Tuesday, June 30, 2020

நூறு நாள் கரோனா



நூறு நாள் ஓட்டம் ஆரம்பித்தள்ள தற்போதைய நிலையில், 100 நாட்கள் லாக் டவுன் முடிந்துள்ளது. தினப்படி தமிழக கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் இரண்டு இலக்கத்தில் இருந்து மூன்று இலக்கமாக மாறிய பொழுது நமக்கு கரோனாவின் மீதான பயம் போயிருக்க கூடும். இந்த மாத ஆரம்பத்தில் இலக்கம் 4 ஆக மாறி அதிலும் கடந்த சில நாட்களாக 3000 தொட்டு உள்ளது. மற்ற நாடுகளில் உச்சத்தை தொட்டு இறங்குமுகம் கண்டுவிட்டது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக தற்போது, புதிய புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டே இருக்கின்றது.



ஆனாலும் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர, பல இடங்கள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது போல ஒரு தோற்றம் உள்ளது. கிரகணத்தன்று கூட மக்கள் வெளியில் வராமல் முடங்கி இருந்தார்கள். கை கழுவினால் அல்லது மாஸ்க் மட்டும் அணிந்திருந்தால் போதுமானது என்ற ஒரு மூடநம்பிக்கையும் பரவி வருகின்றது. சிலர் அது பற்றியும் கவலைப்படுவதில்லை.





இங்கும் பெங்களூரில் கடந்த சில வாரங்களாக, குறிப்பாக இந்த மாதத்தில் அனைத்து கடைகளும் தாராளமாக திறந்தே உள்ளது. ஏதோ கண்டிப்பாக தேவை என வார நாளில் சென்றிருந்த போதும் கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்தே உள்ளது. கடைவீதி அதற்கான நெரிசலோடு, பரபரப்பாக உள்ளது. பெங்களூரில் 30% மக்களோடு சில அலுவலகம் இயங்க ஆரம்பித்துவிட்டது. நண்பர்கள் செல்ல ஆரம்பித்து உள்ளார்கள். போக்குவரத்து சொற்பமாக உள்ளதாக சென்று வருபவர்கள் கூறுகிறார்கள். நெரிசலும் இல்லை.


இரு வாரங்களுக்கு முன் எந்த உணவகமும் திறக்கப்படவில்லை. இந்த வாரங்களில் அதுவும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று பலர் வழக்கம்போல அமர்ந்து உணவு உண்டு கொண்டு தான் இருந்தனர்.





இப்படித்தான், சில வாரங்களுக்கு முன் மகளின் பள்ளி கட்டணத்தை கட்டுமாறு தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தோம். 'வேறு மாற்று வழி என்ன இருக்கிறது' என்பது தெரியாத ஒரே காரணத்தினால் கட்டணத்தைச் செலுத்தி புத்தகங்களை வாங்க முடிவெடுத்தோம். பள்ளி எப்போது திறக்கும் என்பது கேள்விக்குறி. செப்டம்பரா, டிசம்பரா அல்லது இந்த கல்வி வருடம் முழுவதும் இப்படியாக சென்று விடுமா? இன்றைய நிலையில் யாரும் விடை சொல்ல முடியாது.





இரண்டு கிலோ மீட்டர்தான் பள்ளி. இருந்தாலும் கார் எடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது என அதில் செல்ல முடிவெடுத்தேன். பள்ளியின் பெருங்கதவின் முன் சீருடை மட்டும் அணிந்த காவலாளி. அவருக்கு முகக் கவசம் இல்லை. 'பீவர் கண்' எடுத்து நெற்றியில் வைத்தார். அதை பக்கத்தில் கொண்டு வரும் பொழுது நமக்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது. வாகன நிறுத்துமிடத்தில் கணிசமாக கார்கள். காருக்கும் சோசியல் டிஸ்டன்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டு, முகக்கவசம் சரி செய்துகொண்டு இறங்கி வெளியேறினேன். பிரமாண்டமான போர்டிகோவின் முன்பு ஒரு காவலாளி நின்று காரோனா தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் (நன்றி ஜெகதீசன்). அதையும் வாங்கி வழக்கம்போல கைகளைக் குடிக்கச் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பறையில் ஒரு பெண் அனாவசியமாக உட்கார்ந்து இருந்தார். முக கவசத்தை கவனமாக டேபிளுக்கு போட்டு இருந்தார். ஆங்காங்கு மைதானத்தில் பெற்றோர்கள் ஜோடியாக. குழந்தைகள், அவர்கள் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாராவாரம் சுற்றிய கால்கள் சும்மா இருக்காது.





உள்ளே சென்று வராண்டாவில் சுற்றும் முற்றும் பார்த்த படியே நடந்து பணம் கட்டும் இடம் வந்தடைத்தேன். ஜூன் முதல் வாரங்களில் பள்ளிகளில் இருக்கும் பட்டாம் பூச்சிகளின் ஆட்டமும், ஓட்டமும் இல்லை. க்யா, முயா என்ற கோழிக்குஞ்சு சத்தமும் இல்லை. கோடை கால விடுமுறையில் பள்ளி இருப்பது போல அங்கங்கு சிலர். எனக்கும் முன்பு இருந்தவர் சென்றதும் காசாளரரின் முன்பு நின்றேன. பணம் கட்டிய புகைப்படத்தை மொபைலின் வழி காண்பித்து விட்டு எங்கும் தொடாமல் நின்று கொண்டிருந்தேன். பக்கத்து 'கவுண்டரில் ஒருவர் கண்ணாடிக்கு முன்பு படுத்துக்கொண்டு, உள்ளிருந்த காசாளரிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு முன் இருந்த காசாளரும் வாய்க்கூட்டை கீழே டேபிளின் மீது போட்டிருந்தார். இந்த வருடம் இன்னும் ஒரு மொழிப்பாடம் சேர்த்து கூடுதலாக பணம் கேட்டார்கள். 'அடேய்களா, பள்ளியே நடக்குமான்னு தெரியலை, இதுல இது வேறயா' என மைண்ட் வாய்ஸை முழுங்கிக்கொண்டு


"Paytm, Google pay இல்லைங்களா?"


"இல்லை" என்றார். இப்பொழுது ATM கார்டு உபயோகித்து தான் ஆகவேண்டும். ஒரே ஒரு விரலை மட்டும் வைத்து அழுத்தி, அந்த கார்டை பத்திரமாக வேறு பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.





அவர் கொடுத்த 'பில்லை' வாங்கி பட்டும் படாமல் அதனை எடுத்துக்கொண்டு, புத்தகம் வழங்கும் இடத்திற்கு மேலே ஏறினேன். அங்கு இருந்த பணியாளர்கள் மட்டும் கையுறையும், முக கவசமும் போட்டிருந்தார்கள். புத்தகம் நோட்டு மூட்டைகளைத் தூக்க முடியாமல் இறங்கி, மீண்டும் கார் எடுத்தேன். ஒரு சற்று சுற்றிவிட்டு செல்லலாம் என்று வேறு பாதையில் வண்டியை திருப்பினேன். பக்கத்து ஊரில் கொரோன உள்ளது என்று அந்த ஊருக்கு மட்டும் தடுப்புக் கட்டைகளை வைத்து முடக்கி இருந்தனர். அந்த வழியாக எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. அந்த நுழைவாயிலில் 2 காவல் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள். 24 மணி நேரமும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்களா? காவல் அதிகாரிகளுக்கான பணி அழுத்தம் இங்கு பேச வேண்டியுள்ளது. இதற்காக லாக்கப் கொலைகளை ஒத்துக்கொள்ள முடியாது.





கரோனா பெங்களூரில் ஆரம்பித்த மார்ச் முதல் வாரத்தில் இந்த வருடம் கோடைவிடுமுறை நமக்கு இல்லை என்று தான் நினைத்திருந்தேன். எழுதி இருந்தேன். உலகம் முழுவதும் இணைந்து ஒத்துழைத்து தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தால், ஜூலை வாக்கில் அதனை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்று அப்பொழுதே சீனாவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு ஊசி இப்பொழுது மனிதர்களுக்கான சோதனையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, மற்றும் பிரேசிலில் சோதனைக்கு தயார் படுத்துகின்றனர். இந்த வருட இறுதியில் தான் கிடைக்கும் என தெரிவிக்கிறார்கள்.





சென்ற வாரத்தில் லண்டனில் இருக்கும் சக பணியளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அங்கும் இங்கு நடப்பது போலவே 'மக்களுக்கு கரோனா பற்றிய பயம் இருப்பது போல தெரியவில்லை' என்றார். Pornmoutth என்ற பீச் பகுதியில் அவரது வீடு இருப்பதாக கூறினார். கடந்த மே இறுதியில் நீண்ட வார இறுதி கிடைக்கும். வழக்கம் போல ஒவ்வொரு வருடமும் கூடும் கூட்டம், இந்த வருடமும் குழுமி இருந்தது என்றார். இத்தனைக்கும் அப்பொழுது பொது கழிப்பறைகள் போன்றவை அங்கு திறக்கப்படவில்லை. கரோனா உச்சத்திலும் இருந்தது. உலகமெங்கும் மக்கள் அடைந்து கிடந்து வெளியே செல்லவே நினைக்கின்றார்கள்.





அமெரிக்க நண்பர்களும் சோதனை செய்யும் குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகளுக்கு COVID-19 இருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் குறைந்ததாக தெரியவில்லை என்கின்றனர்.





நம்மூரில் கரோனாவினால் இறப்பு எல்லா வயதினரையும் பாதித்துள்ளது. இளம் வயதினர் 'ஹார்ட் அரெஸ்ட்' என இறந்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஓரிரு குழந்தைகளும் இறந்துள்ளதாக கூறுகிறாரகள். இந்தக் கரோனாவின் மியூட்டேசன் என்பது வேறு வேறு நிலையில் வீரியம் அதிகமாகிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் அதிகமாக இருக்கின்றது என்று சற்று சாதரணமாக எடுத்துக்கொண்டு வெளியில் சுற்ற மக்கள் கிளம்பி விட்டார்களோ? அல்லது வருவது வரட்டும், இன்றைய உணவுக்கு பாப்போம் என அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்களோ?





முதல் வகையான மக்கள் தான் இங்கு பிரச்சினை என கருதுகிறேன். இரண்டாம் வகையான தினக்கூலி மக்களுக்கு வேறு வழி இல்லை. அன்று கிடைப்பது தான் அவர்களுக்கு உணவு. அரசாங்கம் அனைவருக்குமான உணவு கொடுக்க முடிவதில்லை. அதிலும் வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு இன்னும் சிரமம் தான். அரசின் உதவியும் கிடைக்காது.





100 வருடங்களுக்கு முன் வந்த H1N1 ஃப்ளு தொற்றுநோய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு இருந்ததாம். அன்றைய மக்கள் தொகையில் மூன்றில் 1 பகுதியினர் இறந்து போய் உள்ளார்கள் என்கிறது வரலாறு. நவம்பரில் இன்னுமொரு உச்சம் இந்தியாவில் இருக்கும் என்கின்றனர்.





இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை விகிதாசாரப்படி இது குறைவு தான். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தென் மாநில, வளர்ச்சி அடைந்த மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களின் புள்ளி விவரங்கள் (Data) சரியாக இல்லை, என்பதை covid -19.org சுட்டுகிறார்கள். நம் வீட்டுக்குப் பக்கத்தில் பாதிப்பு உள்ளதா இல்லையா எனும் தகவல்களை தெரிந்து கொள்வது தான் இன்றைய தேதியில் அவசியமானது..





நமது தமிழகத்தில் எண்ணிக்கை அதிகம் இருக்க காரணம், அதிகப்படியான சோதனைகள். அதுவும் நல்ல விஷயமே. இப்பொழுது தான் ஸ்டேஜ் 3 எனும் சமூகத்தொற்று அடைந்ததாக கருதுகிறேன். அது இன்னும் சில மாதங்களில் விரிவைடையும். அவரவர் உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு, ரொம்பவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம். வந்தபின் போராடுவதை விட, நாம் தான் வருமுன் காக்க வேண்டும். சுயகட்டுப்பாடு இல்லாவிடில் என்ன நடக்கும் என்பது தெரியாது.








https://www.hindustantimes.com/india-news/oxford-vaccine-in-final-stage-of-clinical-trials/story-sVJz9DRIR4Lm9DRA7261pM.html

Monday, June 15, 2020

ஊரும் பெயரும்



இந்த பெயர் மாற்ற மீம்கள் 'மெட்ராஸை' சுற்றிப்பார்க்க வைத்தது. சென்னையில் முதலில் எங்களுக்கு தங்க கிடைத்த இடம் எம்எல்ஏ ஹாஸ்டல். தலைமை செயலகமாக கட்டப்பட்டு இப்பொழுது மருத்துவ மனையாக உள்ள இடத்தில் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி இருந்தது. 'எம்எல்ஏ-க்கு எதுக்கு விடுதி?' என ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அந்த ஓமந்தூரார் தோட்டத்தில், தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெரிய தனித்தனி அடுக்கக வீடு உண்டு. கூடவே அவர்கள் பரிந்துரைத்தால், அவர்களின் சார்பாக ஓரிரு அறைகளும் புது அல்லது பழைய விடுதியில் கிடைக்கும். அங்கு பெரும்பாலும் ஊர்ப் பிரச்சனைகளுக்காக கோட்டையில்(Fort) இருக்கும் தலைமை செயலகத்திற்கு வருபவர்களாக இருக்கும். வருடக்கணக்கில் தங்கிய சிலரையும் பார்த்தது உண்டு. சென்னையின் மையப் பகுதியில் அடர்த்தியான மரங்களின் ஊடக பரந்து விரிந்த அதன் அழகும், கூடவே அங்கு வளைய வந்த அதிகாரமும், சொகுசும் சற்றே மிரட்டியது.





அதனை ஒட்டிய பகுதிதான் திருவல்லிக்கேணி. Triplicane- என்று தான் அனைவருமே கூறுவார்கள். இரண்டும் ஒரே பெயர் என அங்கு இருந்த போதுதான் தெரிந்தது. அதன் வழியாக செல்லும் பேருந்து, 'Anna Square' என ஆங்கிலத்திலும் அண்ணா சதுக்கம் என தமிழிலும் இருக்கும். இப்படி பல ஊர்களின் பெயரும் இரு மொழிகளிலும் பேருந்துகளின் பலகைகளில் இருக்கும்.










சென்னை பல வித்தியாசமான பெயர்கள் கொண்ட பெருநகரம். நெடுநீண்ட வரலாறு கொண்டது. கிட்டத்தட்ட 300 வருடங்கள் ஆங்கிலேயர்கள் இருந்ததால் அதன் பெயர்கள் அவர்களின் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீதிக்கும், ஒவ்வொரு சாலைக்கும், ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு பெயர்கள் இருந்ததை அறிந்துகொள்ள முடிந்தது. சில இடங்களுக்கு மூன்று பெயர்கள் கூட இருக்கும், பூந்தமல்லி-பூவிருந்தவல்லி-Poonamallee அதில் ஒன்று. ஒவ்வொரு பேட்டையில் முடியும் இடங்களையும் பேட் என்று 'இஸ்டைலாக' தான் பீட்டர் விடுவார்கள். சைதாபேட், குரோம்பேட், தேனாம்பேட், ராயப்பேட் என்று பீட்டர் விட, நாமும் பழகிக் கொள்ள வேண்டும். 'பேட்டை-பேட்' போன்றே 'பாக்கங்களும்' 'பாக்' ஆகி இருந்தது. சேப்பாக், கீழ்பாக், புரசைவாக், மீனாம்பாக் என சேப்பாக்கம் என்பதின் 'கம்' விட்டுவிடுவார்கள்.





அண்ணாசாலை- மவுண்ட் ரோடு குழப்பம் நெடியது. எங்கு ஆரம்பிக்கும் எங்கு முடியும் என ஆரம்பத்தில் தெரியாது. அண்ணா சாலையில் நின்று கொண்டே 'ஏங்க, இந்த மவுண்ட் ரோட்டுக்கு எப்படி போகணும்?' என்பதை பலரும் அனுபவித்து இருக்கக்கூடும்.





பரங்கிமலை என்பதும், செயின்ட் தாமஸ் மவுண்ட் என்பதுவும் ஒன்று என அறிந்துகொள்ள சற்று நாட்கள் ஆகியிருந்தது. திருமயிலை எனும் பறக்கும் ரயில் நிலையத்தின் பெயரைப் பார்த்துதான் பலருக்கும் மயிலாப்பூர் என்பதன் உண்மையான பெயர் தெரிய வரும். இன்டர்வியூக்கான ∴பைலை தூக்கிக்கொண்டு காலை நேரங்களில் கிளம்பி விடுவோம். மாலையில் நண்பர்கள் ஒன்று கூடி, அன்று சென்ற இடங்களின் பெயரை அலசும்போது தான், ஒரே இடத்தின் இருவேறு பெயர்களை தெரிந்து கொள்ள நேரிடும்.











எம்ல்ஏ ஹாஸ்டலில் நான்கு மாதம் இருந்துவிட்டு, அப்பொழுது புறநகராக இருந்த வேளச்சேரிக்கு மாறினோம். சைதையில் எந்த பேருந்து வேளச்சேரி செல்லும் என்பதில் குழப்பமாகும் என்பதால், சின்னமலையில் இறங்கித் தான் வேளச்சேரிக்கு பேருந்தைப் பிடிப்போம். மாநகரப் பேருந்தில் கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயரைக் குறிப்பிட்டுதான் பெரும்பாலும் பயணச் சீட்டு கேட்பார்கள். பின்புறம் படியை ஒட்டிய அவரது இருக்கையில் தான் அமர்ந்திருப்பார். ஊரில் இருப்பது போல, சென்னையின் நடத்துனர்கள் கூட்டத்தினுடாக புகுத்து வந்து பயணச்சீட்டு வழங்க மாட்டார்கள். அந்த நெரிசலில்,முன்பு உள்ளவரிடம் சில்லறை கொடுத்து 'சின்ன மலை ஒன்னு வாங்குங்க' என கூறவேண்டும். அந்த சில்லரை ஒவ்வொருவர் கையாக மாறி நடத்துனரை அடையும். அவரிடம் போவதற்குள் அது 'லிட்டில் மவுண்ட்டாக' மாறி இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் கேட்பது தான் அங்கு இயல்பாகவே அனைவருக்கும் வரும்.





பெசன்ட் நகர் பீச்சுக்கு எலியட்ஸ் பீச் என்ற ஒரு பெயரும் உண்டு. எழும்பூர் - Egmore குழப்பத்தில் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுனரிடம் சண்டை போட்ட கதையும் உண்டு. Foreshore estate - பட்டினப்பாக்கம் எனப்படும். இன்னும் இதில் விடுபட்ட நிறைய இடங்கள் உள்ளது. பலவற்றிற்கு அப்படியே மொழி மாற்றி இருப்பார்கள் அதில் ஒன்று தீவுத்திடல் எனும் island grounds. எழிலகம் எனும் அழகான தமிழ்பெயர்கள் கண்டு வியந்ததும் உண்டு.





இதில் குறிப்பிட தோன்றியது சென்னை சென்ட்ரலில் இருந்து, சென்ட்ரல் ஜெயில் பாலம் ஏறி இறங்கியதும் பல்லவன் சாலையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலின் பெயர். முனீஸ்வரன் கோவில் சென்னையிலும் உள்ளதா என நினைக்கையில், Bodygurad முனீஸ்வர் எனும் வித்தியாசமான பெயர் ஈர்க்கும். எப்படி 'பாடிகாட்' முனீஸ்வரர் ஆனார் என்பதில் தான் சென்னை மக்களின் பேர் வைக்கும் திறனை வியக்க வேண்டும். வேறு ஒரு மொழியை உள்வாங்கிக் கொள்வதில் சென்னை மக்கள் எப்போதும் தனி.





1995 - Bombay to Mumbai , 1996 - Madras to Chennai, 2001 - Calcutta to Kolkata என இந்திய பெருநகரங்களின் பெயர்கள் மாற்றம் அடைந்து கொண்டு இருந்தது. எனக்கு சென்னையை விட மெட்ராஸ் 'கெத்தாகத்' தான் இருந்தது. இப்பொழுது சென்னை பழகிவிட்டது. சென்னை நண்பர்களும், அங்கு தலைமுறைகளாக வாழும் மக்களும் 'மெட்ராஸ்'(Madras) என்றுதான் கூறுவார்கள். அங்கு நீண்ட காலம் இருந்த உறவினர் அப்பொழுது "என்னப்பா நீங்க எல்லாம் மெட்றாஸ்ன்னு சொல்லாம, சென்னைன்னு சொல்லறீங்க.. எங்களுக்கு எப்பவும் மெட்ராஸ் தான்" என்பார்.





ஊரிலும் பலருக்கு இன்னமும் மெட்ராஸ் தான். ஊரில் எனைப் பார்த்ததும் விசாரிப்பவர்கள் "ஏப்பா எங்க இருக்க, இப்ப என்ன பண்ணற" என்னும் அன்பர்களின் கேள்விக்கு சட்டென 'மெட்ராஸ்' என்றுதான் வரும். இப்படித்தான் ஒருமுறை "அப்பறம் மெட்ராஸ்ல எங்க இருக்க" என்ற கேள்வி வந்தது. " வேளச்சேரிங்க" என்றேன். " அட.. மெட்ராஸ்ல வேலை செய்யறேன்னு தெரியுது.. அங்க எங்க இருக்கன்னு கேட்டன்" என்று கேட்பார்கள் நம்மைக் கலாய்த்து விட்டு செல்வார்கள் அந்த வெள்ளந்தி மனிதர்கள்.





சென்னை தவிர மற்ற ஊர்களில் இந்த மாதிரியான பெயர்க் குழப்பங்கள் குறைவுதான். 'ஊட்டிக்கு ஒரிஜினல் பெயரே உதகமண்டலம், அத வெள்ளைக்காரங்க ஒத்தக்கமண்ட் என கூப்பிட்டு பார்த்தாங்க... அதுவும் முடியாம ஊட்டி என சுருக்கிட்டாங்க' . 'இப்படித்தான் முந்திரி பழம் வித்துட்டு இருந்த ஆயாகிட்ட, இது என்ன என கேட்க, அந்த ஆயா, காசுக்கு எட்டு என்றார்களாம். அதன் பெயர் என நினைத்து cashew nut என முந்திரியை மாற்றினார்கள்' என்று சிறுவயதில் இந்த பெயர் காரணங்களை வியந்து கொண்டது உண்டு.





என்னளவில் முதலில் இந்த ஆங்கில- தமிழ் பெயர் குழப்பம் அநேகமாக திண்டுக்கலுக்கு தான் வந்து இருக்கும். லாரிகளில் பக்கவாட்டில் பர்மிட்டுக்காக எழுதப்பட்டு இருக்கும் Dindigal எழுதிய பெயரை பார்த்த ஞாபகம். ஈரோட்டில் சுற்றிக்கொண்டு இருந்தபொழுது, எங்கள் ஊரில் பெரிதாக குழப்பம் வந்தது இல்லை, VMC-வேளாளர் மகளிர் கல்லூரி தவிர. மதுரைக்குள் வளம் வந்த போது தான் குழப்பம் இன்னும் அதிகமானது. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கல்லூரிக்கு செல்லும் வழியில் மதுரை கல்லூரி இருக்கும். 'Madura college' என்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பார்கள். மதுரை கல்லூரி என தமிழில் இருக்கும். அதை மதுரை அல்லது மதுரா என்றும் கூற மாட்டார்கள் நண்பர்கள். 'மெஜ்ரா காலேஜ்' என்று தான் கூறுவார்கள்.





மதுரையின் பக்கத்துக்கு ஊர்களில் இருந்து வரும் நண்பர்களின் பேச்சுவழக்கில் அவர்களின் ஊர்களின் பெயர்கள் அலப்பறையாக இருக்கும். திண்டுக்கல் நண்பர்கள் ' திண்டில்' என வேகமாக கூறுவார். நாரோயில், தின்னெலி என்பது நாகர்கோவிலில், திருநெல்வேலி என கேலி கிண்டலுக்குப்பின் தான் தெரிய வரும். மக்களின் பேச்சு வழக்கு என்பது வேறாகத்தான் இருந்து கொண்டிக்கிறது. அது அந்தந்த உள்ளூர் மக்களைப் பொறுத்தளவில் நாகரிகமாக, ஸ்டைலாக பெருமையாக கருதப்படுகிறது.





லண்டனில் இருந்த நேரம். பேச்சுவாக்கில் அங்கிருந்த உள்ளூர் பிரிட்டிஷ் மேலாளரிடம் சென்னை, கொல்கத்தா, மும்பை பெயர் மாற்றம் பற்றிய உரையாடல் வந்தது. அவர் 'எதற்காக இப்படி மக்களின் பழக்கத்தில் உள்ள பெயர்களை மாற்றுகிறார்கள். இது ஒரு நேர, பணம் விரயம் அல்லவா?' என்றார். பதிலுக்கு அவரிடம் "நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து உங்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் மாற்றிக்கொண்டீர்கள். எங்கள் மக்களுக்கு புரிய வேண்டுமல்லவா?" என்றதும் உண்டு. 'அப்படியானால் லண்டன் என்பது லண்டனியம்(Londinium) என்று மாறுமோ?' என்று நம்மை பகடி செய்து கொண்டிருந்தார். லண்டனுக்கான பழைய பெயர் லண்டனியம் என்பதும் அப்போது தான் தெரிந்தது. கவுண்டமணி கூறியது போல 'இந்த வெள்ளைக்காரன் லண்டன்ன்னு எவ்வளவு சின்னதா நாளே எழுத்துல வெச்சுருக்கான். நீ ஏன்டா நீட்டி முழக்கற' என்பது போல நம் ஊர்களின் பெயரை அவர்களின் வசதிக்காக சின்னதாக வைத்துவிட்டு சென்றார்களோ என்னவோ?









இங்கு கர்நாடகத்தில் மைசூரு, பெங்களூரூ( Bengaluru) என்று கன்னடத்தில் மாற்றி இருந்தாலும், அதை 'பேங்ளூர்' (Banglore) என்று சொல்வதையே விருப்பமாக பலரும் கருதுகின்றனர். 'நீங்க எப்படி வேணாலும் பேரு வச்சுக்குங்க, நாங்க இப்படி தான் கூப்பிடுவோம்'. பேச்சு வழக்கில் அந்த மாற்றம் என்பது தலைமுறைகள் கடக்க வேண்டும். அவர்கள் அறியும் பொழுது என்ன பெயர் இருக்கின்றதோ அதைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். இந்த பெயர் மாற்றங்கள் தேவையா இல்லையா எனில், புதிதாக செல்பவர்களுக்கு பல குழப்பங்கள் விளைவிப்பதை தடுக்கும் எனபதால் தேவை தான். ஆனால் பணப்புழக்கம் குறைந்த இக்கட்டான இந்த நேரத்தில் இது தேவையா என்பது யோசிக்க வேண்டியது. கூடவே அதன் ஸ்பெல்லிங் 'வீலுர்' என குழப்பம் விளைவிப்பதாக இருக்ககூடாது.





இந்த பெயர் மாற்றம் தேவையா, இல்லையா என்பது பற்றி ஈரோடு கதிர் மற்றும் ஷான் கருப்பசாமி நேற்று நேரலையில் அடித்து துவைத்து உள்ளார்கள். லிங்க்

https://youtu.be/oONN0Ep_HXY












Monday, June 01, 2020

தற்சார்பு எனப்படுவது யாதெனின்


என்பதுகளின் இறுதியில் ஒட்டகம் மார்க் சீயக்காய் தூள், காந்தி மார்க் சீயக்காய்த்தூள் மிக அதிகமாக விற்பனை ஆகும்.  அதே போல்தான் கோபால் பல்பொடி, பயோரியா பல்பொடி போன்றவையும். சோப்பு என்று பார்த்தால் அது ஹமாம்.  துணி துவைக்க உள்ளூர் சோப்பு தான், டிஸ்கவுண்ட் போலவே இருக்கும்.  அதன் பிறகு 501 சக்கை போடு போட்டது.  அப்பொழுது 501 மற்றும் ஹமாம் இரண்டும் டாடா நிறுவனத்திடம் இருந்தது.  ஹமாம் ஐந்து ரூபாய்.   இந்த இரண்டு சோப்புகளும் பெட்டியில் வாங்குவோம்.  அதனை எடுத்து அழகாக அடுக்கி வைப்பது என் பொறுப்பு.  அதேபோல கலர் குடிப்பதற்கும் குண்டு அழுத்தி உள்ளே விழ  வைக்கும் கோலி  சோடா.  சிகப்பு கலர், மஞ்சள் கலரும்  இருக்கும்.  பிறகு 55 எனப்படும் பன்னீர் சோடா வகை பிரபலம்.  மொடக்குறிச்சியில் அப்பொழுது ஒரு சோப்பு அலகு யூனிட் எனும் கதர் சோப் தொழிற்சாலையும் இருந்தது.    

90-களின் ஆரம்பமாக இருக்கலாம்.    அந்த நேரங்களில் தான் பிரபலமானது  சிக், மீரா  ஷாம்புகள். 
 ஒட்டகம் மார்க் சீயக்காய் தூள், காந்தி மார்க் சீயக்காய்த்தூள் விற்பனை குறைய ஆரம்பித்தது.   குளோசப், மற்றும் கோல்கெட்  பேஸ்ட் விற்பனை அதிகமான நேரம் கோபால் பல்பொடி இறங்கு முகத்தை அடைந்தது.    கூடவே ஹமாம் மற்றும் 501 ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்திற்கு கை மாறியது.   அப்பா கூறுவார்  லாபம் முன்பு போல் இல்லை என.   பெப்சி வர ஆரம்பித்தது உள்ளூர் கோலி  சோடா குறைய ஆரம்பித்தது.   

அப்பொழுது ஊரில் ஒருவர் வந்து சுதேசி இயக்க பொருள்களை தான் நாம் பயன்படுத்த வேண்டும், அப்பொழுது தான் நம் நாடு நன்றாக இருக்கும் என்பார் என்று கூறிவிட்டு செல்வார்.    அதுநாள்  வரையிலும் கடையில் என்ன பொருட்கள் புதிதாக வந்தாலும் அதனை பயன்படுத்த முயற்சிப்பேன்.  பியர்ஸ் சோப்பெல்லாம் அந்த வகையில் போட்டது தான்.  அவரின் மீது இருந்த மதிப்பு காரணமாக, முடிந்த அளவு நமது ஊர்  நிறுவன பொருட்களை மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தேன்.  மெடிமிக்ஸ் க்கும், மீராவிற்கும் 
 மாறினேன்.   அவ்வப்போது இந்த எண்ணம் தோன்றி மறையும்.   அவ்வப்போது இதில் மாற்றமும் வரும்

இப்பொழுது கூட அந்த சீவக்காய் மற்றும் அரப்புத்தூள்களை வாங்கி தலையை அலசிக் கொள்ளலாம் என்று நமது குளிக்கும் அறையில் டைல்ஸ் முழுக்க தெரிந்து விடுகின்றது.  அதற்கேற்ப நம் அளவுகடந்த தண்ணீரையும் வீண் செய்ய வேண்டியுள்ளது 

வேற்று நாட்டு நிறுவனத்திற்கு நாம் வேலை செய்ய ஆரம்பிக்கும் அந்த நொடியில், தற்சார்பு கொள்கை  முடிந்து போய் விடுகின்றது.   இன்று நமது நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்கினாலும்,  அதன் பங்குதாரர்கள் யாரேனும் ஒருவர் வெளிநாட்டில் இருக்கலாம்.  

அப்படியானால் தற்சார்பு என்பது எது?  
தற்சார்பு என்பது எழுபது என்பதுகளின் காலத்திற்கு செல்வது மட்டுமாக இருக்காது. அந்த பொருளாதாரத்தை கடந்து  வந்து வெகு காலம் ஆகிவிட்டது என நினைக்கிறேன். காலத்துக்கு காலம் அதுவும் மாறி மாறித்  தான் வந்திருக்கும்.   கோபால் பல்பொடிக்கு முன்னர் வேப்பங் குச்சியை வைத்து விளக்குவது  தற்சார்பாக இருந்திருக்கலாம்.


வால்காவிலிருந்து கங்கை வரை எனும் புத்தகத்தில் ஆரம்பகால மனிதர்கள் பற்றி குறிப்பிடுவார்கள். 

ரஸ்யாவின் வால்கா நதியிலிருந்து  கங்கை வரை மனிதர்கள்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக புலம் பெயர்ந்து வந்த கதை.  புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காடுகளில்  இருந்தனர். அந்தக் காடுகளில் விலங்குகளுடன், விலங்குகளாக மனித இனம் திரிந்தது. அவர்களுக்குள் மாமிசத்திற்கு சண்டை நடக்கும்.     அங்கு கிடைத்த காய்களையும் பழங்களையும், அங்கிருக்கிற விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு  இருந்ததை  தற்சார்பு என குறிக்கலாம்.

90 க்கு பிறகு பொருளாதார தாராள மயமாக்கல் ரொம்பத் தீவிரமா நடந்த காலகட்டங்கள் மிக முக்கியமானவை.  உலகதோடு ஒட்டி உறவாட ஆரம்பித்து விட்டோம்.    உலகமயமாக்களுக்கு  முன் எப்படி இருந்தது.   இந்தியா முழுக்க இருந்த மக்கள் அங்கங்கு  அவரவர்  கிராமங்களிலும் அவரவர்  ஊர்ளிலும்  இருந்தார்கள்.  வெளி உலகம் தெரியாமலேயே.  பக்கத்தில் இருக்கும் சாமியைப்  பார்த்துக்கொண்டு,  அருகில் இருந்த உறவினர்களை விசாரித்துக்கொண்டு, கிடைத்த  வேலையைப் பார்த்துகொண்டும் தான்  இருந்தார்கள்.   ஆனால் அதில் தான் சாதியப் படிநிலைகள் ரொம்ப தீவிரமாக இருந்தது என்பது பலரும் கூறும் கருத்து.   

 இன்று தமிழ்நாட்டிற்கு எத்தனையோ மக்கள் பஞ்சம் பிழைப்பதற்காக வந்த மக்கள், கொரோனாவின் முடக்கத்தால் திரும்ப அவர்களின் ஊருக்கு போகும், அந்த காட்சிகளையும் நாம் பார்க்கிறோம்.  தமிழகத்தில் இதுவரை பிரச்சனை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வண்டிக்கு டியூ  கட்ட முடியலை,  குழந்தையோட பள்ளிக் கூடத்திற்கு பீஸ் என்ன பண்றதுண்ணு  தெரியவில்லை எனும்  இந்த மாதிரியான விஷயங்களில் பிரச்சினை ஆரம்பித்து உள்ளது.   எனக்கு தெரிந்து பசி, பஞ்சம் மாதிரியான பிரச்சினைகள் இதுவரை வரவில்லை என்கிறார்  பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.   ஒருவிதத்தில்  அது உண்மை என்றே தோன்றுகிறது.   அரிசி முதற்கொண்டு எல்லாமுமே நமக்கு அரசு அளிக்கின்றது,  அதற்கான வருவாய் எந்த வழியாக என்று இப்பொழுது  நம்ம பாக்கத் தேவையில்லை.  

தற்சார்பு பொருளாதாரத்தின் படி, இந்த மாதிரி கிராமங்களில்  வேலை பார்த்துக்கொண்டு இருந்த எல்லாருமே ஏதாவது ஒரு தொழில் சார்ந்த, இண்டஸ்ட்ரீஸ்  மாதிரியான  சூழலுக்கு போய்விட்டோம்.  அந்த தொழில் உலகத்தை சார்ந்து ஒரு கண்ணியாக  இருக்கிறது.   ஓரிடத்தில் அறுபட்டால் அது மற்றோரு பக்கம் பிரச்சினையை விளைவிக்கும்.     

இப்பொழுது தான் நாம்  இண்டஸ்ட்ரியல் வளர்ச்சியால் நடந்த சூழலியல் பிரச்சினைகள் குறித்துப் பேச ஆரம்பிக்கின்றோம்.  இங்கிலாந்திலும் தொழிற்புரட்சிக்குப் பின் நடைபெற்ற சூழலியல் மாற்றங்கள், அதற்குப் பிறகு சூழலின் மீது அக்கறை கொண்டு அவர்கள் மாறியது போல அவற்றைப் பற்றி நிறைய பேசவேண்டும்.    கொரோனா காலம் நம்மை இந்த  நிலைமையை  விட கொஞ்ச காலம் பின்நோக்கி தள்ளி விட்டு போகும். 

 இப்போது  நாம்  செய்துகொண்டு  இருந்த விஷயங்களில் எந்தெந்த  தவறான விஷயம் இருக்கிறது என ஆராய்ந்து அதனை சரி கட்டுவதற்கான வேலைகளை  ஆரம்பிக்கவேண்டும்.   அந்த மனப்பான்மை எல்லா தரப்பு மக்களுக்கும் வரும்.   

தற்சார்பு பொருளாதாரம் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பா முடியாது.  நம் ஒரு மாடு வைத்து பராமரிக்க , அதற்கு இடம் வேணும்.  அந்த இடம் எங்கே கிடைக்கும்? அவன் அந்த இடத்திலிருந்து படித்து மேலே சென்று அந்த இந்த முன்பு இருந்த ஜமீன்தார் இருந்த முறை மாறி இப்போ அது ஒரு ஒரு நிறுவனத்துக்கு கீழே போய் இருக்கிறார்கள்.   இங்கே ஒரு கிராமத்தில் அவர்கள் அடிமையாக இருந்த நிலைமை மாறி இன்றைக்கு ஒரு முதலாளித்துவத்தின் கீழ் ஒரு அடிமையாய் இருக்கிற ஒரு நிலைமையில் தான் இருக்கும்.   அதில் கொஞ்சம் படிக்காமல் விஷயம் தெரியாமல் இருந்திருக்கும்.  இப்போ படித்து விஷயம் தெரிஞ்சு இருக்கும் என தோன்றுகிறது.  

தற்சார்பு விஷயங்களெல்லாம்  நமக்கு ஒத்து வருமா என்றால் நம்ம தற்சார்பு னா என்ன அப்படின்னு இருக்கு ஒரு கேள்விக்குறி?  பதில் எந்தப் பொருளையும் வாங்காமலேயே   உற்பத்தி செய்ய முடியுமா?  அப்போழுது ஒரு துறவயின்  வாழ்க்கையைமட்டுமே  வாழ முடியும் என நினைக்கிறேன்.   இந்த கால கார்பொரேட் துறவிகள் அல்ல.     கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு அப்படியே இருக்கிற வாழ்க்கை.   அந்த வாழ்க்கை முறை நம்ம சாமானியர்களுக்கு இப்போழுது வருமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.   
அப்படியே அது ஒத்து வந்தாலும் இந்த நுகர்வு சமூகத்தில் நம்ம இருக்க முடியுமா?  சிக்கனாமான  மினிமலிஸம் சார்ந்த வாழ்க்கை தான்.   நமக்கு இன்றைய காலகட்டத்தின் தேவை. தேவைக்கு அதிகமாக வாங்குவது நிறுத்தினால் பல பிரச்சனைகள் தீரும்.   

அதற்கடுத்தபடியாக குளோபலைசசன்,  எல்லாருமே கரோனாவிற்கு பின், லோகலைசேஷன் ஆகும் என நினைத்தாலும், அது டி-சென்டர்லைஷேஷன் ஆகுமே ஒழிய  லோகலைசேஷன் ஆகும் வாய்ப்பு குறைவு.  


நெருக்கடிக்குப் பிந்தைய கால கட்டத்தைத்தான் new normal என்று பொருளாதார வட்டாரத்தில் கூறுகிறார்கள்.  new normal என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அது கண்டிப்பாக தற்சார்பை  நோக்கி நகராது, வேண்டுமானால் மினிமலிசம் நோக்கி நகரலாம்.  






ஜெயமோகனின் ராஜன் - Rhonda Byrne The secret

ஜெயமோகனின் ராஜன் சிறுகதை.  வாசல் குழுவின் வாசிக்கும் நிகழ்வின் மூலம், இந்த மாத இறுதியில் படிக்க நேர்ந்தது.   Rhonda Byrne எழுதிய  The  secret  - ரகசியம் எனும் புத்தகம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் படித்து முடித்திருந்தேன்.  இவை இரண்டும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உடையதாக உள்ளது.   மொட்டைத்தலை-முழங்கால்,  அம்மாவாசை-அப்துல் காதர் மாதிரி சம்பந்தம் இல்லாத போல தோணும்.  இருந்தாலும் பாப்போம்.     


யானை எப்போதும் ஆச்சரியமான ஒன்று. எங்கள் ஊர் மொடக்குறிச்சி மாரியம்மன் தேர்த் திருவிழாவில் வருடா வருடம் வரும் யானை,  கோயிலின் வலது ஓரம்,  அசை போட்டுக்கொண்டு அமைதியாக நின்று கொண்டிருக்கும்.   அதுதான் எப்பொழுதும் யானை என்றதும் என் முன் வந்து நிற்கும் காட்சி.   ஆடம்பரமான அலங்காரம்  இருக்காது.  ஆனாலும் ஒரு பயபக்தி இருக்கும்.  சற்றுத்தள்ளி யானையின் சாணி, காய்ந்து மண்ணோடு மண்ணாக கிடக்கும்.  பல பேருக்குப் படிப்பைக் கொடுக்க(?!),  மிதிபட்டு சக்கையாக கிடக்கும்.  லுங்கி அணிந்த பாகன் கூடவே இருப்பார்.  சில வேலைகளில் ஓரமாக கணேஷ் பீடி குடித்துக் கொண்டும் இருப்பார்.  'ஆரம்பத்தில் மிதித்தவர்களுக்கு தான் படிப்பு வருமோ?' என்ற அச்சம் இருந்தாலும், வீட்டில் சொல்வதால், அதனை மீண்டும் மிதித்து இருக்கலாம்.  கண்ணாடியைத்  திருப்பினால், ஆட்டோ எப்படி ஓடும் என்பது அப்பொழுதெல்லாம் தெரியாது. 


 இப்பொழுதும் எந்த ஒரு பிரம்மாண்டமான பெரும் கோயிலுக்குச் செல்லும் பொழுதும் பார்த்திருப்போம்.  தேமே என்று அந்தக் கோயிலின் முன்பாகவோ அல்லது ஓரமாகவோ நின்று கொண்டிருக்கும்.   ஈக்களுக்கு தப்பிக்க வாலையும், காதையும் ஆட்டிக்கொண்டு இருக்கும்.  சில நேரங்ககளில், கண்களிலிருந்து ஈரம் கசியவும் செய்யும், கால்களில் சீழ் வடியும் காயங்கள் கூட இருக்கும்.   நாம் கொடுக்கும் சில்லரையையும், சில வேளைகளில் கிடைக்கும் நோட்டுக்களையும் யானைப்பாகனிடம் கொடுத்துவிட்டு, நம் மீது துதிக்கையை தூக்கி 'டோம்' என போட்டு  ஆசிர்வாதம் செய்யும்.   அதற்கென கிடைக்கும் வாழைப் பழங்களை தனது பசிக்கு 'சோளப்பொரியா' தள்ளும்.     இதுதான் நம் ஊரில் நாம் காணும் யானை.  இந்த நம் ஊர் யானை பாவமானதும் கூட.   இந்த கோயிலுக்குள் அடைபட்ட யானைகளுக்கு புத்துணர்வு முகாம் என்பதும் தேவையான ஒன்றே.  


ஆனால் மலையகத்தில், யானை என்பது  ஒரு சொத்து.  மண், பெண், பொன் அதோடு யானையையும் அவர்கள் போற்றுகிறார்கள்.  பொறாமை கொள்கிறார்கள். வஞ்சகம் செய்கிறார்கள். சண்டை செய்கிறார்கள்.   மலைநாடு, யானை, எளிய மனிதன், அரண்மனையின் ஆதிக்கம் என ஒரு நல்ல விறுவிறுப்பான சிறுகதை. இது ஜெயமோகனின் களம்    'கடவுள், யானைகளுக்காக  அருளிய தேசம் கேரளம்'  என பூதத்தான் இந்தக் கதையில் குறிப்பிடுவார்.  அது கதையாக இருந்தாலும், அது தான் உண்மையோ என்றே சிறுகதையின் முடிவில் தோன்ற வைக்கிறது. 


யானையின் மூளையின் எடை 5 கிலோ.  நீல திமிங்கலத்தின் எடை அதை விட இருமடங்காம்.   யானைகள் மனிதர்கள் போலவே யோசிக்கும் திறன் உடையவை என்றும் கூறுகிறார்கள்.  இவ்வளவு பிரமாண்டமான யானையை,  ஒரு சாதாரண மனிதன், ஒரு சிறிய அங்குலத்தை வைத்து எவ்வாறு அடக்குகின்றான் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.  பூதத்தான் அது போன்ற ஒரு சாதாரண  மனிதன், பாகன்.   


ராஜன் எனும் 11 அடி உயர பெரும் யானையை கொல்வதற்கு,  அவனுக்கு கட்டளை வருகிறது.  காரியஸ்தன் அதனை கூறுகிறார், கெஞ்சுகிறார்.   மிரட்டுகிறார்.  அதுவரை அவனை அடிமை போல காண்பித்து இருப்பார்கள்.   கேரளா கடவுளின் தேசம் என  நெடு நீண்ட கதையை ஒரே மூச்சோடு சொல்லி,  அவர்களிடம் பொங்கி எழுந்து சவால் விட்டு வெளியேறுவான் பூதத்தான்.  அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் தொடையைத் தட்டி சபதமிட்டு வெளியேறுவது போல,  'சாது மிரண்டால்' எனும் ட்ரான்ஸ்பர்மேஷன் இடம்.  வேறொருவர் மூலமும்  யானையை கொன்றுவிடுவார்கள் என தெரிந்து, நேராக ஒரே சிந்தனை ஓட்டத்தோடு ராஜனை நோக்கி செல்வார்.   அது யானையை காப்பற்றும் வெறிகொண்ட ஓட்டம்.  ஆறு, ஊர், காடு என பல மைல் தூரம் அவனின் ஓட்டத்தை விவரித்த இடம், காட்சி போல் விரிகிறது 


பல மைல்கள் தூரத்தில் இருக்கும், முன்பின் பார்க்காத ராஜன் எனும் யானைக்கு இவன் வருவது எப்படித் தெரிகிறது.  அவனை எப்படி ஆரத் தழுவுகிறது .  அவனோடு எப்படி அன்பு கொள்கிறது.  கதை தான்.  இருந்தாலும் 'ரகசியம்' புத்தகத்தில் படித்த ஒரு விசயம் இங்கு பொருந்துகிறது.  இந்த பிரபஞ்சத்தில்  ஒவ்வொறுவரும், நேரடி பேச்சு  இல்லாமல் எண்ண அலைவரிசைகளாலும், தொடர்புகள் நிகழ்ந்து  கொண்டிருக்கிறதாம்.  அந்த எண்ண அலைவரிசை இந்த பூதத்தானுக்கும்,  யானைக்கும் இடையில் நிகழ்ந்து இருக்குமோ என்று யோசிக்க வைக்கின்றது.  


சிலவேளைகளில் நம்ம ஊர் கோயில்களில் பரபர என்று சாமியாடி வாக்குமூலம் கொடுப்பார்கள்  சிலர்.   அதுவும் இதனால்தானோ? அந்த instinct  எனும் அலைவரிசை என்பது மூடநம்பிக்கையோ?  இது சாத்தியமா? அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்றா? 


"ரகசியத்தில்" என்ன கூறுகிறார்கள் என்றால், ஒரு விஷயத்தை நீங்கள் யோசித்து யோசித்து,  அது உங்கள் கண் முன் காட்சியாக விரிந்துகொண்டே இருக்கும்.  அப்படி யோசித்து யோசித்து, காட்சிப் படுத்திய 

 ஒரு விஷயம்,  கண்டிப்பாக நடக்கும் என்கிறது.     இதைத்தான் அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று குறிப்பிட் டார் போல.  சில நேரங்களில் நமக்கே கூட இவ்வாறு தோன்றியிருக்கும்.  "இப்பதான் நான் நினைச்சிட்டு இருந்தேன்,  நீங்க போன் பண்ணீட்டிங்க,உங்களுக்கு 100 வயசு".     இந்த மாதிரியான சில சம்பவங்கள் எதனால்,  எவ்வாறு எப்படி நிகழ்கிறது என்பது தெரியவில்லை.    இந்த பிரபஞ்சம் எண்ண அலைவரிசைகளால் ஆனது தானோ? 


சிறுகதைக்கு மீண்டும் வருவோம்.  

 

//“டேய் நீயாடா பூதத்தான்?” என்றபடி அவர் குருவிபோல ஓசையிட்டு வெற்றிலைச்சாற்றின் மிச்சத்தை கூர்மையாக அவன் மேல் துப்பினார்.//   இந்த ஒரு சொற்றொடரில் அவர்களின் ஆதிக்க மனோநிலையை அறிய முடிகிறது.  


//அவருடைய கூனும் குறுகலும் அகன்றுவிட்டிருந்தன முகமும் வேறுமாதிரி மாறியது//   முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் அவருடைய இடத்தில் அமர்ந்ததும்  அவர் எஜமானர் ஆகிறார், பூதத்தானை ஏவ ஆரம்பிக்கிறார்.   அடிமைத்தனத்தின் அடுக்கு இங்கு தெரிகிறது.   


ஒரு யானையை வாங்க, 8 யானை விலை கொடுக்க நினைக்கிறார், அரண்மனை ராஜா -கண்ணன்குமாரன்.     நம் ஊர் ஏலத்தில் ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு வெறும் கெரவத்திற்காக பலர் அதிக விலை கொடுத்து வைத்து வாங்குவது போல தான்.  மீண்டும் அண்ணாமலை படத்தில், ஏலம் எடுக்கும் இடம் எனக்கு ஞாபகம் வருகிறது.  


பெயர்களின் பின் இருக்கும் சமூகம்

யானையின் பெயர்கள்  - வலிய சங்கரன், பர்வதராஜன்.   


அரண்மனையில் உள்ளவர்களின் பெயர்கள் - குமாரன் நாயர் , அரண்மனை ராஜா-கண்ணன்குமாரன் , முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் , சட்டம்பி கருணாகரன் நாயர், கதகளி ஆசான் கிருஷ்ணன் நாயர் என பெரும்பாலும் பெருந்தெய்வ  கடவுள்களின் பெயர்களே,   பூதத்தானை ஆதிக்கம்  செய்பவர்களுக்கு    உள்ளது.  கூடவே தெய்வமாக போற்றப்படும் யானைக்கும்.   


யானைப்பாகனாக வரும் பூதத்தான்.   இவரின் பின்னே நாயர் உள்ளதா என்றால் இல்லை.  பூதத்தான் ஒரு சிறு தெய்வம்.  பூதத்தான் கோவில் சுடலைமாட சாமி கோவிலோடு கன்யாகுமரியில் திருவிதாங்கோடு  எனும் ஊரில் உள்ளது.  பார்க்க லிங்க்.  


"பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் என்பது ஈண்டு நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , தீ எனும் பஞ்ச பூதமும் அல்ல" -   இவ்வாறு நாஞ்சில் நாடான் கூறுகிறார்.  

அந்த சமூக அடுக்கின் கீழ் மட்டத்தில் இருப்பவனை மேல் மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் இருப்பவர்கள் எவ்வாறு அவனை மரியாதை இல்லாமல் விழிக்கிறார்கள் என்பது கதையில் இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கும்.  


ஜெமோகனுக்கு அறிய பொருட்களின் மீதான காதல்  இருக்கும் என நினைக்கிறேன்.  ஆர்சனிக்(Arsenic) - சீமை விஷம் பற்றி இதில் கூறி  இருப்பார்.   அது எவ்வளவு கொடிய விஷம்  என்பதை கூகுளால் அறியமுடிகிறது. 


கதையின் காலம் 50 வருடம் பின்னோக்கி இருக்கலாம்.  ஜெயமோகன் அவர்களுக்கு யானைகளின் மீது ஆகச்சிறந்த பிரியங்கள் இருக்கக்கூடும். அவரது கதைகளில் பெரும்பாலும் யானைகளை சேர்த்துவிடுகிறார் அல்லது நான் அவரின் யானை கதைகளை மட்டும் படித்திருக்கக்கூடும்.  யானை டாக்டர் எனும் கதையும்  ஒரு அற்புதமான ஒன்று.   


இறுதியாக பாகன் பூதத்தானும், யானை ராஜனும் என்ன ஆகிறார்கள்?  சண்டைக்கு வந்தவர்கள் ஏன் அவ்வாறு ஆகிறார்கள்?  அந்த ரகசியத்தில் வரும் பிரபஞ்சத்தின் அலைவரிசை தானோ? 

Wednesday, April 29, 2020

வாசிப்பில் நேசிப்பு - உடையார்

இப்பொழுது வீட்டிற்குள் மாதக்கணக்கில் முடங்கி இருப்பது போலவே 2009-ல்  வீட்டின் படி தாண்டாமல் இரு வாரங்கள் முடங்கிக் கிடந்தேன்.  காரணம் சின்னம்மை. அப்பொழுது முடங்கியிருந்த இடம் லண்டன்.  அப்பொழுது தான் ஸ்மார்ட் போ∴ன்கள் வர ஆரம்பித்த நேரம்.  அவ்வளவாக புழக்கத்தில் இல்லை.  பாட்டு கேட்பது மட்டுமே பொழுதை ஓட்டியது.   அது போரடிக்க ஆரம்பித்த பொழுது நுழைந்த இடம் புத்தகம்.   அந்த இக்கட்டான நேரத்தில் பெரும் ஆறுதலாகவும், நேரம் கடத்தியாவும்  இருந்தது  புத்தகம் மட்டுமே.  ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் இருந்த பொன்னியின் செல்வனை வரவழைத்து, அதன் வழியாக சோழநாட்டிற்கு பயணப்பட்டேன்.  மீண்டும் இரண்டாவது முறையாக படிக்கும் பொழுது, பொன்னி நதி வேறு மாதிரியான கோணத்தில் புலப்பட ஆரம்பித்தது.  இப்படித்தான் பெரும் புத்தக வாசிப்பு என்னை ஆட்கொண்டது. 

இதில் குறிப்பிட வேண்டிய விசயம், அங்கு நூலகத்தில் 10 புத்தகங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். அந்தப்பகுதியில் பெரும்பான்மையினர்  தமிழ் பேசும் மக்கள் என்பதால், நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும்.  உறுப்பினராக பெரிய நடைமுறைகள் இல்லை, அந்த கவுன்சிலில் கட்டுப்பாட்டுக்குள் முகவரி 
இருந்தால் போதும்.

அதன் பிறகு, கல்கியைத் மீண்டும் ஒரு வலம் வர ஆரம்பித்தேன். பல்லவர்களிடம் இருந்து சோழ நாட்டை மீட்ட பார்த்திபன் கனவு.   இந்த புதினங்களின் வழியாக, சோழர்களின் வரலாறு பற்றிய பெருமை  என்னுள்  அப்பிக் கிடந்தது.  தொடர்ந்து சில மாதங்கள் கழித்து தஞ்சையிலிருந்து  'சிவகாமியின் சபதம்' வழியாக காஞ்சிக்கு      பல்லவர் கால வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள நகர்ந்தேன்.    இப்படியாக கல்கியின் சுவைஞனாக அந்நேரத்தில் மாறியிருந்தேன்.    ஆனாலும், புத்தங்களில் கூறி இருந்ததை மட்டும், பெரும்பாலும் நம்பி வண்டி ஓடிக்கொண்டு இருந்தது.

ஒவ்வொரு முறை தஞ்சைப் பக்கம் போகும்பொழுது, பெரிய கோவில் எனது பார்க்கும் பட்டியலில் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் அதன்மீது ஆச்சர்யம் மேலிடும்.  தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய வரலாற்றை முழுவதும் தெரிந்து கொள்வதில் ஆவல் ஏற்பட்டது.   அது பற்றி ஏதாவது புத்தகம் உள்ளதா? எனும்  தேடல் நின்ற இடம்…

பாலகுமாரனின் உடையார். 

உடையார் புத்தகத்தின் அனைத்து பகுதிகளும், லண்டன் ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் பார்த்திருந்தேன்.   அப்பொழுதெல்லாம் பாலகுமாரனின் மேல் அவ்வளவாக ஈர்ப்பு  இல்லாததால், அவர் பக்கம் செல்லவில்லை.  (ஆமா, இவரு வேற எல்லாரையும் வாசித்துவிட்ட மாதிரி, அதுவரை படித்தது, ரெண்டு புத்தகம் அதுவும் கல்கி அவர்களுடையது.)

 ஐந்தாறு வருடம் முன்பு ஈரோடு புத்தகத் திருவிழாவில் உடையாரின் முதல் பகுதியை வாங்கினேன்.  நம்ம வசிக்கும் வேகம் தான் நமக்கு தெரியுமே?  ஒரு வழியாக, அனைத்து பகுதிகளையும் வருடக் கணக்காக படித்து முடித்தேன்.   இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால்  மூன்று புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு பகுதியாக வாங்கித்தான் முடித்தேன்.  தோராயமாக ஆறு மாத இடைவெளியில் நடக்கும்  சென்னை மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் வாங்கியவை தான். 

தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு நான் சென்ற அனுபவத்தையும், என்  வாசிப்பு அனுபவத்தையும்  உடையாருக்கு முன், உடையாருக்குப்  பின் என்று பிரிக்கலாம். 

ராஜராஜ சோழன் சாளுக்கிய நாடுகளின் மீது படையெடுத்துச் செல்வதை மட்டுமே அவ்வளவு பிரமாண்டமாக ஒரு பாகத்தில் அழகான, விரிவான வர்ணனைகளோடு விவரித்து இருப்பார்.   போருக்கு வீரர்கள் செல்லும் வழியில், அவர்களுக்கு முன் உணவு சமைப்பவர்கள் சென்று தங்கி அவர்களுக்கு சமைத்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்வார்கள்.  பின்னே வீரர்கள் கிளம்பி வருவார்கள்.  இது ஏனோ பழனிக்கு பாத யாத்திரை செல்லும் மக்களை நினைவூட்டியது.  காலகட்டத்திற்கு ஏற்ப முன்னே அவர்களின் கட்ட வண்டி அல்லது  டெம்போவில் சென்று உணவு சமைத்து வைத்திருப்பாப்பார்கள்.   நடைபயணம் வருவோரும் பின்னே வந்து சாப்பிட்டுவிட்டு நடை பயணத்தை தொடர்வார்கள்.  இப்படியாகத் தான்  தஞ்சையிலிருந்து ஹம்பி வரை வாரக்கணக்கில் சென்று உள்ளார்கள்.
 
துங்கபத்திரா நதி காட்டாற்று வெள்ளம் போல சென்று கொண்டிருக்கும் ஒரு நதியாகும்.  புவியியல் ரீதியாகவே துங்கபத்திரா நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பலர் படையெடுத்து வருவதைத் தடுக்கும் அரண்.    ஆற்றுக்கு இந்தப் பக்கம் தங்கி,  தண்ணீர் குறைய காத்திருப்பார்கள்.  ஆனால் ராஜராஜ சோழன்  அந்த காற்றாற்று  நீரில் ஓரிடத்தில் அவரின் குதிரையோடு இறங்கி, சினங்கொண்ட யானை போல ஆற்றைக் கடந்து முன் செல்வார், வீரர்கள் பின் தொடர்வார்கள்.  போர் நடக்கும்.  வெற்றி அடைவார்கள். அங்கு இருந்த செல்வங்களை, பொருட்களை சூறையாடி வருவார்கள்.   இந்த போருக்கான காரணம், தஞ்சை பெரிய கோயில் கட்ட ஆரம்பித்த பிறகு நிதி பற்றாக்குறை வரும் எனும் போதுதான்.  இரு வருடங்களுக்கு முன் துங்கபத்ரா நதியை ஒட்டிய ஹம்பி இடங்களுக்குச் சென்றிருந்தோம்.  உடன் வந்த நண்பர்களிடம்  இதனைக் கூற, நம்புவதற்கு சற்று சிரமப்பட்டார்கள்.

உடையார் புத்தகம், பெரிய கோவிலைக் கட்டுவதற்கான திட்டமிடலில் தொடங்கும்.   கட்டும்பொழுது இடையே நிதி பற்றாமல் போகும்  என படையெடுப்பு.   அதற்கு போகும் திட்டமிடல்.  கோவில் கட்டுவது எக்காரணம் கொண்டும் நிற்கக்கூடாது என்பதற்காக,  ஆரம்பம் முதல் முடிவு வரை முழு வரைபடங்களையும்  ஒன்றன் பின் ஒன்றாக  வரைந்த குஞ்சர மல்லன் ராஜராஜப் பெருந்தச்சன்.     அதில் சிற்பிகள்,  சிலை வடிக்க மாடலிங் போல நின்ற நடனம் ஆடும் பெண்கள்.  ராஜகுருவாக இருக்கும் கருவூர்த் தேவர். கோயிலின் மண்டபத்தின் முதல் தளத்தில் இன்றும் அழியாமல் இருக்கும் ஓவியங்கள்.  இவை ஒவ்வொன்றும் அதில்  சொல்லப்பட்டிருக்கும் விதம் பிரம்மிப்பூட்டும்.  வாசிக்கும் பொழுது நம்மை அந்த இடத்திற்கே கூட்டிச்சென்று விடுவார்.  இப்படி ஐந்து பாகங்களை வாசித்து விட்டு பெரிய கோவிலுக்குச் சென்று அசை போட்டால் எப்படி இருக்கும்?   

உடையாருக்கு முன், தஞ்சைக்கு பெரிய கோயில் பார்க்கும்பொழுது  மனதில் ஒரு வியப்பு மட்டுமே தோன்றும்.   எத்தனை முறை அந்தப் பெரிய லிங்கத்தின் முன்பாக உட்கார்ந்து இருந்தாலும்,  அது பயபக்தி அனுபவமாக இருந்தது.   அது எப்படி கட்டியிருப்பார்கள், இது எப்படி திட்டமிட்டு இருப்பார்கள்  என்று திகைப்பு கலந்த யோசனை வரும்.   உடையாருக்கு பின்,  இப்படித்தானே  இதைக் கட்டினார்கள்,  இந்த இடத்தில்தான் அந்த மணலை மலைப் பாதைபோல கொண்டு போய் இருப்பார்களோ?   அந்த லிங்கத்தை இவ்வாறு தான் ஒட்டி இருப்பார்கள் என்பது பாலகுமாரன் அவர்கள் கூறியது போல கண்ணில் விரியும்.   விவரிக்கும் ஒவ்வொரு இடத்தையும், அந்த இடத்தில் நின்று, மெல்ல அசைபோட்டுப்  பார்க்கும் போது, ஆயிரம் வருடங்களுக்கு முன் செல்லும் பேரனுபவம்,  அலாதியானது,  விவரிக்க முடியாதது.   

கடைசியாக தஞ்சை சென்ற பொழுது, அது ஒரு பொழுது சாய்ந்த பொன் மாலை நேரம். அங்கு நிலவொளியில் ராஜ ராஜரோடும், கருவூர்த் தேவரோடும் பெருந்தச்சரோடும் 11ம் நூற்றாண்டுக்குச் சென்று உலாவினேன். கடைசியாக  அங்குள்ள அலுவலக அதிகாரிகளிடம் அந்த சித்திர மண்டபத்தைப்  பார்க்கலாமா? என்று கேட்டபொழுது தான்,  "நாளைக்கு வாங்க,  மத்தியானத்தில் தான் பார்க்க முடியும்,   இரவில் பார்க்க முடியாது" என்று கூறினார்கள்.  அடுத்த முறை அங்கு செல்லும் பொழுது, கண்டிப்பாக அதனைப் பார்க்க வேண்டும். 

அந்த கால கட்டங்களில் கோயில் காட்டியதை  தேவையில்லை என பொதுமக்கள் பலர் பேசிக்கொள்வதாக   அங்கங்கு கூறி இருப்பார்.  அதாவது இன்று வல்லபாய் பட்டேல் சிலையை நிறுவியிருக்கிறார்கள், அதோடு மட்டும் இல்லாமல் இந்த கரோனா நேரத்திலும் புதிய பாரளுமன்றத்தை கட்ட முனைப்பில் உள்ளார்கள்.   தலைமுறைகள், நூற்றாண்டுகள் கடந்து தங்கள் பெயர் வரலாற்றில் நிலைபெற மன்னர்கள் இதுபோல ஏதேனும் செய்து கொண்டுதான் உள்ளார்களோ  என தோன்றுகிறது.  அந்த காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து இருப்பார்கள் என்பதைப் பற்றி தெரிவதற்கான வாய்ப்புகள் பிரம்மாண்டங்களின் மூலம் குறைவு. 
எப்பொழுதும் இருவேறு கருத்துக்கள் உண்டு, இப்போது இருப்பது போலவே.  இந்த புத்தகத்தில் இருந்த வேறு எதைப் பற்றியோ ராஜராஜ சோழனின் அறிவையும், வீரத்தைப் பற்றியோ மறுப்பதற்கில்லை,  மறைப்பதற்கும் இல்லை.   பாலகுமாரன் இந்த புத்தகத்தில் கற்பனை கலந்தும்   எழுதி  இருக்கலாம்.  இதற்காக ஒரு போருக்கு சென்று, அங்கு சண்டை போட்டு,  அங்குள்ள மக்களைத் துன்புறுத்தி,  அங்கிருந்து பொருட்களை எடுத்து விட்டு வந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களை எழுப்ப வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.   கூடவே இதனைக் கட்டாமல்  இருந்திருந்தால் நமக்கு தமிழர்களின் சோழர்களின்  கட்டிடக்கலையைப் பற்றித் தெரியாமலும் போயிருக்கலாம்.  பல மாதிரியான கோணங்களில், ஒவ்வொரு பிரம்மாண்டத்தின் பின்னால் சென்று பார்க்க,  இந்த உடையாரின் வாசிப்பு எனக்கு கற்றுக் கொடுத்தது
இன்று இந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தால், அது மற்றொரு கோணத்தையும் காண்பிக்கலாம்.

வாசிப்போம்.

Sunday, April 26, 2020

கொரோனாவும் கொள்ளுப்பருப்பும்

உகாதி மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பில் ஆரம்பித்தது  21 நாள் ஊரடங்கு உத்தரவு.      விஷு மற்றும் தமிழ் வருடப்பிறப்பில்(!?) மீண்டும் தொடர்ந்து கொண்டுள்ளது.  இந்த இடைவெளியில் கொரோனா  இந்தியாவில் மெதுவாக ஆரம்பித்து, இரண்டாவது ஊரடங்கில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டுள்ளது.   இப்பொழுது தான் மூன்றாவது ஸ்டேஜ்  அடைந்துள்ளதாக நினைக்கிறேன்.  எண்ணிக்கை தினமும் மேல்நோக்கியே உள்ளது.  இதே நிலைமை இன்னும் பத்து  நாட்களுக்கும்  நீடித்தால்,  மே 3-ல் ஊரடங்கு உத்தரவை, மத்திய அரசு தளர்த்துவது பெரும் கேள்விக்குறி.   தளர்த்தினாலும், பெரு மற்றும் சிறு நகரங்களில், சகஜ நிலை இருக்காது என்று தான் தெரிகிறது.  


தமிழகத்தில் எண்ணிக்கை அரசின் அறிவிப்பின் படி குறைந்தும்  வருகிறது.  அதிலும் நோய்  பூரணமாக குணமாகி வெளியே வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி நம்பிக்கையை வளர்ந்துள்ளது.  ஆனாலும், மருத்துவர்கள் பாதிப்படைந்து இறப்பதும், அவர்களின் அடையாள போராட்டமும் யோசிக்க வைக்கிறது.  கூடவே சத்யம் தொலைக்காட்சி அதன் ஊழியர்கள் பாதிப்படைந்ததால் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதையும் உற்று நோக்க வேண்டும்.   கூடவே முதல் கட்டமாக ரெட் அலர்ட்டில் வந்த ஈரோட்டிலும் அரசு அதிகாரிகளின் முனைப்பால் மிக நன்றாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று அது ஆம்பர் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  


கர்நாடகாவில் பெங்களூரிலிலும் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  நான் எதிர்பார்த்த அளவில் பரவல் இல்லை என்பது சற்று ஆறுதல்.


அமெரிக்கா, ஸ்பெய்ன், பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கின்றது.  இறப்பு விகிதமும்  அதிகம்.  ஒரு குடும்பத்தில் ஆறு பேறும்  தாத்தா பாட்டி, அப்பா அம்மா குழந்தைகள் என மொத்தமாக உயிரிளந்தது  அதிர்ச்சி அளிக்கிறது.   


 இதற்கு காரணமாக சின்னம்மை, பெரியம்மை மற்றும் சில தடுப்பூசிகளை,  நாம் இன்றும் போட்டுக்கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் பேசிக்கொள்கிறார்கள்.  வளர்ந்த மற்றும் மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற நோய்களை முன்னரே நிரந்தரமாக தடுத்துவிட்டதால்,   இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதில்லை  என்ற கருத்தும்  நிலவுகிறது.    கூடவே மலேரியாவிற்கான மருந்தினை,  அமெரிக்காவிற்கும், பிரேசிலுக்கும் உதவும் என்று அந்தந்த நாட்டின் அதிபர்களும்,  பிரதமர்களும்  நம்மிடம் மிரட்டியும் கெஞ்சியும் வாங்குகிறார்கள்.    தடுப்பூசிக்கான ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.   கண்டுபிடிக்கப்பட்டவுடன்,  வளர்ந்த நாடுகள் ராபிட் டெஸ்ட் கிட்டை வழிப்பறி செய்தது போல, இதனையும்   எடுத்துக்கொண்டு,  அது நம் கையில் கிடைக்க சில மாதங்கள் ஆகலாம்.    அந்த கிட், சரியாக சோதனை செய்யவில்லை என்பது வேறு விசயம்.    


இதுவரை நாம் ஊரடங்கினால் ஒழிந்து கொண்டு இருந்ததால், இப்பொழுது இதன் வேகம் குறைவாகவும்  இருக்கலாம்.  மீண்டும் இதுபோல ஒரு அலை கூட அடிக்கலாம்.   இந்த கண்ணாமூச்சி விளையாட்டு இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாரும் கணிக்க இயலவில்லை.  கண்டிப்பாக மற்ற வைரஸ்களைப்போல கொரோனாவோடு தான் வாழப்  பழகுவோம் நேர்மறையாக.    


இந்த காலகட்டம் எப்படி சென்று கொண்டிருக்கின்றது?


இந்த ஊரடங்கு  காலகட்டம் குழந்தைகளுக்கு எப்படி சென்று கொண்டிருக்கின்றது?


முதல் ஒரு வாரம்,  இந்த பதைபதைப்பு ஒரு பக்கம் நமக்கு இருந்தாலும், குழந்தைகளுக்கு விடுமுறை மனநிலை  தான்.    குழந்தைகள் அவரவர் போக்கில் டிவியில் மூழ்கினர்.    டிவியில் இருந்து அவர்களை விடுவிக்க சற்று படாத பாடு பட வேண்டியதாக இருந்தது.     ஒரு பொன்னான(!) நாளில், அவர்களின் செல்ஃப்களில் இருந்த  சென்ற வருட புத்தகங்களை எடுத்துவிட்டு,  அடுத்து வருடத்திற்கு தயாராவதற்கு, அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம்.   பள்ளி மீண்டும் எப்பொழுது ஆரம்பிப்பார்கள் என்பது கொரோன விட்ட வழி தான்.   இருந்தாலும், நமக்கு வளையும்போது கடமையை செய்துவிட வேண்டும்.   அந்த சுரங்கத்தில்(!) இருந்து ,பழைய உண்டி ஒன்று சற்றே கணமாகக்  கிடைத்தது.   திறந்து சில்லறைகளை எண்ணிப் பார்த்ததில் கணிசமாக கிடைத்தது 116 ரூபாய்.  


 "என்கிட்ட இந்த காயின்ஸ்  எல்லாமே குடுடா,   உனக்கு அதுக்கு பதிலா 100 ரூபா நோட்டு தாறேன்.  நீங்க ஒரு நாளைக்கு மூணு  மணி நேரம் மட்டும் டிவி பாருங்க.. உங்களுக்கு தினமும் ஒரு ரூபா தாறேன்... உண்டில போட்டு வைங்க " எப்படியோ இந்த யோசனை வந்தது.  


கேட்டதும், உடனே தந்து விடுவார்களா என்ன?  அதிலும் டிவியில் வேற கைய வெச்சாச்சு. கொஞ்ச நேரம் விளக்கி, அவர்களின் 100 ரூ நோட்டும், அதிலேயே இருக்கும் என கூற வேண்டியதிருந்தது.   ஒருவழியாக சமாதானமாகி அந்த சில்லறைகளை கொடுத்து நோட்டை வாங்கி அதனுள்ளே  போட்டதும் திருப்தி அடைகிறார்கள்.  இதுல இன்னொருவருக்கு பழைய உண்டியில் ஒன்றுமே  இல்லாததால், பஞ்சாயத்தைத்  தீர்க்க சும்மாவேனும் கொடுக்க வேண்டி இருந்தது.     


அந்த மூன்று மணி நேர கணக்கு என்னவென்றால்,  மூன்று வேளையும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை  டிஸ்னி கிட்ஸ்  டிவி யில் வரும் "லிட்டில் சிங்கம்" எனும் அரை மண்டையன் தான் "ஆத்தா.. மாகி.. சதக்களி" என்று  அவர்களுக்கு சோறு ஊட்டுவான். 


'சரி, இதையே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம்' என்று நினைத்து, அவர்கள் சில செய்யாத  காரியங்களையும் பட்டியல் இட ஆரம்பித்தோம்.  ஒவ்வொரு காரியத்திற்கும் ரூபாய் கொடுத்தால் கம்பெனிக்கு கட்டுபடியாகாது.  இங்கு தான் இந்த சூப்பர் மார்க்கெட் தந்திரம்  உதவியது. 

"அஞ்சாறு பாயிண்ட் சேர்த்தால் ஒரு ரூபாய் வெச்சுக்கலாமா?" .என்றதும் ஏதோ விளையாட்டு என்று நினைத்து அவர்களாகவே மகிழ்ச்சியுடன் 'சரி' என்றார்கள்.   பின்னாடி வரும் விளைவுகள் அவர்களுக்குத் தெரியவில்லை.    "காலைல எந்திரிச்சு, மூஞ்சி கழுவி, பிரஸ் பண்ணி பெட்சீட் மடிச்சு போட்டீங்கன்னா,  ஒரு பாயிண்ட்".   எனக்கே,  'இது எல்லாத்துக்கும் ஒரு பாய்ண்டா தானா?'  என்று தான் இருந்தது.  அவர்களே சரி என்று விட்டார்கள்.    
"அப்புறம் பூச்செடிக்கெல்லாம்  தண்ணி ஊத்தணும்.  அதுக்கு ஒரு பாயிண்ட்.  கழுவிய  பாத்திரமெல்லாம் அங்க அங்க எடுத்து வச்சீங்கன்னா அதுக்கும் ஒரு பாய்ண்ட்"   நம்ம டிபார்ட்மெண்ட்டெல்லாம் நைசாக சேர்த்துக் கொண்டே வந்தேன்.     "அப்புறம் அம்மாவுக்கு  என்ன ஹெல்ப் பண்ணுனாலும்  ஒரு பாயிண்ட்"  (பஞ்சாயத்து வந்துடக்கூடாது).. "நீயே தூங்க போறதுக்கு முன்னாடி எவ்வளவு பாயிண்ட்னு சொல்லிரு." இருவரும் ரொம்பவும் உற்சாகம் ஆகிவிட்டார்கள்.  


இரண்டு மூன்று நாட்கள் சென்றது.  அவர்களே இரவு எத்தனை புள்ளிகள் எடுத்தார்கள் என்பதைக் கூறினர்.    அவர்கள் சொல்வதைக் கொண்டு அந்தந்த  நாட்களுக்கான  1 ரூபாய் கொடுத்தேன்.   புள்ளிகள் சற்று கூட குறைய இருந்தாலும் கொடுத்தேன்.    இன்னும் இதை செம்மைப்படுத்த,  "ஒரு நோட்ல உங்களுக்கு எதற்கெல்லாம் பாயிண்ட் வேண்டும் என்று யோசிக்கிறயோ, அதெல்லாம் வரிசையா எழுதுடா" 


ஒரு பத்து பன்னிரண்டு சிறு சிறு வேலைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள்.   அதில் குறிப்பாக டிவி நேரத்தை குறைத்தோம்.  "டிவி ஒன்றரை மணி நேரம் பாத்தீங்கன்னா.. 2 பாயிண்ட்.   மூன்று மணி நேரம் பாத்தீங்கன்னா ஒரே பாயிண்ட்  தான்...   அதுக்கு மேல போயிருச்சுனா பாயிண்ட் இல்லை, சரியா?"     ரெண்டு பாயிண்ட் கிடைப்பதால், சரி என்பதற்கான தலையாட்டல் உற்சாகமாக வந்தது.  

லிஸ்ட் போட்ட மறுநாளே அவர்களைப் பொறுத்த அளவில் சிக்கல்.  "அப்பா, இன்னிக்கு நான் 8 பாயிண்ட்.  6 பாய்ண்ட்டுக்கு ஒரு ரூபா.  மீதி ரெண்டு பாய்ண்ட்ட என்ன பண்ணலாம்.  அதுக்கு எவ்வளவு இன்னிக்கு?" என்றாள்.    " மீதி பாயிண்ட நாளைக்கு  சேர்த்திக்க, அவ்வளவு தான்" 


இப்படியா ஆரம்பித்து  நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.   டிவி முற்றிலும் குறையவில்லை என்றாலும், தொடர்ந்து மணிக் கணக்காக பார்ப்பது குறைந்து விட்டிருந்தது.   சில உருப்படியான வேலைகள்  நடக்க ஆரம்பித்தது.  


இரண்டு  மூன்று நாட்கள் கழித்து சாப்பாட்டு  நேரத்தில் டிவி பார்ப்பதை நிறுத்த இன்னொரு புள்ளி கொடுத்தோம்.    சில நாட்கள் கதைகள், சில நாட்கள் அட்லாஸ் விளையாட்டு என ஓடும். அட்லாஸ் என்பது  "வாட் பிக்சர்" போல ஊர்களின் பெயர்கள்.  முடியும் எழுத்தில் தொடர வேண்டும்.  இது கொஞ்சம் அனைவருக்கும் பொதுவாக இருந்தது.   இப்போதைக்கு சினிமா பெயர்கள் அவ்வளவாக அவர்களுக்குத் தெரியாது.     
     
அப்படித்தான் அன்று கொள்ளுப்பருப்பு. 


"சரி வாங்க.. தட்டெல்லாம் எடுத்து வைங்க.. டிவி  பாக்கமாக சேர்ந்து சாப்பிடுவோம்" 
"ஓகே"  என வந்து சேர்ந்து விட்டார்கள்.  


"இந்த கொள்ளு பருப்ப எப்படி சாப்பிடனும் தெரியுமா?"
" "
"சோறு போட்டு.. அதுமேல கொள்ளுப்பருப்பு போட்டு.. நடுவுல ஒரு பெரிய குழி பண்ணனும்.   குழி நம்பர வரைக்கும்  நல்லெண்ணெய் ஊத்தி, நல்லா பெசஞ்சுக்கணும். இப்ப வாய்க்கு அளவா உருண்டை பிடிச்சு வெச்சுக்கணும்.   இப்போ ஒரு உருண்டை எடுத்துக்குங்க.   இந்த உருண்டைய யாருக்குக்  குடுக்கலாம்?"
" " அமைதி 
"உங்களுக்கு யாரு ரொம்ப பிடிக்கும்?"  
"தியா"
"சரி,  தியாவுக்கு ஒரு ஆப்பு போட்டுக்குங்க"
"சென்னைல  தான தியா  இருக்கா... எப்படி கொடுக்கறது?"  இந்தமாதிரி லாஜிக்கானா  கேள்வியெல்லாம் நாம் கேட்டிருப்போமா? எனத் தெரியவில்லை.   
"அவுங்க பேர சொல்லிட்டு நாம போட்டுக்கணும், அது அவங்களுக்கு போய் சேர்ந்துடும்"
"ஓகே"
"ஆஆப்" 


ஒருவழியாக முதல் உருண்டையின் சுவையை உணர்ந்து, மெதுவாக மென்று முழுங்க ஆரம்பித்தார்கள்.   இதற்கிடையில் எனக்கு, பசி தாங்க முடியாமல் இன்னோர் உருண்டையும் நைசாக போட ஆரம்பித்தேன்.  


"அப்புறம் அடுத்த வாய் யார்க்கு? "
"அம்மாக்கு"


 "இங்க இருக்கறவங்களுக்கு கொடுக்க தேவையில்லை, சரி  இருந்தாலும் பரவால்ல,  ஆஆப் போட்டுக்குங்க" 


அடுத்தடுத்து அப்பா, அம்மாயி, ஆயா, தாத்தாக்கள், ஜனனி அக்கா, அத்தை, மாமா என  உருண்டைகள் காலி ஆகி இருந்தது.  


கொரோனா ஊரடங்கில் இந்த பாய்ண்ட் சிஸ்டம், கொள்ளுப் பருப்புடன் நன்றாகவே வேலை செய்ய  ஆரம்பித்துள்ளது. எப்பொழுதுமே சாப்பாட்டுத் தட்டில் ஒரு வாய் சோறு வைத்து விடும் பழக்கமும் உண்டு.  சமுத்திரக்கனியாக மாறி அதற்கும் விளக்கம் கொடுத்து அதுவும் குறைந்து உள்ளது.    இதற்கு  முன்பு சோறு ஊட்டிக் கொண்டிருந்த அந்த "லிட்டில் சிங்கம்" மற்ற நேரங்களுக்கு  அளவாக சென்று விட்டான்.  சாப்பிட்டு முடித்துவிட்டு  "அப்பா, காத்தால கோட்டா ஹால்ப் ஏ ஹவர்க்கு அந்த அரை மண்டையன  பார்த்துக்குறோம்" என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். 


அவர்களாகவே சாப்பாட்டுத் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு கதைபேச, விளையாட, ஏதேனும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளார்கள்.  கூடவே டிவிக்கான நேரம் குறைந்து விட்டதால் சமையல் உதவிக்கும்(?) வந்து விடுகிறார்கள்.   ஒவ்வொரு வேளையும் வேறு வேறு விதமாக அவர்களுக்கு சென்றுகொண்டு உள்ளது, கூடவே நமக்கும்.  சின்னச்சின்ன மாற்றமும், முயற்சியில் தான் உள்ளது.  ஊரடங்கு உங்களுக்கு எப்படி?  

Wednesday, April 01, 2020

பெங்களூரில் கொரோனா -2


அதிகாரப்பூர்வமாக பெங்களூரில்  மூன்றாவது  வாரம் வீடடங்கி இருத்தலில் உள்ளோம்.  மார்ச் 10 பெங்களூரின் முதல் கொரோன நபர் ( இந்தியாவின் 'Patient 51') மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அந்த வாரத்தின் சில நாட்கள் பயத்தோடு அலுவலகம் சென்று வந்தோம்.   அடுத்த திங்கள் முதல்  வீடு மட்டுமே. கர்நாடக அரசும் அதன் பிறகு பெங்களூரை ஊரடங்கின் கீழ் கொண்டு வந்துவிடுகிறார்கள்.  இப்படியாக பிரதமர் ஊரடங்கை  அறிவித்த 24ம் தேதிக்கு,  முன் கிட்டத்தட்ட ஒருவாரம் முன்னதாகவே இங்கு வீட்டினுள் உள்ளோம்.     

தற்பொழுது இங்கு  ஒரு ஆறுதல் செய்தி.   முதலில் கோரோனோவுக்கு பாதிப்படைந்த  'Patient 51',  2666 பேரை மறைமுகமாகப் பாதித்ததாக கர்நாடக அரசு கூறியிருந்தனர்.   அவரின் மனைவி மற்றும் குழந்தையைத் தவிர வேறு யாருக்கும் அவர் தொற்றை இதுவரை அளிக்கவில்லை.  இந்த ஆறுதல்,  கலவரமடைந்து இருந்த எங்களை சற்று ஆசுவாசமடைய வைக்கிறது.   இவர் பெங்களூர் கொரோனா தொற்றுக்கு நல்லவிதமான நிகழ்தகவின் (best  case) உதாரணம்.  ஆனால் முன்பே கூறியது போல, தென் கொரியாவின் 'patient  31'  போல மோசமான  நிகழ்தகவாக (Worst case)  இருந்திருந்தால்,  இங்கு நிலைமையை கற்பனை செய்ய முடியவில்லை.  நிலைமை மிக மோசமாக போய்  இருக்கும்.       


இரு வாரங்களுக்கு முன் இதனைப் பற்றி எழுதும்பொழுது,
தமிழ்நாடு - 0
கர்நாடகா - 1
யுகே  - 396

இன்றைய நிலைமை நமக்கே தெரியும்.  பல மடங்காக  வேகமாக பரவி வருகிறது.  
        

தமிழத்தில் நேற்றும்,  இன்றும்  இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது.   இத்தோடு  முடிந்துவிடக் கூடாதா என்று எண்ண  வைக்கிறது.  கூடவே  அச்சத்தையும்  விளைவிக்கிறது.    திடீரென அதிகப்படியான எண்ணிக்கையில்  ஈரோட்டுடன் நேற்று திருநெல்வேலியும், நாமக்கலும்  சேர்ந்து கொண்டது.    இன்று கோவையில் சட்டென அதிகரித்துள்ளது.   இந்திய அளவில் தமிழ் நாடு மூன்றாம் இடத்துக்கு நகர்ந்துள்ளதும் அதிர்ச்சி.   தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருநெல்வேலியில் பரவ மிக  முக்கிய காரணமாக டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாடு என்பது மேலும் அதிர்ச்சித் தகவல்.  இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கணிசமாக ஆந்திரா , தெலுங்கானாவிலும்  கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் என இங்குள்ள நண்பர்கள் கூறுகிறார்கள்.  இந்த இக்கட்டான நேரத்தில், மார்ச் முதல் வாரத்தில் நடைபெற்ற  இந்த மாநாட்டிற்கு  எதற்காக அனுமதி அளித்தார்கள் என்பது தெரியவில்லை.     

பிரதமர் அறிவித்த ஊரடங்கை ஒருவாரம்  கழித்து உற்று நோக்கினால், இதுவும் டிமானிடைசேஷன் போல பின் விளைவுகளை யோசிக்காமல் எடுத்து விட்ட முடிவோ என்றும் தோன்றுகிறது.  பல இடங்களில் கட்டிட மற்றும் கூலி தொழிளார்கள் உண்ண உணவு இல்லாமல், சொந்த ஊருக்கு நடை பயணமாக திரும்பும்  காட்சி கலங்கடிக்கிறது.  குழந்தைகளுடன் நடந்து வரும் பெண்கள், நம் நாட்டின் ஏற்ற தாழ்வை பொட்டில் அடித்தாற்போல உணர்த்தி விடுகிறார்கள்.  இந்த மனிதர்களுக்கும் பயத்தைப் போக்கி  அங்கங்கு இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை  உதவ சொல்லி கொஞ்சம் மனிதத்தையும் அரசு காட்டி இருக்கலாம்.  பயப்படாமல்  இருக்க இந்த விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெளிவாக தெரிவிக்கலாம். 

தமிழக அரசு இந்த விஷயத்தில்  மிகத்தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.  பாராட்ட  வேண்டிய ஒன்று.  சமூக வலைத்தளங்களை நல்ல விதமாக பயன்படுத்தி மாவட்ட ஆட்சியருக்கு நேரடியான  உத்தரவுகள் நடக்கிறது.   கூடவே வேறு மாநில முதல்வர்களுக்கும், அங்கங்கு தவிக்கும் தமிழ் மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்.   கொரோனாவிற்கு எதிரான போரை வழி நடத்தும் மருத்துவர்களின் பணியைப் பற்றி கூறத் தேவையில்லை.   அத்தோடு காவலர்களின் பணி  மகத்தானது. ஊரடங்கை  மீறுவோருக்கு தோப்புக்கரணம், முட்டிங்கால், கை நீட்டி வைத்தல், உறுதிமொழி எடுக்க வைத்தல்  என வித விதமான தண்டனைகள் பள்ளி காலத்தை நினைவு படுத்துகிறது.   விதிமீறும் பொது மக்கள் சிலரின் ஆணவப் பேச்சுக்கள் அவர்களை லாடம் காட்டினால்  தான் என்ன என நமக்கே பொறுமை போகிறது. 

இதில் கவலை கொள்ளும் விஷயமாக இருப்பது  ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கும் மக்கள். 
சென்ற ஞாயிறு இறைச்சிக்கடையில் குழுமியிருந்த எதனை உணர்த்துகிறார்கள் என்று தெரியவில்லை இன்னும் இவர்கள் கொரோனாவின் 'பிரியத்தை' உணர்ந்ததாக தெரியவில்லை.  இந்தியாவின் கொரோன புள்ளி விவரத்தைப்  தற்பொழுது பார்க்கும் பொழுது  அது 4, 5 மையப் புள்ளிகளை உருவாக்கியுள்ளது.   சென்ற வாரத்தில் கிளஸ்டர் எதுவுமே இல்லாமல்  இருந்தது ( பார்க்க சுட்டி).   மேலும் மையப்புள்ளிகள் உருவாகாமல் இருக்க நம்மால் இயன்றது  வீட்டில் அடங்கி இருந்து முழு அளவில்  அரசுக்கு ஒத்துழைப்பு தருவது மட்டுமே.  இது மட்டுமே நம்மால் அரசுக்கு  தற்போதைக்கு உதவ முடியும்.    


இதே நேரத்தில் உலகெங்கும் அடுக்கடுக்காக  நோய்த்தொற்று பரவி வருகிறது. அப்பொழுது களத்தில் இல்லாத அமெரிக்காவை  இப்பொழுது கொரோனா மையம் கொண்டு உள்ளது.   இத்தாலியில் இப்பொழுது இறங்கு முகம்.   சீனா  நான்கு மாத கடும் போராட்டத்திற்குப் பிறகு எந்த தொற்றும் இப்பொழுது இல்லை என அறிவித்து  அவர்களின் வுகாண் நகரத்தின் வௌவால் மார்க்கெட்டை திறந்திருக்கிறது.    சைனா வைரஸ் என்று கூறிக்கொண்டு இருந்த டிரம்ப் கொரோன  வைரஸ் என கூற ஆரம்பிக்கிறார்.   இவர்களின் ஆடுபுலி ஆட்டம்  நமக்குத்தான் புரிபடவில்லை. 

கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பது யாருக்குமே தெரியவில்லை.   உலகின்  பொருளாதாரம்  எவ்வளவு மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து மீண்டு வரும் என்பது யாருக்கும் புரியாத ஒன்று.   ஜெர்மனியின்  நிதியமைச்சர் இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒவ்வொரு அரசாங்கமும் இந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள், அதனைப் பற்றிய விளைவுகள் பொருளாதார ரீதியாக தெரிய சில மாதங்கள் ஆகும்.    அவற்றை நாம் பிற்காலங்களில் வரலாறாக மட்டுமே பேச முடியும்.   இப்பொழுது நாம் பத்திரமாக இருப்பது மட்டுமே நம் கையில். 

இன்னும் சற்று கூர்நோக்கிப் பார்த்து இன்னும் ஒரு சில மாதங்களுக்கு நம் வாழ்விற்க்கு தேவையான பொருள்  இருப்பை  வைத்துக் கொள்வது  அவசியம்.    சிக்கனமான  நடைமுறைகளைக் கையாள  வேண்டும். இதன் பாதிப்பினால் ஆறு மாதம் கழித்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.  பொருளாதார வீழ்ச்சியால் என்ன மாதிரியான பின்விளைவுகள்  வரும்,   அது ஒவ்வொருவருக்கும் பாதிப்பை எப்படி ஏற்படுத்தும் என்பது நம்மால் இப்பொழுது எண்ணிப் பார்க்க முடியாது.    இதையொட்டி நேற்று முன்தினமும் ட்விட்டரில் பஞ்ச காலத்தைப் பற்றிய ஒரு விவாதம் சென்று கொண்டிருந்தது.   விவசாயம் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அன்றைய காலத்தில் பஞ்ச நேரங்களில் கற்றாழை கிழங்குகளையும்,  மரவள்ளிக்கிழங்கும்  தேடி எடுத்து மக்கள் சாப்பிட்டது  வரலாறு.   கண்டிப்பாக விலைவாசி ஏறலாம்.  பொருள் தட்டுப்பாடு வரலாம்.  இன்னும் மூன்று மாதங்களுக்கான தேவையான அத்தியாவசியமான பொருட்களை அவரவர் அளவில் தற்காத்து வைத்துக் கொள்ள வேண்டும் என கருதுகிறேன்.   இப்போதும்,  இன்னும் கொஞ்ச காலத்திற்கும் மினிமலிசம் எனப்படும் எளிய வாழ்க்கை முறைக்கு பழகிக்கொள்தல் நலம்.   இப்பொழுது இருந்தே அதற்கான ஆயுதத்தை மேற்கொள்ள வேண்டும்.  

இவை எப்படியாக இருப்பினும் தற்போதைய நமது நிலைமை மனதினை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமே.   பலரும் காலை, மாலை மட்டும் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் செய்தியை பார்க்க பரிந்துரைகின்றனர்.   திரும்பத்  திரும்ப கொரோனாவில் உழன்று கொண்டிருந்தால்,  தேவையில்லாத  மன உளைச்சல்  வரும் என்கிறார்கள்.   குறிப்பாக குடும்பம் இல்லாமல் தனியாக இருக்கும் பலர்.   
  • யாராவது சில  மக்களோடு தினமும் பேசுங்கள்;  சும்மாவேனும் பேசுங்கள்;  அது உங்களது மன உளைச்சலில் இருந்து விடுதலை கொடுக்கும். அது உங்கள் நண்பர் ஆகவும் இருக்கலாம், தூரத்து உறவினர் ஆகவும் இருக்கலாம்.  எப்பொழுதோ சந்தித்த நண்பராகவும் இருக்கலாம்.  
  • இந்த நேரத்தை குடும்பத்தோடு, குழந்தைகளோடு எப்படி செலவிட வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தலாம். 
  • புதிதாக இதுவரை செய்யாத ஒரு வேலையை செய்யலாம்.
  • தள்ளிப்போட்ட சில வேலைகளை முடிக்கலாம். 


இன்னமும் 21 நாட்களுக்கு பிறகு கோடை விடுமுறை கிடைக்கும் எங்காவது செல்லலாம் என்று நினைத்திருப்போர் தயவுசெய்து அமைதி காக்கவும்.   நமக்கு இந்த வருட  கோடை விடுமுறை என்பது கிடையாது.   குழந்தைகளை பதட்டப்படாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்து அவர்களை முறைப்படுத்துவது நமது கையில் தான் உள்ளது.   இது ஒரு இக்கட்டான தருணம்.   அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும்  இந்தத் தருணத்தை கடப்பது அவரவர்களிடம் மட்டுமே உள்ளது.   இதையும் தைரியமாக  கடப்போம். 


குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...