கட்டி அதனை நிரப்புவது தான் கடைசி பிரிவேளையில் நடக்கும்.  கிட்டத்தட்ட அதில் தண்ணீர் நிரம்பும்  வரை நீர் எடுத்திருப்போம்.  பள்ளி சுற்றிலும் இருக்கும்  வேலிக்கும் தண்ணீரை ஊற்றவேண்டும். பூந்தோட்ட காவல்காரன் வந்த சமயம். அந்தோணி வண்டி என்று இரு நண்பர்கள் தண்ணீரை வேகமாக எடுத்து வருவார்கள். அடி பைப்பிலிருந்து சிறிய மேடு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக ஏறி பள்ளிக்கு கொண்டு சென்று மரங்களுக்கு ஊற்ற வேண்டும். இன்று பள்ளி சுற்றுப்புற சுவரோடு, கான்க்ரீட் காட்டிடத்துடன் அழகாக உள்ளது.


அந்த பைப்பில் தண்ணீர் வரும் தலைகீழான L வடிவ பைப்பில் பாக்கெட் மாட்டி தண்ணீர் பிடிப்போம்.  ஒருமுறை பிடிக்கும்பொழுது கீழே விழுந்து பெருவிரல் நசுங்கி,  பக்கத்தில் இருந்த அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் தான் கட்டு போட்டுவிட்டு இருந்தார்கள்.  இப்பொழுது அந்த பம்பில் இருந்து மோட்டர் வைத்து மேல்நிலைத்தொட்டி கட்டிவிட்டார்கள். அதன் வழியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு வீதிக்கும் தண்ணீர் வரும். பத்தடி தொலைவில் சென்று பிடித்துக்கொள்ளலாம்.  அதன் அருகில் காவேரி நீர் பைப்பும் இருக்கும்.



இன்று போர் போட்டு் பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து தத்தளிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் இந்த அடி பம்புகளின் வரலாறு எத்தனை நெடியது. நீர் சம்பந்தமான நோய்களை தீர்த்ததில் பெரும் பங்கு வகித்துள்ளது.



Guinea Worm Water Based Disease என்ற ஒரு நோயை உலகம் முழுவதும் தீர்க்க உலக சுகாதார நிறுவனம் நிதியை ஒதுக்குகிறது. 1980 இந்த திட்டம் ஒருங்கிணைத்த இந்தியாவில் ஆரம்பிக்கிறது. பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருந்த தமிழகத்தில் நாலே வருடங்களில், நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்துள்ளது.


லிங்க் https://ncdc.gov.in/index1.php?lang=1&level=1&sublinkid=142&lid=73


இது என்ன நோய்? சேந்து கிணறு அமைப்புக்கு முன்பாக வெட்டப்பட்ட கிணறுகளில் படி வைத்து குடிநீரை எடுத்து வந்துள்ளார்கள். இன்றும் ராஜஸ்தானில் படிவைத்த பிரமாண்ட கிணறுகள் ஒரு வரலாற்று ஆவணம் போல அழகாக இருக்கும்.



குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தி நோய் இருப்பவர்கள் மூலம் அந்த  லார்வா குடிநீரில் கலந்துவிடும். L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல், காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல். இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழு பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?  குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் லார்வா செல்லுவதை தடுக்க ஆழ் துளை கிணறுகளை அமைத்து கைபம்புகளை அமைத்தல் தான். அதன்பின் தண்ணீரை காய்ச்சி குடித்தல்.



இந்த பிரச்சினை தமிழ் நாட்டில் பெரும்பாலும் தஞ்சை கும்பகோணம் பகுதிகளில் இருந்துள்ளது. குளம் அதிகமாக இருந்த இடங்கள் அவை.




நாடு முழுவதும் சுகாதாரத்திற்கான சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு "நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம்" தான். இதற்கான முக்கிய விஷயமாக கருதுவது நமது அரசு ஆரம்ப சுகாதார அமைப்பின் கட்டுமானம். அதனால் தான் நான்கு வருடத்தில் அதனை முடிக்க முடிந்துள்ளது.


இந்த நோய் புத்தகத்தில் கூறப்பட்ட ஒன்று,  அது தவிர நீரினால் பரவும் காலரா, டயறியா போன்றவை எல்லாம் இன்று  இல்லை. இன்று  கொரோனாவுக்கு போராடும் நிலையில் அதற்கான கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்


நான் அங்கு படித்துக் கொண்டு இருந்த போதுதான் , பள்ளியை ஒட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்கள். புதிதாய் ஒரு கட்டிடம் இன்றும் அன்று காலை திறப்பு விழாவில் போது இட்ட கேசரி, தக்காளி சோறும் தயிர் வெங்காயமும் நினைவில் உள்ளது. அப்பொழுதெல்லாம் காலை நடக்கும் புதுமனை புகுவிழாக்களில் இந்த மெனுதான். சற்று வசதி உள்ளவர்கள் மெதுவடையும் போடுவார்கள்.


ஆரம்ப காலத்தில் இவை வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்து கொண்டுள்ளது. சில பல சமூகப் பிரச்சினைகளும் இந்த மருத்துவமனையில் தங்கி வேலை பார்க்கத்தவர்களிடம் நடந்தும் உள்ளது அதெல்லாம் வேறு விசயம். இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையம் கிட்டத்தட்ட 5000 மக்களுக்கானதாக இருந்துள்ளது. இவை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவர்களின் முக்கிய வேலை வருமுன் காப்போம் என்பது. அதாவது இவர்களின் பணி அரசின் சுகாதார திட்டங்களை கடைக்கோடி கிராமம் வரை சேர்ப்பது . குடும்ப நலம், தடுப்பூசி, தொழுநோய் தடுப்பு, பள்ளி சிறுவர்களின் நலம் , தொற்று பரவாமல் தடுப்பது என்கிறார் இந்த அமைப்பில் தனது பணியை ஆரம்பித்து அதில் ஓய்வு பெற்ற என் பக்கத்துக்கு ஊர் மாமா.   அவரிடம் பேசியபோது இந்த சுகாதார அமைப்பை உருவாக்க அவர்களின் போராட்டங்களை கூறினார்



இவர்கள் டீம் தான் பள்ளிக்கு அம்மை தடுப்பூசி போட வருவார்கள். இவர்களின் ஜீப் வந்ததும், 'அய்யயோ இன்னிக்கு ஊசி போட்டு் விடுவார்களோ' என பயந்ததும் உண்டு. ஒரு வழியாக அழுது  புரண்டு போட்டுக்கொண்டால்  ஊசி போட்ட இடம் வீங்கிக் கொள்ளும், அன்று வெந்நீர் ஒத்தடம் கொடுப்பார்கள்.



வந்ததும் காப்போம் என்பது அரசு மருத்துவமனையின் கடமை. ஆரம்ப துணை சுகாதார நிலையித்தின் வேலை வருமுன் காப்பது.  அப்பொழுதெல்லாம களத்தில் அதிகமாக வேலை செய்தார்களாம். இப்பொழுது வேலை செய்ததை எழுதி வைப்பதில் உள்ளதாக கூறினார். 

அந்த ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் 85களில்  கட்ட  ஊரில் பேச்சுவார்த்தை நடத்தி, இடம் வாங்கி கட்டி உள்ளார்கள்.  இந்த அமைப்பு வியப்பில் ஆழ்த்திக்கொண்டு உள்ளது.  குடிநீர் சுகாதாரத்தில் எங்கிருந்து எங்கு வந்துள்ளோம் என்பதுவும் சாதனை தான்.   



Emotional intelligence கற்போம்...

சென்ற 20ம் நூற்றாண்டு வரை IQ என்று சொல்லக்கூடிய intelligence quotient (நுண்ணறிவு)  மூளை சார்ந்த, திறன் சார்ந்த விஷயங்களுக்கும் மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்தது.  அதன் அடிப்படையில் தான் இந்த ரேங்க் சிஸ்டம் உருவாக்கப்பட்டு இருக்கலாம்.  நாம் இன்னும் இதனை இருக்கப் பற்றிக்கொண்டு இருக்க, இன்று பல வளர்ந்த நாடுகளும் இந்த ரேங்கிங் முறையில் இருந்து வெளியேறி வருகிறார்கள் என்பது வேறு விஷயம். 

 Emotional intelligence - உணர்வுசார் நுண்ணறிவு  இந்த நூற்றாண்டின்  கண்டுபிடிப்பு.  உலக பொருளாதார நிறுவனம் வரும் காலங்களில், ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு EI  ஸ்பெசலிஸ்ட்டின் தேவை கண்டிப்பாக  இருக்கலாம் என்கிறது.  கூடவே இப்பொழுது உயர் பதவியில் இருப்பவர்கள் EI அதிகம் உள்ளவர்கள் எனபதை கோடிட்டுக் காட்டுகிறது.   IQ  நிறைய இருப்பர்களாக இருந்தாலும், EQ  மட்டுமே அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அமர்த்தி வைக்கிறதாம்.    IQ  மட்டுமே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் தேங்கி விடுகிறார்கள். 


"எப்பொழுதெல்லாம் உணர்ச்சி வயப்படுகிறோமோ, அப்பொழுது நமது IQ ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்ளும்" என்கிறார் Daniel  Goleman.   இவர் தான் உணர்வுசார் நுண்ணறிவின் தந்தை.   இவரது Emotional intelligence புத்தகம் 1995ல் வெளிவந்துள்ளது. 

உணர்வுசார் நுண்ணறிவு எந்த கால கட்டத்திலும், வயதிலும் அதனை வளர்த்துக்கொள்ளலாம்.  வேறு எந்தப் பின்னணியும் தேவை இல்லை.  EIக்காக  ஐந்து முக்கியக் குறிப்புகளை கூறுகிறார்.   இவை நமக்கு வேறு விதமான பெயர்களில், வேறு வேறு தளங்களில் சொல்லப்பட்டும் இருக்கலாம்

Self-awareness - நம்மை அறிந்து கொள்வது - நான் யார்
Self-regulation - நம்மை முறைப்படுத்திக் கொள்வது - ஒழுக்கம்
Motivation - நமக்கான உந்து சக்தி - முனைப்பு
Empathy -  மற்றவர்களைப் புரிந்து கொள்வது  - 'அனுசரிச்சு போ'
Social skills - மற்றவர்களிடம் எப்படி உரையாடுகிறோம் என்பது - 'இனிய உளவாக இன்னாத'

இப்பொழுது இதனைப்பற்றி விளக்கி கூறப்போவதில்லை. 

IQவை அப்படியே ப்ரோக்ராம் செய்தால் அது "ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" (AI).   பல  ரோபோக்களை உருவாக்கி உலவவிட முடியும்.  மனிதன் செய்ய முடியாதவற்றையும் ரோபோக்கள் கனகச்சிதமாக செய்யும்.   IQ வழி வந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் AI கும்,  IQ  மட்டுமே நிறைந்த புத்திகூர்மை அதிகம் வாய்ந்த மனிதர்களுக்கும் என்ன வித்யாசம்?     இங்கே தான் இந்த 'உணர்வு சார்ந்த நுண்ணறிவின்' தேவை மனிதனை இயல்பான, எதார்த்தமான மனிதன் ஆக்குகிறது.  ரோபோவிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவது உணர்வு தான்.

AI தற்போதைய நிலையில் திரும்ப திரும்ப மனிதன் செய்யும் வேலைகளை செய்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள்.   IBM’s Watson  ரோபோ இப்பொழுதே மருத்துவ துறையில் பல சிக்கலான பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு இருக்கிறது.    ரோபோ திரைப்படத்தில் சிட்டி ரோபோ காதல் வயப்படும்.  அழகாக ஐஸ்வர்யா ராயிடம் பூ கொடுத்து காதல் செய்யும்.  மனிதன் செய்யும் தவறை இது மிக நேர்த்தியாக தவறில்லாமல் செய்யும்.      இந்த உணர்வு பூர்வமான மனிதன் போன்றவரைத்தான் ஐஸ்வர்யா ராயும் விரும்புவார். எனினும் ரோபோ என கூறி ரோபோவை கைவிட்டுவிடுவார்.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள், உணர்வுப்பூர்வமானதாக இல்லாவிடினும், வருங்காலத்தில் ரோபோவின் வில்லனைப்போல அதுவும் யோசிக்க ஆரம்பிக்கலாம். 

படையப்பாவில்  ரஜினிகாந்த் , சௌந்தர்யாவிடம் காதலை கூற செல்வார்.  சௌந்தர்யாவை  பார்த்து படபடப்பாக உளறுவார்.   அதுதான் ஒரு சாதாரண மனிதர் செய்வது.  அதே படத்தில் ரஜினி, ரம்யாகிருஷ்ணனிடம் பஞ்ச் பேசும்போது படபடப்பு  இல்லாமல் தெளிவாக பேசுவார்.   இது உணர்வினை முறைப்படுத்திய மனிதன் செய்வது.

திரைப்படங்ககள் என்றாலும், இந்த ஹீரோக்களின் பிம்பங்கள் கட்டமைக்கப்படுவது உணர்வுகளின் மீது.   அவர் கோபம் தெறிக்க பேசும் போது நாமும் கோபம் அடைய நேரிடும், அவர்கள் காமெடி செய்யும்போது நாமும்.   அந்த உணர்வுகளைக் பார்த்துக்கொண்டு இருக்கும், மனிதர்களிடம் கடத்துவது தான் இயக்குனரின் வெற்றி.   அந்த உணர்வுகளுக்கு ஆட்படுபவர்கள் அதற்கான செயல்களில் இறங்குகிறார்கள்.     

சற்று நமது செய்தி தொலைக்காட்சிகளின் விவாதங்களைப் பார்த்தால் சில விஷயம் புரியும்.  சிலர் ஆணித்தரமாக கருத்தை ஒட்டி மட்டுமே பேசுவார்கள்.   எதிர்தரப்பு என்ன மாதிரியான கேள்வியை எழுப்பினாலும், கோபம் வரவே வராது.   பொறுமையாக நிதானமாக பேசுவார்கள்.   இன்னும் சிலர் ஒரு சிறிய கேள்விக்கே முதல்வன் திரைப்படத்தில் வரும் ரகுவரன்-அர்ஜுன் பேட்டி காட்சி போல கோபம் அடைந்து விடுவார்கள்.   இங்கு நான் உணர்வினை பற்றி மட்டுமே பேசுகிறேன்.  அங்கு பேசப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை அல்ல.  நிறுத்தி நிதானமாக பேசுபர்கள் பொய்த்தகவலையும் கூறலாம், கோபமாக பேசுபவர்கள் உண்மையாகவும்  இருக்கலாம்.

ஒரு மிகச் சாதாரணமான சொல் நம்மை எவ்வளவு காயப்படுத்தி விடுகிறது.  அல்லது ஒரு தவறான சொல் பிரயோகம், நம்மை எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக்கி  விடுகிறது.   அந்த சொல் அதற்கான எதிர்வினை இவை யாவும் என்ன செய்யும் என்பதை இன்றைய சமூக வலைத்தளங்களில் காணலாம்.     ஒரு பைசாவுக்கு உபயோகமில்லாதவை ட்ரெண்டிங் அடிக்கும், வனிதா-லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சண்டைகள், மகேஷ் பாபு பிறந்தநாள், அஜீத் விஜய் படத்தின் வசூல்,  போன்ற விஷயங்கள்.     அது ஒருவகையில் அதற்குள் நம்மை இழுத்து மன அழுத்தத்தை கூட்டி தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்கி விடுகிறது. நல்ல விஷயங்களுக்காக வரும் ட்ரெண்டிங் கூட அதில் நாம் பங்கேற்றுவிட்டு நமது வேலையைப் பார்க்க சென்றுவிடலாம்.   ஆனால் அதற்குள்ளேயே முழ்கி கிடப்பது தான் பிரச்சினை.   அதுவும் சில நேரங்களில் சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் சிலர் தீர்ப்பு எழுதி விடுவதும் உண்டு.

இந்த உணர்வுகள் நம்மை எதுவும் செய்யாமல் இருக்க, அதே மனநிலையில் சுற்றிக்கொண்டு இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

லண்டனில் இருந்தபோது செமினாரில் கலந்துகொள்ள நேரிட்டது.  அந்த செமினாரை  மில்லியனர் மாங்க்  என்று சொல்லக்கூடிய Eric Ho  என்பவர் நடத்தினார்.    ஒரு மணி நேரம் தான் பயிற்சி.  ஆரம்பித்தவுடன்  "டேக் எ டீப் ப்ரீத்" என்றார்.  மூச்சை இழுத்ததும் சில நொடிகளுக்குப்பின் "அவுட்" என்றார்.      அவருடைய பேச்சுக்கு இடையே,  பத்து நிமிடங்களுக்கு  ஒருமுறை பங்குபெற்றவர்களை செய்ய சொல்லிக்கொண்டே இருந்தார்.   அதேபோல ஒவ்வொருவரும் மூச்சை இழுத்து வெளியே விட்டனர்.   அதற்கான விளக்கத்தையும்  கொடுத்தார்.  "நீங்கள் ஒவ்வொரு முறை மூச்சை வேகமாக இழுத்து வெளியில் விடும்போது,  உங்கள் மூளையில்  இருக்கும் மேகம் விலகி விடுகிறது. சிந்தனையை ஒருமுகப் படுத்த முடியும்." என்றார்   அதாவது மொக்கத்தனமான சிந்தனைகள் வெளியேறும். வேறு ஒரு பக்கம் நமது மைண்ட் டீ குடிக்கச் சென்றிருந்தால் தரதரவென கட்டி இழுத்து அந்த இடத்திற்கு கொண்டு வரமுடியும் என்கிறார்.  அது இயல்பாகவே  நமக்கு நடக்கும்.  நாம் ஒரு சவாலான வேலையை  செய்து முடித்து பெருமூச்சு விடுவது ஒருவித ஆசுவாசம் அளிக்கும். 

தொடர்ந்து படிக்கும் முன்பு இப்ப நீங்க ஒருமுறை செய்து பாருங்கள்.   எப்படி உணர்கிறீர்கள் ?

அதேபோல இன்னுமொரு கார்ப்பரேட் பயிற்சின் போதும் மூச்சு பயிற்சியை வலியுறுத்தினார்கள்.   தினமும் மூன்றுமுறை சில நிமிடங்கள் மூச்சை இழுத்து விட கூறினார்கள்.  காலையில் அலுவலகம் சென்றதும் ஒருமுறை.  ட்ராபிக்கிலிருந்து, பேருந்து நெரிசல்களில் சிக்கியும்  ஒருவழியாக அலுவலகம் சென்று  அவரவர் இருக்கையில் அமரும்போது இயல்பாகவே ஒரு பெருமூச்சு விட்டு நம்மை இலகுவாக்கிக் கொள்வோம்.  இதனை மூச்சு பயிற்சியாக மாற்றச் சொல்கிறார்கள்.    மறுமுறை அலுவலகம் முடிந்து வீடு சென்றதும் செய்யவேண்டும். அலுவலக டென்ஷன்களை வீடுகளில் காட்டாமல் இருப்பதற்கு இது உதவும்.   தூங்கச் செல்லும்போது மூன்றாம் முறை.   அன்றைய நாள் எப்படியாக கழிந்திருந்தாலும் நிம்மதியான உறக்கம் அடைவதற்கு.  இன்றைய கரனோகாலத்தில் WFH  இருப்பதில் முதல் இரண்டும் நடக்க சாத்தியமில்லை.  ஆனால் மூச்சு பயிற்சி  உதவும். 

இந்த மூச்சு பயிற்சிகளை  எனக்கென்னவோ நமது ஊரில் சம்மனங்கால் போட்டு, கை விரல்களை அபிநயம் பிடித்து யோகா, ப்ராணாயாயம்  என்ற ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைத்துளார்கள் என நினைக்கிறேன்.    மேலே சொன்ன மூச்சுப்பயிற்சிகள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு செய்தது தான்.   டேனியல் கோல்மேன் மூச்சுப்பயிற்சி என்பது நம்மை முறைப்படுத்திக் கொள்வது என வலியுறுத்துகிறார். மேற்கத்திய நாடுகள் இந்த பர்னிச்சரை அழகாக உடைத்து மக்களிடம் சேர்த்து உள்ளார்கள்.     

அடுத்தாக ஒரு நடை வெளியே உலவி வரலாம்.  வெளியில் இயற்கையும், மனிதர்களும்  கற்றுக்கொடுக்கும் பாடம் அலாதியானது.

அடுத்தாதாக multi-tasking  அவ்வளவாக வேலை  செய்வதில்லை என்கிறார்.  ஒரு வேலையின்போது இடையில் நிறுத்தி fb பக்கம் அல்லது ஒரு whatsapp பார்ப்பது அந்த வேலையை செய்வதில் தொடர்ந்து இருக்கும் ஈடுபாட்டை  குறைக்கிறதாம்.     

மற்றவர்களிடம் Have a nice day ன்னு சொல்றதுக்கு பதிலா,  Make your day ன்னு சொல்ல சொல்கிறார்.
அதையே நமக்கு நாமே சொல்லிக்கொண்டால்
"Make my day".
கிட்டத்தட்ட அஜீத் படத்தில் வரும் ஒரு பஞ்ச்..."ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும் நானா செதுக்குனது...". 
நாமே செதுக்குவோம் நம்முடைய தினத்தை...
Make your day

இன்றைய கொரோன காலம் பல திருப்பங்களை நிகழ்த்திக்கொண்டு உள்ளது.  அதில் ஒன்று வேகமாக மனிதர்களை தொழில்நுட்பத்தின் பக்கமாக திருப்பி விட்டுள்ளது.   நிறுவனத்திற்கு வரும் காலத்தில் AI  மற்றும் EI இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல தேவை.     AI  போன்ற அட்வான்ஸஸ்ட் டெக்னாலஜி புகுத்தாத நிறுவனம் வளர முடியாது.  இதேபோல வழி  நடத்துபவர்கள் EI அதிகம் இருப்பவராக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பாதையில் செல்ல முடியும்.  இது நமக்கும்  மனிதர்களுக்கும் பொருந்தும்.  EI கற்போம்.

Monday, June 01, 2020

தற்சார்பு எனப்படுவது யாதெனின்


என்பதுகளின் இறுதியில் ஒட்டகம் மார்க் சீயக்காய் தூள், காந்தி மார்க் சீயக்காய்த்தூள் மிக அதிகமாக விற்பனை ஆகும்.  அதே போல்தான் கோபால் பல்பொடி, பயோரியா பல்பொடி போன்றவையும். சோப்பு என்று பார்த்தால் அது ஹமாம்.  துணி துவைக்க உள்ளூர் சோப்பு தான், டிஸ்கவுண்ட் போலவே இருக்கும்.  அதன் பிறகு 501 சக்கை போடு போட்டது.  அப்பொழுது 501 மற்றும் ஹமாம் இரண்டும் டாடா நிறுவனத்திடம் இருந்தது.  ஹமாம் ஐந்து ரூபாய்.   இந்த இரண்டு சோப்புகளும் பெட்டியில் வாங்குவோம்.  அதனை எடுத்து அழகாக அடுக்கி வைப்பது என் பொறுப்பு.  அதேபோல கலர் குடிப்பதற்கும் குண்டு அழுத்தி உள்ளே விழ  வைக்கும் கோலி  சோடா.  சிகப்பு கலர், மஞ்சள் கலரும்  இருக்கும்.  பிறகு 55 எனப்படும் பன்னீர் சோடா வகை பிரபலம்.  மொடக்குறிச்சியில் அப்பொழுது ஒரு சோப்பு அலகு யூனிட் எனும் கதர் சோப் தொழிற்சாலையும் இருந்தது.    

90-களின் ஆரம்பமாக இருக்கலாம்.    அந்த நேரங்களில் தான் பிரபலமானது  சிக், மீரா  ஷாம்புகள். 
 ஒட்டகம் மார்க் சீயக்காய் தூள், காந்தி மார்க் சீயக்காய்த்தூள் விற்பனை குறைய ஆரம்பித்தது.   குளோசப், மற்றும் கோல்கெட்  பேஸ்ட் விற்பனை அதிகமான நேரம் கோபால் பல்பொடி இறங்கு முகத்தை அடைந்தது.    கூடவே ஹமாம் மற்றும் 501 ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்திற்கு கை மாறியது.   அப்பா கூறுவார்  லாபம் முன்பு போல் இல்லை என.   பெப்சி வர ஆரம்பித்தது உள்ளூர் கோலி  சோடா குறைய ஆரம்பித்தது.   

அப்பொழுது ஊரில் ஒருவர் வந்து சுதேசி இயக்க பொருள்களை தான் நாம் பயன்படுத்த வேண்டும், அப்பொழுது தான் நம் நாடு நன்றாக இருக்கும் என்பார் என்று கூறிவிட்டு செல்வார்.    அதுநாள்  வரையிலும் கடையில் என்ன பொருட்கள் புதிதாக வந்தாலும் அதனை பயன்படுத்த முயற்சிப்பேன்.  பியர்ஸ் சோப்பெல்லாம் அந்த வகையில் போட்டது தான்.  அவரின் மீது இருந்த மதிப்பு காரணமாக, முடிந்த அளவு நமது ஊர்  நிறுவன பொருட்களை மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தேன்.  மெடிமிக்ஸ் க்கும், மீராவிற்கும் 
 மாறினேன்.   அவ்வப்போது இந்த எண்ணம் தோன்றி மறையும்.   அவ்வப்போது இதில் மாற்றமும் வரும்

இப்பொழுது கூட அந்த சீவக்காய் மற்றும் அரப்புத்தூள்களை வாங்கி தலையை அலசிக் கொள்ளலாம் என்று நமது குளிக்கும் அறையில் டைல்ஸ் முழுக்க தெரிந்து விடுகின்றது.  அதற்கேற்ப நம் அளவுகடந்த தண்ணீரையும் வீண் செய்ய வேண்டியுள்ளது 

வேற்று நாட்டு நிறுவனத்திற்கு நாம் வேலை செய்ய ஆரம்பிக்கும் அந்த நொடியில், தற்சார்பு கொள்கை  முடிந்து போய் விடுகின்றது.   இன்று நமது நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்கினாலும்,  அதன் பங்குதாரர்கள் யாரேனும் ஒருவர் வெளிநாட்டில் இருக்கலாம்.  

அப்படியானால் தற்சார்பு என்பது எது?  
தற்சார்பு என்பது எழுபது என்பதுகளின் காலத்திற்கு செல்வது மட்டுமாக இருக்காது. அந்த பொருளாதாரத்தை கடந்து  வந்து வெகு காலம் ஆகிவிட்டது என நினைக்கிறேன். காலத்துக்கு காலம் அதுவும் மாறி மாறித்  தான் வந்திருக்கும்.   கோபால் பல்பொடிக்கு முன்னர் வேப்பங் குச்சியை வைத்து விளக்குவது  தற்சார்பாக இருந்திருக்கலாம்.


வால்காவிலிருந்து கங்கை வரை எனும் புத்தகத்தில் ஆரம்பகால மனிதர்கள் பற்றி குறிப்பிடுவார்கள். 

ரஸ்யாவின் வால்கா நதியிலிருந்து  கங்கை வரை மனிதர்கள்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக புலம் பெயர்ந்து வந்த கதை.  புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காடுகளில்  இருந்தனர். அந்தக் காடுகளில் விலங்குகளுடன், விலங்குகளாக மனித இனம் திரிந்தது. அவர்களுக்குள் மாமிசத்திற்கு சண்டை நடக்கும்.     அங்கு கிடைத்த காய்களையும் பழங்களையும், அங்கிருக்கிற விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு  இருந்ததை  தற்சார்பு என குறிக்கலாம்.

90 க்கு பிறகு பொருளாதார தாராள மயமாக்கல் ரொம்பத் தீவிரமா நடந்த காலகட்டங்கள் மிக முக்கியமானவை.  உலகதோடு ஒட்டி உறவாட ஆரம்பித்து விட்டோம்.    உலகமயமாக்களுக்கு  முன் எப்படி இருந்தது.   இந்தியா முழுக்க இருந்த மக்கள் அங்கங்கு  அவரவர்  கிராமங்களிலும் அவரவர்  ஊர்ளிலும்  இருந்தார்கள்.  வெளி உலகம் தெரியாமலேயே.  பக்கத்தில் இருக்கும் சாமியைப்  பார்த்துக்கொண்டு,  அருகில் இருந்த உறவினர்களை விசாரித்துக்கொண்டு, கிடைத்த  வேலையைப் பார்த்துகொண்டும் தான்  இருந்தார்கள்.   ஆனால் அதில் தான் சாதியப் படிநிலைகள் ரொம்ப தீவிரமாக இருந்தது என்பது பலரும் கூறும் கருத்து.   

 இன்று தமிழ்நாட்டிற்கு எத்தனையோ மக்கள் பஞ்சம் பிழைப்பதற்காக வந்த மக்கள், கொரோனாவின் முடக்கத்தால் திரும்ப அவர்களின் ஊருக்கு போகும், அந்த காட்சிகளையும் நாம் பார்க்கிறோம்.  தமிழகத்தில் இதுவரை பிரச்சனை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வண்டிக்கு டியூ  கட்ட முடியலை,  குழந்தையோட பள்ளிக் கூடத்திற்கு பீஸ் என்ன பண்றதுண்ணு  தெரியவில்லை எனும்  இந்த மாதிரியான விஷயங்களில் பிரச்சினை ஆரம்பித்து உள்ளது.   எனக்கு தெரிந்து பசி, பஞ்சம் மாதிரியான பிரச்சினைகள் இதுவரை வரவில்லை என்கிறார்  பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.   ஒருவிதத்தில்  அது உண்மை என்றே தோன்றுகிறது.   அரிசி முதற்கொண்டு எல்லாமுமே நமக்கு அரசு அளிக்கின்றது,  அதற்கான வருவாய் எந்த வழியாக என்று இப்பொழுது  நம்ம பாக்கத் தேவையில்லை.  

தற்சார்பு பொருளாதாரத்தின் படி, இந்த மாதிரி கிராமங்களில்  வேலை பார்த்துக்கொண்டு இருந்த எல்லாருமே ஏதாவது ஒரு தொழில் சார்ந்த, இண்டஸ்ட்ரீஸ்  மாதிரியான  சூழலுக்கு போய்விட்டோம்.  அந்த தொழில் உலகத்தை சார்ந்து ஒரு கண்ணியாக  இருக்கிறது.   ஓரிடத்தில் அறுபட்டால் அது மற்றோரு பக்கம் பிரச்சினையை விளைவிக்கும்.     

இப்பொழுது தான் நாம்  இண்டஸ்ட்ரியல் வளர்ச்சியால் நடந்த சூழலியல் பிரச்சினைகள் குறித்துப் பேச ஆரம்பிக்கின்றோம்.  இங்கிலாந்திலும் தொழிற்புரட்சிக்குப் பின் நடைபெற்ற சூழலியல் மாற்றங்கள், அதற்குப் பிறகு சூழலின் மீது அக்கறை கொண்டு அவர்கள் மாறியது போல அவற்றைப் பற்றி நிறைய பேசவேண்டும்.    கொரோனா காலம் நம்மை இந்த  நிலைமையை  விட கொஞ்ச காலம் பின்நோக்கி தள்ளி விட்டு போகும். 

 இப்போது  நாம்  செய்துகொண்டு  இருந்த விஷயங்களில் எந்தெந்த  தவறான விஷயம் இருக்கிறது என ஆராய்ந்து அதனை சரி கட்டுவதற்கான வேலைகளை  ஆரம்பிக்கவேண்டும்.   அந்த மனப்பான்மை எல்லா தரப்பு மக்களுக்கும் வரும்.   

தற்சார்பு பொருளாதாரம் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பா முடியாது.  நம் ஒரு மாடு வைத்து பராமரிக்க , அதற்கு இடம் வேணும்.  அந்த இடம் எங்கே கிடைக்கும்? அவன் அந்த இடத்திலிருந்து படித்து மேலே சென்று அந்த இந்த முன்பு இருந்த ஜமீன்தார் இருந்த முறை மாறி இப்போ அது ஒரு ஒரு நிறுவனத்துக்கு கீழே போய் இருக்கிறார்கள்.   இங்கே ஒரு கிராமத்தில் அவர்கள் அடிமையாக இருந்த நிலைமை மாறி இன்றைக்கு ஒரு முதலாளித்துவத்தின் கீழ் ஒரு அடிமையாய் இருக்கிற ஒரு நிலைமையில் தான் இருக்கும்.   அதில் கொஞ்சம் படிக்காமல் விஷயம் தெரியாமல் இருந்திருக்கும்.  இப்போ படித்து விஷயம் தெரிஞ்சு இருக்கும் என தோன்றுகிறது.  

தற்சார்பு விஷயங்களெல்லாம்  நமக்கு ஒத்து வருமா என்றால் நம்ம தற்சார்பு னா என்ன அப்படின்னு இருக்கு ஒரு கேள்விக்குறி?  பதில் எந்தப் பொருளையும் வாங்காமலேயே   உற்பத்தி செய்ய முடியுமா?  அப்போழுது ஒரு துறவயின்  வாழ்க்கையைமட்டுமே  வாழ முடியும் என நினைக்கிறேன்.   இந்த கால கார்பொரேட் துறவிகள் அல்ல.     கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு அப்படியே இருக்கிற வாழ்க்கை.   அந்த வாழ்க்கை முறை நம்ம சாமானியர்களுக்கு இப்போழுது வருமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.   
அப்படியே அது ஒத்து வந்தாலும் இந்த நுகர்வு சமூகத்தில் நம்ம இருக்க முடியுமா?  சிக்கனாமான  மினிமலிஸம் சார்ந்த வாழ்க்கை தான்.   நமக்கு இன்றைய காலகட்டத்தின் தேவை. தேவைக்கு அதிகமாக வாங்குவது நிறுத்தினால் பல பிரச்சனைகள் தீரும்.   

அதற்கடுத்தபடியாக குளோபலைசசன்,  எல்லாருமே கரோனாவிற்கு பின், லோகலைசேஷன் ஆகும் என நினைத்தாலும், அது டி-சென்டர்லைஷேஷன் ஆகுமே ஒழிய  லோகலைசேஷன் ஆகும் வாய்ப்பு குறைவு.  


நெருக்கடிக்குப் பிந்தைய கால கட்டத்தைத்தான் new normal என்று பொருளாதார வட்டாரத்தில் கூறுகிறார்கள்.  new normal என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அது கண்டிப்பாக தற்சார்பை  நோக்கி நகராது, வேண்டுமானால் மினிமலிசம் நோக்கி நகரலாம்.  






ஜெயமோகனின் ராஜன் - Rhonda Byrne The secret

ஜெயமோகனின் ராஜன் சிறுகதை.  வாசல் குழுவின் வாசிக்கும் நிகழ்வின் மூலம், இந்த மாத இறுதியில் படிக்க நேர்ந்தது.   Rhonda Byrne எழுதிய  The  secret  - ரகசியம் எனும் புத்தகம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் படித்து முடித்திருந்தேன்.  இவை இரண்டும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உடையதாக உள்ளது.   மொட்டைத்தலை-முழங்கால்,  அம்மாவாசை-அப்துல் காதர் மாதிரி சம்பந்தம் இல்லாத போல தோணும்.  இருந்தாலும் பாப்போம்.     


யானை எப்போதும் ஆச்சரியமான ஒன்று. எங்கள் ஊர் மொடக்குறிச்சி மாரியம்மன் தேர்த் திருவிழாவில் வருடா வருடம் வரும் யானை,  கோயிலின் வலது ஓரம்,  அசை போட்டுக்கொண்டு அமைதியாக நின்று கொண்டிருக்கும்.   அதுதான் எப்பொழுதும் யானை என்றதும் என் முன் வந்து நிற்கும் காட்சி.   ஆடம்பரமான அலங்காரம்  இருக்காது.  ஆனாலும் ஒரு பயபக்தி இருக்கும்.  சற்றுத்தள்ளி யானையின் சாணி, காய்ந்து மண்ணோடு மண்ணாக கிடக்கும்.  பல பேருக்குப் படிப்பைக் கொடுக்க(?!),  மிதிபட்டு சக்கையாக கிடக்கும்.  லுங்கி அணிந்த பாகன் கூடவே இருப்பார்.  சில வேலைகளில் ஓரமாக கணேஷ் பீடி குடித்துக் கொண்டும் இருப்பார்.  'ஆரம்பத்தில் மிதித்தவர்களுக்கு தான் படிப்பு வருமோ?' என்ற அச்சம் இருந்தாலும், வீட்டில் சொல்வதால், அதனை மீண்டும் மிதித்து இருக்கலாம்.  கண்ணாடியைத்  திருப்பினால், ஆட்டோ எப்படி ஓடும் என்பது அப்பொழுதெல்லாம் தெரியாது. 


 இப்பொழுதும் எந்த ஒரு பிரம்மாண்டமான பெரும் கோயிலுக்குச் செல்லும் பொழுதும் பார்த்திருப்போம்.  தேமே என்று அந்தக் கோயிலின் முன்பாகவோ அல்லது ஓரமாகவோ நின்று கொண்டிருக்கும்.   ஈக்களுக்கு தப்பிக்க வாலையும், காதையும் ஆட்டிக்கொண்டு இருக்கும்.  சில நேரங்ககளில், கண்களிலிருந்து ஈரம் கசியவும் செய்யும், கால்களில் சீழ் வடியும் காயங்கள் கூட இருக்கும்.   நாம் கொடுக்கும் சில்லரையையும், சில வேளைகளில் கிடைக்கும் நோட்டுக்களையும் யானைப்பாகனிடம் கொடுத்துவிட்டு, நம் மீது துதிக்கையை தூக்கி 'டோம்' என போட்டு  ஆசிர்வாதம் செய்யும்.   அதற்கென கிடைக்கும் வாழைப் பழங்களை தனது பசிக்கு 'சோளப்பொரியா' தள்ளும்.     இதுதான் நம் ஊரில் நாம் காணும் யானை.  இந்த நம் ஊர் யானை பாவமானதும் கூட.   இந்த கோயிலுக்குள் அடைபட்ட யானைகளுக்கு புத்துணர்வு முகாம் என்பதும் தேவையான ஒன்றே.  


ஆனால் மலையகத்தில், யானை என்பது  ஒரு சொத்து.  மண், பெண், பொன் அதோடு யானையையும் அவர்கள் போற்றுகிறார்கள்.  பொறாமை கொள்கிறார்கள். வஞ்சகம் செய்கிறார்கள். சண்டை செய்கிறார்கள்.   மலைநாடு, யானை, எளிய மனிதன், அரண்மனையின் ஆதிக்கம் என ஒரு நல்ல விறுவிறுப்பான சிறுகதை. இது ஜெயமோகனின் களம்    'கடவுள், யானைகளுக்காக  அருளிய தேசம் கேரளம்'  என பூதத்தான் இந்தக் கதையில் குறிப்பிடுவார்.  அது கதையாக இருந்தாலும், அது தான் உண்மையோ என்றே சிறுகதையின் முடிவில் தோன்ற வைக்கிறது. 


யானையின் மூளையின் எடை 5 கிலோ.  நீல திமிங்கலத்தின் எடை அதை விட இருமடங்காம்.   யானைகள் மனிதர்கள் போலவே யோசிக்கும் திறன் உடையவை என்றும் கூறுகிறார்கள்.  இவ்வளவு பிரமாண்டமான யானையை,  ஒரு சாதாரண மனிதன், ஒரு சிறிய அங்குலத்தை வைத்து எவ்வாறு அடக்குகின்றான் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.  பூதத்தான் அது போன்ற ஒரு சாதாரண  மனிதன், பாகன்.   


ராஜன் எனும் 11 அடி உயர பெரும் யானையை கொல்வதற்கு,  அவனுக்கு கட்டளை வருகிறது.  காரியஸ்தன் அதனை கூறுகிறார், கெஞ்சுகிறார்.   மிரட்டுகிறார்.  அதுவரை அவனை அடிமை போல காண்பித்து இருப்பார்கள்.   கேரளா கடவுளின் தேசம் என  நெடு நீண்ட கதையை ஒரே மூச்சோடு சொல்லி,  அவர்களிடம் பொங்கி எழுந்து சவால் விட்டு வெளியேறுவான் பூதத்தான்.  அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் தொடையைத் தட்டி சபதமிட்டு வெளியேறுவது போல,  'சாது மிரண்டால்' எனும் ட்ரான்ஸ்பர்மேஷன் இடம்.  வேறொருவர் மூலமும்  யானையை கொன்றுவிடுவார்கள் என தெரிந்து, நேராக ஒரே சிந்தனை ஓட்டத்தோடு ராஜனை நோக்கி செல்வார்.   அது யானையை காப்பற்றும் வெறிகொண்ட ஓட்டம்.  ஆறு, ஊர், காடு என பல மைல் தூரம் அவனின் ஓட்டத்தை விவரித்த இடம், காட்சி போல் விரிகிறது 


பல மைல்கள் தூரத்தில் இருக்கும், முன்பின் பார்க்காத ராஜன் எனும் யானைக்கு இவன் வருவது எப்படித் தெரிகிறது.  அவனை எப்படி ஆரத் தழுவுகிறது .  அவனோடு எப்படி அன்பு கொள்கிறது.  கதை தான்.  இருந்தாலும் 'ரகசியம்' புத்தகத்தில் படித்த ஒரு விசயம் இங்கு பொருந்துகிறது.  இந்த பிரபஞ்சத்தில்  ஒவ்வொறுவரும், நேரடி பேச்சு  இல்லாமல் எண்ண அலைவரிசைகளாலும், தொடர்புகள் நிகழ்ந்து  கொண்டிருக்கிறதாம்.  அந்த எண்ண அலைவரிசை இந்த பூதத்தானுக்கும்,  யானைக்கும் இடையில் நிகழ்ந்து இருக்குமோ என்று யோசிக்க வைக்கின்றது.  


சிலவேளைகளில் நம்ம ஊர் கோயில்களில் பரபர என்று சாமியாடி வாக்குமூலம் கொடுப்பார்கள்  சிலர்.   அதுவும் இதனால்தானோ? அந்த instinct  எனும் அலைவரிசை என்பது மூடநம்பிக்கையோ?  இது சாத்தியமா? அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்றா? 


"ரகசியத்தில்" என்ன கூறுகிறார்கள் என்றால், ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து,  அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும்.  அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய 

 ஒரு விஷயம்,  கண்டிப்பாக நடக்கும் என்கிறது.     இதைத்தான் அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று குறிப்பிட் டார் போல.  சில நேரங்களில் நமக்கே கூட இவ்வாறு தோன்றியிருக்கும்.  "இப்பதான் நான் நினைச்சிட்டு இருந்தேன்,  நீங்க போன் பண்ணீட்டிங்க,உங்களுக்கு 100 வயசு".     இந்த மாதிரியான சில சம்பவங்கள் எதனால்,  எவ்வாறு எப்படி நிகழ்கிறது என்பது தெரியவில்லை.    இந்த பிரபஞ்சம் எண்ண அலைவரிசைகளால் ஆனது தானோ? 


சிறுகதைக்கு மீண்டும் வருவோம்.  

 

//“டேய் நீயாடா பூதத்தான்?” என்றபடி அவர் குருவிபோல ஓசையிட்டு வெற்றிலைச்சாற்றின் மிச்சத்தை கூர்மையாக அவன் மேல் துப்பினார்.//   இந்த ஒரு சொற்றொடரில் அவர்களின் ஆதிக்க மனோநிலையை அறிய முடிகிறது.  


//அவருடைய கூனும் குறுகலும் அகன்றுவிட்டிருந்தன முகமும் வேறுமாதிரி மாறியது//   முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் அவருடைய இடத்தில் அமர்ந்ததும்  அவர் எஜமானர் ஆகிறார், பூதத்தானை ஏவ ஆரம்பிக்கிறார்.   அடிமைத்தனத்தின் அடுக்கு இங்கு தெரிகிறது.   


ஒரு யானையை வாங்க, 8 யானை விலை கொடுக்க நினைக்கிறார், அரண்மனை ராஜா -கண்ணன்குமாரன்.     நம் ஊர் ஏலத்தில் ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு வெறும் கெரவத்திற்காக பலர் அதிக விலை கொடுத்து வைத்து வாங்குவது போல தான்.  மீண்டும் அண்ணாமலை படத்தில், ஏலம் எடுக்கும் இடம் எனக்கு ஞாபகம் வருகிறது.  


பெயர்களின் பின் இருக்கும் சமூகம்

யானையின் பெயர்கள்  - வலிய சங்கரன், பர்வதராஜன்.   


அரண்மனையில் உள்ளவர்களின் பெயர்கள் - குமாரன் நாயர் , அரண்மனை ராஜா-கண்ணன்குமாரன் , முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் , சட்டம்பி கருணாகரன் நாயர், கதகளி ஆசான் கிருஷ்ணன் நாயர் என பெரும்பாலும் பெருந்தெய்வ  கடவுள்களின் பெயர்களே,   பூதத்தானை ஆதிக்கம்  செய்பவர்களுக்கு    உள்ளது.  கூடவே தெய்வமாக போற்றப்படும் யானைக்கும்.   


யானைப்பாகனாக வரும் பூதத்தான்.   இவரின் பின்னே நாயர் உள்ளதா என்றால் இல்லை.  பூதத்தான் ஒரு சிறு தெய்வம்.  பூதத்தான் கோவில் சுடலைமாட சாமி கோவிலோடு கன்யாகுமரியில் திருவிதாங்கோடு  எனும் ஊரில் உள்ளது.  பார்க்க லிங்க்.  


"பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் என்பது ஈண்டு நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , தீ எனும் பஞ்ச பூதமும் அல்ல" -   இவ்வாறு நாஞ்சில் நாடான் கூறுகிறார்.  

அந்த சமூக அடுக்கின் கீழ் மட்டத்தில் இருப்பவனை மேல் மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் இருப்பவர்கள் எவ்வாறு அவனை மரியாதை இல்லாமல் விழிக்கிறார்கள் என்பது கதையில் இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கும்.  


ஜெமோகனுக்கு அறிய பொருட்களின் மீதான காதல்  இருக்கும் என நினைக்கிறேன்.  ஆர்சனிக்(Arsenic) - சீமை விஷம் பற்றி இதில் கூறி  இருப்பார்.   அது எவ்வளவு கொடிய விஷம்  என்பதை கூகுளால் அறியமுடிகிறது. 


கதையின் காலம் 50 வருடம் பின்னோக்கி இருக்கலாம்.  ஜெயமோகன் அவர்களுக்கு யானைகளின் மீது ஆகச்சிறந்த பிரியங்கள் இருக்கக்கூடும். அவரது கதைகளில் பெரும்பாலும் யானைகளை சேர்த்துவிடுகிறார் அல்லது நான் அவரின் யானை கதைகளை மட்டும் படித்திருக்கக்கூடும்.  யானை டாக்டர் எனும் கதையும்  ஒரு அற்புதமான ஒன்று.   


இறுதியாக பாகன் பூதத்தானும், யானை ராஜனும் என்ன ஆகிறார்கள்?  சண்டைக்கு வந்தவர்கள் ஏன் அவ்வாறு ஆகிறார்கள்?  அந்த ரகசியத்தில் வரும் பிரபஞ்சத்தின் அலைவரிசை தானோ? 

Wednesday, April 29, 2020

வாசிப்பில் நேசிப்பு - உடையார்

இப்பொழுது வீட்டிற்குள் மாதக்கணக்கில் முடங்கி இருப்பது போலவே 2009-ல்  வீட்டின் படி தாண்டாமல் இரு வாரங்கள் முடங்கிக் கிடந்தேன்.  காரணம் சின்னம்மை. அப்பொழுது முடங்கியிருந்த இடம் லண்டன்.  அப்பொழுது தான் ஸ்மார்ட் போ∴ன்கள் வர ஆரம்பித்த நேரம்.  அவ்வளவாக புழக்கத்தில் இல்லை.  பாட்டு கேட்பது மட்டுமே பொழுதை ஓட்டியது.   அது போரடிக்க ஆரம்பித்த பொழுது நுழைந்த இடம் புத்தகம்.   அந்த இக்கட்டான நேரத்தில் பெரும் ஆறுதலாகவும், நேரம் கடத்தியாவும்  இருந்தது  புத்தகம் மட்டுமே.  ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் இருந்த பொன்னியின் செல்வனை வரவழைத்து, அதன் வழியாக சோழநாட்டிற்கு பயணப்பட்டேன்.  மீண்டும் இரண்டாவது முறையாக படிக்கும் பொழுது, பொன்னி நதி வேறு மாதிரியான கோணத்தில் புலப்பட ஆரம்பித்தது.  இப்படித்தான் பெரும் புத்தக வாசிப்பு என்னை ஆட்கொண்டது. 

இதில் குறிப்பிட வேண்டிய விசயம், அங்கு நூலகத்தில் 10 புத்தகங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். அந்தப்பகுதியில் பெரும்பான்மையினர்  தமிழ் பேசும் மக்கள் என்பதால், நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும்.  உறுப்பினராக பெரிய நடைமுறைகள் இல்லை, அந்த கவுன்சிலில் கட்டுப்பாட்டுக்குள் முகவரி 
இருந்தால் போதும்.

அதன் பிறகு, கல்கியைத் மீண்டும் ஒரு வலம் வர ஆரம்பித்தேன். பல்லவர்களிடம் இருந்து சோழ நாட்டை மீட்ட பார்த்திபன் கனவு.   இந்த புதினங்களின் வழியாக, சோழர்களின் வரலாறு பற்றிய பெருமை  என்னுள்  அப்பிக் கிடந்தது.  தொடர்ந்து சில மாதங்கள் கழித்து தஞ்சையிலிருந்து  'சிவகாமியின் சபதம்' வழியாக காஞ்சிக்கு      பல்லவர் கால வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள நகர்ந்தேன்.    இப்படியாக கல்கியின் சுவைஞனாக அந்நேரத்தில் மாறியிருந்தேன்.    ஆனாலும், புத்தங்களில் கூறி இருந்ததை மட்டும், பெரும்பாலும் நம்பி வண்டி ஓடிக்கொண்டு இருந்தது.

ஒவ்வொரு முறை தஞ்சைப் பக்கம் போகும்பொழுது, பெரிய கோவில் எனது பார்க்கும் பட்டியலில் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் அதன்மீது ஆச்சர்யம் மேலிடும்.  தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய வரலாற்றை முழுவதும் தெரிந்து கொள்வதில் ஆவல் ஏற்பட்டது.   அது பற்றி ஏதாவது புத்தகம் உள்ளதா? எனும்  தேடல் நின்ற இடம்…

பாலகுமாரனின் உடையார். 

உடையார் புத்தகத்தின் அனைத்து பகுதிகளும், லண்டன் ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் பார்த்திருந்தேன்.   அப்பொழுதெல்லாம் பாலகுமாரனின் மேல் அவ்வளவாக ஈர்ப்பு  இல்லாததால், அவர் பக்கம் செல்லவில்லை.  (ஆமா, இவரு வேற எல்லாரையும் வாசித்துவிட்ட மாதிரி, அதுவரை படித்தது, ரெண்டு புத்தகம் அதுவும் கல்கி அவர்களுடையது.)

 ஐந்தாறு வருடம் முன்பு ஈரோடு புத்தகத் திருவிழாவில் உடையாரின் முதல் பகுதியை வாங்கினேன்.  நம்ம வசிக்கும் வேகம் தான் நமக்கு தெரியுமே?  ஒரு வழியாக, அனைத்து பகுதிகளையும் வருடக் கணக்காக படித்து முடித்தேன்.   இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால்  மூன்று புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு பகுதியாக வாங்கித்தான் முடித்தேன்.  தோராயமாக ஆறு மாத இடைவெளியில் நடக்கும்  சென்னை மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் வாங்கியவை தான். 

தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு நான் சென்ற அனுபவத்தையும், என்  வாசிப்பு அனுபவத்தையும்  உடையாருக்கு முன், உடையாருக்குப்  பின் என்று பிரிக்கலாம். 

ராஜராஜ சோழன் சாளுக்கிய நாடுகளின் மீது படையெடுத்துச் செல்வதை மட்டுமே அவ்வளவு பிரமாண்டமாக ஒரு பாகத்தில் அழகான, விரிவான வர்ணனைகளோடு விவரித்து இருப்பார்.   போருக்கு வீரர்கள் செல்லும் வழியில், அவர்களுக்கு முன் உணவு சமைப்பவர்கள் சென்று தங்கி அவர்களுக்கு சமைத்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்வார்கள்.  பின்னே வீரர்கள் கிளம்பி வருவார்கள்.  இது ஏனோ பழனிக்கு பாத யாத்திரை செல்லும் மக்களை நினைவூட்டியது.  காலகட்டத்திற்கு ஏற்ப முன்னே அவர்களின் கட்ட வண்டி அல்லது  டெம்போவில் சென்று உணவு சமைத்து வைத்திருப்பாப்பார்கள்.   நடைபயணம் வருவோரும் பின்னே வந்து சாப்பிட்டுவிட்டு நடை பயணத்தை தொடர்வார்கள்.  இப்படியாகத் தான்  தஞ்சையிலிருந்து ஹம்பி வரை வாரக்கணக்கில் சென்று உள்ளார்கள்.
 
துங்கபத்திரா நதி காட்டாற்று வெள்ளம் போல சென்று கொண்டிருக்கும் ஒரு நதியாகும்.  புவியியல் ரீதியாகவே துங்கபத்திரா நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பலர் படையெடுத்து வருவதைத் தடுக்கும் அரண்.    ஆற்றுக்கு இந்தப் பக்கம் தங்கி,  தண்ணீர் குறைய காத்திருப்பார்கள்.  ஆனால் ராஜராஜ சோழன்  அந்த காற்றாற்று  நீரில் ஓரிடத்தில் அவரின் குதிரையோடு இறங்கி, சினங்கொண்ட யானை போல ஆற்றைக் கடந்து முன் செல்வார், வீரர்கள் பின் தொடர்வார்கள்.  போர் நடக்கும்.  வெற்றி அடைவார்கள். அங்கு இருந்த செல்வங்களை, பொருட்களை சூறையாடி வருவார்கள்.   இந்த போருக்கான காரணம், தஞ்சை பெரிய கோயில் கட்ட ஆரம்பித்த பிறகு நிதி பற்றாக்குறை வரும் எனும் போதுதான்.  இரு வருடங்களுக்கு முன் துங்கபத்ரா நதியை ஒட்டிய ஹம்பி இடங்களுக்குச் சென்றிருந்தோம்.  உடன் வந்த நண்பர்களிடம்  இதனைக் கூற, நம்புவதற்கு சற்று சிரமப்பட்டார்கள்.

உடையார் புத்தகம், பெரிய கோவிலைக் கட்டுவதற்கான திட்டமிடலில் தொடங்கும்.   கட்டும்பொழுது இடையே நிதி பற்றாமல் போகும்  என படையெடுப்பு.   அதற்கு போகும் திட்டமிடல்.  கோவில் கட்டுவது எக்காரணம் கொண்டும் நிற்கக்கூடாது என்பதற்காக,  ஆரம்பம் முதல் முடிவு வரை முழு வரைபடங்களையும்  ஒன்றன் பின் ஒன்றாக  வரைந்த குஞ்சர மல்லன் ராஜராஜப் பெருந்தச்சன்.     அதில் சிற்பிகள்,  சிலை வடிக்க மாடலிங் போல நின்ற நடனம் ஆடும் பெண்கள்.  ராஜகுருவாக இருக்கும் கருவூர்த் தேவர். கோயிலின் மண்டபத்தின் முதல் தளத்தில் இன்றும் அழியாமல் இருக்கும் ஓவியங்கள்.  இவை ஒவ்வொன்றும் அதில்  சொல்லப்பட்டிருக்கும் விதம் பிரம்மிப்பூட்டும்.  வாசிக்கும் பொழுது நம்மை அந்த இடத்திற்கே கூட்டிச்சென்று விடுவார்.  இப்படி ஐந்து பாகங்களை வாசித்து விட்டு பெரிய கோவிலுக்குச் சென்று அசை போட்டால் எப்படி இருக்கும்?   

உடையாருக்கு முன், தஞ்சைக்கு பெரிய கோயில் பார்க்கும்பொழுது  மனதில் ஒரு வியப்பு மட்டுமே தோன்றும்.   எத்தனை முறை அந்தப் பெரிய லிங்கத்தின் முன்பாக உட்கார்ந்து இருந்தாலும்,  அது பயபக்தி அனுபவமாக இருந்தது.   அது எப்படி கட்டியிருப்பார்கள், இது எப்படி திட்டமிட்டு இருப்பார்கள்  என்று திகைப்பு கலந்த யோசனை வரும்.   உடையாருக்கு பின்,  இப்படித்தானே  இதைக் கட்டினார்கள்,  இந்த இடத்தில்தான் அந்த மணலை மலைப் பாதைபோல கொண்டு போய் இருப்பார்களோ?   அந்த லிங்கத்தை இவ்வாறு தான் ஒட்டி இருப்பார்கள் என்பது பாலகுமாரன் அவர்கள் கூறியது போல கண்ணில் விரியும்.   விவரிக்கும் ஒவ்வொரு இடத்தையும், அந்த இடத்தில் நின்று, மெல்ல அசைபோட்டுப்  பார்க்கும் போது, ஆயிரம் வருடங்களுக்கு முன் செல்லும் பேரனுபவம்,  அலாதியானது,  விவரிக்க முடியாதது.   

கடைசியாக தஞ்சை சென்ற பொழுது, அது ஒரு பொழுது சாய்ந்த பொன் மாலை நேரம். அங்கு நிலவொளியில் ராஜ ராஜரோடும், கருவூர்த் தேவரோடும் பெருந்தச்சரோடும் 11ம் நூற்றாண்டுக்குச் சென்று உலாவினேன். கடைசியாக  அங்குள்ள அலுவலக அதிகாரிகளிடம் அந்த சித்திர மண்டபத்தைப்  பார்க்கலாமா? என்று கேட்டபொழுது தான்,  "நாளைக்கு வாங்க,  மத்தியானத்தில் தான் பார்க்க முடியும்,   இரவில் பார்க்க முடியாது" என்று கூறினார்கள்.  அடுத்த முறை அங்கு செல்லும் பொழுது, கண்டிப்பாக அதனைப் பார்க்க வேண்டும். 

அந்த கால கட்டங்களில் கோயில் காட்டியதை  தேவையில்லை என பொதுமக்கள் பலர் பேசிக்கொள்வதாக   அங்கங்கு கூறி இருப்பார்.  அதாவது இன்று வல்லபாய் பட்டேல் சிலையை நிறுவியிருக்கிறார்கள், அதோடு மட்டும் இல்லாமல் இந்த கரோனா நேரத்திலும் புதிய பாரளுமன்றத்தை கட்ட முனைப்பில் உள்ளார்கள்.   தலைமுறைகள், நூற்றாண்டுகள் கடந்து தங்கள் பெயர் வரலாற்றில் நிலைபெற மன்னர்கள் இதுபோல ஏதேனும் செய்து கொண்டுதான் உள்ளார்களோ  என தோன்றுகிறது.  அந்த காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து இருப்பார்கள் என்பதைப் பற்றி தெரிவதற்கான வாய்ப்புகள் பிரம்மாண்டங்களின் மூலம் குறைவு. 
எப்பொழுதும் இருவேறு கருத்துக்கள் உண்டு, இப்போது இருப்பது போலவே.  இந்த புத்தகத்தில் இருந்த வேறு எதைப் பற்றியோ ராஜராஜ சோழனின் அறிவையும், வீரத்தைப் பற்றியோ மறுப்பதற்கில்லை,  மறைப்பதற்கும் இல்லை.   பாலகுமாரன் இந்த புத்தகத்தில் கற்பனை கலந்தும்   எழுதி  இருக்கலாம்.  இதற்காக ஒரு போருக்கு சென்று, அங்கு சண்டை போட்டு,  அங்குள்ள மக்களைத் துன்புறுத்தி,  அங்கிருந்து பொருட்களை எடுத்து விட்டு வந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களை எழுப்ப வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.   கூடவே இதனைக் கட்டாமல்  இருந்திருந்தால் நமக்கு தமிழர்களின் சோழர்களின்  கட்டிடக்கலையைப் பற்றித் தெரியாமலும் போயிருக்கலாம்.  பல மாதிரியான கோணங்களில், ஒவ்வொரு பிரம்மாண்டத்தின் பின்னால் சென்று பார்க்க,  இந்த உடையாரின் வாசிப்பு எனக்கு கற்றுக் கொடுத்தது
இன்று இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தால், அது மற்றொரு கோணத்தையும் காண்பிக்கலாம்.

வாசிப்போம்.

Sunday, March 10, 2019

கி.ரா வின் கதவு

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் அவர்களின் “கதவு” எனும் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பா அல்லது கட்டுரைத் தொகுப்பா என எனக்குத் தெரியவில்லை. அவர் இயல்பாக எழுதியிருப்பதை பார்க்கும் பொழுது, கதைத்தொகுப்பு போல தெரியவில்லை, உண்மைச் சம்பவங்கள் என்றே நினைக்கிறேன். ஒரு சிறு கிராமத்தில் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்த சிறிய, பெரிய, எளிய, மனிதர்களின், அவர்களோடு உறவாடும் செல்ல பிராணிகளின் இயல்பான வாழ்க்கையை மாறாத மண் வாசத்தோடு நம் கண்முன் விவரிக்கின்றார். வழக்கம் போல அவரின் கதைக்களம் கரிசல் மண். "வாசிக்கும் வாசல்" நிகழ்விற்காக ஒவ்வொன்றாக படித்து உள்வாங்கிக் கொண்டே வருகிறேன், ஒரு கதை சட்டென எழுந்து உட்கார வைத்தது. "மாயமான்" எனும் தலைப்பில் உள்ளது. சரஸ்வதி இதழில் 1958 ஆம் வருடம் எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட இருபது பக்கங்கள். கதை சுருக்கம் இதுதான்.


தினசரி செய்தித்தாள் வாங்கி அவரின் கடையில் போட்டாலும், படிக்கும் வழக்கமில்லாத செட்டியார், அவரின் பெட்டிக்கடைக்கு வரும் ஒருவர் படிப்பதிலிருந்து, அரசாங்கம் கிணறு வெட்ட 400 ரூபாய் பணம் கொடுக்கிறார்கள் எனும் செய்தியை தெரிந்து கொள்கிறார். செட்டியார் அவரின் புஞ்சை நிலத்தில் ஒரு கிணறு வெட்ட யோசிக்கிறார். சின்ன பெட்டிக்கடை, புஞ்சை நிலம், கூட்டுக்குடும்பம் என நிம்மதியான, பிரச்சனையில்லாத, சௌகர்யமான வாழ்க்கை.

சுதந்திரம் வாங்கிய பத்து வருடத்திலேயே அவரால் நேர்மையாக ரூ 400ஐ வாங்க முடியவில்லை அரசாங்கத்திடமிருந்து. அதனை வாங்க இன்று, நாளை என அலய விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இடைத்தரகர் உள்நுழைகிறார். 400 ரூபாயில் நூறு ரூபாய் கொடுத்த பிறகு, அவருக்கு 300 ரூபாய் மானியப் பணம் வருகிறது. கிணறு வெட்ட ஆரம்பித்தவுடன் பணம் பத்தாமல் மேலும் 500 ரூபாய் கடன் வாங்குகிறார். பணம் படைத்த நாயக்கரிடம் செல்கிறார். இவர் கடன் கேட்டவுடன், நாயக்கர் சரி என்று சம்மதித்ததவுடன் செட்டியாருக்கு மகிழ்ச்சி. ஆனால் கி.ரா இவ்வாறு எழுதுகிறார் 'நாயக்கரின் கண் முன் செட்டியாரின் ஐந்து ஏக்கர் வந்து போனது' என்று. இதைவிட எளிதாக நாயக்கரின் கேரக்டரை சொல்ல முடியாது.

கிணறு வெட்டி முடிச்சாச்சு. நல்ல தண்ணீர். அதை ஊர் மக்களே வந்து குடிக்க எடுத்துக்கிறாங்க. ஆனாலும் பாசனத்திற்கு போதாத தண்ணீர். இன்னும் கொஞ்சம் அடி தோண்டினால் மட்டுமே பாசனத்துக்கு உதவும். கூடவே கமலையும், மாடுகளும் வாங்க வேண்டும். மீண்டும் நாயக்கரிடம் இன்னும் கொஞ்சம் கடன் வாங்குகிறார். நாயக்கர் ஏக்கருக்கான விலை கணக்கு போட்டு அடமானத்தில் வைக்க சொல்கிறார். குடும்பத்தினர் சம்மதத்தோடு கையெழுத்திட்டு நிலத்தை அடமானமும் வைத்து விடுகிறார். பத்திரத்திற்கும், உண்மை நிலவரத்திற்கும் இருக்கும் ரூபாய் முரணை கதையில் கி.ரா இயல்பாக பதிவு செய்துள்ளார்.

'சரி, சீக்கிரம் கடனை அடைக்கலாம், அதனால முதல் வருடம் மிளகு போடலாம்' என ஏற்பாடு செய்து முடிக்கையில், அரசாங்கத்தின் அறிவிப்பு பேரிடியாக உள்ளது. மானியம் வாங்கி கிணறு வெட்டி உள்ளவர்கள் மிளகு போன்ற பணப்பயிர்களை அறுவடை செய்ய மூன்று வருடம் தடை விதிக்கிறது. கையில் இருக்கும் காசை வைத்து கேப்பை பயிரிடுகிறார். இடைப்பட்ட காலத்தில் கடையில் வியாபாரம் படுத்து விடுகிறது. பயிரின் அறுவடை காலத்தில் கிணற்றில் தண்ணீரும் இல்லை, மழையும் இல்லை, தாது வருடப் பஞ்சம் என்கிறார்கள். நாயக்கர் முதல்வருட வட்டியை கட்ட சொல்கிறார். நகைகளை விற்று அந்த வருடம் கட்டி விடுகிறார். வட்சியினால் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு ஆந்திராவுக்கும், தஞ்சாவூர் நோக்கியும் பஞ்சம் பிழைக்க செல்கிறார்கள்.

அடுத்த வருடம் கடனை கட்டமுடியாமல் ஊரைவிட்டு, நிலத்தை விட்டு, தாயை இழந்து குடும்பத்தோடு செட்டியாரும் வெளியேறுகிறார். அப்பொழுதும் பேப்பர் வாங்கும் பழக்கத்தை விடாத செட்டியார், ரயில் நிலையத்தில் வாங்கி அவர் இருக்கையின் பக்கம் வைத்திருக்கிறார். அங்கு வரும் பயணி ஒருவர் செய்தியை படிக்கிறார் 'கிணறு வெட்ட அரசாங்கம் கொடுத்த 400 ரூபாய் திட்டம் வெற்றி பெற்றதால் அந்தத் திட்டத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக'.... பேப்பரைப் பிடுங்கி வெளியே வீசி விடுகிறார். இந்த இடத்தில் கட்டுரை/கதை முடிகிறது

ஒவ்வொரு கதைமாந்தர்களின் பெயர்களையும், பெயரின் பின் சாதியை போட்டுக்கொள்ளும் அன்றைய வழக்கப்படி எழுதியுள்ளார். அன்றைய காலகட்ட கதை அதனை நெருடாமல் செல்கின்றது. ஒவ்வொரு பெயரின் பின்னாலும் இருந்த சாதி தமிழகத்தில் மட்டும் எங்கே, எப்படி போனது (பெயரில் மட்டுமாவது) என்று தந்தை பெரியாரை யோசிக்க வைக்கின்றது.

ஒவ்வொரு இடங்களிலும் அந்தக் காலத்திய கிராமத்து சூழ்நிலை, அங்குள்ள மனிதர்கள், மக்களின் இயல்பான வெகுளித்தனமான வாழ்க்கை, கடன் கொடுக்கும் வசதி படைத்தவர்களின் மனநிலை, அரசு எந்திரம் என நெருடாமல் காட்சிப்படுத்திக் கொண்டே செல்கிறார்.


இது தவிர, இந்தப் புத்தகத்தில் மற்ற கதைகளிலும் சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை அழகான எழுத்தில் நெகிழச் செய்பவர், ஒவ்வொரு கதையிலும் சின்ன சின்ன சம்பவங்களில் அந்தக் காலகட்டத்திய அரசாங்க அலுவலர்கள் போக்கை சாடிக் கொண்டே அல்லது இயல்பாக விவரித்துக்கொண்டே சென்றிருப்பார். சுதந்திரம் அடைந்து பத்து வருடங்களுக்கு பின் எப்படி இருந்ததோ, அதுபோலவே கிட்டத்தட்ட கதை எழுதி 60 வருடங்களுக்குப் பிறகும், நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் கதை பொருத்துகிறது. அனேகமாக வினைத்தொகைக்கு உதாரணமாக கூறலாம்.. அரசாங்க இயந்திரம் அப்படியேதான் இருக்கின்றது அல்லது அதைவிட மோசமாகி இருக்கின்றது. அன்று போலவே இன்றும் அரசாங்கத்தின் திட்டங்கள், சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை பயக்கின்றனவா என்பது விடை தெரியாத கேள்வி. ஆசையை தூண்டும் அரசின் திட்டங்கள் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பது இப்போதும், அப்பொழுது போலத்தான் போல.

யார் கண்டது, அன்று கரிசல் காட்டில் இருந்து தஞ்சைக்கு கிளம்பி வந்து விவசாயம் செய்தவர்கள் தான், சில பல தலைமுறைகளாக "சோழநாட்டில் சோறுடைத்து" நமக்குப் பசி ஆற்றிவிட்டு, இன்று ஹைட்ரோகார்பனால் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

இதுபோல நடு இரவில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் டிஜிட்டல் வாழ்க்கையோடு ஒட்டாமலிருந்த சாதாரண, விவசாய, எளிய, நடுத்தர மக்களின், சிறு குறு, குடிசைத் தொழில்களின் வாழ்க்கையை தடம் புரட்டி இருக்கலாம். மனிதர்களோடும், மண்ணோடும் இயற்கையோடும், வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், இன்று ஏதேனும் ஒரு நகரத்தில் செக்யூரிட்டியாகவோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலோ, பிழைத்துக்கொண்டு இருக்கலாம்.

உலகமயமாக்கலுக்குப் பின், அன்று ஏர் பிடித்து, மாடு கன்னு வைத்து, நீர் பாய்ச்சி விவசாயம் செய்த வேளாண் குடியினரின் ஒரு வகையினர் மேலே படித்து வெளியேறி பெரு நகரங்களில் பொருளீட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஊரோடு வாழும் பெற்றோர்கள், சில வருடங்களுக்கு ஒருமுறை வயலை நனைத்துவிட்டு செல்லும் வாய்க்கால் முறை தண்ணீருக்காகவும் அல்லது வானம் அழுகும் என்று எதிர் பார்த்துக்கொண்டு காய்ந்து கிடக்கும் நிலங்களை புரோக்கர்களிடமிருந்து பாதுகாத்துக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான உணவு வகைகளை மட்டும் பயிரிட்டுக் கொண்டு, ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை வருகை தரும் பேரக் குழந்தைகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கலாம்.

மற்றொரு வகையினர், இதிலிருந்து வேறுபட்டு விவசாயமே போதும் என்று திருப்தியுடன் அதிகம் படிக்காமல் பள்ளிப் படிப்போடு நிறுத்தி, தொடர்ந்து விவசாயத்திலேயே ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களின் குடும்பம், அன்று அவர்கள் இருந்த மிடுக்கோடு, செல்வச் செழிப்போடு இன்று இருக்கிறார்களா என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அவர்களின் மகள்களுக்கு எப்பாடு பட்டாவது திருமணம் செய்து வைத்திருந்தாலும், மகன்களுக்கு? இந்த படிப்பு வித்தியாசங்களாலும் விவசாயம் மட்டுமே வாழ்வு என்றும் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் பெண் தர மறுக்கும் சமூகம் தானே இது. அப்படியே கல்யாணமாகி இருப்போரும் சுற்றத்தாரின் வாழ்க்கைக்கு ஈடுகொடுக்க நேர்மையாக என்ன செய்வதென்று தெரியாமல், கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை கைமாற்றிக் கொண்டு இருந்தவர்களும், கடன்பட்டு இறந்தவர்களும் கண்முன் வந்து போகிறார்கள்.

இந்தியாவின் GDPல் 18 சதவீதமும், 50 ℅ மக்களுக்கான வாழ்வாதரம் விவசாயத்தை ஒட்டியே உள்ளதாக புள்ளி விவரங்கள் வருகின்றன. விவசாயிகளின் பேரணி, தொடர் போராட்டங்கள், அவர்களுக்கான உரம் என்ற பெயரில் மானியம், இவைகள் உண்டு செய்யும் கடன், அதனால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் என பல கேள்விகளுக்கு என்ன தீர்வு என்பதை முன்னிருத்தாமல் மௌனமே அரசுகளிடமிருந்து. மௌனத்தின் சாட்சியாக நாமும்.




குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...