Saturday, September 26, 2020
ஈரோடு தினம்
எஸ் பி பாலசுப்ரமணியம்
Sunday, August 30, 2020
பெங்களூர்-ஈரோடு; கொரோனாவில்
புதன்கிழமை சந்தை
காரோனா அதன்போக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பலதரப்பட்ட மக்கள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஊரில் திருமணங்கள், கிடா வெட்டு விசேஷங்கள் குறைந்த எண்ணிக்கையில் நிகழத் துவங்கியுள்ளது. அரசும் லாக் டவுனை(?!) கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது. இருந்தாலும் நகரங்களில் முடிந்தளவு மக்கள் இன்னும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம். முன்புபோல இயல்பான நிலைக்கு மாறி விட்டோமா? என்றால் இல்லவே இல்லை.
கடந்த ஆறுமாத கால கட்டம் பல பழக்கங்களை மாற்றி உள்ளது. அதிலும் கடைகளுக்கு சென்று மளிகை பொருட்கள், காய்கறி வாங்கும் முறை முற்றிலும் மாறி இருக்கின்றது. இந்த நான்கைந்து மாதங்களில் காய்கறிகளை வாங்கியவுடன் சுத்தமாக கழுவியது போல், வேறு எப்போதும் கழுவியது உண்டா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். காய்கறிகள் கழுவிக்கொண்டு இருக்கும்பொழுது சோகமாக இப்படியும் நான் உளறுவது உண்டு 'காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது, காய்கறிகளை நீ கழுவினால் என்னவாகும் மனது' என்று.
லாக்டவுன் ஆரம்பித்த புதிதில் செய்த செயல்கள் வரலாறு முக்கியம் அமைச்சரே போன்றவை. காய்கறிகள் வாங்கி வந்தவுடன் அவற்றை வெளியே வைத்து, முக்கால் பக்கெட் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் கரைசல் தயாராகும். அதில் எல்லா காய்கறிகளையும் கொட்டி, கொஞ்ச நேரம் ஊற வைத்து விடுவேன். பின் ஒரு பெரிய துணியை விரித்து, அதன் மேல் காய்கறிகளைக் கொட்டி நீண்ட நேரம் ஈரம் காய உலர வைத்து விடுவோம். அதன் பின் அதனை குளிர்சாதன பெட்டியில் ஒவ்வொறாக தனி தனி டப்பா அல்லது கவர் அல்லது பையில் எடுத்து வைப்போம். இது ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் நடைபெற்று வந்தது.
காய்கறிக்கே அப்படி என்றால் நமக்கு. நேராக குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு, அந்த துணிமணிகளை சோப்பு போட்டு துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் அடுத்த வேலை. வேறு ஏதேனும் காய்கறிகள் தவிர மளிகைப் பொருட்கள் வாங்கி வந்தால் அதனையும் வெளியில் வைத்துவிட்டு, அதற்கும் சனிடைசர் அல்லது டெட்டால் கரைசலில் துடைத்து வைத்ததும் நடந்தது. பின்னர் ஓரிரு நாட்கள் கழித்துத் தான் அந்தப் பொருட்களை எடுத்து உபயோகப் படுத்தி இருக்கிறோம்.
அதுவும் லாக்டவுன் ஆரம்பித்த மார்ச் இறுதியில் இது மிகவும் அதிகம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த இரு மாதங்களாக அதுவும் மங்கிப் போய் உள்ளது. கொரோனாவை நாம் புரிந்து கொள்ள ஆர்மபித்துவிட்டோம் எனலாம் அல்லது சோம்பேறித்தனம் என்றும் கூறலாம். காய்கறிகளின் மூலமாக கொரோனா தொற்று வராது என்று நம்பிக் கொண்டும் இருக்கலாம்.
அதுபோல எங்கும் தொடாமல் காய்கறிகளை வாங்கி விட்டு வந்தவுடன், அதற்காக கொண்டு சென்ற பணத்தை அப்படியே சோப்பு நீரில் ஊறவைத்து கழுவி அதையும் காய வைத்துவிட்டு, வண்டி சாவியையும் கழுவி காய வைத்துவிட்டு பின்னர்தான் குளிக்க செல்வேன். கூடவே வண்டியின் கைப்பிடி, கதவு என தொட்ட ஒவ்வொன்றையும் துடைத்தது வரலாற்றில் குறித்துக்கொள்ள வேண்டும்.
முதல் ஓரிரு மாதங்கள் இப்படியாகத் தான் சென்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட அனைத்து பண பரிமாற்றமும் Gpay மற்றும் paytm க்கு மாறியிருந்தது. இப்பொழுது பணம் அவ்வளவாக எடுத்துச் செல்வதில்லை. ஆனாலும் வெளியில் சாலையில் கடை போட்டிருக்கும் அந்த பாட்டியை பார்த்தவுடன் அவர்களிடம் தான் வாங்க தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க எங்களது கம்யூனிட்டிக்கு நான்கு சக்கர வாகனத்தில், ஒருவர் காய்கறியை நேரடியாக கொண்டு வர ஆரம்பித்து விட்டார். இது இன்னும் சுலபமாகவே இருந்தது. அவர் உள்ளே நுழைந்ததும் ஆப் அலாரம் அடிக்கும். பலர் பரபரப்பாக ஓடி வந்து முதலில் வாங்க ஆரம்பித்தார்கள். அந்த கூட்டம் எனக்கு சற்று பயத்தை கொடுத்ததால், கூட்டம் குறைந்த பின்னர் கடைசியாக சென்று வாங்குவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டேன். அவரிடமும் நெருக்கம் ஆகி விட்டது.
"என்ன சார், இன்னிக்கு ரொம்ப லேட்டா வரீங்க?" "கீரை பிரெஷ் சார் வாங்கிக்கோங்க" என்பார். கன்னடமும், தெலுங்கும் ஹிந்தியும் பேசுவார். இந்த மொழி சார்ந்த விஷயம் பெங்களூரில் ஆச்சர்யமான ஒன்று. தொழில் செய்யும் பலரும் குறைந்தது மூன்று நான்கு மொழிகளாவது பேசுவார்கள்.
சில வாரங்கள் அவர்களின் குழந்தைகளோடு வந்தார். "என்ன இன்னிக்கு உங்க பசங்கள காணோம்? " "இல்ல சார் ரொம்ப லேட் ஆகுது, அவங்க சாப்பிட லேட் ஆகிடுது" என்றார்.
"இன்னிக்கு என்ன ஆச்சு ரொம்ப லேட்டா வந்துருக்கீங்க" எனும் மற்றோரு நாளின் கேள்விக்கு " சார், வேற வண்டி சார் இது, என்னோட வண்டி பஞ்சர் ஆயிடுச்சு" என்பார்.
மற்றொரு நாள் "இன்னிக்கி KR புரம் மார்க்கெட் போகலைங்க.." "கொரோன அந்த பக்கம் இருக்கறதால இப்படி இந்த பக்கமா போயி சிந்தாமணியில் வாங்கிட்டு வந்துட்டேன்."
இவ்வாறாக பலவாறான பேச்சுக்கள் அவரோடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பெரும்பாலான காய்கறிகள் அவரிடம் பேரம் பேசாமல் வாங்கிச் செல்வேன். ஒரு சிலவற்றை வேறோரிடத்தில் வாங்கினால்
குறைவாகத்தான் இருக்கும். அங்குள்ள ஒரு சிலர் வெளியில கம்மியா இருக்கு என பேரம் பேசுவார்கள். அது ஏனோ இவர்களிடம் பேரம் பேசும் ஆட்களை பார்த்தவுடன் சற்று ஆயாசமாக தான் இருக்கின்றது. இவர்களிடம் பேரம் பேசி என்ன கொண்டு செல்லப் போகிறார்கள். என்ன நூறு ரூபாயா அதிகமாக வைத்து விடுவார்கள் ? சூப்பர் மார்க்கெட்டிலும் அல்லது அமேசான்களில் அதிகமாக வைத்திருப்பது போல. எனக்கு கண்கூடாக தெரிந்தது வெளியில் நான் சென்று வாங்கினால் ஒரு பத்து இருபது ரூபாய் குறையத்தான் செய்யும். பரவாயில்லை. நம்மைத் தேடி வருகின்றார். அவரிடம் வாங்குவது தானே முறையாக இருக்கும்.
எனக்கு இந்த மாதிரி வெளியில் சென்று காய்கறி வாங்கிவிட்டு வந்தவுடன் இவ்வளவு சுத்தமாக இருப்பது, எனது தாத்தாவின் காலத்தை நினைவூட்டியது. பள்ளி முடிந்து புதன்கிழமை என்றதும் அவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். ஆயாவும், தாத்தாவும் சந்தையிலிருந்து வாங்கி வரும் தயிர்வடைக்காக. இன்றும் அவர்கள் நினைவு தினம் கும்பிடும் வேளையிலே, தயிர்வடை அவர்களுக்கு பிரியமானது என இலையில் படைப்பது உண்டு. அல்லி இலையில் சுற்றி அடியில் ஒரு காகிதம் வைத்து நூலில் சுற்றப்பட்டு இருக்கும் அந்த பொட்டலம். அதில் குட்டி குட்டி போண்டாக்கள். ஒன்றை எடுத்து வாயில் போட்டாலும், அது அப்படியே மெதுவாக தயிரின் புளிப்புச் சுவையோடு கலந்து அவ்வளவு அமிர்தமாக இருக்கும். இப்பொழுதும் இதை எழுத நாவில் எச்சில் ஊறுகிறது.
சந்தைக்கு சென்று விட்டு வந்தவுடன் நேரடியாக கிணத்தடிக்கு சென்று குளித்துவிடுவார். அனைத்து உடைமைகளையும் துவைத்து காயப்போட்டு விட்டுத்தான் தாத்தா உள்ளே செல்வார். இந்தப் பழக்கத்தை அப்பாவிடமும் கண்டதுண்டு. புதன்கிழமை சந்தை சென்று வந்ததும் என்ன தீனி இருக்கும் என்று பார்க்கும் நான் தான், அந்த காய்கறிகளை எங்கள் வீட்டில் எடுத்து அடுக்குவது உண்டு. அந்த வாரத்திற்கு தேவையான காய்கறிகள் என அனைத்தையும் பரந்த மூங்கில் கூடைகளில் கூறு போட்டு வைப்பதும் உண்டு. முக்கியமாக அப்பொழுது ஆப்பிள் மற்றும் மாதுளை கிடைப்பது அரிது. அன்றைய வார சந்தைக்கும் இன்று வாரம் ஒருமுறை வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இடையில்தான் தினமும் ஒருமுறை காய்கறிகள் வாங்க வேண்டும் என்பது வந்திருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன்.
அதுபோலவே அவர் காலத்தில் கசங்கிய, கிழிந்த, அழுக்குப்படிந்த ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நோட்டுகளை கடைகளில் வாங்க மாட்டார்கள். அதனை சோப்பு போட்டு கழுவி, புத்தம் புது நோட்டு போல ஆக்கி செலுத்தி விடுவார். அவர்கள் காலத்தில், 2 ரூபாயே சந்தை செலவுக்கு அதிகம் என்பார்.
இன்று கொரோனா காலத்தில் சில பழைய பழக்கங்களை நம்மை அறியாமல் நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
Saturday, August 01, 2020
ஊரும் நீரும்
இன்று நாம் குடிக்கும் நீர் RO மூலம் சுத்தப்படுத்தி சுகாதாரமான நீரை குடிக்கிறோம். கடைகளில் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துகிறோம். இப்பொழுது எங்கள் ஊருக்கு சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர் பல மைல் கடந்து தெருமுனைகளுக்கும், சிலரின் வீடுகளுக்குமே வருகிறது. தண்ணீரை வியாபாரமாக்கி உள்ளார்கள் எனும் சர்ச்சைக்கு செல்லவில்லை. அதேபோல காவிரியில் கலக்கும் கழிவுகளுக்கும் செல்லவில்லை. அதில் இருக்கும் சில பிரச்சினைகள் களையப்பட வேண்டும். அது பலரும் பேசிய விஷயம். ஆனால் இந்த சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கும் இந்த சுகாதாரமான நிலைமைக்கு எப்படி வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இந்த கட்டுரை.
எங்கள் ஊரின் ஆரம்பப் பள்ளியின் அருகில் ஒரு அமுக்கு பைப் இருக்கும். அது தான் எங்கள் ஊருக்கு வந்த முதல் அடி பம்ப். அதுவரையில் ஊரின் மத்தியில் இருந்த கிணற்றில் இருந்து மட்டுமே தண்ணீர் சேந்தி எடுத்துச் செல்வார்கள். அந்த கிணற்றை சுற்றியும் வட்டமாக இடுப்புயர சுவர். அதன் மேல் சம இடைவெளியில் மூன்று சுவர் தடிமனுக்கு தூண்கள். அதன் மேல் மூன்று பக்கம் இரும்பில் விட்டம். ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் முக்கோணமாக இருக்கும். ஒவ்வொரு விட்டத்தின் நடுவில் உருளை இருக்கும். அதில் கயிறு போட்டு பக்கெட் ஒன்றை கட்டி, அதனைக் கிணற்றில் விட்டு தண்ணீர் இறைப்பார்கள். சிலர் 'அட பாக்கெட் பக்கெட்டா ஊத்தி என்னைக்கு நாம்பறது" என குடங்களையே கயிற்றில் கட்டி ஒரே இழுப்பில் தண்ணீர் கிணற்றில் இருந்து எடுத்துவிடுவார்கள். ஊர்க்காரர்கள் புரளி பேசும் இடம். சைட் அடிக்க கூடுமிடமாகவும் இருக்கும். இது தான் ஒட்டுமொத்த ஊரின் நல்ல குடிநீருக்கான மையம்.
அப்பாவின் காலத்தில் அந்த ஊர்க்கிணறும் இல்லை. ஊர்ப் பெரியவர்களின் வீடுகளில் கிணறு இருக்குமாம். அதுவும் மூன்றே மூன்று. அதில் பள்ளிக்கு செல்லும்முன் தண்ணீர் பல நடை மோந்து ஊற்றி வைக்க வேண்டும். பெரும்பாலும் அந்த கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டால், காட்டுக்குள் இருக்கும் செம்மண்குழி கிணற்றில் எடுப்பார்களாம்.
அடி பம்ப் வந்தவுடன் நல்ல குடிநீருக்கான மையமாக இந்த பம்ப் மாறியிருந்தது. சைக்கிள்களில் இருபுறமும் குடங்களைக் கட்டிக்கொண்டு பலரும் எடுத்துச் செல்வார்கள். நாங்கள் இரண்டு பேர் சேர்ந்து இதனை வேகமாக அழுத்துவது ஒரு விளையாட்டு. அந்த பம்பை அடைத்து வேக வேகமாக அழுத்தி சுற்றிலும் தண்ணீரை பீச்சி அடித்து ட்ரவுசர் சட்டைகளை நனைத்து ஜாலியாக நடைபெறும் தினசரி சம்பவம். அதிலும் யாரும் இல்லாதபோது நாமே அடித்துவிட்டு வேகமாக ஓடிவந்து தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
தென்னை மரங்களை சுற்றி ஒரு பாத்தி கட்டி அதனை நிரப்புவது தான் கடைசி பிரிவேளையில் நடக்கும். கிட்டத்தட்ட அதில் தண்ணீர் நிரம்பும் வரை நீர் எடுத்திருப்போம். பள்ளி சுற்றிலும் இருக்கும் வேலிக்கும் தண்ணீரை ஊற்றவேண்டும். பூந்தோட்ட காவல்காரன் வந்த சமயம். அந்தோணி வண்டி என்று இரு நண்பர்கள் தண்ணீரை வேகமாக எடுத்து வருவார்கள். அடி பைப்பிலிருந்து சிறிய மேடு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக ஏறி பள்ளிக்கு கொண்டு சென்று மரங்களுக்கு ஊற்ற வேண்டும். இன்று பள்ளி சுற்றுப்புற சுவரோடு, கான்க்ரீட் காட்டிடத்துடன் அழகாக உள்ளது.
அந்த பைப்பில் தண்ணீர் வரும் தலைகீழான L வடிவ பைப்பில் பாக்கெட் மாட்டி தண்ணீர் பிடிப்போம். ஒருமுறை பிடிக்கும்பொழுது கீழே விழுந்து பெருவிரல் நசுங்கி, பக்கத்தில் இருந்த அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் தான் கட்டு போட்டுவிட்டு இருந்தார்கள். இப்பொழுது அந்த பம்பில் இருந்து மோட்டர் வைத்து மேல்நிலைத்தொட்டி கட்டிவிட்டார்கள். அதன் வழியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு வீதிக்கும் தண்ணீர் வரும். பத்தடி தொலைவில் சென்று பிடித்துக்கொள்ளலாம். அதன் அருகில் காவேரி நீர் பைப்பும் இருக்கும்.
இன்று போர் போட்டு் பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து தத்தளிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் இந்த அடி பம்புகளின் வரலாறு எத்தனை நெடியது. நீர் சம்பந்தமான நோய்களை தீர்த்ததில் பெரும் பங்கு வகித்துள்ளது.
Guinea Worm Water Based Disease என்ற ஒரு நோயை உலகம் முழுவதும் தீர்க்க உலக சுகாதார நிறுவனம் நிதியை ஒதுக்குகிறது. 1980 இந்த திட்டம் ஒருங்கிணைத்த இந்தியாவில் ஆரம்பிக்கிறது. பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருந்த தமிழகத்தில் நாலே வருடங்களில், நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்துள்ளது.
லிங்க் https://ncdc.gov.in/index1.php?lang=1&level=1&sublinkid=142&lid=73
இது என்ன நோய்? சேந்து கிணறு அமைப்புக்கு முன்பாக வெட்டப்பட்ட கிணறுகளில் படி வைத்து குடிநீரை எடுத்து வந்துள்ளார்கள். இன்றும் ராஜஸ்தானில் படிவைத்த பிரமாண்ட கிணறுகள் ஒரு வரலாற்று ஆவணம் போல அழகாக இருக்கும்.
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தி நோய் இருப்பவர்கள் மூலம் அந்த லார்வா குடிநீரில் கலந்துவிடும். L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல், காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல். இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழு பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் லார்வா செல்லுவதை தடுக்க ஆழ் துளை கிணறுகளை அமைத்து கைபம்புகளை அமைத்தல் தான். அதன்பின் தண்ணீரை காய்ச்சி குடித்தல்.
இந்த பிரச்சினை தமிழ் நாட்டில் பெரும்பாலும் தஞ்சை கும்பகோணம் பகுதிகளில் இருந்துள்ளது. குளம் அதிகமாக இருந்த இடங்கள் அவை.
நாடு முழுவதும் சுகாதாரத்திற்கான சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு "நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம்" தான். இதற்கான முக்கிய விஷயமாக கருதுவது நமது அரசு ஆரம்ப சுகாதார அமைப்பின் கட்டுமானம். அதனால் தான் நான்கு வருடத்தில் அதனை முடிக்க முடிந்துள்ளது.
இந்த நோய் புத்தகத்தில் கூறப்பட்ட ஒன்று, அது தவிர நீரினால் பரவும் காலரா, டயறியா போன்றவை எல்லாம் இன்று இல்லை. இன்று கொரோனாவுக்கு போராடும் நிலையில் அதற்கான கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
நான் அங்கு படித்துக் கொண்டு இருந்த போதுதான் , பள்ளியை ஒட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்கள். புதிதாய் ஒரு கட்டிடம் இன்றும் அன்று காலை திறப்பு விழாவில் போது இட்ட கேசரி, தக்காளி சோறும் தயிர் வெங்காயமும் நினைவில் உள்ளது. அப்பொழுதெல்லாம் காலை நடக்கும் புதுமனை புகுவிழாக்களில் இந்த மெனுதான். சற்று வசதி உள்ளவர்கள் மெதுவடையும் போடுவார்கள்.
ஆரம்ப காலத்தில் இவை வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்து கொண்டுள்ளது. சில பல சமூகப் பிரச்சினைகளும் இந்த மருத்துவமனையில் தங்கி வேலை பார்க்கத்தவர்களிடம் நடந்தும் உள்ளது அதெல்லாம் வேறு விசயம். இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையம் கிட்டத்தட்ட 5000 மக்களுக்கானதாக இருந்துள்ளது. இவை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவர்களின் முக்கிய வேலை வருமுன் காப்போம் என்பது. அதாவது இவர்களின் பணி அரசின் சுகாதார திட்டங்களை கடைக்கோடி கிராமம் வரை சேர்ப்பது . குடும்ப நலம், தடுப்பூசி, தொழுநோய் தடுப்பு, பள்ளி சிறுவர்களின் நலம் , தொற்று பரவாமல் தடுப்பது என்கிறார் இந்த அமைப்பில் தனது பணியை ஆரம்பித்து அதில் ஓய்வு பெற்ற என் பக்கத்துக்கு ஊர் மாமா. அவரிடம் பேசியபோது இந்த சுகாதார அமைப்பை உருவாக்க அவர்களின் போராட்டங்களை கூறினார்
இவர்கள் டீம் தான் பள்ளிக்கு அம்மை தடுப்பூசி போட வருவார்கள். இவர்களின் ஜீப் வந்ததும், 'அய்யயோ இன்னிக்கு ஊசி போட்டு் விடுவார்களோ' என பயந்ததும் உண்டு. ஒரு வழியாக அழுது புரண்டு போட்டுக்கொண்டால் ஊசி போட்ட இடம் வீங்கிக் கொள்ளும், அன்று வெந்நீர் ஒத்தடம் கொடுப்பார்கள்.
வந்ததும் காப்போம் என்பது அரசு மருத்துவமனையின் கடமை. ஆரம்ப துணை சுகாதார நிலையித்தின் வேலை வருமுன் காப்பது. அப்பொழுதெல்லாம களத்தில் அதிகமாக வேலை செய்தார்களாம். இப்பொழுது வேலை செய்ததை எழுதி வைப்பதில் உள்ளதாக கூறினார்.
அந்த ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் 85களில் கட்ட ஊரில் பேச்சுவார்த்தை நடத்தி, இடம் வாங்கி கட்டி உள்ளார்கள். இந்த அமைப்பு வியப்பில் ஆழ்த்திக்கொண்டு உள்ளது. குடிநீர் சுகாதாரத்தில் எங்கிருந்து எங்கு வந்துள்ளோம் என்பதுவும் சாதனை தான்.
Emotional intelligence கற்போம்...
Emotional intelligence - உணர்வுசார் நுண்ணறிவு இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்பு. உலக பொருளாதார நிறுவனம் வரும் காலங்களில், ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு EI ஸ்பெசலிஸ்ட்டின் தேவை கண்டிப்பாக இருக்கலாம் என்கிறது. கூடவே இப்பொழுது உயர் பதவியில் இருப்பவர்கள் EI அதிகம் உள்ளவர்கள் எனபதை கோடிட்டுக் காட்டுகிறது. IQ நிறைய இருப்பர்களாக இருந்தாலும், EQ மட்டுமே அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அமர்த்தி வைக்கிறதாம். IQ மட்டுமே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் தேங்கி விடுகிறார்கள்.
"எப்பொழுதெல்லாம் உணர்ச்சி வயப்படுகிறோமோ, அப்பொழுது நமது IQ ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்ளும்" என்கிறார் Daniel Goleman. இவர் தான் உணர்வுசார் நுண்ணறிவின் தந்தை. இவரது Emotional intelligence புத்தகம் 1995ல் வெளிவந்துள்ளது.
உணர்வுசார் நுண்ணறிவு எந்த கால கட்டத்திலும், வயதிலும் அதனை வளர்த்துக்கொள்ளலாம். வேறு எந்தப் பின்னணியும் தேவை இல்லை. EIக்காக ஐந்து முக்கியக் குறிப்புகளை கூறுகிறார். இவை நமக்கு வேறு விதமான பெயர்களில், வேறு வேறு தளங்களில் சொல்லப்பட்டும் இருக்கலாம்
Self-awareness - நம்மை அறிந்து கொள்வது - நான் யார்
Self-regulation - நம்மை முறைப்படுத்திக் கொள்வது - ஒழுக்கம்
Motivation - நமக்கான உந்து சக்தி - முனைப்பு
Empathy - மற்றவர்களைப் புரிந்து கொள்வது - 'அனுசரிச்சு போ'
Social skills - மற்றவர்களிடம் எப்படி உரையாடுகிறோம் என்பது - 'இனிய உளவாக இன்னாத'
இப்பொழுது இதனைப்பற்றி விளக்கி கூறப்போவதில்லை.
IQவை அப்படியே ப்ரோக்ராம் செய்தால் அது "ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" (AI). பல ரோபோக்களை உருவாக்கி உலவவிட முடியும். மனிதன் செய்ய முடியாதவற்றையும் ரோபோக்கள் கனகச்சிதமாக செய்யும். IQ வழி வந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் AI கும், IQ மட்டுமே நிறைந்த புத்திகூர்மை அதிகம் வாய்ந்த மனிதர்களுக்கும் என்ன வித்யாசம்? இங்கே தான் இந்த 'உணர்வு சார்ந்த நுண்ணறிவின்' தேவை மனிதனை இயல்பான, எதார்த்தமான மனிதன் ஆக்குகிறது. ரோபோவிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவது உணர்வு தான்.

படையப்பாவில் ரஜினிகாந்த் , சௌந்தர்யாவிடம் காதலை கூற செல்வார். சௌந்தர்யாவை பார்த்து படபடப்பாக உளறுவார். அதுதான் ஒரு சாதாரண மனிதர் செய்வது. அதே படத்தில் ரஜினி, ரம்யாகிருஷ்ணனிடம் பஞ்ச் பேசும்போது படபடப்பு இல்லாமல் தெளிவாக பேசுவார். இது உணர்வினை முறைப்படுத்திய மனிதன் செய்வது.
திரைப்படங்ககள் என்றாலும், இந்த ஹீரோக்களின் பிம்பங்கள் கட்டமைக்கப்படுவது உணர்வுகளின் மீது. அவர் கோபம் தெறிக்க பேசும் போது நாமும் கோபம் அடைய நேரிடும், அவர்கள் காமெடி செய்யும்போது நாமும். அந்த உணர்வுகளைக் பார்த்துக்கொண்டு இருக்கும், மனிதர்களிடம் கடத்துவது தான் இயக்குனரின் வெற்றி. அந்த உணர்வுகளுக்கு ஆட்படுபவர்கள் அதற்கான செயல்களில் இறங்குகிறார்கள்.
சற்று நமது செய்தி தொலைக்காட்சிகளின் விவாதங்களைப் பார்த்தால் சில விஷயம் புரியும். சிலர் ஆணித்தரமாக கருத்தை ஒட்டி மட்டுமே பேசுவார்கள். எதிர்தரப்பு என்ன மாதிரியான கேள்வியை எழுப்பினாலும், கோபம் வரவே வராது. பொறுமையாக நிதானமாக பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு சிறிய கேள்விக்கே முதல்வன் திரைப்படத்தில் வரும் ரகுவரன்-அர்ஜுன் பேட்டி காட்சி போல கோபம் அடைந்து விடுவார்கள். இங்கு நான் உணர்வினை பற்றி மட்டுமே பேசுகிறேன். அங்கு பேசப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை அல்ல. நிறுத்தி நிதானமாக பேசுபர்கள் பொய்த்தகவலையும் கூறலாம், கோபமாக பேசுபவர்கள் உண்மையாகவும் இருக்கலாம்.
ஒரு மிகச் சாதாரணமான சொல் நம்மை எவ்வளவு காயப்படுத்தி விடுகிறது. அல்லது ஒரு தவறான சொல் பிரயோகம், நம்மை எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகிறது. அந்த சொல் அதற்கான எதிர்வினை இவை யாவும் என்ன செய்யும் என்பதை இன்றைய சமூக வலைத்தளங்களில் காணலாம். ஒரு பைசாவுக்கு உபயோகமில்லாதவை ட்ரெண்டிங் அடிக்கும், வனிதா-லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சண்டைகள், மகேஷ் பாபு பிறந்தநாள், அஜீத் விஜய் படத்தின் வசூல், போன்ற விஷயங்கள். அது ஒருவகையில் அதற்குள் நம்மை இழுத்து மன அழுத்தத்தை கூட்டி தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்கி விடுகிறது. நல்ல விஷயங்களுக்காக வரும் ட்ரெண்டிங் கூட அதில் நாம் பங்கேற்றுவிட்டு நமது வேலையைப் பார்க்க சென்றுவிடலாம். ஆனால் அதற்குள்ளேயே முழ்கி கிடப்பது தான் பிரச்சினை. அதுவும் சில நேரங்களில் சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் சிலர் தீர்ப்பு எழுதி விடுவதும் உண்டு.
இந்த உணர்வுகள் நம்மை எதுவும் செய்யாமல் இருக்க, அதே மனநிலையில் சுற்றிக்கொண்டு இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?
லண்டனில் இருந்தபோது செமினாரில் கலந்துகொள்ள நேரிட்டது. அந்த செமினாரை மில்லியனர் மாங்க் என்று சொல்லக்கூடிய Eric Ho என்பவர் நடத்தினார். ஒரு மணி நேரம் தான் பயிற்சி. ஆரம்பித்தவுடன் "டேக் எ டீப் ப்ரீத்" என்றார். மூச்சை இழுத்ததும் சில நொடிகளுக்குப்பின் "அவுட்" என்றார். அவருடைய பேச்சுக்கு இடையே, பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பங்குபெற்றவர்களை செய்ய சொல்லிக்கொண்டே இருந்தார். அதேபோல ஒவ்வொருவரும் மூச்சை இழுத்து வெளியே விட்டனர். அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார். "நீங்கள் ஒவ்வொரு முறை மூச்சை வேகமாக இழுத்து வெளியில் விடும்போது, உங்கள் மூளையில் இருக்கும் மேகம் விலகி விடுகிறது. சிந்தனையை ஒருமுகப் படுத்த முடியும்." என்றார் அதாவது மொக்கத்தனமான சிந்தனைகள் வெளியேறும். வேறு ஒரு பக்கம் நமது மைண்ட் டீ குடிக்கச் சென்றிருந்தால் தரதரவென கட்டி இழுத்து அந்த இடத்திற்கு கொண்டு வரமுடியும் என்கிறார். அது இயல்பாகவே நமக்கு நடக்கும். நாம் ஒரு சவாலான வேலையை செய்து முடித்து பெருமூச்சு விடுவது ஒருவித ஆசுவாசம் அளிக்கும்.
தொடர்ந்து படிக்கும் முன்பு இப்ப நீங்க ஒருமுறை செய்து பாருங்கள். எப்படி உணர்கிறீர்கள் ?
அதேபோல இன்னுமொரு கார்ப்பரேட் பயிற்சின் போதும் மூச்சு பயிற்சியை வலியுறுத்தினார்கள். தினமும் மூன்றுமுறை சில நிமிடங்கள் மூச்சை இழுத்து விட கூறினார்கள். காலையில் அலுவலகம் சென்றதும் ஒருமுறை. ட்ராபிக்கிலிருந்து, பேருந்து நெரிசல்களில் சிக்கியும் ஒருவழியாக அலுவலகம் சென்று அவரவர் இருக்கையில் அமரும்போது இயல்பாகவே ஒரு பெருமூச்சு விட்டு நம்மை இலகுவாக்கிக் கொள்வோம். இதனை மூச்சு பயிற்சியாக மாற்றச் சொல்கிறார்கள். மறுமுறை அலுவலகம் முடிந்து வீடு சென்றதும் செய்யவேண்டும். அலுவலக டென்ஷன்களை வீடுகளில் காட்டாமல் இருப்பதற்கு இது உதவும். தூங்கச் செல்லும்போது மூன்றாம் முறை. அன்றைய நாள் எப்படியாக கழிந்திருந்தாலும் நிம்மதியான உறக்கம் அடைவதற்கு. இன்றைய கரனோகாலத்தில் WFH இருப்பதில் முதல் இரண்டும் நடக்க சாத்தியமில்லை. ஆனால் மூச்சு பயிற்சி உதவும்.
இந்த மூச்சு பயிற்சிகளை எனக்கென்னவோ நமது ஊரில் சம்மனங்கால் போட்டு, கை விரல்களை அபிநயம் பிடித்து யோகா, ப்ராணாயாயம் என்ற ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைத்துளார்கள் என நினைக்கிறேன். மேலே சொன்ன மூச்சுப்பயிற்சிகள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு செய்தது தான். டேனியல் கோல்மேன் மூச்சுப்பயிற்சி என்பது நம்மை முறைப்படுத்திக் கொள்வது என வலியுறுத்துகிறார். மேற்கத்திய நாடுகள் இந்த பர்னிச்சரை அழகாக உடைத்து மக்களிடம் சேர்த்து உள்ளார்கள்.
அடுத்தாக ஒரு நடை வெளியே உலவி வரலாம். வெளியில் இயற்கையும், மனிதர்களும் கற்றுக்கொடுக்கும் பாடம் அலாதியானது.
அடுத்தாதாக multi-tasking அவ்வளவாக வேலை செய்வதில்லை என்கிறார். ஒரு வேலையின்போது இடையில் நிறுத்தி fb பக்கம் அல்லது ஒரு whatsapp பார்ப்பது அந்த வேலையை செய்வதில் தொடர்ந்து இருக்கும் ஈடுபாட்டை குறைக்கிறதாம்.
மற்றவர்களிடம் Have a nice day ன்னு சொல்றதுக்கு பதிலா, Make your day ன்னு சொல்ல சொல்கிறார்.
அதையே நமக்கு நாமே சொல்லிக்கொண்டால்
"Make my day".
கிட்டத்தட்ட அஜீத் படத்தில் வரும் ஒரு பஞ்ச்..."ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும் நானா செதுக்குனது...".
நாமே செதுக்குவோம் நம்முடைய தினத்தை...
Make your day
இன்றைய கொரோன காலம் பல திருப்பங்களை நிகழ்த்திக்கொண்டு உள்ளது. அதில் ஒன்று வேகமாக மனிதர்களை தொழில்நுட்பத்தின் பக்கமாக திருப்பி விட்டுள்ளது. நிறுவனத்திற்கு வரும் காலத்தில் AI மற்றும் EI இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல தேவை. AI போன்ற அட்வான்ஸஸ்ட் டெக்னாலஜி புகுத்தாத நிறுவனம் வளர முடியாது. இதேபோல வழி நடத்துபவர்கள் EI அதிகம் இருப்பவராக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பாதையில் செல்ல முடியும். இது நமக்கும் மனிதர்களுக்கும் பொருந்தும். EI கற்போம்.
Tuesday, June 30, 2020
நூறு நாள் கரோனா
நூறு நாள் ஓட்டம் ஆரம்பித்தள்ள தற்போதைய நிலையில், 100 நாட்கள் லாக் டவுன் முடிந்துள்ளது. தினப்படி தமிழக கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் இரண்டு இலக்கத்தில் இருந்து மூன்று இலக்கமாக மாறிய பொழுது நமக்கு கரோனாவின் மீதான பயம் போயிருக்க கூடும். இந்த மாத ஆரம்பத்தில் இலக்கம் 4 ஆக மாறி அதிலும் கடந்த சில நாட்களாக 3000 தொட்டு உள்ளது. மற்ற நாடுகளில் உச்சத்தை தொட்டு இறங்குமுகம் கண்டுவிட்டது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக தற்போது, புதிய புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டே இருக்கின்றது.
ஆனாலும் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர, பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது போல ஒரு தோற்றம் உள்ளது. கிரகணத்தன்று கூட மக்கள் வெளியில் வராமல் முடங்கி இருந்தார்கள். கை கழுவினால் அல்லது மாஸ்க் மட்டும் அணிந்திருந்தால் போதுமானது என்ற ஒரு மூடநம்பிக்கையும் பரவி வருகின்றது. சிலர் அது பற்றியும் கவலைப்படுவதில்லை.
இங்கும் பெங்களூரில் கடந்த சில வாரங்களாக, குறிப்பாக இந்த மாதத்தில் அனைத்து கடைகளும் தாராளமாக திறந்தே உள்ளது. ஏதோ கண்டிப்பாக தேவை என வார நாளில் சென்றிருந்த போதும் கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்தே உள்ளது. கடைவீதி அதற்கான நெரிசலோடு, பரபரப்பாக உள்ளது. பெங்களூரில் 30% மக்களோடு சில அலுவலகம் இயங்க ஆரம்பித்துவிட்டது. நண்பர்கள் செல்ல ஆரம்பித்து உள்ளார்கள். போக்குவரத்து சொற்பமாக உள்ளதாக சென்று வருபவர்கள் கூறுகிறார்கள். நெரிசலும் இல்லை.
இரு வாரங்களுக்கு முன் எந்த உணவகமும் திறக்கப்படவில்லை. இந்த வாரங்களில் அதுவும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று பலர் வழக்கம்போல அமர்ந்து உணவு உண்டு கொண்டு தான் இருந்தனர்.
இப்படித்தான், சில வாரங்களுக்கு முன் மகளின் பள்ளி கட்டணத்தை கட்டுமாறு தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தோம். 'வேறு மாற்று வழி என்ன இருக்கிறது' என்பது தெரியாத ஒரே காரணத்தினால் கட்டணத்தைச் செலுத்தி புத்தகங்களை வாங்க முடிவெடுத்தோம். பள்ளி எப்போது திறக்கும் என்பது கேள்விக்குறி. செப்டம்பரா, டிசம்பரா அல்லது இந்த கல்வி வருடம் முழுவதும் இப்படியாக சென்று விடுமா? இன்றைய நிலையில் யாரும் விடை சொல்ல முடியாது.
இரண்டு கிலோ மீட்டர்தான் பள்ளி. இருந்தாலும் கார் எடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது என அதில் செல்ல முடிவெடுத்தேன். பள்ளியின் பெருங்கதவின் முன் சீருடை மட்டும் அணிந்த காவலாளி. அவருக்கு முகக் கவசம் இல்லை. 'பீவர் கண்' எடுத்து நெற்றியில் வைத்தார். அதை பக்கத்தில் கொண்டு வரும் பொழுது நமக்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது. வாகன நிறுத்துமிடத்தில் கணிசமாக கார்கள். காருக்கும் சோசியல் டிஸ்டன்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டு, முகக்கவசம் சரி செய்துகொண்டு இறங்கி வெளியேறினேன். பிரமாண்டமான போர்டிகோவின் முன்பு ஒரு காவலாளி நின்று காரோனா தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் (நன்றி ஜெகதீசன்). அதையும் வாங்கி வழக்கம்போல கைகளைக் குடிக்கச் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பறையில் ஒரு பெண் அனாவசியமாக உட்கார்ந்து இருந்தார். முக கவசத்தை கவனமாக டேபிளுக்கு போட்டு இருந்தார். ஆங்காங்கு மைதானத்தில் பெற்றோர்கள் ஜோடியாக. குழந்தைகள், அவர்கள் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாராவாரம் சுற்றிய கால்கள் சும்மா இருக்காது.
உள்ளே சென்று வராண்டாவில் சுற்றும் முற்றும் பார்த்த படியே நடந்து பணம் கட்டும் இடம் வந்தடைத்தேன். ஜூன் முதல் வாரங்களில் பள்ளிகளில் இருக்கும் பட்டாம் பூச்சிகளின் ஆட்டமும், ஓட்டமும் இல்லை. க்யா, முயா என்ற கோழிக்குஞ்சு சத்தமும் இல்லை. கோடை கால விடுமுறையில் பள்ளி இருப்பது போல அங்கங்கு சிலர். எனக்கும் முன்பு இருந்தவர் சென்றதும் காசாளரரின் முன்பு நின்றேன. பணம் கட்டிய புகைப்படத்தை மொபைலின் வழி காண்பித்து விட்டு எங்கும் தொடாமல் நின்று கொண்டிருந்தேன். பக்கத்து 'கவுண்டரில் ஒருவர் கண்ணாடிக்கு முன்பு படுத்துக்கொண்டு, உள்ளிருந்த காசாளரிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு முன் இருந்த காசாளரும் வாய்க்கூட்டை கீழே டேபிளின் மீது போட்டிருந்தார். இந்த வருடம் இன்னும் ஒரு மொழிப்பாடம் சேர்த்து கூடுதலாக பணம் கேட்டார்கள். 'அடேய்களா, பள்ளியே நடக்குமான்னு தெரியலை, இதுல இது வேறயா' என மைண்ட் வாய்ஸை முழுங்கிக்கொண்டு
"Paytm, Google pay இல்லைங்களா?"
"இல்லை" என்றார். இப்பொழுது ATM கார்டு உபயோகித்து தான் ஆகவேண்டும். ஒரே ஒரு விரலை மட்டும் வைத்து அழுத்தி, அந்த கார்டை பத்திரமாக வேறு பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
அவர் கொடுத்த 'பில்லை' வாங்கி பட்டும் படாமல் அதனை எடுத்துக்கொண்டு, புத்தகம் வழங்கும் இடத்திற்கு மேலே ஏறினேன். அங்கு இருந்த பணியாளர்கள் மட்டும் கையுறையும், முக கவசமும் போட்டிருந்தார்கள். புத்தகம் நோட்டு மூட்டைகளைத் தூக்க முடியாமல் இறங்கி, மீண்டும் கார் எடுத்தேன். ஒரு சற்று சுற்றிவிட்டு செல்லலாம் என்று வேறு பாதையில் வண்டியை திருப்பினேன். பக்கத்து ஊரில் கொரோன உள்ளது என்று அந்த ஊருக்கு மட்டும் தடுப்புக் கட்டைகளை வைத்து முடக்கி இருந்தனர். அந்த வழியாக எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. அந்த நுழைவாயிலில் 2 காவல் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள். 24 மணி நேரமும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்களா? காவல் அதிகாரிகளுக்கான பணி அழுத்தம் இங்கு பேச வேண்டியுள்ளது. இதற்காக லாக்கப் கொலைகளை ஒத்துக்கொள்ள முடியாது.
கரோனா பெங்களூரில் ஆரம்பித்த மார்ச் முதல் வாரத்தில் இந்த வருடம் கோடைவிடுமுறை நமக்கு இல்லை என்று தான் நினைத்திருந்தேன். எழுதி இருந்தேன். உலகம் முழுவதும் இணைந்து ஒத்துழைத்து தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தால், ஜூலை வாக்கில் அதனை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்று அப்பொழுதே சீனாவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு ஊசி இப்பொழுது மனிதர்களுக்கான சோதனையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, மற்றும் பிரேசிலில் சோதனைக்கு தயார் படுத்துகின்றனர். இந்த வருட இறுதியில் தான் கிடைக்கும் என தெரிவிக்கிறார்கள்.
சென்ற வாரத்தில் லண்டனில் இருக்கும் சக பணியளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அங்கும் இங்கு நடப்பது போலவே 'மக்களுக்கு கரோனா பற்றிய பயம் இருப்பது போல தெரியவில்லை' என்றார். Pornmoutth என்ற பீச் பகுதியில் அவரது வீடு இருப்பதாக கூறினார். கடந்த மே இறுதியில் நீண்ட வார இறுதி கிடைக்கும். வழக்கம் போல ஒவ்வொரு வருடமும் கூடும் கூட்டம், இந்த வருடமும் குழுமி இருந்தது என்றார். இத்தனைக்கும் அப்பொழுது பொது கழிப்பறைகள் போன்றவை அங்கு திறக்கப்படவில்லை. கரோனா உச்சத்திலும் இருந்தது. உலகமெங்கும் மக்கள் அடைந்து கிடந்து வெளியே செல்லவே நினைக்கின்றார்கள்.
அமெரிக்க நண்பர்களும் சோதனை செய்யும் குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகளுக்கு COVID-19 இருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் குறைந்ததாக தெரியவில்லை என்கின்றனர்.
நம்மூரில் கரோனாவினால் இறப்பு எல்லா வயதினரையும் பாதித்துள்ளது. இளம் வயதினர் 'ஹார்ட் அரெஸ்ட்' என இறந்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஓரிரு குழந்தைகளும் இறந்துள்ளதாக கூறுகிறாரகள். இந்தக் கரோனாவின் மியூட்டேசன் என்பது வேறு வேறு நிலையில் வீரியம் அதிகமாகிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் அதிகமாக இருக்கின்றது என்று சற்று சாதரணமாக எடுத்துக்கொண்டு வெளியில் சுற்ற மக்கள் கிளம்பி விட்டார்களோ? அல்லது வருவது வரட்டும், இன்றைய உணவுக்கு பாப்போம் என அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்களோ?
முதல் வகையான மக்கள் தான் இங்கு பிரச்சினை என கருதுகிறேன். இரண்டாம் வகையான தினக்கூலி மக்களுக்கு வேறு வழி இல்லை. அன்று கிடைப்பது தான் அவர்களுக்கு உணவு. அரசாங்கம் அனைவருக்குமான உணவு கொடுக்க முடிவதில்லை. அதிலும் வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு இன்னும் சிரமம் தான். அரசின் உதவியும் கிடைக்காது.
100 வருடங்களுக்கு முன் வந்த H1N1 ஃப்ளு தொற்றுநோய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு இருந்ததாம். அன்றைய மக்கள் தொகையில் மூன்றில் 1 பகுதியினர் இறந்து போய் உள்ளார்கள் என்கிறது வரலாறு. நவம்பரில் இன்னுமொரு உச்சம் இந்தியாவில் இருக்கும் என்கின்றனர்.
இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை விகிதாசாரப்படி இது குறைவு தான். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தென் மாநில, வளர்ச்சி அடைந்த மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களின் புள்ளி விவரங்கள் (Data) சரியாக இல்லை, என்பதை covid -19.org சுட்டுகிறார்கள். நம் வீட்டுக்குப் பக்கத்தில் பாதிப்பு உள்ளதா இல்லையா எனும் தகவல்களை தெரிந்து கொள்வது தான் இன்றைய தேதியில் அவசியமானது..
நமது தமிழகத்தில் எண்ணிக்கை அதிகம் இருக்க காரணம், அதிகப்படியான சோதனைகள். அதுவும் நல்ல விஷயமே. இப்பொழுது தான் ஸ்டேஜ் 3 எனும் சமூகத்தொற்று அடைந்ததாக கருதுகிறேன். அது இன்னும் சில மாதங்களில் விரிவைடையும். அவரவர் உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு, ரொம்பவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம். வந்தபின் போராடுவதை விட, நாம் தான் வருமுன் காக்க வேண்டும். சுயகட்டுப்பாடு இல்லாவிடில் என்ன நடக்கும் என்பது தெரியாது.
https://www.hindustantimes.com/india-news/oxford-vaccine-in-final-stage-of-clinical-trials/story-sVJz9DRIR4Lm9DRA7261pM.html
Monday, June 15, 2020
ஊரும் பெயரும்
இந்த பெயர் மாற்ற மீம்கள் 'மெட்ராஸை' சுற்றிப்பார்க்க வைத்தது. சென்னையில் முதலில் எங்களுக்கு தங்க கிடைத்த இடம் எம்எல்ஏ ஹாஸ்டல். தலைமை செயலகமாக கட்டப்பட்டு இப்பொழுது மருத்துவ மனையாக உள்ள இடத்தில் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி இருந்தது. 'எம்எல்ஏ-க்கு எதுக்கு விடுதி?' என ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அந்த ஓமந்தூரார் தோட்டத்தில், தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெரிய தனித்தனி அடுக்கக வீடு உண்டு. கூடவே அவர்கள் பரிந்துரைத்தால், அவர்களின் சார்பாக ஓரிரு அறைகளும் புது அல்லது பழைய விடுதியில் கிடைக்கும். அங்கு பெரும்பாலும் ஊர்ப் பிரச்சனைகளுக்காக கோட்டையில்(Fort) இருக்கும் தலைமை செயலகத்திற்கு வருபவர்களாக இருக்கும். வருடக்கணக்கில் தங்கிய சிலரையும் பார்த்தது உண்டு. சென்னையின் மையப் பகுதியில் அடர்த்தியான மரங்களின் ஊடக பரந்து விரிந்த அதன் அழகும், கூடவே அங்கு வளைய வந்த அதிகாரமும், சொகுசும் சற்றே மிரட்டியது.
அதனை ஒட்டிய பகுதிதான் திருவல்லிக்கேணி. Triplicane- என்று தான் அனைவருமே கூறுவார்கள். இரண்டும் ஒரே பெயர் என அங்கு இருந்த போதுதான் தெரிந்தது. அதன் வழியாக செல்லும் பேருந்து, 'Anna Square' என ஆங்கிலத்திலும் அண்ணா சதுக்கம் என தமிழிலும் இருக்கும். இப்படி பல ஊர்களின் பெயரும் இரு மொழிகளிலும் பேருந்துகளின் பலகைகளில் இருக்கும்.

சென்னை பல வித்தியாசமான பெயர்கள் கொண்ட பெருநகரம். நெடுநீண்ட வரலாறு கொண்டது. கிட்டத்தட்ட 300 வருடங்கள் ஆங்கிலேயர்கள் இருந்ததால் அதன் பெயர்கள் அவர்களின் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீதிக்கும், ஒவ்வொரு சாலைக்கும், ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு பெயர்கள் இருந்ததை அறிந்துகொள்ள முடிந்தது. சில இடங்களுக்கு மூன்று பெயர்கள் கூட இருக்கும், பூந்தமல்லி-பூவிருந்தவல்லி-Poonamallee அதில் ஒன்று. ஒவ்வொரு பேட்டையில் முடியும் இடங்களையும் பேட் என்று 'இஸ்டைலாக' தான் பீட்டர் விடுவார்கள். சைதாபேட், குரோம்பேட், தேனாம்பேட், ராயப்பேட் என்று பீட்டர் விட, நாமும் பழகிக் கொள்ள வேண்டும். 'பேட்டை-பேட்' போன்றே 'பாக்கங்களும்' 'பாக்' ஆகி இருந்தது. சேப்பாக், கீழ்பாக், புரசைவாக், மீனாம்பாக் என சேப்பாக்கம் என்பதின் 'கம்' விட்டுவிடுவார்கள்.
அண்ணாசாலை- மவுண்ட் ரோடு குழப்பம் நெடியது. எங்கு ஆரம்பிக்கும் எங்கு முடியும் என ஆரம்பத்தில் தெரியாது. அண்ணா சாலையில் நின்று கொண்டே 'ஏங்க, இந்த மவுண்ட் ரோட்டுக்கு எப்படி போகணும்?' என்பதை பலரும் அனுபவித்து இருக்கக்கூடும்.
பரங்கிமலை என்பதும், செயின்ட் தாமஸ் மவுண்ட் என்பதுவும் ஒன்று என அறிந்துகொள்ள சற்று நாட்கள் ஆகியிருந்தது. திருமயிலை எனும் பறக்கும் ரயில் நிலையத்தின் பெயரைப் பார்த்துதான் பலருக்கும் மயிலாப்பூர் என்பதன் உண்மையான பெயர் தெரிய வரும். இன்டர்வியூக்கான ∴பைலை தூக்கிக்கொண்டு காலை நேரங்களில் கிளம்பி விடுவோம். மாலையில் நண்பர்கள் ஒன்று கூடி, அன்று சென்ற இடங்களின் பெயரை அலசும்போது தான், ஒரே இடத்தின் இருவேறு பெயர்களை தெரிந்து கொள்ள நேரிடும்.

எம்ல்ஏ ஹாஸ்டலில் நான்கு மாதம் இருந்துவிட்டு, அப்பொழுது புறநகராக இருந்த வேளச்சேரிக்கு மாறினோம். சைதையில் எந்த பேருந்து வேளச்சேரி செல்லும் என்பதில் குழப்பமாகும் என்பதால், சின்னமலையில் இறங்கித் தான் வேளச்சேரிக்கு பேருந்தைப் பிடிப்போம். மாநகரப் பேருந்தில் கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயரைக் குறிப்பிட்டுதான் பெரும்பாலும் பயணச் சீட்டு கேட்பார்கள். பின்புறம் படியை ஒட்டிய அவரது இருக்கையில் தான் அமர்ந்திருப்பார். ஊரில் இருப்பது போல, சென்னையின் நடத்துனர்கள் கூட்டத்தினுடாக புகுத்து வந்து பயணச்சீட்டு வழங்க மாட்டார்கள். அந்த நெரிசலில்,முன்பு உள்ளவரிடம் சில்லறை கொடுத்து 'சின்ன மலை ஒன்னு வாங்குங்க' என கூறவேண்டும். அந்த சில்லரை ஒவ்வொருவர் கையாக மாறி நடத்துனரை அடையும். அவரிடம் போவதற்குள் அது 'லிட்டில் மவுண்ட்டாக' மாறி இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் கேட்பது தான் அங்கு இயல்பாகவே அனைவருக்கும் வரும்.
பெசன்ட் நகர் பீச்சுக்கு எலியட்ஸ் பீச் என்ற ஒரு பெயரும் உண்டு. எழும்பூர் - Egmore குழப்பத்தில் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுனரிடம் சண்டை போட்ட கதையும் உண்டு. Foreshore estate - பட்டினப்பாக்கம் எனப்படும். இன்னும் இதில் விடுபட்ட நிறைய இடங்கள் உள்ளது. பலவற்றிற்கு அப்படியே மொழி மாற்றி இருப்பார்கள் அதில் ஒன்று தீவுத்திடல் எனும் island grounds. எழிலகம் எனும் அழகான தமிழ்பெயர்கள் கண்டு வியந்ததும் உண்டு.
இதில் குறிப்பிட தோன்றியது சென்னை சென்ட்ரலில் இருந்து, சென்ட்ரல் ஜெயில் பாலம் ஏறி இறங்கியதும் பல்லவன் சாலையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலின் பெயர். முனீஸ்வரன் கோவில் சென்னையிலும் உள்ளதா என நினைக்கையில், Bodygurad முனீஸ்வர் எனும் வித்தியாசமான பெயர் ஈர்க்கும். எப்படி 'பாடிகாட்' முனீஸ்வரர் ஆனார் என்பதில் தான் சென்னை மக்களின் பேர் வைக்கும் திறனை வியக்க வேண்டும். வேறு ஒரு மொழியை உள்வாங்கிக் கொள்வதில் சென்னை மக்கள் எப்போதும் தனி.
1995 - Bombay to Mumbai , 1996 - Madras to Chennai, 2001 - Calcutta to Kolkata என இந்திய பெருநகரங்களின் பெயர்கள் மாற்றம் அடைந்து கொண்டு இருந்தது. எனக்கு சென்னையை விட மெட்ராஸ் 'கெத்தாகத்' தான் இருந்தது. இப்பொழுது சென்னை பழகிவிட்டது. சென்னை நண்பர்களும், அங்கு தலைமுறைகளாக வாழும் மக்களும் 'மெட்ராஸ்'(Madras) என்றுதான் கூறுவார்கள். அங்கு நீண்ட காலம் இருந்த உறவினர் அப்பொழுது "என்னப்பா நீங்க எல்லாம் மெட்றாஸ்ன்னு சொல்லாம, சென்னைன்னு சொல்லறீங்க.. எங்களுக்கு எப்பவும் மெட்ராஸ் தான்" என்பார்.
ஊரிலும் பலருக்கு இன்னமும் மெட்ராஸ் தான். ஊரில் எனைப் பார்த்ததும் விசாரிப்பவர்கள் "ஏப்பா எங்க இருக்க, இப்ப என்ன பண்ணற" என்னும் அன்பர்களின் கேள்விக்கு சட்டென 'மெட்ராஸ்' என்றுதான் வரும். இப்படித்தான் ஒருமுறை "அப்பறம் மெட்ராஸ்ல எங்க இருக்க" என்ற கேள்வி வந்தது. " வேளச்சேரிங்க" என்றேன். " அட.. மெட்ராஸ்ல வேலை செய்யறேன்னு தெரியுது.. அங்க எங்க இருக்கன்னு கேட்டன்" என்று கேட்பார்கள் நம்மைக் கலாய்த்து விட்டு செல்வார்கள் அந்த வெள்ளந்தி மனிதர்கள்.
சென்னை தவிர மற்ற ஊர்களில் இந்த மாதிரியான பெயர்க் குழப்பங்கள் குறைவுதான். 'ஊட்டிக்கு ஒரிஜினல் பெயரே உதகமண்டலம், அத வெள்ளைக்காரங்க ஒத்தக்கமண்ட் என கூப்பிட்டு பார்த்தாங்க... அதுவும் முடியாம ஊட்டி என சுருக்கிட்டாங்க' . 'இப்படித்தான் முந்திரி பழம் வித்துட்டு இருந்த ஆயாகிட்ட, இது என்ன என கேட்க, அந்த ஆயா, காசுக்கு எட்டு என்றார்களாம். அதன் பெயர் என நினைத்து cashew nut என முந்திரியை மாற்றினார்கள்' என்று சிறுவயதில் இந்த பெயர் காரணங்களை வியந்து கொண்டது உண்டு.
என்னளவில் முதலில் இந்த ஆங்கில- தமிழ் பெயர் குழப்பம் அநேகமாக திண்டுக்கலுக்கு தான் வந்து இருக்கும். லாரிகளில் பக்கவாட்டில் பர்மிட்டுக்காக எழுதப்பட்டு இருக்கும் Dindigal எழுதிய பெயரை பார்த்த ஞாபகம். ஈரோட்டில் சுற்றிக்கொண்டு இருந்தபொழுது, எங்கள் ஊரில் பெரிதாக குழப்பம் வந்தது இல்லை, VMC-வேளாளர் மகளிர் கல்லூரி தவிர. மதுரைக்குள் வளம் வந்த போது தான் குழப்பம் இன்னும் அதிகமானது. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கல்லூரிக்கு செல்லும் வழியில் மதுரை கல்லூரி இருக்கும். 'Madura college' என்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பார்கள். மதுரை கல்லூரி என தமிழில் இருக்கும். அதை மதுரை அல்லது மதுரா என்றும் கூற மாட்டார்கள் நண்பர்கள். 'மெஜ்ரா காலேஜ்' என்று தான் கூறுவார்கள்.
மதுரையின் பக்கத்துக்கு ஊர்களில் இருந்து வரும் நண்பர்களின் பேச்சுவழக்கில் அவர்களின் ஊர்களின் பெயர்கள் அலப்பறையாக இருக்கும். திண்டுக்கல் நண்பர்கள் ' திண்டில்' என வேகமாக கூறுவார். நாரோயில், தின்னெலி என்பது நாகர்கோவிலில், திருநெல்வேலி என கேலி கிண்டலுக்குப்பின் தான் தெரிய வரும். மக்களின் பேச்சு வழக்கு என்பது வேறாகத்தான் இருந்து கொண்டிக்கிறது. அது அந்தந்த உள்ளூர் மக்களைப் பொறுத்தளவில் நாகரிகமாக, ஸ்டைலாக பெருமையாக கருதப்படுகிறது.
லண்டனில் இருந்த நேரம். பேச்சுவாக்கில் அங்கிருந்த உள்ளூர் பிரிட்டிஷ் மேலாளரிடம் சென்னை, கொல்கத்தா, மும்பை பெயர் மாற்றம் பற்றிய உரையாடல் வந்தது. அவர் 'எதற்காக இப்படி மக்களின் பழக்கத்தில் உள்ள பெயர்களை மாற்றுகிறார்கள். இது ஒரு நேர, பணம் விரயம் அல்லவா?' என்றார். பதிலுக்கு அவரிடம் "நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து உங்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் மாற்றிக்கொண்டீர்கள். எங்கள் மக்களுக்கு புரிய வேண்டுமல்லவா?" என்றதும் உண்டு. 'அப்படியானால் லண்டன் என்பது லண்டனியம்(Londinium) என்று மாறுமோ?' என்று நம்மை பகடி செய்து கொண்டிருந்தார். லண்டனுக்கான பழைய பெயர் லண்டனியம் என்பதும் அப்போது தான் தெரிந்தது. கவுண்டமணி கூறியது போல 'இந்த வெள்ளைக்காரன் லண்டன்ன்னு எவ்வளவு சின்னதா நாளே எழுத்துல வெச்சுருக்கான். நீ ஏன்டா நீட்டி முழக்கற' என்பது போல நம் ஊர்களின் பெயரை அவர்களின் வசதிக்காக சின்னதாக வைத்துவிட்டு சென்றார்களோ என்னவோ?
இங்கு கர்நாடகத்தில் மைசூரு, பெங்களூரூ( Bengaluru) என்று கன்னடத்தில் மாற்றி இருந்தாலும், அதை 'பேங்ளூர்' (Banglore) என்று சொல்வதையே விருப்பமாக பலரும் கருதுகின்றனர். 'நீங்க எப்படி வேணாலும் பேரு வச்சுக்குங்க, நாங்க இப்படி தான் கூப்பிடுவோம்'. பேச்சு வழக்கில் அந்த மாற்றம் என்பது தலைமுறைகள் கடக்க வேண்டும். அவர்கள் அறியும் பொழுது என்ன பெயர் இருக்கின்றதோ அதைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். இந்த பெயர் மாற்றங்கள் தேவையா இல்லையா எனில், புதிதாக செல்பவர்களுக்கு பல குழப்பங்கள் விளைவிப்பதை தடுக்கும் எனபதால் தேவை தான். ஆனால் பணப்புழக்கம் குறைந்த இக்கட்டான இந்த நேரத்தில் இது தேவையா என்பது யோசிக்க வேண்டியது. கூடவே அதன் ஸ்பெல்லிங் 'வீலுர்' என குழப்பம் விளைவிப்பதாக இருக்ககூடாது.
இந்த பெயர் மாற்றம் தேவையா, இல்லையா என்பது பற்றி ஈரோடு கதிர் மற்றும் ஷான் கருப்பசாமி நேற்று நேரலையில் அடித்து துவைத்து உள்ளார்கள். லிங்க்
https://youtu.be/oONN0Ep_HXY
Monday, June 01, 2020
தற்சார்பு எனப்படுவது யாதெனின்
ஜெயமோகனின் ராஜன் - Rhonda Byrne The secret
ஜெயமோகனின் ராஜன் சிறுகதை. வாசல் குழுவின் வாசிக்கும் நிகழ்வின் மூலம், இந்த மாத இறுதியில் படிக்க நேர்ந்தது. Rhonda Byrne எழுதிய The secret - ரகசியம் எனும் புத்தகம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் படித்து முடித்திருந்தேன். இவை இரண்டும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உடையதாக உள்ளது. மொட்டைத்தலை-முழங்கால், அம்மாவாசை-அப்துல் காதர் மாதிரி சம்பந்தம் இல்லாத போல தோணும். இருந்தாலும் பாப்போம்.
யானை எப்போதும் ஆச்சரியமான ஒன்று. எங்கள் ஊர் மொடக்குறிச்சி மாரியம்மன் தேர்த் திருவிழாவில் வருடா வருடம் வரும் யானை, கோயிலின் வலது ஓரம், அசை போட்டுக்கொண்டு அமைதியாக நின்று கொண்டிருக்கும். அதுதான் எப்பொழுதும் யானை என்றதும் என் முன் வந்து நிற்கும் காட்சி. ஆடம்பரமான அலங்காரம் இருக்காது. ஆனாலும் ஒரு பயபக்தி இருக்கும். சற்றுத்தள்ளி யானையின் சாணி, காய்ந்து மண்ணோடு மண்ணாக கிடக்கும். பல பேருக்குப் படிப்பைக் கொடுக்க(?!), மிதிபட்டு சக்கையாக கிடக்கும். லுங்கி அணிந்த பாகன் கூடவே இருப்பார். சில வேலைகளில் ஓரமாக கணேஷ் பீடி குடித்துக் கொண்டும் இருப்பார். 'ஆரம்பத்தில் மிதித்தவர்களுக்கு தான் படிப்பு வருமோ?' என்ற அச்சம் இருந்தாலும், வீட்டில் சொல்வதால், அதனை மீண்டும் மிதித்து இருக்கலாம். கண்ணாடியைத் திருப்பினால், ஆட்டோ எப்படி ஓடும் என்பது அப்பொழுதெல்லாம் தெரியாது.
இப்பொழுதும் எந்த ஒரு பிரம்மாண்டமான பெரும் கோயிலுக்குச் செல்லும் பொழுதும் பார்த்திருப்போம். தேமே என்று அந்தக் கோயிலின் முன்பாகவோ அல்லது ஓரமாகவோ நின்று கொண்டிருக்கும். ஈக்களுக்கு தப்பிக்க வாலையும், காதையும் ஆட்டிக்கொண்டு இருக்கும். சில நேரங்ககளில், கண்களிலிருந்து ஈரம் கசியவும் செய்யும், கால்களில் சீழ் வடியும் காயங்கள் கூட இருக்கும். நாம் கொடுக்கும் சில்லரையையும், சில வேளைகளில் கிடைக்கும் நோட்டுக்களையும் யானைப்பாகனிடம் கொடுத்துவிட்டு, நம் மீது துதிக்கையை தூக்கி 'டோம்' என போட்டு ஆசிர்வாதம் செய்யும். அதற்கென கிடைக்கும் வாழைப் பழங்களை தனது பசிக்கு 'சோளப்பொரியா' தள்ளும். இதுதான் நம் ஊரில் நாம் காணும் யானை. இந்த நம் ஊர் யானை பாவமானதும் கூட. இந்த கோயிலுக்குள் அடைபட்ட யானைகளுக்கு புத்துணர்வு முகாம் என்பதும் தேவையான ஒன்றே.
ஆனால் மலையகத்தில், யானை என்பது ஒரு சொத்து. மண், பெண், பொன் அதோடு யானையையும் அவர்கள் போற்றுகிறார்கள். பொறாமை கொள்கிறார்கள். வஞ்சகம் செய்கிறார்கள். சண்டை செய்கிறார்கள். மலைநாடு, யானை, எளிய மனிதன், அரண்மனையின் ஆதிக்கம் என ஒரு நல்ல விறுவிறுப்பான சிறுகதை. இது ஜெயமோகனின் களம் 'கடவுள், யானைகளுக்காக அருளிய தேசம் கேரளம்' என பூதத்தான் இந்தக் கதையில் குறிப்பிடுவார். அது கதையாக இருந்தாலும், அது தான் உண்மையோ என்றே சிறுகதையின் முடிவில் தோன்ற வைக்கிறது.
யானையின் மூளையின் எடை 5 கிலோ. நீல திமிங்கலத்தின் எடை அதை விட இருமடங்காம். யானைகள் மனிதர்கள் போலவே யோசிக்கும் திறன் உடையவை என்றும் கூறுகிறார்கள். இவ்வளவு பிரமாண்டமான யானையை, ஒரு சாதாரண மனிதன், ஒரு சிறிய அங்குலத்தை வைத்து எவ்வாறு அடக்குகின்றான் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். பூதத்தான் அது போன்ற ஒரு சாதாரண மனிதன், பாகன்.
ராஜன் எனும் 11 அடி உயர பெரும் யானையை கொல்வதற்கு, அவனுக்கு கட்டளை வருகிறது. காரியஸ்தன் அதனை கூறுகிறார், கெஞ்சுகிறார். மிரட்டுகிறார். அதுவரை அவனை அடிமை போல காண்பித்து இருப்பார்கள். கேரளா கடவுளின் தேசம் என நெடு நீண்ட கதையை ஒரே மூச்சோடு சொல்லி, அவர்களிடம் பொங்கி எழுந்து சவால் விட்டு வெளியேறுவான் பூதத்தான். அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் தொடையைத் தட்டி சபதமிட்டு வெளியேறுவது போல, 'சாது மிரண்டால்' எனும் ட்ரான்ஸ்பர்மேஷன் இடம். வேறொருவர் மூலமும் யானையை கொன்றுவிடுவார்கள் என தெரிந்து, நேராக ஒரே சிந்தனை ஓட்டத்தோடு ராஜனை நோக்கி செல்வார். அது யானையை காப்பற்றும் வெறிகொண்ட ஓட்டம். ஆறு, ஊர், காடு என பல மைல் தூரம் அவனின் ஓட்டத்தை விவரித்த இடம், காட்சி போல் விரிகிறது
பல மைல்கள் தூரத்தில் இருக்கும், முன்பின் பார்க்காத ராஜன் எனும் யானைக்கு இவன் வருவது எப்படித் தெரிகிறது. அவனை எப்படி ஆரத் தழுவுகிறது . அவனோடு எப்படி அன்பு கொள்கிறது. கதை தான். இருந்தாலும் 'ரகசியம்' புத்தகத்தில் படித்த ஒரு விசயம் இங்கு பொருந்துகிறது. இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொறுவரும், நேரடி பேச்சு இல்லாமல் எண்ண அலைவரிசைகளாலும், தொடர்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதாம். அந்த எண்ண அலைவரிசை இந்த பூதத்தானுக்கும், யானைக்கும் இடையில் நிகழ்ந்து இருக்குமோ என்று யோசிக்க வைக்கின்றது.
சிலவேளைகளில் நம்ம ஊர் கோயில்களில் பரபர என்று சாமியாடி வாக்குமூலம் கொடுப்பார்கள் சிலர். அதுவும் இதனால்தானோ? அந்த instinct எனும் அலைவரிசை என்பது மூடநம்பிக்கையோ? இது சாத்தியமா? அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்றா?
"ரகசியத்தில்" என்ன கூறுகிறார்கள் என்றால், ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து, அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும். அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய
ஒரு விஷயம், கண்டிப்பாக நடக்கும் என்கிறது. இதைத்தான் அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று குறிப்பிட் டார் போல. சில நேரங்களில் நமக்கே கூட இவ்வாறு தோன்றியிருக்கும். "இப்பதான் நான் நினைச்சிட்டு இருந்தேன், நீங்க போன் பண்ணீட்டிங்க,உங்களுக்கு 100 வயசு". இந்த மாதிரியான சில சம்பவங்கள் எதனால், எவ்வாறு எப்படி நிகழ்கிறது என்பது தெரியவில்லை. இந்த பிரபஞ்சம் எண்ண அலைவரிசைகளால் ஆனது தானோ?
சிறுகதைக்கு மீண்டும் வருவோம்.
//“டேய் நீயாடா பூதத்தான்?” என்றபடி அவர் குருவிபோல ஓசையிட்டு வெற்றிலைச்சாற்றின் மிச்சத்தை கூர்மையாக அவன் மேல் துப்பினார்.// இந்த ஒரு சொற்றொடரில் அவர்களின் ஆதிக்க மனோநிலையை அறிய முடிகிறது.
//அவருடைய கூனும் குறுகலும் அகன்றுவிட்டிருந்தன முகமும் வேறுமாதிரி மாறியது// முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் அவருடைய இடத்தில் அமர்ந்ததும் அவர் எஜமானர் ஆகிறார், பூதத்தானை ஏவ ஆரம்பிக்கிறார். அடிமைத்தனத்தின் அடுக்கு இங்கு தெரிகிறது.
ஒரு யானையை வாங்க, 8 யானை விலை கொடுக்க நினைக்கிறார், அரண்மனை ராஜா -கண்ணன்குமாரன். நம் ஊர் ஏலத்தில் ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு வெறும் கெரவத்திற்காக பலர் அதிக விலை கொடுத்து வைத்து வாங்குவது போல தான். மீண்டும் அண்ணாமலை படத்தில், ஏலம் எடுக்கும் இடம் எனக்கு ஞாபகம் வருகிறது.
பெயர்களின் பின் இருக்கும் சமூகம்
யானையின் பெயர்கள் - வலிய சங்கரன், பர்வதராஜன்.
அரண்மனையில் உள்ளவர்களின் பெயர்கள் - குமாரன் நாயர் , அரண்மனை ராஜா-கண்ணன்குமாரன் , முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் , சட்டம்பி கருணாகரன் நாயர், கதகளி ஆசான் கிருஷ்ணன் நாயர் என பெரும்பாலும் பெருந்தெய்வ கடவுள்களின் பெயர்களே, பூதத்தானை ஆதிக்கம் செய்பவர்களுக்கு உள்ளது. கூடவே தெய்வமாக போற்றப்படும் யானைக்கும்.
யானைப்பாகனாக வரும் பூதத்தான். இவரின் பின்னே நாயர் உள்ளதா என்றால் இல்லை. பூதத்தான் ஒரு சிறு தெய்வம். பூதத்தான் கோவில் சுடலைமாட சாமி கோவிலோடு கன்யாகுமரியில் திருவிதாங்கோடு எனும் ஊரில் உள்ளது. பார்க்க லிங்க்.
"பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் என்பது ஈண்டு நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , தீ எனும் பஞ்ச பூதமும் அல்ல" - இவ்வாறு நாஞ்சில் நாடான் கூறுகிறார்.
அந்த சமூக அடுக்கின் கீழ் மட்டத்தில் இருப்பவனை மேல் மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் இருப்பவர்கள் எவ்வாறு அவனை மரியாதை இல்லாமல் விழிக்கிறார்கள் என்பது கதையில் இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
ஜெமோகனுக்கு அறிய பொருட்களின் மீதான காதல் இருக்கும் என நினைக்கிறேன். ஆர்சனிக்(Arsenic) - சீமை விஷம் பற்றி இதில் கூறி இருப்பார். அது எவ்வளவு கொடிய விஷம் என்பதை கூகுளால் அறியமுடிகிறது.
கதையின் காலம் 50 வருடம் பின்னோக்கி இருக்கலாம். ஜெயமோகன் அவர்களுக்கு யானைகளின் மீது ஆகச்சிறந்த பிரியங்கள் இருக்கக்கூடும். அவரது கதைகளில் பெரும்பாலும் யானைகளை சேர்த்துவிடுகிறார் அல்லது நான் அவரின் யானை கதைகளை மட்டும் படித்திருக்கக்கூடும். யானை டாக்டர் எனும் கதையும் ஒரு அற்புதமான ஒன்று.
இறுதியாக பாகன் பூதத்தானும், யானை ராஜனும் என்ன ஆகிறார்கள்? சண்டைக்கு வந்தவர்கள் ஏன் அவ்வாறு ஆகிறார்கள்? அந்த ரகசியத்தில் வரும் பிரபஞ்சத்தின் அலைவரிசை தானோ?
குறள் 681
பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...
-
தமிழில் பங்குவணிகம் பங்குவணிகம் தொடர்பான தகவல்கள் மற்றும் குறிப்புகள் It is always easy to understand if we learn something in our mother-to...
-
"Krishna" - Ananth called me. I turned his side. Neethu another colleague asked me, "Hey! how would you like to be called...